அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புலிகளின் பொலிஸ் நிலையம், வாகனங்கள் பொதுமக்களால் தீ வைத்து எரிப்பு – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள பொதுமக்களையும், அவர்களது பிள்ளைகளையும் புலிகள் பலாத்காரமாக தூக்கிச் சென்று படையில் இணைத்துக் கொள்ள முயற்சித்ததை அடுத்து பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாக்குவாதம் பெரும் மோதலில் முடிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், வாகனங்களையும் தீவைத்து நாசப்படுத் தினரென்று புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த பொது மக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டை மீறியதையடுத்து ஆயுதங்களுடன் அங்கு விரைந்த புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டும், பாடுகாயமடைந்தும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடி யர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தை அறி வித்தது. தற்பொழுது பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் புலிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

புதுமாத்தளன் பிரதேசத்திலுள்ள பொதுமக்களையும், அவர்களது பிள்ளைகளையும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற் காக பலாத்காரமாக தூக்கிச் செல்லும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் புலிகள் முயற்சித்துள்ளனர். தங்களது பிள்ளைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள பொதுமக்கள் புலிகளை கேட்டுள்ளனர்.  அந்தப் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்காக அந்தப் பிரதேசத்திலுள்ள புலிகளின் பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்துள்ளனர். அங்கிருந்த ஒரு சில புலிகளின் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்று பின்னர் அது கலவரமாக விஸ்வரூபம் எடுத் துள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், இரண்டு வான் மற்றும் இரண்டு மோட் டார் சைக்கிள்களையும் தீவைத்து நாசப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய சுமார் 60 புலிகள் அந்தப் பிரதேசத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப் படுத்த முயற்சித்துள்ளனர். நிலைமை கட்டுப் பாட்டை இழந்ததையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். புலிகளின் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்கு முன் பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பிரதேசத்திலிருந்து 1565 பொதுமக்கள் காட்டு வழியாகவும், கடல் ஏரி வழி யாகவும் தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த பொதுமக்களே இந்தச் சம்பவத்தினை விபரித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம், எங்களை உடனடியாக விடுவியுங்கள் என்று ஐ. சி. ஆர். சி. பிரதிநிதி களிடம் பொதுமக்கள் வேண்டியதாகவும் அந்தப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் அறிவித்துள்ள மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் ஊடுருவியுள்ள புலிகள், படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்களை அங்கு அடக்கம் செய்துவிட்டு அவற்றை வீடியோ படம் எடுத்து படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களையே தாம் அடக்கம் செய்வதாக உலகில் பொய்ப் பிரசாரம் செய்யும் முயற்சியொன்றை மேற்கொண்டு வருகின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாகவே முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் மோதல் தவிர்ப்பு பிரதேசத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. மக்களோடு மக்களாக இங்கு ஊடுருவியுள்ள புலிகள் அங்கு தமது உறுப்பினர்களின் சடலங்களை புதைத்துவிட்டு, அவர்கள் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் என வீடியோக்கள் மூலம் உலகுக்கு பொய்த்தகவல் வழங்குகின்றனர்.

அத்துடன் பொதுமக்கள் அமைத்துள்ள குடிசை களுக்கு மத்தியில் பதுங்கு குழிகளை அமைந்துள்ளனர். மேலும் தமது கனரக ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றையும் இந்த மோதல் தவிர்ப்பு பிரதேசத்திலேயே புலிகள் பதுக்கி வைத்துள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

தபால் மூல வாக்களிப்புக்கான 5379 விண்ணப்பங்கள் நிராகரிப்பு – தேர்தல் திணைக்களம் தகவல்

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 35ஆயிரத்து 424 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர். 5ஆயிரத்து 379; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிறி தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கென சுமார் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 3,038 விண்ணப்பங்களும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,102 விண்ணங்களும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,239 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்; இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15ஆயிரத்து 789 பேரும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10ஆயிரத்து 926 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 8ஆயிரத்து 699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. 

