மனோ கணேசன்

மனோ கணேசன்

“தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.” – மனோ கணேசன்

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு:-

மத்திய மாகாணத்தில் ஆரம்பித்து, இப்போது ஊவா மாகாணம் வரை, மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு என்ற இயந்திரம் ஒழிக்கப்பட்டு, தமிழ்ப் பிரிவு ஆகிவிட்டது. 6 தமிழர் பெரும்பான்மை பிரதேச சபைகளை நுவரெலியாவில் போராடிப் பெற்றதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வரலாறு. இருப்பதையும் இழப்பது இப்போதைய வரலாறு.

தனியான தமிழ்க் கல்வி அமைச்சு என்றால் மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்தில், எங்கள் பாடசாலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத் தனியான நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம் – என்றுள்ளது

“ஜனாதிபதிக்கு தமிழர் பற்றி தெரியாத விடயங்களை அவருடன் இருக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லிக்கொடுக்க  வேண்டும்” – மனோ கணேசன்

“ஜனாதிபதிக்கு தமிழர் பற்றி தெரியாத விடயங்களை அவருடன் இருக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லிக்கொடுக்க  வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் வாழும், சிங்கள, தமிழ், மொழிகளை பேசும் பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் இலங்கை என்ற நாட்டை உருவாக்கவே நாம் முயல்கிறோம். அது எம் நோக்கம். ஆனால், தூரதிஷ்டவசமாக ஜனாதிபதியின் அரசு, இந்நாட்டில் “சிங்கள பெளத்தம் மட்டுமே” என்ற நாட்டை உருவாக்க பார்க்கிறது. அது பிழை. அது அவருக்கு புரியவில்லை.

இந்நாட்டின் வரலாற்றில் தமிழருக்கு உரிமை உண்டு. வடக்கு, கிழக்கில் பெளத்த புராதன சின்னங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம், இருக்கலாம். ஆனால், அவை தமிழ் பெளத்த புராதன சின்னங்கள். இந்நாட்டில் 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி இருந்தது. தென்னிந்தியாவிலும் அப்படிதான்.

ஆகவே பெளத்தத்துக்கு “சிங்களம்” என்ற லேபலை போட வேண்டாம். தமிழ் மக்களை அரவணைக்க பெளத்தத்தை பயன்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கூறுகிறேன்.

ஜனாதிபதிக்கு இது புரியாவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு புரியாததை, அவருடன் இருக்கும், தமிழ் அரசியலர்களான டக்லஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லித்தர வேண்டும். அமைச்சர் அலி சப்ரியும் சொல்லித்தர வேண்டும்.

தெரியாவிட்டால், சொல்லித்தர வேண்டுமல்லவா? இவற்றை ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஜனாதிபதிக்கு எங்கள் செய்தி. இதை அவருக்கு கொண்டு போய் சொல்லுங்கள். நாம் நாட்டை உருவாக்க விளைகிறோம். அவரது அரசு நாட்டை அழிக்க விளைகிறத என அவர் மேலும் ​தெரிவித்துள்ளார்.

“எங்கள் தமிழ் மொழிக்கும், மதத்துக்கும், முக்கியத்துவம் கொடுக்காத  இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது” – மனோ கணேசன்

“எங்கள் தமிழ் மொழிக்கும், மதத்துக்கும், முக்கியத்துவம் கொடுக்காத  இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில் இது தொடர்பாகவும் இலங்கையின் சுதந்திரதினம் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கம் போதே மணோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதமாம். இறுமாப்பாகச் சொல்கின்றார்கள். தமிழில் பாடினால் மட்டும் அதனால், தமிழ் பேசும் இலங்கையர் வீடுகளில் தேனும், பாலும் ஓட போவதில்லை. இதன்மூலம் குடி எழும்பியும் விடாது. குடி முழுகியும் விடாது. ஆனால், நாட்டை ஒன்றுப்படுத்த கடவுள் தந்த, ‘ஒரே மெட்டு, ஒரே அர்த்தம்’ கொண்ட இரண்டு தேசிய கீதங்களையும் கூட ஒருசேர பாட முடியாத அளவில் இவர்கள் இனவாதத்தில் ஊறிப் போய் உள்ளார்கள்.

மேலை நாடுகளிலும் இனவாதம், நிறவாதம் இருந்தாலும், வெள்ளை இனவாதிகளுக்கு எதிராக, கறுப்பு அமெரிக்கர்களுக்கு ஆதரவாக, ‘கறுப்பு உயிர் கனதியானது’ என்று சொல்லி போராட, கோடிக்கணக்கான வெள்ளையர்களே அந்நாடுகளில் உள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகளில் இனவாதம் தோலின் நிறத்தில் உள்ளது. இலங்கையில் இங்கே அது ஆன்மாவில் ஊறியுள்ளது.

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையில், நான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரிடம் கடைசி நிமிட அழைப்பாக, “இலங்கைத் தாயைப் போற்றும், தமிழிலான தேசிய கீதத்தையும் பாடி, தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி, நாம் முன்னோக்கிச் செல்வோம். அதன்மூலம், நாமும் இந்த நாட்டுக்கு உடைமையானவர்கள் என்ற உணர்வை தமிழ் பேசும் சுமார் ஐந்து மில்லியன் இலங்கையர்களின் மனங்களில் ஏற்படுத்துவோம் என்று நேற்று கூறியிருந்தேன்.

ஆனால், இவர்களைத் திருத்த முடியவில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வளவு அடி வாங்கினாலும், திருந்தா ஜன்மங்கள். பல வர்ண பூக்கள் நிறைந்த பூங்கா எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை உணர தெரியாத பிற்போக்குவாதிகள். உலகமே அந்தந்த நாடுகளில், பல்லின, பன்மத, பன்மொழி அடங்கிய பன்மைதன்மைகளை கொண்டாடி மகிழும், இவ்வேளையில், இவர்கள் நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றார்கள்.

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என இவர்களுக்கு உணர்த்துவோம்.

65 வருடங்களுக்குப் பிறகு, கடந்த எமது நல்லாட்சியில், நாம் முன்னின்று போராடி பெற்ற, தமிழ்த் தேசிய கீதம் பாடும் உரிமையை, இடைநிறுத்தி விட்டு, இவர்கள் கொண்டாடும் சுதந்திர நிகழ்வுக்கு, எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை  நாம் ஏற்கமாட்டோம். எமது இருப்பிடங்களில் நாம் எமது சுதந்திர உணர்வைக் கொண்டாடுவோம். தமிழ்மொழிக்கு உரிய மரியாதையை தராத இலங்கை முழுமையான இலங்கை நாடல்ல.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய அரசுக்குள்ளே அடைக்கலம் புகுந்து, இந்த இனவாத அரசுக்கு ஒரு ஏற்புடைமை ஏற்படுத்தி கொடுக்க முயலும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என தெரிவித்துள்ளார்.

“முற்போக்கான பரிந்துரைகளை அண்ணன் ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியாத போது தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது” – ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் மனோ கணேசன் !

“இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் சபையைச் சமாளித்து, மீண்டும் கால அவகாசம் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே இந்தப் புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராகக் கடும் தொல்லை தரும் சர்வதேச மேகங்கள் சூழ்கின்றமையினாலேயே, இலங்கை ஜனாதிபதி இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

உள்நாட்டுக்குள்ளேயே தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய செயற்பாட்டை இந்த அரசு  முன்னெடுத்திருக்க வேண்டும்.  அதன் மூலமாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்கு அப்பால் சென்று, பல்லின, பல்மொழி, பன்மத நாடு என்ற அடிப்படையை இலங்கை அரசு முன்னெடுத்திருக்குமானால், இத்தகைய கடுமையான சர்வதேச நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய தேவைப்பாடு இலங்கைக்கு இருந்திருக்காது.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தலைமையிலான அரசுதான் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். இதற்கு முன்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கூட, கண்துடைப்பு ஆணைக்குழுக்களாகவே இருந்துள்ளன.

மஹிந்த ராஜபக்‌ச, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மிகச் சிறந்த, முற்போக்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. அந்த பரிந்துரைகளை கூட அண்ணன் ஜனாதிபதி  செயற்படுத்தவில்லை.

இந்நிலையில், இன்று தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது. ஆகவே, இது கண்துடைப்பு என்பதே எனது உறுதியான நிலைப்பாடு  – என்றார்.

“தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, அரசு இல்லாத வருவாயைத் தேடி ஓடுகிறது” – மனோ கணேசன்

“தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, அரசு இல்லாத வருவாயைத் தேடி ஓடுகிறது” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசினுடைய சீனச்சார்பு போக்கு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்புத் துறைமுகம் இலாப வருமானம் பெறுகின்றது.  பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்புத் துறைமுகத்தில் சுமார் 70 குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்குப் போவதும், வருவதும்தான்.

பெரும் கொள்கலன்களைச் சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லாத் துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்குச் சரிபட்டு வராது. இந்தநிலையில், தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகைக்  கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றைப் பின்னர் சிறிய இந்தியக் கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்குச் செல்கின்றன.

