ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசா மீண்டும் தெரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசா மீண்டும் தெரிவு!

கடந்த 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது . இந்த மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த சஜித் பிரேமதாஸ தலைமையில் 2020 இல் உருவாக்கப்பட்டதே ஐக்கிய மக்கள் சக்தியாகும். அவர் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி அவரால் வெற்றி பெற முடியவில்லை.

சஜித் பிரேமதாஸவை பொறுத்தவரை இலங்கை அரசியலில் தோல்வியடைந்த ஆளுமையற்ற தலைவராக காணப்படுகிறார். வெறுமனே தந்தையான பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தார் என்ற நெப்போரிஸத்தினூடாக அரசியலுக்குள் நுழைந்தவர். தெற்காசியாவின் சாபக்கேடான வாரிசு அரசியலின் விளைவுதான் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த அனைத்து சிங்கள தேசிய கட்சிகளிலும் காணக் கூடியதாக உள்ளது.

கடந்த இரு தேர்தல்களிலும் இலங்கை மக்கள் குடும்ப அரசியலுக்கு சாவு மணியடித்த போதும் மக்கள் ஆணையை கருத்தில் கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாஸவை மீண்டும் கட்சித் தலைவராக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரசியலில் முகவரி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

 

இலங்கை அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் மனித உரிமையாகும். இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது என களனி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் தனது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர், வீடு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறார். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் எவருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை அவர்களுக்கு காணப்படுகின்றன. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும். பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும். அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் !

கடையொன்றில் வைத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாவலப்பிட்டியில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரம் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரின் மகனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதோடு, நேற்று (15) முற்பகல் 11 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆதரவாளர்கள் குழுவுடன் குறித்த கடைக்கு சென்று மேற்படி இளைஞனிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் அதனை வாங்க மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுதோடு, வைத்தியசாலையில் பொலிஸாரிடம் முறைப்பாட்டை வழங்கியதன் பின்னர் இன்று (16) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று கண்டியில் வெளியிடப்பட்டது.

 

இதிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும்,6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே டபாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் இன்று (8) தீர்ப்பிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

டயனா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டு பாராளுமன்றில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளைடயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

அனுரகுமார – சஜித்பிரேமதாஸ இடையே விவாதத்தை நடத்துவதற்கு நாம் தயார் என சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவிப்பு !

தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விவாதத்தை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடத்தவும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க விருப்பம் தெரிவித்து அக்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் இடையில் நடைபெறவுள்ள விவாதத்தை சட்டக்கல்லூரியில் நடத்துமாறு தமது சங்கம் இரு கட்சிகளின் தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாக இலங்கை சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் நவோத் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கும் ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதத்தின் ஊடாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு முன்வைக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விவாதம் செய்ய நான் தயார் – திகதிகளை குறித்து சஜித்பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பிய அனுர குமார திசாநாயக்க !

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி நேற்று(22) அறிவித்துள்ளது.

அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியது. அதற்கமைய மே மாதம் 7, 9, 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வகையில் விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கவில்லையாயின் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்திற்கான திகதி இதுவரையில் நிர்ணயிக்கப்படாமையின் காரணமாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து சேவை, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. திரிபோஷா, முட்டை உட்பட உணவு பொருட்களுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. புதிய வரிக் கொள்கையினால் சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிப்படையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறுவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால், முறையான தரப்படுத்தல்களுக்கு அமைய தீர்மானங்களை எடுக்காமல அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

மொத்த தேசிய உற்பத்தியை 15 சதவீதமாக அதிகரித்துக்கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சியில் மொத்த தேசிய உற்பத்தி 20 சதவீதமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தூரநோக்கமற்ற வகையில் எடுத்த தவறான தீர்மானத்தினால் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையான வரி வருமானம் இழக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு உயர்நீதிமன்றம் உறுதியான பதிலளித்துள்ளது.

ராஜபக்ஷர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களும் தற்போது தெளிவடைந்துள்ளார்கள்.

பெறுமதி சேர் வரி (வற்) தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை. அடுத்த ஆண்டு முதல் 15 சதவீதமாக உள்ள வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படும். தற்போது பூச்சியமாக உள்ள வரி வீதம் அடுத்த ஆண்டு முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிடுங்கள்.

வற் வரி தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் குழு பரிந்துரைத்த விடயங்களை அரசாங்கம் செயற்படுத்த தயாரில்லை. அடுத்த ஆண்டு முதல் திரிபோஷா, முட்டை உட்பட சகல உணவுப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரி அதிகரிக்கப்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

திரிபோஷா, முட்டை ஆகியவற்றுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது வற் வரிக்குள் மண்வெட்டி கூட உள்ளடக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டம் முறையற்ற வகையில் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தற்காலிகமானதே தவிர நிலையானதல்ல. புதிய வரிக் கொள்கையினால் அடுத்த ஆண்டு சமூக கட்டமைப்பு மிக மோசமாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை குழு நியமனம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.

 

இந்த விடயம் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 07 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சபாநாயகர் குழுவொன்றை அமைத்துள்ளார்.

 

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவின் தலைமையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவில் ஆளுங்கட்சி சார்பில் சமல் ராஜபக்ஸ மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

எதிர்க்கட்சி சார்பில் கயந்த கருணாதிலக்கவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

“அரச வருமானத்தை விட அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் அதிகம்.”- அசோக அபேசிங்க

அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் அரசின் வருமானம் 2 மில்லியன் கோடி என்றும் அரச வருமானத்தை விட அதிக ஊழல் மோசடிகள் அரச நிறுவனங்களில் நடந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க கணக்குகள் குழுவின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அசோக அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

100 வருடங்களாக அரசாங்க கணக்குகள் குழு இந்த விடயங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்த போதும் அவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு ஊழல் செய்தவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அடைந்த நஷ்டத்தை மீட்பதற்கோ, வழக்கு தொடரவோ இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.