விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் உறுதி வழங்குகிறார் பிரதிக் கல்வி அமைச்சர்

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மௌலவி ஆசிரியர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமென மீண்டும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், ஓரிரு மாதங்களுக்குள் இந்த நியமனங்களை வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். அமீரின் அழைப்பை ஏற்று பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் கடந்த திங்கட் கிழமை கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அவர் உலமாக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக மௌலவிமார்களினுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மௌலவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மௌலவிகள், மௌலவியாக்கள் பெருமளவில் கலந்துகொண்ட இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான உறுதிமொழியை அவர் வழங்கினார்.

பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த இருவார காலத்திற்கு முன் கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்தியதையடுத்து அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேசிய பாடசாலைகளுக்கான 1500 ஆசிரியர்கள் நியமனமும் தேசிய பாடசாலைத் தொண்டர் ஆசிரியர்கள் 206 பேருக்கான நியமனமும் வழங்கப்படவிருக்கின்றது. இதேவேளை, மௌலவி ஆசிரியர் விண்ணப்பதாரிகள் 460 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலும் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் நிச்சயம் வழங்கப்படும் என்றார்.

பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.சிறீகாந்த், மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோரும் உரையாற்றினர். மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.அமீர், பிரதி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.எம். புஹாருடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *