அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஒவ்வாமையில் ஏற்பட்ட அதிர்ச்சியே சிறுமியின் மரணத்துக்கு காரணம் – ருபெல்லா ஆரம்ப விசாரணைகளில் தகவல்

vaccina.jpgதடுப்பு மருந்தில் எவ்வித பிழையுமில்லை. ஒவ்வாமையினால் ஏற்பட்ட அதிர்ச்சியே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சுகாதார அமைச்சு மருத்துவர்கள் குழுவின் அறிக்கை, மரண பரிசோதனை அறிக்கை, இரத்த பரிசோதனை அறிக்கை, உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் பரிசோதனை அறிக்கை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே இறுதி முடிவொன்றுக்கு வரமுடியுமெனவும் அவர் தெரிவித்தார். சம்பவ தினத்தன்று குறித்த சிறுமியின் தாய் எழுதியிருந்த கடிதக் குறிப்பில் சம்பந்த ப்பட்ட டாக்டர் கவனமெடுத்தல் அவசிய மென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவ தாகவும் அவர் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை பாடசாலை மாணவி மரணமடைந்தமை தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை தொடர்பில் பல்வேறு தரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் விசாரணை அறிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் பார்வைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இத் தடுப்பு மருந்து ஏற்றல் திட்டத்தை ஆரம்பிப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் அவர் மேலும் விளக்கமளித்த போது :-

பசுப்பால் சம்பந்தப்பட்ட ஆகாரங்கள் தமது மகளின் உடலுக்கு ஒவ்வாததெனவும் ருபெல்லா தடுப்பூசி வழங்குபவர்கள் இது விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் மரணமடைந்த சிறுமியின் தாயார் கடிதக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். இதனை தடுப்பூசி வழங்கிய டாக்டர் கவனத்திலெடுத்திருக்கலாம் என்பதே பலரதும் கருத்தாகிறது.

ருபெல்லா தடுப்பு மருந்து 1996ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனங்களை மேற் கொள்வோர் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றன. விசாரணை முடிவில் குற்றம் ஒப்புவிக்கப்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் பின்னிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய இச்செய்தியாளர் மாநாட்டிற்கு மேற்படி தடுப்பு மருந்துடன் தொடர்புபடும் சுகாதார நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு இது குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிரானதைப் போன்ற நடவடிக்கையை மு.காவும் பின்பற்றட்டும்

ulama-party.jpgரணில் விக்ரமசிங்கவின் தலைமையை மாற்ற முன்வந்துள்ள அக்கட்சி செயற் குழுவினரின் துணிச்சலை நாம் பாராட்டுவதோடு இது போன்ற துணிவு சமூகப்பற்றற்ற ரவூப் ஹக்கீமின் தலைமையையும் மாற்ற முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் ஏற்பட வேண்டும் என உலமா கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனை கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற உலமாக்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐ. தே. க. என்ற வண்டியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அதில் நான் ஒரு போதும் ஏற மாட்டேன் என அன்று தலைவர் அஷ்ரப் கூறியதை மு. காவின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் உதாசீனம் செய்த போதும் இன்று அக்கருத்தை ஐ. தே. கவின் செயற் குழு உறுப்பினர்கள் ஏற்று செயற்படுத்த முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

இது போன்ற துணிவு மு. காவினருக்கு வருமா என்பது சந்தேகமே. என்றாலும் அத்தகைய துணிவு வந்தால் மட்டுமே அவர்களுக்கு சமூகப்பற்று இருக்கின்றது என்பது தெளிவாகும். அத்தகைய துணிவை ஏற்படுத்த வேண்டுமாயின் முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு மு. காவின் தேர்தல் வேட்பாளர்களை நிராகரிக்க முன்வரவேண்டும்.
எவ்வாறு ஐ. தே. க. ஆதரவாளர்கள் கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்கு வாக்களிப்பதை தவிர்த்து அதன் செயற் குழுவினருக்கு இத்தகைய தைரியத்தை அளித்தார்களோ அதே போல் முஸ்லிம் சமூகமும் மு. காவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்வதன் மூலம் அக்கட்சி உயர் உறுப்பினர்களுக்கும் தைரியத்தை வரவழைக்க முடியும்.
இல்லையேல் ரவூப் ஹக்கீமும் அவரை சார்ந்துள்ளோரும் இந்த சமூகத்தை அதளபாதாளத்தில் தான் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதை எச்சரிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக மரபுரிமை அமைப்பின் பணிப்பாளர் சபை மாநாடு

உலக மரபுரிமை அமைப்பினது பணிப்பாளர் சபையின் சர்வதேச மட்டத் திலான மாநாடு நாளையும் நாளை மறுதினம் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடு கள்s கலந்து கொள்கின்றன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு இந்து அமைப்புகள் கோரிக்கை

navy_rescue_civil.jpgவன்னி யிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள அகதிகளின் நலன் கருதி, அரச கூட்டுத்தாபன நியதிச் சபை பணியாளர்கள் மட்டுமல்ல தனியார்துறை ஊழியர்களும் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்குமாறு யாழ்.இந்து அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கைவிடுத்துள்ளது.  இக்கோரிக்கையை சனிக்கிழமை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனகலாசார மண்டபத்தில் கூடிய இந்து அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ளது.

இக் கூட்டத்துக்கு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய தம்பிரான் சுவாமிகள் தலைமை தாங்கினார்.

அரச, தனியார் வங்கி, கூட்டுறவுச் சபை பணியாளர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான பட்டியல் சகல திணைக்கள, வங்கி தனியார் நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.மாவட்ட இந்து அமைப்பு ஒன்றியம் தம்மால் சேகரிக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை அகதிகளுக்கு வழங்க யாழ்.மாவட்ட அரசாங்கம் அதிபர் கே.கணேஷிடம் கையளித்துள்ளது.

மன்மோகன்ஒபாமா சந்திப்பில் இலங்கை நிலைவரத்தை ஆராயும் சாத்தியம்

g-20_logo_.jpgபிரிட்டனில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் சந்திக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கை உட்பட்ட தெற்காசிய பிராந்திய நிலைவரங்கள் தொடர்பாக பேசும் சாத்தியம் உள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டுக்கு புறம்பாக இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசவிருப்பதாகவும் கல்வித்துறை பங்கு?டமை, உயர் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் என்பன இவ்விருவரின் பேச்சுக்களில் முன்னுரிமைவகிக்கும் என்றும் அகில இந்திய வானொலி செய்திச் சேவை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அத்துடன் உலக பொருளாதார நெருக்கடியால் தொழில் வாய்ப்புகளை இழப்போருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு ஜி20 நாடுகள் அதிகளவு நிதி ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. அதேசமயம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நிலைவரம் குறித்து இரு தலைவர்களும் ஆராய்வார்ளெனவும் எதிர்பார்க்ப்படுகிறது.

மொரவெவவுக்குள் ஊடுருவ முயன்ற புலிகள் மீது விமானப்படை தாக்குதல்

மொரவெவ, வேப்பங்குளம் பிரதேசத்தில் ஊடுருவ முயன்ற புலிகளின் குழுவொன்றுக்கும் விமானப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது விமானப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் படுகாயமடைந்த புலிகள் காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் விமானப் படைவீரர் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். திருமலை, மொரவெவ பிரதேசத்திலுள்ள விமானப் படையின் இணை முகாமிற்குள் ஊடுருவும் நோக்குடனேயே புலிகள் வந்துள்னர்.

அந்தப் பிரதேசத்தில் வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினர், குழுவொன்று வருவதை அவதானித்துள்ளனர். பொது மக்கள் போன்று வந்த அவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து விமானப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களின் பின்னர் அங்கிருந்து காட்டு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து பொலிஸாரும், விமானப் படையினரும் இணைந்து காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது இரத்தக் கறைகளையும் முதலுதவி செய்தமைக்கான தடயங்களையும் கண்டுள்ளனர்.

