சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

கடல் ஆர்ப்பரித்து வந்ததற்கு சுனாமி தாக்கம் காரணமல்ல

sea.jpgகிழக்கின் சில பகுதிகளில் நேற்று கடலலைகள் திடீர் திடீரென ஆர்ப்பரித்து நிலப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தமைக்கு சுனாமி தாக்கம் காரணமல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவா தெரிவித்தார்.

தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் கடல் கொந்தளிப்பின் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது மணித்தியாலத்திற்கு 20 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காணப்படுகின்ற கடற்காற்று, திடீர் திடீரென 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பதன் விளைவாகவே கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கின் சில பிரதேசங்களில் நேற்று காலையில் திடீர் திடீரென ஆர்ப்பரித்து கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்தன. இதனையடுத்து பிரதேசவாசிகள் மத்தியில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது. இது சுனாமித் தாக்கம் என்ற ஐயமும் மக்கள் மத்தியில் பரவியது. இந்நிலைமை தொடர்பாக வானிலை அவதான நிலைய வானிலையாளரான தமயந்தி இந்திஹெட்டி ஹேவாவுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணக் கடற்பரப்புகளில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தென்மேல் கடற்பரப்பு ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் கடற்காற்றின் வேகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பும் பெரிதும் உதவியுள்ளது.

இதே காலநிலை இன்றும் நிலவக்கூடிய வானிலையே காணப்படுகின்றது என்றார்.

பிரெஞ்ச் ஓபன்-சானியா ஜோடி வெற்றி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங் ஜோடி, துருக்கியின் சேனக்லு, பெல்ஜியத்தின் யானினா ஜோடியை சந்தித்தது.

இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 எனவும், இரண்டாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றியது. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

அம்பாறை கரையோரங்களில் சுனாமி அச்சம்: கடல் நீர் உட்புகுந்ததால் பெரும் பரபரப்பு

sea.jpgஅம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் மினி சுனாமி ஏற்பட்டதனால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து பதற்றத்துக்குள்ளாகினர். நேற்று வியாழன் அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பும், காற்றின் வேகமும் அதிகரித்ததனால் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகுகளும் தோணிகளும் கிறவல் வீதிக்கருகில் ஒதுக்கப்பட்டிருந்தன. இது தவிர நாலாபுறமும் படகுகளும், தோணிகளும் ஒதுங்கிக் கிடந்தன.

மீனவர்களின் வாடிகளுக்குள் கடல் நீர் புகுந்ததனால் அங்கிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் தொழில் ரீதியான உபகரணங்களும் கடல் நீரில் அகப்பட்டன. கடல் கொந்தளிப்பும், உயர்ந்த அலைகளும் தொடர்ந்தும் ஏற்பட்ட வண்ணமுள்ளதனால் மீனவர்கள் தத்தமது படகுகளையும் தோணிகளையும் கடற்கரையை அண்மித்துள்ள தோணாக்களிலும், ஊர் பிரதேசங்களிலும் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்.

திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் மீன்பிடி உபகரணங்களுக்குச் சிறு சிறு சேதம் ஏற்பட்ட போதிலும் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடல் கொந்தளிப்பும் மினி சுனாமியும் ஏற்பட்டதனால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டியிருந்த மக்கள் அச்சம் காரணமாகப் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.

தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நிலை சீரடையக் கூடிய வாய்ப்புக்குறைவாக இருப்பதாகவும் மீன்பிடி நடவடிக்கைகள் ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறினர். குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்போன்ற கடற் பிரதேசங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் உறுதி வழங்குகிறார் பிரதிக் கல்வி அமைச்சர்

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மௌலவி ஆசிரியர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமென மீண்டும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், ஓரிரு மாதங்களுக்குள் இந்த நியமனங்களை வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். அமீரின் அழைப்பை ஏற்று பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் கடந்த திங்கட் கிழமை கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அவர் உலமாக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக மௌலவிமார்களினுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மௌலவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மௌலவிகள், மௌலவியாக்கள் பெருமளவில் கலந்துகொண்ட இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான உறுதிமொழியை அவர் வழங்கினார்.

பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த இருவார காலத்திற்கு முன் கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்தியதையடுத்து அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேசிய பாடசாலைகளுக்கான 1500 ஆசிரியர்கள் நியமனமும் தேசிய பாடசாலைத் தொண்டர் ஆசிரியர்கள் 206 பேருக்கான நியமனமும் வழங்கப்படவிருக்கின்றது. இதேவேளை, மௌலவி ஆசிரியர் விண்ணப்பதாரிகள் 460 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலும் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் நிச்சயம் வழங்கப்படும் என்றார்.

பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.சிறீகாந்த், மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோரும் உரையாற்றினர். மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.அமீர், பிரதி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.எம். புஹாருடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

20 ஓவர் உலக போட்டி 216 நாடுகளில் ஒளிபரப்பு

second-world-cup-of-twenty20.jpg12 நாடுகள் பங்கேற்கும் 2 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜுன் 5 ந் தேதி முதல் 21 ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியின் ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என்.நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி பல்வேறு டெலிவிஷன் சேனல்கள் மூலம் 216 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.

பிரெஞ்ச் ஓபன்-முதல் சுற்றில் சானியா தோல்வி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார். நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. பெண்களுக்கான ஓற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானை சேர்ந்த கலினா வஸ்கோபோயேவாவை எதிர்கொண்டார்.

போதுமான பயிற்சியில் இல்லாமல் இந்த போட்டியில் பங்கேற்ற சானியா துவக்கத்தில் தவறு மேல் தவறு செய்தார். இதையடுத்து அவர் முதல் செட்டை 4-6 என பறிகொடுத்தார். அடுத்த செட்டில் சானியா வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால், இவரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்கு பின் 6-7 என இழந்தார். இறுதியில் 4-6, 6-7 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.சானியா அடுத்ததாக பெண்கள் இரட்டையரில் சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங்குடன் இணைந்து விளையாடுகிறார்

“அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை; குற்றச்சாட்டு’

sri-lanka-upcountry.jpg அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்விலை லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்த பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த மார்ச் மாத இறுதியோடு கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த அநேகமான தோட்டங்கள் தற்போது காடுகளாகியுள்ளன. முறையான பராமறிப்பின்றிக் காணப்படுகிறது. இத்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப்படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நடவேண்டியுள்ளது.

இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்தமுடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.

உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை நடத்த இது உகந்த தருணமல்ல என்று முதலாளிமார் சம்மேனமும் தொழில் அமைச்சும் அபிப்பிராயம் தெரிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே நாம் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம். பேச்சுவார்த்தையின் மூலம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே முயற்சித்து வருகிறோம். சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு 2009 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுல் நடத்தப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியிருக்கிறோம் என்றார்.

தெங்குப் பொருட்களின் ஏற்றுமதி 56 சதவீதத்தால் அதகரிப்பு

coconut_tree.jpgஇவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் தெங்குப் பொருட்களின் ஏற்றுமதி 56 தவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

கடந்த வருட முதலாம் காலாண்டுப் பகுததியில் மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய காரணத்தால் தெங்குப்பொருள் ஏற்றுமதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும் பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறி ஏற்றுமதியில் அபிவிருத்தி ஏற்பட்டது என்று சபை அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,  இந்தியா, ஆகிய நாடுகள் வரிசையில் தெங்குப்பொருள் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய இடம் வகிக்கின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல்:டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன்

ipl-2009-01.jpg
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (24.05.2009) இரவு நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த மாதம் 18 ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய 2 வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்  நேற்று நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கடந்த முறை 7 வது இடம் பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கடைசி (8 வது) இடம் பெற்ற ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் நேற்றைய இறுதிப் போட்டியில் மோதியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. கிப்ஸ் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்னுடனும், ஹாரிஸ் 5 பந்துகளில் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய, அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.

வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

ஆடுகளம் சரி இல்லாததால் தோற்று விட்டோம்: டோனி

ipl-2009-01.jpgஐ.பி.எல். 2 வது அரை இறுதி போட்டி சனிக்கிழமை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
 
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக் கெட்டு இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.
 
தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:   நாங்கள் 160 ரன்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் 15 ல் இருந்து 20 ரன்கள் வரை குறைந்து விட்டது. இந்த கூடுதல் ரன்களை எடுத்து இருந்தால் பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம்.
 
ஆடுகளமும் சரியாக இல்லை. மந்தமான ஆடுகளமாக இருந்தால் எங்கள் பேட்டிங்கை பாதித்தது. அதே போல எங்கள் பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சை சரியாக செய்யவில்லை. இவற்றால்தான் தோல்வியை சந்தித்தோம் என்றார்.