இதுதான் பல பத்தாண்டுகளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்புத் துறைமுகமே ஓடுகின்றது. கொழும்புத் துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், அம்பாந்தோட்டை, திருகோணமலை) ஓடுகின்றன. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. இந்தநிலையில், இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஓர் ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால ‘இலவு காத்த கிளி வெளிநாட்டுக் கொள்கை’ இதுவாகும். புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையகத் தமிழரை, இலங்கையைச் சந்தோஷப்படுத்த, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா இணங்கியது. இதனால், இலங்கையில் தமிழரின், மலையகத் தமிழரின் அரசியல் பலம் குன்றியது. அதைத் தொடர்ந்து, கச்சதீவை, தமிழகத்தின் எதிர்ப்பைக் கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்குக் கொடுத்தது.

விடயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.  இப்போதும், இந்தியாவின் ‘இலங்கை கொள்கை’ காரணமாக, ஒரு பிராந்திய களஞ்சிய துறைமுகமாக, இந்தியப் பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்புத் துறைமுகம், இந்தியத் துறைமுகங்களை விட சிறப்பாகச் செயற்படுகின்றது.

இந்தநிலையில், இப்படி பொருளாதாரத்தில் பல மடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், ‘பிராந்திய களஞ்சிய துறைமுகம்’ என்பதைவிட, கொழும்பை ‘உலக களஞ்சிய துறைமுகமாக’ மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்கத் திட்டம் போடுகின்றார்கள். இலங்கையைத் தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிகக் கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகின்றோம்” என்று சொல்லும், கனவு திட்டம் இதுவாகும்.

அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவைப் புறக்கணித்து விட்டு, இந்தக் கனவுத் திட்டத்துக்காக சீனா ஆதரவுடன் கொழும்புத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். இதில் சீனாவின் நோக்கம் என்னவென்பது சீனாவுக்கு மட்டுமே தெரியும்.

இதற்காகத் கொழும்புத் துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான தெற்காசிய நுழைவாயில் முனையம்(South Asian Gateway Termina)l (SAGT) என்பதை முழுமையாக சீனாவுக்குக் கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்குக் கீழ் கட்டுகின்றார்கள். எதிர்காலத்தில் SAGT முனையத்தில் இருந்து துறைமுக நகருக்குக்  கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம்.

SAGT முனையம் முழுமையாக சீனாவுக்குக் கொடுக்கப்பட்டபோது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51 சதவீதம், ஜப்பான் நிறுவனத்துக்கு 29 சதவீதம், இந்திய நிறுவனத்துக்கு 20 சதவீதம் என்ற ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே, இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்பு தெரியுது.

இந்நிலையில், இன்று நரேந்திர மோடியின் இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கின்றது. இதனை பத்தாண்டுகளாகக் கொழும்புத் துறைமுகத்துக்கு இலாபம் பெற்றுக்கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய கடல் எல்லைக்கு அண்மையில், கொழும்புத் துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவதையும் இந்தியாவால் சகிக்க முடியவில்லை.

தமிழகத்தின் தென்கோடியில் கொளச்சல் என்ற இடத்தில் புதுத் துறைமுகம் ஒன்றைக் கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கின்றது. மேலும், கேரளத்திலும், அந்தமானிலும் புதுத் துறைமுகங்கள் கட்டவும் முனைகின்றது. இவை உருவாகிவிட்டால் இந்திய கொள்கலன்கள் கொழும்பு வரத் தேவையில்லை. இது இலங்கைக்குப் பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய பெரிய கப்பல்களையும் இந்த இந்தியத் துறைமுகம் இறக்கி வைத்து, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையேயே விரும்பும்.

தூரத்து உறவுக்காரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனைக் பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான பெரிய ‘ரிஸ்க்’ எடுக்கின்றது.

தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, இல்லாத வருவாயைத் தேடி ஓடுகிறது. ‘இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதைத் தேடும்’ இந்த ‘ரிஸ்க்’, வெறும் பொருளாதார ‘ரிஸ்க்’ மட்டுமல்ல, அரசியல் ‘ரிஸ்க்’கும்கூட என்பதை உடனடி எதிர்காலம் காட்டலாம்” – என்றுள்ளது.

“இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?சொல்லுங்கள். பார்ப்போம்…!” – சுரேன்ராகவனிடம் மனோ கேள்வி !

“இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?”என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கேள்வி  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.01.2021) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கனடாவின் ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கின்றது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இந்தச் சபையில் சொன்னார்.

ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இங்கே நான் முதலில் சுரேன் ராகவனிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் இன்று எங்கே ஐயா தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில்  சட்டம் கொண்டு வந்து அழித்து  முடிக்க முதலில்  இங்கே எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? சொல்லுங்கள். பார்ப்போம்…!

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என உங்கள் அரசு சொல்கின்றது. ஆனால், சிறைத்தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கின்றது.  எனினும்,20, 25 ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை.

இந்த நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகின்றோம். ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு என்றல்லவா இருக்கின்றது?

