மொரவெவவுக்குள் ஊடுருவ முயன்ற புலிகள் மீது விமானப்படை தாக்குதல்

மொரவெவ, வேப்பங்குளம் பிரதேசத்தில் ஊடுருவ முயன்ற புலிகளின் குழுவொன்றுக்கும் விமானப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது விமானப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் படுகாயமடைந்த புலிகள் காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் விமானப் படைவீரர் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். திருமலை, மொரவெவ பிரதேசத்திலுள்ள விமானப் படையின் இணை முகாமிற்குள் ஊடுருவும் நோக்குடனேயே புலிகள் வந்துள்னர்.

அந்தப் பிரதேசத்தில் வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினர், குழுவொன்று வருவதை அவதானித்துள்ளனர். பொது மக்கள் போன்று வந்த அவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து விமானப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களின் பின்னர் அங்கிருந்து காட்டு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து பொலிஸாரும், விமானப் படையினரும் இணைந்து காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது இரத்தக் கறைகளையும் முதலுதவி செய்தமைக்கான தடயங்களையும் கண்டுள்ளனர்.

காயமடைந்த நிலையில் புலிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விமானப் படைப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *