தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெருந்தோட்டங்கள் நஷ்டமடைவது காலங்காலமாக நடைபெறுகிறது. இவற்றை எதிர்கொள்ளவே நஷ்டமடையும் பெருந்தோட்டங்கள், சிறு தோட்ட உடைமைகளாக பிரித்து வழங்க வேண்டும் என நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம். அந்த முயற்சிகளையும் நாம் ஆரம்பித்து இருந்தோம்.
இந்நிலையில் நஷ்டமடையும் தோட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அக்கறை காட்டுவது நல்லது. அவற்றை சிறு தோட்டங்களாக பயிர் செய்கைக்காகவும் இரத்தினக்கல் அகழ்வுக்காகவும் காணிகள் பிரித்து வழங்கப்பட ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை நல்லதே.
ஆனால் காணிகள் பிரித்து, வழங்கப்படும்போது, தோட்ட தொழில் துறையில் பெரும் தொழில் நேர்த்தி அனுபவம் கொண்ட தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த புதிய மாற்றத்தின் பின்னாலே வரும் புதுயுகத்திலும் தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது. முடியாது. இதை கவனத்தில் கொள்வது, அரசின் உள்ளே இருப்பவர்களின் கடப்பாடு” என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.