விமானப் படையைச் சேர்ந்த விமானமொன்று விடுதலைப் புலிகளால் வன்னிப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார நேற்று கருத்துத் தெரிவிக்கையில், விமானப்படை விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியில் உண்மையில்லை எனவும், இச்செய்தி பலவீனத்தை மறைக்க புலிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் தமது படுதோல்வியை மறைப்பதற்காகவும், தாம் இன்னும் பலமுடனேயே இருக்கின்றோம் என சர்வதேசத்துக்குக் காட்டவுமே இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
58 ஆவது, 57 ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பில் புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் அதேவேளை, தரைப்படையினருக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்களும், ஹெலிகொப்டர்களும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.