அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எல்லை நிர்ணயம் செய்து செயற்படுவதற்கு – எந்தவொரு ஆயுதக் குழுவுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாது

sarath-fonseka.jpgஇலங் கையில் இனிமேல் எந்தவொரு ஆயுதக் குழுவும் எல்லைகளை நிர்ணயம் செய்துகொண்டு செயற்பட இடமளிக்கப் போவதில்லையென இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதும் அதனை மீண்டும் தலையெடுக்க எவ்வகையிலும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார். அநுராதபுரத்தில் நடைபெற்ற முன்பள்ளித் திறப்பு விழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இராணுவத்தளபதி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியதாவது: “இராணுவத்தில் இணைந்துகொள்வோரின் தொகை முன்னரைவிட அதிகரித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் 116,000 ஆக இருந்த படையினரின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத்தொகையை 10 முதல் 15 மடங்காக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்” என்றும் தெரிவித்தார்.

இலங்கை இந்திய உடன்படிக்கை முறையாக பயன்படுத்தியிருந்தால் பிரச்சினை வியாபித்திருக்காது – அமைச்சர் டக்ளஸ்

epdp.jpgபொன்னான வாய்ப்பாக அமைந்த இந்தியஇலங்கை உடன்படிக்கை சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் வியாபித்திருக்காதென ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த வாய்ப்பை விடுதலைப் புலிகளே நழுவவிட்டு விட்டதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தேவானந்தா இவ்வாறு கூறினார். அரசியல் கட்சி என்ற வகையில் இனப்பிரச்சினைத் தீர்விற்கு முதற்கட்டமாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் முறையாக அமுல்செய்யப்பட வேண்டும். அது அரசியலமைப்புக்கு உட்பட்ட சட்டமென்ற வகையில் அதை நடைமுறைப்படுத்துவதை எவராலும் மறுக்க முடியாது. இந்தியஇலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் யாழ்.குடாநாட்டு மக்களுக்கு வறுமை ஏற்பட்டிருக்காது.

யுத்தம் நடைபெறுமொரு பிரதேசத்தில் இருக்கும் நிலைமையே வன்னியிலும் நிலவுகிறது. எனினும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு பாதிப்புகளையும் சேதங்களையும் குறைத்து மக்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் அபிவிருத்தியை நிலைத்து வைத்திருக்க முடியும்

images-0302.jpgகிராம மட்டத்திலே சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தான் அபிவிருத்தியை நிலைத்துவைத்திருக்க முடியும். எனவே, சமூக கட்டமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும் என தம்பட்டை விதை நெல் உற்பத்தி நெல் களஞ்சியசாலை கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார். சுவாட் அமைப்பு ஒக்ஸ்பாம் பிரித்தானிய நிறுவனத்தின் அனுசரணையுடன் நிலைத்திருக்கும் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் 3 கோடியே 71 இலட்சம் ரூபா செலவில் விதை நெல் உற்பத்தி நிலையம் ,நெற்களஞ்சியசாலை நிர்மாணிக்கப்பட்டு மக்கள் சார்க் அமைப்பிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது மாவட்டத்தில் பெண்கள் அதிகமாக அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுகின்றதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நான் கடந்த 12 வருடங்களாக இவ் மாவட்டத்தில் கடமை புரிந்து வருகின்றேன். ஆரம்பகாலங்களில் பெண்களின் பங்களிப்பை காண முடியாமல் இருந்தது. எத்துறைகளில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை மிகக் கவனமாக ஆராய்ந்து பெண்களின் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டத்தில் முக்கியம் என்பதை அடையாளம் கண்டு கொண்டு சுவாட் போன்ற அமைப்புகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க முயற்சித்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.இங்கு சமூக கட்டமைப்பு ஒன்று சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதை மிகத் தெளிவாக காண முடிகின்றது. இன்று எனக்கு முக்கியமான நாள்.இந்நாள் கரையோரப் பிரதேசத்தில் அதிகமான மக்களை சந்திக்கின்ற நாளாக அமைந்திருக்கின்றதுடன் இங்கு நூற்றுக்கு 99 வீதம் பெண்கள் இவ் அபிவிருத்தித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனைக் கண்டிக்கின்ற போது நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க இந்தியா, ஐ.நா.முயற்சிக்க வேண்டும்

prakas.jpgமார்க் சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ் கரத், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் இரண்டரை லட்சம் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்த மக்களை வெளியேற்றி பாதுகாக்க இந்திய அரசும், ஐ.நா. சபையும் முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையும், சுதந்திரமும் கிடைக்க அரசியல் தீர்வு ஏற்படவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்திலும், ஆணையர்களை நியமிப்பதிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தி வருகிறது.

இதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

வல்லுறவுக்குட்படுத்தியவரின் நாக்கை துண்டாடிய யுவதி

நீர்கொழும்பு தாகொன்ன பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற ஒருவர், அங்கு தனிமையிலிருந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய போது அந்த யுவதி அவரது நாக்கைக் கடித்து துண்டாடியுள்ளார். இதனையடுத்து மறுநாள் அவர் பொலிஸாரால் கைது செய்யபட்டு நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தாகொன்ன பிரண்ஷிப் கார்டன் பகுதியிலுள்ள தனது சகோதரனின் வீட்டுக்கு வந்த போதே இந்த யுவதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. வீட்டிலிருந்துவர்கள் எல்லோரும் வெளியே சென்று விடவே இந்த யுவதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவர் இந்த யுவதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் கொள்ளையிட முயற்சித்துள்ளார். எனினும் அவருக்கு எதுவுமே அகப்படவில்லை. இதையடுத்து அவன் அந்த யுவதியை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியுள்ளான். இதன்போது அந்த யுவதி அவனது நாக்கை கடித்துத்துண்டாடி அதனை வெளியே துப்பிவிட்டார். நாக்கு இரண்டாகத் துண்டாடப்பட்ட ஆத்திரத்தில் அவன் அந்த யுவதியை கத்தியால் குத்த முற்பட்ட போது அந்த யுவதிக்கு கையில் காயங்களேற்பட்டுள்ளன.

இதற்கிடையில் அந்த யுவதி எழுப்பிய அவலக் குரல் கேட்டு அயலவர்கள் அங்கு வரவே துண்டாகிப்போன நாக்கையும் விட்டு விட்டு அவன் தப்பியோடி விட்டான். பின்னர் ஒருவாறு மினுவாங்கொடை ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவன் விபத்தில் நாக்கு துண்டாடப்பட்டதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளான். எனினும் அவர்கள் அவனை மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து அவன் தப்பி வீடு சென்ற போது ஞாயிற்றுக்கிழமை வியாங்கொடையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் துண்டாடப்பட்ட அவரது நாக்கையும் எடுத்து வந்த பொலிஸார் அவரை மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது

யுத்தத்தின் பேரில் அரசியல் நடத்துவதை நிறுத்துமாறு ஐ.தே.கட்சி கோருகின்றது

logo_unp.jpgஐ.தே.கட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் யுத்தத்தினை நிறுத்துமாறு கேட்கவில்லை. யுத்தத்தின் பேரில் அரசியல் நடத்துவதையே எதிர்க்கின்றோம். இவ்வாறு தெவித்தார் மத்திய மாகாண ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி. திஸாநாயக்க. குண்டசாலைத் தொகுதியில் தம்பராவவில் நடைபெற்ற ஐ.தே.கட்சிப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் எஸ்.பி. திஸாநாயக்க தமதுரையில்; மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வெற்றி பெற வேண்டும் மக்கள் சக்தி வெற்றி பெற வேண்டும். மத்திய மாகாணத்தில் தொழிலற்ற இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களின் வருமானத்தினை அதிகரிக்க வேண்டும். இளைஞர் சக்தியை நாட்டின் மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த மாகாணத்தினை ஆட்சி செய்தவர்கள் எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்கவில்லை. வெளிநாட்டு மூலதனம் பெறப்பட்டு உற்பத்திகள் அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் சக்தியை அதிகரித்தால் வேலைவாய்ப்பினை, வருமானத்தினை அதிகரிக்க முடியும்.

சகல மின் உற்பத்தி நிலையங்களும் மலையகத்திலிருந்த போதும் இதனால் ஈட்டப்படும் வருமானம் மலையகத்திற்குச் செலவிடப்படுவதில்லை. சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழர் பெருந்தோட்ட வருமானத்தினை மட்டும் நம்பி வாழமுடியாது. அவர்களிடம் வருமானத்தினை பெறக்கூடிய கைத்தொழில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அரசிடம் அதற்கான திட்டம் இல்லை. அரசோடு இணைந்துள்வர்களுக்கும் அதற்கான அறிவும் ஆற்றலும் இல்லை. எனவே தான் மலையகத்தில் இ.தொ.கா., ம.ம.மு. ஆகிவற்றை புறக்கணித்த தமிழர்கள் ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றனர். ஐ.தே.க.வை நீண்ட காலமாக ஆதரிக்கும் முஸ்லிம்களைக் கூட ஐ.தே.க.வை விட்டு பிரிக்க முடியாது. சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கி எம்மிடமேயுள்ளது. மலையகத் தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக் கொள்வோர் இம்முறை நிராகரிக்கப்படுவர். அரசாங்கம் கள்ளவாக்குகள் போட நினைக்கிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும் – பசில்

basil.jpgநாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும். அடுத்துவரும் காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அபிவிருத்தி யுகமொன்றை உருவாக்க அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிங்கிரிய தேர்தல் தொகுதிக்குட்பட்ட கல்வெவ பிரதேசத்தில் நூறு இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்:-

கடந்த மூன்று வருடங்களில் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தத்திற்கு மத்தியில், மத்திய அரசினாலும், மாகாண அரசுகளினாலும் பாரியய அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. கடந்த கால அரசுகள் மேற்கொண்ட தவறான வழி நடத்தல்களால் நாட்டில் யுத்த நிலைமை மோசமடைந்தது. எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதிகள் பலம் பெற்றனர். வடக்கில் எமது படையினரால் கண்டுபிடிக்கப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் இவற்றை நிரூபிக்கின்றன.

