அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ்.பல்கலை மாணவர்க்கு விமான டிக்கட்

risard.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள யாழ். பல்கலைக் கழகத்திற்கு செல்ல வேண்டிய மாணவர் ஆறு பேருக்கு விமான பயணச் சீட்டுக்களும் கைச்செலவிற்கு பத்தாயிரம் ரூபா பணமும் மீள்குடியேற்ற அமைச்சினால் நேற்று வழங்கப்பட்டது.

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இவற்றை வைபவ ரீதியாக மாணவர்களிடம் நேற்று வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கினார். வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் நலன்புரி நிலையங்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சுகாதாரம், சமைத்த உணவு விநியோகம், குடிநீர், மின்சார வசதிகள் பற்றியவை மீளாய்வு செய்யப்பட்டது.

வவுனியா பிரதேசத்திற்குள் வந்தவர்கள் 13 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை குடியமர்த்த செட்டிகுளத்தில் நான்கு மாதிரி நிவாரண கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. அது தொடர்பான வேலைத் திட்டங்கள் துரிதமாகவே நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்த அமைச்சர், அந்த பிரதேசத்திற்கு அதிகாரிகளுடன் விஜயம் செய்து வேலைத் திட்டங்களை அவதானித்தார்.

பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எவருக்கும் அனுமதி கிடையாது – மேலதிக தேர்தல் ஆணையாளர்

election_.jpgஇனிமேல் நடைபெறும் தேர்தல்களின் போது பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலின் போது அமைச்சர் டி. எம். ஜயரத்னவுக்கு பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.  இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அவர் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் அடங்கலான எட்டு வகையான ஆவணங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே இந்த எட்டு வகையான ஆவணங்கள் தவிர்ந்த வேறு எந்த ஆவணத்தையும் சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதில் எதுவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்போரை அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

srilanka_displaced_.jpgமீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தற்போது வவுனியா மாவட்டத்துக்கு வருகை தரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சர் அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

செட்டிகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் கிராமத்துக்குச் சென்று அங்கு தற்காலிகமாக வசிக்கும் மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்.  அதேவேளை, அக்கிராமத்தை அண்டிய பகுதியில் மற்றும் இரு கிராமங்களை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் இடம் பெறுவதால் அதனது முன்னேற்றம் குறித்தும் அப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.

இதேவேளை, வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான சுகாதார வசதிகளை உடன் பெற்றுக் கொடுக்குமாறும் போதுமானளவு வைத்தியர்களை ஈடுபடுத்துமாறும் அமைச்சர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.

அமைச்சருடன் யூ.என்.எச்.சி.ஆர். இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அமீன் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.

ஈழம் சென்று மருத்துவம் செய்ய தயார்: தமிழக மருத்துவ மாணவர்கள்

medicine-01.jpgஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
 
இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா,  இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார்.

புலிகளின் 130மி.மீ.ரக 2 பீரங்கிகள் நேற்று மீட்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் 130 மி. மீ. ரக பீரங்கி இரண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் நேற்றுக்காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலித்தீன்களால் சுற்றி மிகவும் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பீரங்கிகளை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்திலுள்ள தென்னந்தொப்பு ஒன்றிலிருந்தும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றிலிருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் உட்பட வெடி பொருள்களை மீட்டெத்துள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பொது எதிரியாக தாலிபான்கள் செயல்படுகின்றனர்: அமெரிக்க சிறப்புத் தூதர்

holbrooke_.jpgபாகிஸ் தானின் ஸ்வாட் பிராந்தியத்தில் செயல்படும் தாலிபான்கள், இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொது எதிரியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்ப்ரூக் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், அந்த இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறன்று புதுடெல்லி வந்தார். திங்கட்கிழமையன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹோல்ப்ரூக், தனது பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் பயணம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைமைக்கும், தலைநகரங்களுக்கும், மக்களுக்கும் தாலிபான்களால் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் யாழ். குடாவில் 25 கிராமங்களில் மீள் எழுச்சி வேலைத்திட்டம்

