மனோ கணேசன்

மனோ கணேசன்

பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் – பா.உ. மனோ கணேசன்

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா  சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும்  சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள்.  அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம்,  “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.

2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள்.  ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல்  கைதிகளை  அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம்.

மேலும் “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகம் முயற்சிக்கின்றது. தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்படக் கூடாது. புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும். “மொடர்ன் ஸ்லேவரி (modern slavery)” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் என அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை முதற் தடவையாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மலையகத் தமிழரான சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தோட்ட மற்றும் சமூகக் கட்டுமான பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான தீவிர முயற்சிகளை அரசு எடுத்து வருவதை பிரதி அமைச்சர் பிரதீப் சுட்டிக்காட்டியிருந்தார்.

“நீண்ட கால முயற்சிகளின் பின் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” – மனோ கணேசன்

“நீண்ட கால முயற்சிகளின் பின்னணியில் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாட்டுத் தூதுவர்களுடனும், அந்தந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்துபோகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள் காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பல நாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் நாம் எதிர்வரும் வாரங்களில் பேசவுள்ளோம்.

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் மத்தியிலான பெருந்தோட்ட பிரிவினரின் மிகவும் பின்தங்கிய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பான எமது தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இன்று பலனளிக்க ஆரம்பித்துள்ளன. இது மகிழ்ச்சியை தரும் ஒரு வளர்ச்சி மைல்கல்லாகும்.

நம்மை ஆளும், ஆண்ட அரசாங்கங்கள் எம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தும்போது, நாம் அயலவரை நாடி எமது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வது மிகவும் இயல்பானதாகும்.

இதில் தவறில்லை. இருந்தால், அரசாங்கத்திடமே தவறு இருக்கிறது. இதுபற்றிய தெளிவு என்னிடம் நிறையவே இருக்கிறது. ஆகவே, எந்த இனவாதிகளும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

எந்தவொரு முயற்சியும் ஒரே இரவில் பலன் தரப்போவதில்லை. படிப்படியான இடைவிடாத முயற்சிகளின் பின்னரே பலன் கிடைக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எம்மை நோக்கிய இந்த சர்வதேச கவனத்தை எமது மக்களுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளாக மாற்ற, நாம் நன்கு திட்டமிட்டுள்ளோம். அதன் விபரங்களை அடுத்துவரும் நாட்களில் நாடு அறிந்துகொள்ளும் என கூட்டணி தலைவர் என்ற முறையில் இப்போதே கூறிவைக்கிறேன்.

நாம் சர்வதேச அரசுமுறை பிரதிநிதிகள், தூதுவர்கள் ஆகியோருடனும், யூ.எஸ்.எய்ட், உலக வங்கி உட்பட்ட இலங்கையின் அபிவிருத்தி பங்காளி நிறுவனங்களுடனும் பேசுகிறோம்.

‘இலங்கைக்கு நீங்கள் தரும் நன்கொடைகள், உதவிகள், கடன்கள் இலங்கையில் மிகவும்  பின்தங்கிய எமது மக்கள் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்’ என நாம் வலிந்து வலியுறுத்துகிறோம்.

இன்று அரசு முன்னெடுக்கவுள்ள ‘அஸ்வெசும ஆறுதல்’ என்ற நாளாந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் நாம் எடுத்த முன்நகர் நடவடிக்கை இன்று உலக வங்கியினதும், அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை பெற்றுள்ளது.

‘அஸ்வெசும ஆறுதல்’ திட்டம் தொடர்பாக உலக வங்கியுடனான எமது அடுத்தகட்ட காத்திரமான பேச்சுகள் அடுத்துவரும் சில நாட்களில் நடைபெறும்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் போதும் கணிசமாக பணி செய்தோம். இன்று அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக நாம் அங்கம் வகிக்கும் எமது அரசு மீண்டும் உருவாகும் வரை சும்மாவே இருக்கவும் மாட்டோம்.

எதிரணியில் இருந்தபடி பணி செய்கிறோம். எமது இந்த கொள்கையை கவனத்தில் எடுக்க நமது மக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் வேண்டுகிறேன் என்றார்.