அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அதிகாரம் பொதுமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்க ஜனாதிபதிக்கு உதவும் என சுட்டிக்காட்டினார்.
மேலும் 19 ஆவது திருத்தம் இருக்கும் வரை, ஜனாதிபதி நீதிமன்றங்களுக்கு பதில் வழங்க வேண்டியவராக இருப்பதனால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.
எனவே நீதிமன்றம் தொடர்பான விடயங்களைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு கணிசமான நேரத்தை ஒதுக்குவதன் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஜி.எல். பீரிஸ் கூறினார்.
தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றங்களில் ஆஜராகியமையினை சுட்டிக்காட்டிய ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அத்தகைய நீதிமன்றங்கள் மற்றும் அணிக்குழுக்களில் முன்னிலையானால் அவரினால் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற போதுமான நேரம் இருக்காது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் பிரிவு 35 (1), 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு விடயத்திற்காகவும் எந்தவொரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.