இந்நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருட வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதியுத்த செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தம் முடிவடைந்து வருவதால் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படுவதைப் போன்று வட மாகாணத்திற்கும் விஷேடமான அபிவிருத்தி திட்டம் ஒன்று வகுக்கப்படும். அத்துடன் நாடு முழுவதற்கும் துரித அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு வளங்களை அபிவிருத்திக்கு பயன்படுத்து வதால் உற்பத்தி, தொழில் வாய்ப்பு துறைகளில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும் என அரசு எதிர்பார்க்கின்றது. கடந்த மூன்று வருட காலத்தில் யுத்த நிலைமைக்கு மத்தியிலும் அரசு மேற்கொண்ட அபிவிருத்தி முயற்சிகள் காரணமாக எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளதை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலைமையை அடுத்த சில வருடங்களில் மேலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது என்று கூறினார்.

அரச படைகளின் வெற்றியை குறைத்து மதிப்பிடும் எதிரமைப்புகளின் பேச்சாளராக ரவூப் ஹக்கீம் – றிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

risard.jpgஜனாதி பதியின் 4 வருடகால ஆட்சியில் வடக்கில் பெரும் நிலப்பரப்பினை மீட்டு அரசபடைகள் சரித்திரத்தில் தடம் பதித்துள்ளன. இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடும் எதிரமைப்புகளின் பேச்சாளராக ரவூப் ஹக்கீம் மாறியுள்ளார் என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் கடற்றொழில் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்புச் செயலாளராக எஸ். எஹ்யான் நியமிக்கபபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தில்லையடியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்;

ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் உருவாக்கமானது எமது நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம், தமிழ் சமூகத்தின் விடிவுக்காகவே இருக்க வேண்டும் என்பதில் அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மிகவும் உறுதியாக இருந்தார். துரதிர்ஷ்டவசம், இன்று ரவூப் ஹக்கீம் இந்த முஸ்லிம் காங்கிரஸை, ஐ.தே.கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்து துரோகத்தனத்தை செய்து விட்டார். இந்த துரோகத் தனத்தின் மூலம் முஸ்லிம் சமூகமும் தற்போதைய அரசுக்கு எதிரானவர்கள் என்ற மாயையையும் பொய்ப் பிரசாரங்களையும் சில ஊடகங்கள் மூலம் முன்னெடுக்க முனைகின்றார்.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் வாழும் சமூகங்கள் ஜனாதிபதியினை நன்றிப் பெருக்குடன் பாராட்டும் போது ரவூப் ஹக்கீம் மட்டும் ஜனாதிபதியை விமர்சிக்கின்றார். எதிர்க்கட்சியில் அமர்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடிமைகளாக, அபிவிருத்திகள் இல்லாத சமூகமாக வைத்துக் கொண்டு சுயநல அரசியல் இலாபங்களை மட்டும் வைத்துச் சிந்திக்கின்ற ஒருவராக ரவூப் ஹக்கீம் இருப்பது சமூகத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

18 தேர்தலில் தொடர்ந்து தோல்வி கண்ட ஐ.தே.கட்சியின் முஸ்லிம் பிரிவாக ஸ்ரீ.ல.மு.கா. இன்று மாறிவிட்டது. இம்முறையும் வடமேல்,மத்திய மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்து 19 ஆவது முறையும் மக்களினால் ஒதுக்கப்படும்.

தேசத்தை மீட்டு அதில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக போராட்டத்தை மேற்கொள்ளும் படையினருக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்கும் தேவைக்கும் உரிமைக்கும் எதிராகச் செயற்படும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்ட சமூகத்துக்குத் துரோகமிழைத்தவர்களாகவே வரலாற்றில் பதியப்படுவர். அதிலிருந்து அவர்களை மீட்கும் போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலில் எக்கட்சியிலாவது இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிட ஹக்கீம் முன்வருவாரா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், அவரை எதிர்த்துப் போட்டியிடும் மனநிலையை தான் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முத்துக்குமார் கொலை செய்யப்பட்டாரா? சுப்ரமணியசாமி சந்தேகம்

muthukumar-30011.jpgஇலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்த் நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி.

சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு

china-pm.jpgகடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பாக்தாத் சென்றபோது அவர் மீது செய்தியாளர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் வீசிய சம்பவம் உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் மறைவதற்குள் லண்டனில், சீன பிரதமர் வென் ஜியாபோ மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, திடீரென எழுந்த ஒரு வாலிபர், வென் ஒரு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனுமதி கொடுக்கலாம் என்று ஆவேசமாக கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். ஆனால் வென் ஜியாபோ மீது ஷூ படவில்லை. வென் ஜியாபோ இருந்த மேடைக்கு முன்பாகவே விழுந்து விட்டது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.