அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நான் இலங்கைக்கு செல்வதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை:கலைஞர்

karunanithi.jpgஇலங்கையில் போரை நிறுத்துமாறு கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலையில் இருந்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பேரணி தொடங்கியது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  இப்பேரணி சேப்பாக்கத்தில் முடிந்தது.

பின்னார் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, ’’ ஈழப்பிரச்சனை தொடர்பாக நான் இலங்கைக்கு செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன்.  அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை. அதனாலென்ன..உணர்வால், உள்ளத்தால், ஈழத்தமிழர்களை காண்கிறேன்.  இலங்கை தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருப்பவர்களுக்கு நான் தோழராக இருக்கிறேன்” என்று பேசினார்.

ஈழத்தமிழர் குறித்த கொள்கையை இந்தியா மீளாய்வு செய்ய புலிகள் கோருகின்றனர்

p_nadesan.jpgஇந்தியாவில் ஆட்சியமைக்கப்போகும் புதிய ஆட்சியாளர்கள், ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பான தமது கொள்கையை மீளாய்வு செய்யவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.

ஈழத் தமிழ் உறவுகளுக்காக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சிக்கு தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றும் நடேசன் வரவேற்புத் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் “ஹெட்லைன்ஸ் டுடே” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர்  இதனைத் தெரிவித்துள்ளார். தி.மு.கவினால் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் நிலை தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அ.தி.மு.கவின் ஸ்தாபகரான முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களின் நலன் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் வேட்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கினார்.

ஜெயலலிதா தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளார்.சமீபத்தைய அறிக்கையொன்றில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு குறித்து அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார். இது மிகவும் நம்பிக்கையளிக்கும் விடயம். இந்தியாவின் புதிய அரசு இலங்கை இனப்பிரச்சினை மற்றும் தமிழர்களின் அபிலாஷைகள் குறித்த தனது கொள்கையை புதிய யதார்த்தங்களின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தி.மு.க. தமிழ் மக்களுக்கு  அவசியமான வழிவகைகளை  அளிப்பதற்குத் தவறியுள்ளது.  தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துக்கு எதிராகவும்  அதேவேளை, பட்டினி மற்றும் நோய்க்கு எதிராகவும் போராடுகின்றனர். தி.மு.கவிற்கும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் இது நன்கு தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.இவ்வாறு நடேசன் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார்

பாதுகாப்பு வலயத்தினுள்ளிருந்து புலிகள் தொடர்ந்தும் மோட்டார் தாக்குதல்

udaya_nanayakkara_brigediars.jpgபாது காப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புப் படையினரை இலக்குவைத்து புலிகள் தொடர்ச்சியாக மோட்டார் தாக்குதல்களை மேற் கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ள புலிகள் பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து படையினரை இலக்குவைத்து மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அங்குள்ள பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் சுமார் 40 ஆயிரம் பொது மக்களையே புலிகள் கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனரென படையினர் சந்தேகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் படையினர் முற்றாக கைப்பற்றியதையடுத்து முல்லைத்தீவின் கரையோரப் பகுதியில் மிகவும் ஒடுக்கமான பிரதேசமான பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் புலிகள் முற்றாக ஊடுருவி அங்குள்ள பொதுமக்கள் மத்தியிலிருந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டுத் தம்மிடம் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு நேற்று முன்தினம் இறுதி அறிவிப்பு விடுத்தனர். இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதிலிருந்து சில மணி நேரத்திலேயே புலிகள் மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் இந்த இறுதி அறிவிப்பை அடுத்து அங்குள்ள பொது மக்கள் தப்பி வருவதை தவிர்க்கும் வகையிலேயே புலிகள் இந்த எச்சரிக்கை வேட்டுக்களை விடுத்துவருவதாக படையினர் சந்தேகிப்பதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களின் எண்ணிக்கைகளை அவதானித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை படையினர் முன்னெடுக்கக் கூடும் என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு வலயம் படையினரால் நான்கு முனைகளில் சுற்றிவளைப்பு

army-wanni.jpgஅரசாங் கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் அப்பகுதியை நோக்கி தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர் என்று படைத்தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் பாரியளவான இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது.

