சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

தோட்டத்தொழிலாளரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தவில்லை – ஜனாதிபதி

Mahinda Rajapaksaஎந்த வொரு சந்தர்ப்பத்திலும் தோட்டத்தொழிலாளர்களை அரசாங்கம் தனிமைப்படுத்தவில்லை. தொழிலாளரின் பிள்ளைகள் பொலிஸ், பாதுகாப்பு படையில் சேர முடியும். அனைவரும் ஒருதாயின் பிள்ளைகளே என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோர்வூட் நகரில் போட்டியிடும் இ.தொ.கா.வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். இ.தொ.கா.பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இக்கூட்டம் ஆரம்பமானது. குண்டு துளைக்காத கண்ணாடி பெட்டியில் பலத்த பாதுகாப்பின் மத்தியலேயே ஜனாதிபதி உரைநிகழ்த்தினார்.

இந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தோட்டத் தொழிலாளர்களே விளங்குகின்றனர். இந்நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் சகல வசதி வாய்ப்புகளும் தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும்.  மலையக மக்களுக்கு இன்னும் வசதி வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற வேண்டுமெனின் உங்கள் மத்தியிலிருந்து தமிழ் பிரதிநிதியொருவரை தெரிவு செய்ய வேண்டும். இது வரைகாலமும், எந்தவொரு அரசாங்கத்தினாலும் முன்னெக்கப்படாத பெருமளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மலையக மக்களுக்கு எமது அரசாங்கமே சிறந்த சேவைகளை வழங்கியுள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.  எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களை தனிமைப்படுத்த வில்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். பயங்கரவாதத்திலிருந்து இந்நாட்டை மீட்டெடுத்து அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவு

Lasantha_Wickramathunga“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை பற்றி புலனாய்வு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பில் திருப்தியற்ற நிலை காணப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.  இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ரஞ்சித் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில்; தாக்குதலுக்கு பயன்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவிலக்கத்தை அறிவதற்காக சம்பவ இடத்திலிருந்தவர்களின் சாட்சியங்களை புலனாய்வுக் குழு பதிவு செய்தது. எனினும் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை.

இக் கொலை விசாரணைகள் முன்னேற்றமடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்நிலையில் விசாரணைகள் விஞ்ஞான பகுப்பாய்வு ரீதியான அறிக்கைகளிலேயே தங்கியுள்ளன. எனவே விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிச்சயமாக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகளின் போது உரிய சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டும். இல்லாவிடின் பொலிஸரால் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிடும்.

அத்துடன் நீதிமன்றங்களில் சாட்சியங்களை மிகவும் கவனமாக சமர்பிக்க வேண்டும். இன்னமும் 10 நாட்களில் இன்னொரு தடயம் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். என்றும் அவர் தெரிவித்தார்.

சூரிய கிரகணம் இன்று

sun.jpgசூரிய கிரகணம் இன்று (26ம் திகதி) பிற்பகல் 1.59 மணி முதல் மாலை 4.10 மணிவரையும் இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் – சி- கிளார்க் நிலைய ஆலோகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன தெரிவித்தார்.

வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகளைக் கொண்டோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ணப்புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படம் எடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர் இவ்வாறு சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் பார்வை முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அதேநேரம் சூரிய கிரகணத்தை மொரட்டுவ, கட்டு பெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப் பட்டிருக்கும், விசேட நிலையத்திலிருந்த படியும், இப்பாகவமுக மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் விண்வெளி காட்டியகத்திலிருந்த படியும் பார்க்கலாம்.

அத்தோடு www.actimt.ac.lk என்ற இணை முகவரி ஊடாகவும் பொருத்துனர்கள் (Welders) பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடிகளை பாவித்தும் இதனைப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

அரச பகுதிக்கு செல்ல விரும்பும் மக்களின் விருப்பத்தை புலிகள் நிராகரிக்க கூடாது;

yasusi.jpgவடக்கில் சிவிலியன்களை பாதுகாப்பதற்கும் இடம் பெயர்ந்தோருக்கு நிவாரணமளிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜப்பானிய தூதுவர் யசூசி அகாஷி திருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யசூசி அகாஷி திருகோணமலைக்கும் வவுனியாவுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்து விட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனது விஜயத்தின் நிறைவில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய யசூசி அகாஷி, அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்லவிரும்பும் பொதுமக்களின் சுதந்திரத்தை புலிகள் நிராகரிக்கக் கூடாதெனவும் கேட்டுக் கொண்டார். சிவிலியன்களையும், ஐ.நா பணியாளர்களையும் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் முடக்கி வைத்திருக்கும் புலிகளின் செயல்பாடுகள் குறித்து தமது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களின் சுதந்திரமான வெளியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அகாஷி சுட்டிக்காட்டினார். இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் அபிவிருத்திக்கும் ஏனைய சர்வதேச நாடுகளோடு இணைந்து ஜப்பான் தொடர்ந்து முக்கிய பங்காற்றுமென்றும் அகாஷி தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்புக் குறித்தும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் ஜப்பான் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமென்றும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சர்வதேச பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.சமாதான முன்னெடுப்பு தொடருமென நம்பிக்கை தெரிவித்த அகாஷி, அரசியல் தீர்வொன்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியுமென வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். தென்னிலங்கை கட்சிகள் மத்திய முரண்பாடுகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும் வெளியில் சென்று அதனை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் யசூசி தெரிவித்தார்.

இதேவேளை 61 நாடுகள் மற்றும் 21 தொண்டு நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் மாத்திரமே டோக்கியோவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டது. அந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளும் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தனர். இது தொடர்பில் தாம் கவலையடைவதாக தெரிவித்த யசூசி அகாசி காரணம் அந்த மாநாட்டின் போது 4. 5 மில்லியன் டொலர் நிதிகள் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் இதில் கலந்து கொண்டிருந்தால் அது தமிழர்களுக்கு மாத்திரம் இன்றி ஏனைய இனங்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுகள்

muttaih_muralitharan.jpgஉலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.  இன்னும் முன்று விக்கெட்டுக்களைப் அவர் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் வசீம் அக்ரமின் சாதனையை முறியடித்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக கூடிய விக்கெட்டக்களை கைப்பற்றிய வீரர் இவராகத் திகழ்வார்.

37 வயதான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராகவும் திகழ்கிறார். 125 டெஸ்ட் போட்டிகளில் 769 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டியின் பந்துவீச்சு ஜாம்பவானாகத் திகழ்கின்றார்.  ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட் கைப்பற்றிய வீரர்களில் முரளிதரன் 2ஆவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக (24)நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.

கிழக்கு முதலமைச்சரின் கோரிக்கையை கொழும்பின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அகாசி உறுதியளிப்பு

yasusi.jpgநேற்று முன்தினம் சனிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாசி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார். கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தவும் அபிவிருத்தி வேலைகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் ஜப்பான் அரசாங்கத்தின் பயங்களிப்பு காத்திரமானதாக அமைய வேண்டும் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜப்பானிய தூதரிடம் தெரிவித்தார்.

ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடப்பட்ட அபிவிருத்திகளில் முன்னேற்றங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றது. எனினும் ஒரு சல சம்பவங்கள் அவற்றை மூடி மறைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் முதலமைச்சர் ஜப்பானிய தூதரிடம் குறிப்பிட்டார்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். விடுவிக்கப்படும் வடக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் ஏற்படவும் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணவும் ஜப்பானிய அரசாங்கத்தின் பங்களிப்பு அத்தியாவசியம் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் அளித்து வந்துள்ள நிதி உதவிகளுக்கு ஜப்பானிய தூதரிடம் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். பதினாறு தடவைகளுக்கு மேல் இலங்கை வந்துள்ள தமக்கு தற்போதைய வருகை வித்தியாசமானதொன்றாக அமைவதாக ஜப்பானிய தூதர் அகாசி குறிப்பிட்டார். ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தின் மாகாண நிர்வாகத்துக்குப் பொறுப்பான முதலமைச்சர் மற்றும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதி நிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பை தற்போதைய விஜயம் தமக்குத் தந்திருப்பதாகவும் அகாசி கூறினார்.கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் நிலவுவது, அதனூடாக சமாதானத்தை வலுவானதாக ஏற்படுத்துவதற்கு உதவும் என்றும் அகாசி கூறினார். 13 ஆவது சரத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதன் அவசியம் பற்றிய கோரிக்கையை கொழும்பில் அரச தலைமைப்பீடத்துடன் நடத்தும் பேச்சுகளின் போது முன்வைப்பதாகவும் அகாசி கூறினார். அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் ஜப்பானிய தூதர் அகாசி கலந்துரையாடினார். இச்சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது.

ரி.எம்.வி.பியில் மிகுதியாக இருக்கும் சிறுவர்களை ஐ.நா. சிறுவர் நிதியத்திடம் ஒப்படைப்போம்! -பிரதீப் மாஸ்டர்

அடுத்துவரும் தினங்களில் ரி.எம்.வி.பி. அமைப்பில் மிகுதியாக இருக்கின்ற சிறுவர்களையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளிடத்தில் ஒப்படைக்கவுள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் தெரிவித்தார்.

22. 01. 2009 வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர்களை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதீப் மாஸ்டர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி எமது அமைப்பிலுள்ள சிறுவர்களை நாங்கள் விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வழிசெய்துள்ளோம் இச்சிறுவர்கள் கடந்தகாலயுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு எமது அமைப்பில் வந்து இணைந்து கொண்டவர்கள். இவர்களை எமது அமைப்பை விட்டு விடுவித்து இவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை மேற்கொள்வதற்கு எமது தலைமைப்பீடம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இச்சிறுவர்களுக்கு சிறந்த தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதுடன் இவர்களுக்கான உரிய முன்னேற்ற வழிகாட்டல்களையும் இச்சிறுவர் நலன்புரி நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதன்மூலம் பெற்றோர்களுடன் இவர்கள் இணைந்து தமது மகிழ்ச்சியான வாழ்வை கழிக்க முடியும். இச்சிறுவர்களுக்கு அறிவினை புகட்டி கல்வியாளர்களாக மாற்றுவதும் அவசியமாகும் என்றார்.