இதுவா தேசிய நல்லிணக்கம், சுரேன் ராகவன்? இந்த நாட்டில் இன்று தேசிய நல்லிணக்கம் இல்லை. தேசிய ஒருமைப்பாடு அமைச்சே இல்லை. மக்களைப் பிழையாக வழிநடத்த வேண்டாம். சும்மா, இந்த அரசில் இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாம்” – என்றார்.

“தெற்கின் சிங்கள பத்திரிகைகள் மீது பாயாத பயங்கரவாத தடைச்சட்டம் வடக்கின் தமிழ்பத்திரிகைகளை குறிவைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”  – மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் யாழ். காவல்துறையினரால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல தரப்பினரும் ஊடக அடக்குமுறைக்கு எதிரான தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ”தமிழ் ஊடகங்களை அடக்குவதிலும் ஒடுக்குவதிலும் ராஜபக்ச குடும்ப அரசு கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பதற்கு ‘உதயன்’ மீதான வழக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வரலாற்றில் தடம் பதித்தவர்களின் பிறந்த தினத்தையும், நினைவேந்தல் தினத்தையும் நினைவூட்டுவதும், அது தொடர்பான பதிவுகளை இடுவதும் – பிரசுரிப்பதும் ஊடகங்களின் பணி. இந்தநிலையில், கடந்த நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமன்று அது தொடர்பான செய்தியுடன் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டதாக ‘உதயன்’ மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெற்கில் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளில் பிரபாகரனின் படமும் வெளிவருகின்றது. இந்தநிலையில், ‘உதயன்’ பத்திரிகையைக் குறிவைத்தே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்துள்ளது.

‘உதயன்’ பல்லாண்டு கால வரலாற்றைக்கொண்ட பத்திரிகை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும் அன்று தொடக்கம் குரல் கொடுத்து வரும் பத்திரிகை. எனவே, இந்தப் பத்திரிகை மீதான அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” – என்றுள்ளது.

இதே நேரம் உதயன் மீதான பயங்கரவாததடைச்சடடத்தை கண்டித்து இரா.சம்மந்தன், எதிர்கட்டசி தலைவர் சஜித்பிரேமதாஸ ஆகியோரும் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

“ஒரு பக்கம் சிறைக் கொலைகள் ,மறுபக்கம் ஊழல், மோசடிகள்தான் இந்த ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன” – மனோ கணேசன் குற்றஞ்சாட்டு !

“ஒரு பக்கம் சிறைக் கொலைகள் ,மறுபக்கம் ஊழல், மோசடிகள்தான் இந்த ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

ராஜபக்ச அரசு இன்று தோல்வியடைந்த அரசாக மாறிவிட்டது. இந்த அரசை சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாட்டுக்குப் பொருத்தமற்ற ,நாட்டு மக்கள் விரும்பாத தலைகீழான நடவடிக்கைகளையே இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.

நல்லாட்சியில் நாம் முன்னெடுத்த உருப்படியான எந்த வேலைத்திட்டங்களையும் இந்த அரசு இதுவரை ஆரம்பிக்கவில்லை. ஒரு பக்கம் சிறைக் கொலைகள் ,மறுபக்கம் ஊழல், மோசடிகள்தான் இந்த ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன.

நாங்கள் அரசை எதிர்ப்பது ஒருபுறமிருக்க இந்த அரசை உருவாக்கியவர்களே அரசு அழிய வேண்டும் எனக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, 2021ஆம் ஆண்டு என்பது இந்த அரசின் அழிவின் ஆரம்பம் என  நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

“தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது“ – மனோ கணேசன்

தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெருந்தோட்டங்கள் நஷ்டமடைவது காலங்காலமாக நடைபெறுகிறது. இவற்றை எதிர்கொள்ளவே நஷ்டமடையும் பெருந்தோட்டங்கள், சிறு தோட்ட உடைமைகளாக பிரித்து வழங்க வேண்டும் என நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம்.  அந்த முயற்சிகளையும் நாம் ஆரம்பித்து இருந்தோம்.

இந்நிலையில் நஷ்டமடையும் தோட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அக்கறை காட்டுவது நல்லது.  அவற்றை சிறு தோட்டங்களாக பயிர் செய்கைக்காகவும் இரத்தினக்கல் அகழ்வுக்காகவும் காணிகள் பிரித்து வழங்கப்பட ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை நல்லதே.

ஆனால் காணிகள் பிரித்து, வழங்கப்படும்போது, தோட்ட தொழில் துறையில் பெரும் தொழில் நேர்த்தி அனுபவம் கொண்ட தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த புதிய மாற்றத்தின் பின்னாலே வரும் புதுயுகத்திலும் தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது. முடியாது. இதை கவனத்தில் கொள்வது, அரசின் உள்ளே இருப்பவர்களின் கடப்பாடு” என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.