காயமடைந்த நிலையில் புலிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விமானப் படைப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

30 ஆயிரம் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க திட்டம்

இவ்வருட முடிவுக்குள் நாடளாவிய ரீதியில் 30,000 சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க தொழிலமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு இச் செயற் திட்டத்தை நடைமுறை ப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிராமியப் பிரதேசங்களில் நிலவும் தொழில் வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; மேற்படி சுய தொழில் முயற்சிகளில் குழுக்களாக இணைந்து செயற்பட விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புடனான அமைச்சு ஏற்படுத்தித் தருமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுயதொழில் முயற்சிகளுக்குக் கடன் வழங்கும் திட்டமொன்றை தொழிலமைச்சும் மக்கள் வங்கியும் இணைந்து செயற்படுத்தி வருகின்றன. இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ, அமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹஹேவா உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

“மூவின மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை புரிபவர் திருமலைப் பிரதேசசெயலாளர் சசிதேவி ஜலதீபன் ‘

மூன்று இனங்களும் வாழும் திருகோணமலையில் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் சேவையாற்றுவது அரச அலுவலகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் கஷ்டமான பணியாகும். திருகோணமலைப்பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்துவரும் திருமதி சசிதேவி ஜலதீபன் , இப்பொறுப்பை அர்ப்பணிப்புடன், இதய சுத்தியுடன் நிறைவேற்றி அனைத்து மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

இவ்வாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர். டி. சில்வா கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்வில் பங்குபற்றிப் பேசும்போது தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பதினொரு பிரதேச செயலகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட நிர்வாகத்திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் மாவட்டத்திலேயே முதலாவது இடத்தை சுவீகரித்தது. அதனை ஒட்டியே இப் பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவினுள் 42 கிராம சேவையாளர்கள் பணியாற்றுகின்றனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம், 2006 ஆம் ஆண்டில் உள்நாட்டு அமைச்சு நடத்திய மாவட்ட மட்டப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றது. 2007 ஆம் ஆண்டுக்கான போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

திருமலை பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனுக்குத் திருகோணமலை அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர்.டி.சில்வா, முதலில் பதக்கம் அணிவித்துக் கௌரவித்தார்.

அதனையடுத்து, திருகோணமலைப் பிரதேச செயலக அலுவலர்கள், வெளிக்களப் பணியாளர்கள் அனைவரும் அதிதிகளால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனின் சிறப்பான நிர்வாகத்திறன், பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் இவை காரணமாகவே , திருகோணமலைப் பிரதேச செயலகம், மாவட்டத்திலேயே முதலாம் இடத்தைப் பெற முடிந்தது. அவரின் பணி தொடரவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் பேசும்போது, திருமலைப் பிரதேச செயலகம் முதலிடம் பெற்றது. செயலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பே காரணமாகும் என்று கூறினார்.

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பலர் வவுனியாவுக்கு வருவர் -அமைச்சர் ரிசாட் கூறுகிறார்

_mullai_1.jpg
வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பெருமளவு பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்டதூரம் நடந்து வந்து இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள். பலர் தாடியுடன் நீண்ட நாட்கள் குளிக்காதவர்கள் போல் காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இடைத்தங்கல் முகாம்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயும் இந்தக் கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட உயர் அதிகாரிகள், கிராமசேவையாளர்கள், முகாம் பொறுப்பதிகாரிகள் , மாவட்ட அரச அதிபர் , படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து இங்கு முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டது. குறிப்பாக நீர் வழங்கல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் சேவைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லையென முகாம் பொறுப்பதிகாரிகள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். வவுனியாவிற்குள் சுமார் 40 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாசிறி எம்.பி.யிடம் விசாரணை

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று திங்கட்கிழமை கொழும்பு குற்றப்பிரிவினால் சுமார் ஒருமணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அண்மையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளரான தம்மிக கங்கனாத் திசாநாயக்க கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவதினத்தின்போது பிற்பகல் 4 மணியளவில் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து கடத்தல்குழு தம்மிக திசாநாயக்காவுடன் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் அதனையடுத்து 10நிமிடங்கள் கழித்து அதே இலக்கத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜயசேகரவுக்கும் ஒரு அழைப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தே அவரிடம் குற்றத் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வாக்கு மூலமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.