தப்பிச் செல்லும் பொது மக்கள்மீது தாக்குதல் நடத்த சூசை உத்தரவு – கடற்படைப் பேச்சாளர் தகவல்

navy_spokesman_dasanayaka.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து 31 படகுகளில் தப்பிச் சென்ற  பொது மக்கள்மீது தாக்குதல் நடத்துமாறு கடற்புலிகளின் தலைவர் சூசை கடற்புலிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை புலிகளின் தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க  மேலும் கூறியதாவது

புதுமாத்தளன் பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோருக்காக எம்.வி. பின்தான் என்ற கப்பலில் உணவுப் பொருட்கள் இறக்கப்படடுக்கொண்டிருந்த நேரம் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர். தமது பிள்ளையைக் கடத்திச் செல்லும் முயற்சியைத் தடுத்த பெற்றோரையும் பிள்ளையையும் புலிகளின் பொலிஸார்  சுட்டுக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்துக்கு தீ வைத்து பொலிஸாரையும் தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் அங்கு வந்த 60 க்கும் அதிகமான புலிகள் பொது மக்களைக் கண்மூடித்தனமாகத்  தாக்கியுள்ளனர். இதனால் பலர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த ஐ.நா. பிரதிநிதியின் முன்னிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது,  எமக்கு உணவு வேண்டாம். எங்களை இங்கிருந்து வெளியேற அனுமதியுங்கள் என பொது மக்கள் அந்த ஐ.நா. பிரதியிடம் மன்றாடிக் கேட்டுள்ளனர்.

அதன்பின்னர் அந்த மக்கள் 31 படகுகளில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது படகுகளைப் பின்தொடாந்து நான்கு படகுகளில் வந்த கடற்புலிகளின் தலைவர்களான மாறன், இனியவன், ரங்கன் மற்றும் அழகன் ஆகியோர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கான உத்தரவை கடற்புலிகளின் தலைவரான சூசையே விடுத்திருந்தார்.

உடனடியாக கடற்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் அந்த நான்கு படகுகளும் தப்பிச் சென்றன. இப்படகுகளில் வந்த 550 பேர் பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர் என்றும் கெப்டன தஸநாயக்க தெரிவித்தார்

ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை பொதுமக்கள் வெளியேற அனுமதியுங்கள் – புலிகளுக்கு அரசு கோரிக்கை

people-_flee.jpgபுலிகள் ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை எமது படையினர் கவனித்துக்கொள்வார்கள்  அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர இடமளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

புலிகளிடம் சிக்கியுள்ள மக்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாளாந்தம் அரசகட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றனர். வடக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த முறையில் இடம்பெறுவது இதன் மூலம் புலனாகிறது.

ஜனவரி முதல் இதுவரை 45 ஆயிரத்து 519 பேர் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 1567 பேர் வந்துள்ளனர். அவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் கஷ்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தினாலல்ல என்பது நன்கு தெளிவாகின்றது.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளை அரசு கேட்டுக்கொண்டது. அதேபோன்று உலக நாடுகளும் கேட்டுக்கொண்டன. எனினும் புலிகள் அதற்கு செவிமடுக்கவில்லை. இருப்பினும்; ஆயதங்களைக் களைந்தால் தீர்வுத்திட்டம் முன்வைப்பதில் கவனம் செலுத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அந்தமான் – நிகோபார் தீவுகளில் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்க தூதரகம் முயற்சி

கடந்த இரு தினங்களில் மேலும் 15 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லால் தெரிவித்தார். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய குழுவொன்று நேற்று அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார். இது தொடர்பாக வினவியபோது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இதுவரை 121 இலங்கை மீனவர்கள் சென்னை விசாகப்பட்டிணம் மற்றும் அந்த மான், நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.

தெவிநுவர பகுதியில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐவர் நேற்று முன்தினம் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விசாகப் பட்டிணத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதோடு சென்னையில் 24 பேர் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதோடு மேற்படி இலங்கை மீனவர்கள் விரைவில் இலங்கை திரும்ப உள்ளனர்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள் அத்தீவு உயரதிகாரிகளுடன் பேசி இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவசியமற்ற பதவி நியமனங்கள் உடன் நிறுத்தப்படவேணடும் -மகாணசபைகளுக்கு அரசு உத்தரவு

l-yaappa-abayawardana.jpg அவசியமற்ற வகையில் புதிய  நியமனங்கள் வழங்குவதை உடன் நிறுத்த வேண்டுமென அரசாங்கம் மாகாணசபைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் நியமனங்கள்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அவசியமற்ற நியமனங்களை வழங்கி குறுகிய அரசியல் இலாபம் பெற சில அரசில்வாதிகள் முயல்வதால் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடனும் படைத் தளபதிகளுடனும் சந்திப்பு!

gotabhaya_fonseka_met.png இலங்கை வந்துள்ள மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா,  மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரை  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சிலும், இராணுவத் தளபதியுடனான சந்திப்பு இராணுவத் தலைமையகத்திலும் கடற்படைத் தளபதியுடனான சந்திப்பு கடற்படைத் தலைமையகத்திலும் நடைபெற்றது.
 