மோதல்கள் தொடர்பில் ஊடக நிலையம் மேலும் கூறியதாவது

அண்மையில் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் படையினருக்கு எதிராக பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மறைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் மோட்டர் எறிகணை மற்றும் சிறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்தும் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களின் நான்கு சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கடற்புலிகளின் தற்கொலைப் படகொன்று யுத்த தாங்கி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்மிக்க முடியாதவாறு புலிகளால் அமைக்கப்பட்டுள்ள புதிய மண்மேடுகள் சிலவற்றை இனங்கண்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான பதுங்கு குழிகள் சிலவும் அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் புலிகளின் இந்த மண்மேடுகளை உடைத்தெறிந்தவாறு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி அங்குள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவில் மேலும் பலர் பலி

இலங்கையின் வடக்கே மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜ தெரிவித்துள்ளார்.

மோதல்களில் பலியான பலரது சடலங்கள் தமது புதுமாத்தளன் மருத்துவமனைக்கு வந்ததாக் கூறுகிற அவர், இருந்தபோதிலும் பலியான பலரது சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாத்திரம் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து தமது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மக்கள் தங்கியுள்ள இடத்துக்கு ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலேயே சண்டைகள் நடப்பதாகவும், ஆயினும் தமது பகுதியை நோக்கி ஏவப்படுகின்ற எறிகணைகளாலேயே பல மக்கள் இறப்பதாகவும் அவர் கூறினார்.

போரை நிறுத்தக் கோரி முன்னாள் த.தே.கூ. எம்.பி. ஈழவேந்தன் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரத போராட்டம்

eelaventhan_.jpgஇலங் கையில் போரை நிறுத்த அனைத்துலகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தென்னாபிரிக்காவின் டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பின்வரும் ஆறு கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்து அவர் தனது உண்ணாநிலை போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.

1. உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறான நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2. அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

3. இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுகக்கு சுதரந்திரமான அனைத்து மனிதாபிமான நிறுவனங்களும் எந்தவித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

4. தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.

5. தென்னாபிரிக்க தமிழ்ச் சமூகத்தினர் இவரின் உண்ணாநிலைப் போராட்ட முயற்சியில் தங்களையும் இணைத்துகொள்வதற்கு முன்வந்துள்ளனர்.

6. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் இவ்வாறான நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளில் ஈடுபடுமாறு உலகத் தமிழ்ச் சொந்தங்களிடம் கோரிக்கை.

76 அகவையுடைய மா.க.ஈழவேந்தன் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.

கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான செல்வராஜா ரவீந்திரன் விடுவிக்கப்பட்டார்

selvaraja.jpgகொழும்புக்கு வெளியே வெள்ளை வானில் வந்ததாகக் கூறப்படும் நபர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த யாழ் மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரரான செல்வராஜா ரவீந்திரன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் மாதிவலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடத் தொகுதியில் (தனது சகோதரனின் வதிவிடம் ) உயர் கல்வியின் நிமித்தம் தங்கியிருந்தார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி வழமை போல் காலை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் வதிவிடத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் கடத்திய நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர் நேற்று நள்ளிரவு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டு வெள்ளவத்தைப் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களின் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.

விடுதலைப்புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து: உளவுத்துறை

sonia-gandhi.jpgவிடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், சோனியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்யும்போது, அவர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு மட்டுமின்றி, அவரது மகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கும் விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது. சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக வரும்போது, அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

நிவாரணக் கிராமங்களில் உறவினர்களை சந்திக்க விசேட வரவேற்பறைகள்

srilanka_idp.jpgநிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கு வசதியாக அனைத்து நிலையங்களிலும் விசேட வரவேற்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை முதல் திறந்து வைக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தை குறைகூற பிரித்தானியாவுக்கு அருகதையில்லை: சம்பிக்க ரணவக்க

chambika.jpgஎமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறினார். கடந்த காலங்களில் விரும்பத்தகாத போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த பிரித்தானியா தற்பொழுது எமது இராணுவத்தினர் குறித்துக் குற்றஞ்சாட்டக் கூடாது என நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.