world-bank-01.jpgகிராம மட்டங்களிலான அடிப்படை மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பயனை அம்மக்களுக்கு வழங்குவதன் அவசியம் உணரப்பட்டு வரும் நிலையில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தத்தமது பணிகளை நல்ல முறையில் முன்னெடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன் இப்பணிகளை தொடர்ந்து மேம்படுத்தி பரவலாக்குவது தொடர்பில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிதி அனுசரணையூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளால் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் வட மாகாணத்தின் அனைத்து துறைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது இதற்கு கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலின் போது மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு உட்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இவற்றை வெவ்வேறு திட்டங்களின் மூலம் முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மீள் எழுச்சித் திட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் இத்திட்டத்திற்கு உட்பட்டுள்ள 25 கிராமங்களின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவிலியன்களை பாதுகாப்பாக குடியமர்த்த செட்டிக்குளத்தில் மேலும் 100 ஏக்கர் காணி

vanni.jpgவன்னியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி படையினரிடம் புகலிடம் தேடி வரும் சிவிலியன்களை பாதுகாப்பான முறையில் குடியமர்த்துவதற்கென வவுனியா செட்டிக்குளத்தில் மேலும் நூறு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இக்காணியில் புதிதாக தற்காலிக கொட்டில்கள், மலசலகூடங்கள் மற்றும் பாடசாலை என்பனவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மோதல்கள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் அகதிகளின் நலன்களை கண்டறியும் விசேட மாநாடு நேற்று அமைச்சர் ரிஷாட் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வட மாகாண ஆளுநர் டிக்ஷன்தால, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகள், படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தங்களுக்குத் தேவையான உணவை தாமே சமைத்துக் கொள்வதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட இடம் பெயர்ந்த மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் 100 குடும்பங்கள் ஒரு வலயம் என்ற ரீதியில் பிரித்து விடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இவர்களுக்கென வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு இவர்கள் தாமே உணவு தயாரிக்கவுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் தங்கியிருக்கும் வன்னியைச் சேர்ந்த அகதிகளுக்கு தேவையான அனைத்து கருமங்களும் உடனுக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அகதிகளின் சுகாதாரம், குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன குறித்து இம் மாநாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அதிகரிப்பு

justice.jpgஅடிப் படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 156 மனுக்கள் கூடுதலாக தாக்கல்செய்யப்பட்டுள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2007 இல் அடிப்படை உரிமைமீறல் தொடர்பாக 456 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்குக் கிடைத்துள்ள அதேசமயம் 2008 இல் 621 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 398 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக 2008 இல் உயர்நீதிமன்றத்துக்கு தாக்கல்செய்யப்பட்ட சில மனுக்கள் மீது சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதையும் சட்டத்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த வருடத்தில் இந்தமாதம் ஆறாம் திகதிவரை அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பாக 84 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்.குடாநாட்டில் அரச ஆஸ்பத்திரிகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நோயாளர் பாதிப்பு

medicine.jpgயாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டின் அரசினர் வைத்திய சாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சிட்டைகளை ஆஸ்பத்திரி மருந்தகத்தில் கொடுத்தால், அந்த மருந்துகள் முடிவடைந்துவிட்டதாகவும், தனியார் மருந்துக்கடைகளில் வாங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் மருந்து வியாபாரிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரட்டிப்பு விலைகளில் மருந்துகளை விற்பனை செய்கின்றனர். விமான மூலம் மருந்துகளை எடுத்துவருவதால் அதிக விலைக்கு விற்கவேண்டியுள்ளது என பொதுமக்களிடம் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டில் உள்ள மருந்து வியாபாரிகள் கப்பல் மூலமே மருந்துகளை எடுத்து வருகின்றனர். விமான மூலம் டாக்டர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மருந்துகளை கொண்டுவரலாம். இதனால் முக்கியமான நோய்களுக்குரிய மருந்துகளை நோயாளிகள் அதிக விலைக்கே வாங்கிப் பாவிக்கின்றனர்.

குடாநாட்டில் தற்போது கடும் பனியும் கடும் வெயிலும் காணப்படுவதால் சளி, இருமல் போன்ற சுவாச நோய்களால் சிறுவர்கள் முதல் முதியோர் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவசர நோயாளர்களுக்குரிய மருந்து வகைகளை எதுவித கட்டணமும் இன்றி விமான மூலம் எடுத்து வந்து யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. குடாநாட்டின் மருந்துத் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.