இலங்கை – மாலைதீவின் உறவு தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது. வன்னியில் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நாளுக்கு நாள் படிப்படியாக அடைந்து வரும் வெற்றிகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களின் நிலைமைகள், அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் இராணுவத் தளபதி மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, மாலைதீவு இராணுவ வீரர்களுக்கு இலங்கை இராணுவத்துடன் இணைந்ததாக சிறப்பாக பயிற்சிகள் வழங்கப்படுவதற்கும், அதற்கான சந்தர்ப்பத்தை இராணுவத் தளபதி வழங்கி வருவதற்காகவும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் முதற்தடவையாக எட்டு இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் -கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

bandula_gunawardenasss.jpgகிழக்கு மாகாணத்தில் மேலதிகமாக ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ஹெக்டரில் இம்முறை நெல் பயிரிடப்பட்டதன் பயனாக 8 இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படடுள்ளதாக வர்த்தக நுகர்வோர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை நுகர்வோர் கூட்டுறவு முறை தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவு நெல் அறுவடை செய்யப்பட்டள்ளது. கடந்த வருடத்தை விட 2 மடங்கு கூடுதலாக இம்முறை கிழக்கில் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பாக இழுபறி ரணிலுடன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு

ranil-wickramasinghe.jpgகட்சித் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானமெடுக்கும் பொருட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாவது தடவையாகவும் கூடுவதாக இருந்த ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

எனினும் நேற்று முன்தினம் மாலை ஐ.தே.க.தலைமையகமான சிறிகொத்தாவில் ஐ.தே.க.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலின்றி கூட்டமொன்று நடைபெற்றுள்ளதுடன், அதன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட இடமொன்றில் சந்தித்து பேசியுமிருக்கின்றனர்.

முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம்  காலை 9 மணிதொடக்கம் சுமார் 2 மணித்தியாலங்களாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சித்தலைமைத்துவத்திற்கு எதிராக ஒரு தரப்பால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக காரசாரமான வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையிலேயே அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்ட முடிவாகியிருந்தது.

நேற்று  முன்தினம் காலை நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் அவ்வாறானதொரு யோசனை செய்யப்பட்ட போதிலும், பின்னர் அந்தக் கூட்டத்தை நடத்துவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இருப்பினும் நேற்று முன்தினம்  காலை கூட்டமொன்று நடைபெற்றதை உறுதிப்படுத்திய திஸ்ஸ அத்தநாயக்க, அதில் மேல்மாகாண சபைத் தேர்தல் குறித்தே பேசப்பட்டதுடன், நேற்று முன்தினம்  காலை பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட எந்தவொரு விடயம் பற்றியும் பேசவில்லையென்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. தலைவரான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவில்லை. கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க,பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்

அத்துடன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையென்றும் கூறப்பட்டது.

இதேநேரம், இந்தக் கூட்டத்தின் நிறைவில், காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அத்தநாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரத்தியேகமான இடமொன்றில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

இதை எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட உறுப்பினரில் ஒருவர் உறுதிப்படுத்தியதுடன், சிறிகொத்தாவில் நடைபெற்ற கூட்டம் பற்றி கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

எனினும், சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க. உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க, அதன் பின்னரான கட்சித்தலைவருடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையென்றும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் கட்சித் தலைமைத்துவம் குறித்து மீண்டும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் ஏற்படக்கூடுமென்பது மட்டுமன்றி, ஏதேனும் தீர்மானங்களும் எட்டப்படக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவிலியன்களின் வருகை மீண்டும் அதிகரிப்பு

navy_civilians.jpgபுலிகள் சிறியதொரு பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதால் அவர்களின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் தாக்குதல் நடத்தியும், துப்பாக்கிச் சூடுகளை மேற் கொண்டும் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களைநோக்கி வருவதைத் தடுத்து வருகின்ற போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 619 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களில் 478 பொது மக்கள் இராணுவத்தினரிடமும் 139 சிவிலியன்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

478 பொது மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை நோக்கி வருகை தந்துள்ளனர். இவர்களில் 190 சிறுவர்களும் அடங்குவர்.இதேவேளை, பளமாத்தளன் பிரதேசத்திலிருந்து படகுகள் மூலம் 139 பொதுமக்கள் தப்பி பருத்தித்துறை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.

படகுகளில் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டபடி வந்த இந்த பொது மக்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். 47 ஆண்கள், 38 பெண்கள், 27 சிறுவர்கள் மற்றும் 27 சிறுமிகள் இவர்களில் அடங்குவர்.இதேவேளை ஐயம்பெருமாள் பிரதேசத்தை நோக்கி மேலும் இருவர் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.