இவ்வைபவத்தில் நீதியமைச்சின் செயலாளர் சுதத் கம்லத் உரையாற்றுகையில், இன்று விடுவிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் நாட்டின் நலத்திற்காக நற்பிரசைகளாக வாழவேண்டும். எனது பிள்ளைகளைப் போலவே இச் சிறுவர்களையும் நான் பார்க்கின்றேன். நாட்டின் நலனில் அக்கறை கொண்டு சிறந்த நற்பிரஜைகளாக வாழ்வதே இச் சிறுவர்களுக்கு முக்கியமானதாகும்.

இன்று இங்கு திறக்கப்பட்டுள்ள சிறுவர் நலன்புரி நிலையம் இவ்வாறான சிறுவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை மேற்கொள்ளும். இன்றைய இச்சிறுவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள். சிறந்த நற்பிரஜைகளாக இவர்களை மாற்றி எடுப்பதில் நாம் முழுமையான பங்களிப்பை செய்யவேண்டும்

சார்க் நாடுகளின் மின்சக்தி அமைச்சர்கள் மாநாடு

சார்க் நாடுகளின் மின்சக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு எதிர்வரும் 28ஆம் 29ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி. ஜே. செனவிரத்ன மற்றும் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வலய மின்சக்தி பாதுகாப்பு திட்டம் மற்றும் மின்சக்தி செயற்திரனை மேம்படுத்தல் என்பன குறித்து ஆராயப்படும். இந்த மாநாட்டில் சார்க் நாட்டு மின்சக்தி அமைச்சர்கள் மின்சக்தித்துறை சார்ந்த நிபுணர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

வலய ஒத்துழைப்பினூடாக மின்சக்தி பரிமாற்று திட்டமொன்றை முன்னெடுப்பது மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான கூட்டு மின்திட்டம் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி சார்க் மின்சக்தி அமைச்சு செயலாளர்களில் மாநாடும் 29ஆம் திகதி மின்சக்தி அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும்.

ஊழல், மோசடி நிறைந்த இடமாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை – அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

arjuna-ranatunga.jpgஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மிக மோசமான ஊழல், மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டதாக அரச தரப்பு எம்.பி. அர்ஜுன ரணதுங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க, விளையாட்டு அமைச்சர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அர்ஜுன ரணதுங்க மேலும் கூறியதாவது;

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளேன். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மிக மோசமான ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டது. நல்லவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். மோசடிக்காரர்கள் தான் தற்போது அங்குள்ளனர். இதனால், விளையாட்டுத்துறை சீரழிக்கப்படுகின்றது. எனவே தான் நான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியேற்பட்டது. எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கு நீதிமன்றத்தையே நான் நாட வேண்டியிருந்தது.

நாளை மறுதினம் சூரியகிரகணம் – வெற்றுக் கண்களால் பார்க்காதீர்கள்!

lanka-map-02.jpgசூரிய கிரகணம் நாளை மறு தினம் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகப் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில் நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகள் ஊடாகவோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ண புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படமெடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான வழிகளின் ஊடாக சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் கண்பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திங்களன்று சூரிய கிரணம் இலங்கையில் தென்படும். பிற்பகல் 1.59 மணி முதல் காலி பிரதேசங்களிலும், பிற்பகல் 2.03 மணி முதல் மாலை 4.12 மணி வரை கொழும்பிலும், பிற்பகல் 2.14 முதல் மாலை 4.10 வரை யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணம் தென்படும். இதனை கொழும்பில் பிற்பகல் 3.12 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் முழுமையாகப் பார்க்கலாம். இச் சமயம் சூரிய கிரகணத்தில் 23 சதவீத முதல் 30 சத வீதம் வரை இலங்கையரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சூரிய கிரகணத்தை மொரட்டுவ கட்டுபெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசேட முகாமிலிருந்த படியும், குருணாகல் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை விண்வெளி காட்சியத்திலிருந்த படியும் பொது மக்கள் பார்க்கலாம். அத்தோடு www.actimt.ac.lk  என்ற இணையதள முகவரியில் நேரடியாகவும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறுத்துனர்கள் (welders)  பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடியைப் பாவித்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். சூரியனுக்கும், பூமிக்குமிடையில் நீல் வட்டப் பாதையில் வலம் வரும் சந்திரன், சூரியனுக்கும், பூமிக்கும் நேரெதிரே வருவதால் தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வருடம் இரண்டு சூரிய கிரகணங்களும், நான்கு சந்திர கிரகணங்களும், இலங்கையில் தென்படும். இவ்வருடம் தென்படுகின்ற முதலாவது சூரிய கிரகணமே 26 ஆம் திகதி தென்படவிருக்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி இங்கு தென்படும் என்றார்.