அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் பிரதமர் & கருணாநிதி ஆலோசனை

karunanithi-apalo-hos.jpgஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது இருவரும் தேர்தல் குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார்.

மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவர்னர் பர்னாலா, முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன் ஆகியோரிடமும் பிரதமர் நலம் விசாரித்தார். பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.30க்கு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், தயாளு அம்மாள் ஆகியோர் இருந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமரும் முதல்வரும் தனியே ஆலோசனை நடத்தினர். தேர்தல் குறித்த அந்தப் பேச்சின் போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் உடனிருந்தார். முதல்வர் அறையில் பிரதமர் 15 நிமிடங்கள் இருந்திருக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ். குடா சிறுவர் கடத்தல் விவகாரம்: த.வி.கூ. கண்டனம்

jaffna-map.jpgயாழ். குடாநாட்டில் சிறுவர்களைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தை கப்பமாகப் பெரும் அரக்கர்களின் ஈனச் செயலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். கிளை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாடசாலைச் சிறுவர்களை கடத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ். குடாநாட்டில் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் ஆயுதம் தாங்கிய அரக்கர்களுக்குப் பயந்து காவல் நிலையத்திற்கு செல்லாது கப்பத் தொகையை கொடுத்து சிறுவர்களை மீட்டுள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. கப்பமாக கேட்கும் தொகை மறுக்கப்பட்டால் திருகோணமலையில் வர்ஷாவிற்கும், மட்டக்களப்பில் தினுஷிகாவிற்கும் ஏற்பட்ட நிலையே தொடரும் என ஆயுதம் தாங்கிய அரக்கர்களால் பெற்றோர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

இவை அனைத்தும் முற்றாக நிறுத்தப்படவேண்டும். ஆயுதக் கலாசாரமற்ற ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். ஆயுததாரிகளின் அட்டகாசம் நிறுத்தப்படவேண்டுமா னால், ஜனநாயகத்தை மலரச் செய்யவிரும்பும் அத்தனைபேரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும்.

முள்ளிவாய்க்காலில் எறிகணைத் தாக்குதல் 134 பேர் பலி; 199 பேர் காயம் – படையினர் தாக்கவில்லை என்கிறார் பிரிகேடியர்

udaya_nanayakkara_brigediars.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நின்ற 34 பேர் உட்பட 134 பேர் பீரங்கித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகவும் 199 பேர் காயமடைந்ததாகவும் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இச் செய்தி தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்ட போது முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் பகுதி மீது படையினரால் பீரங்கித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. யுத்த சூனிய வலயத்தின்மீது பீரங்கி போன்ற கனரக ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை. அங்கு மக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ எமக்கு எதுவும் தெரியாது. அது பற்றிய தகவல் எமக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் 5/9/2009 யுத்த வலயப் பகுதியில் இருந்து தப்பி வந்த மக்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள சிறார்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் திட்டம்

vavuniyatents.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் தங்கியிருக்கும் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தையும், கல்வி கற்றல் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்காக கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு அடுத்த வாரம் வவுனியா செல்கிறது. கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தலைமையில் மேற்படி குழுவினர் செல்லவுள்ளனர்.

நிவாரணக் கிராமங்களில் தற்காலிக கொட்டில்கள், பாடசாலைகள் இயங்கியபோதும் தற்போது மக்கள் வந்து தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களில் பாடசாலை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே இங்குள்ள சிறுவர் சிறுமியர் வெறுமனே சாப்பிடுவதும், விளையாடுவது மாகவே உள்ளனர். இவர்களுக்கு தினமும் வாசிக்கக்கூடிய சிறுவர் சஞ்சிகைகள், சிறுவர் பத்திரிகைகள், சிறுவர் கதைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

அத்துடன் வந்துள்ளவர்களில் ஆரம்ப பிரிவு, உயர் பிரிவு என எத்தனை மாணவர்கள் உள்ளனர்? அவர்களின் தேவைகள் என்ன? என்பது பற்றியும் மேற்படி குழுவினர் ஆராயவுள்ளனர்.

மாணவர்களை பெற்றோர், பாதுகாவலர்கள் மட்டுமே பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்

sri-lankan-schools.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை பெற்றோர்களும், பாதுகாவலர்களுமே அழைத்து வரவேண்டும். இதைத்தவிர மூன்றாம் நபர்கள் அழைத்து வரக்கூடாதென மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி தினூக்ஷிகா கடத்திப் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலய அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுடனான உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு பட்டிருப்பு தேசிய பாடசாலை மண்டபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமந்த டி சில்வா, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி. டி. த. சில்வா, பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். 122 பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் பங்குகொண்டனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒவ்வொரு பாடசாலையிலும் பாதுகாப்புக் குழுக்கள் அமைத்தல் இக்குழுக்களில் கிராமசேவை அதிகாரிகள், அதிபர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பொலிஸார் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் போரதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, அம்பலாந்துறை, செட்டிப்பாளையம் ஆகிய பொலிஸ் நிலைய, உப பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்

sri-lanka-upcountry.jpgமலையக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை தொழிலாளர்கள் புகட்ட வேண்டுமென சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பசறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிலாளர்களிடமிருந்து அறவீடு செய்யும் ஒருமாத சந்தாப் பணத்தை அனுப்புவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளப்படுகிறது. ஒருநாள் வேதனத்தை அனுப்ப வேண்டிய தேவை கிடையாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரத் துறையில் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஒருசில மலையக அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று ஒருநாள் வேதனத்தை வழங்கக் கூடிய நிலையில் தொழிலாளர்கள் தற்போது இல்லை. மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களுடைய வேதனத்திலிருந்து ஒருநாள் சம்பளத்தை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கு அனுப்ப வேண்டுமென ஒரு சில மலையக அரசியல்வாதிகள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மலையக தலைமையென தம்பட்டம் அடிப்போர் இன்னும் தொழிலாளர்களை சுரண்டிப் பிழைக்கும் வேலையிலிருந்து விடுபடவில்லை. இவ்வாறான வேலையில் ஈடுபடும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவே எமது சங்கத்தின் தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவீடு செய்யும் ஒருமாதச் சந்தாப் பணத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டோம். தொழிலாளர்களிடமிருந்து ஒருநாள் சம்பளத்தை அறவீடு செய்வதை பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று பௌத்த அமைப்பு. முஸ்லிம் அமைப்பு அதேபோல் தமிழ்மக்களும் உதவி வருகின்றனர். அரசாங்கமும் முடிந்தளவு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறது. அதற்குமேலாக வெளிநாட்டு சமூக அமைப்புகளும் உதவிவருகின்றன. இம்மக்களுக்கு மலையக மக்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதாலே மலையக மக்கள் சார்பாக அவர்களுடைய சந்தாப்பணத்தை அனுப்பிவைக்கிறோம்.

புதிய பாதுகாப்பு வலய பிரகடனம்: ஐ.சி.ஆர்.சியினருக்கு அறிவுறுத்தல்; பிரசுரங்களில் மக்களுக்கு விளக்கம்

new-safe-zone.jpgமீள வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். அதேநேரம், பொது மக்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். விமான மூலம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன், ஊடகங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தை நேற்று முன்தினம் வெள்ளி மாலையிலிருந்து அரசாங்கம் மீள வரையறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, வெள்ளமுள்ளி வாய்க்கால் – கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் நீளமும், ஒன்றரை கிலோ மீற்றர் அகலமும் கொண்டதாகப் புதிய பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்திற்கு அப்பால் புலிகளை இலக்குவைத்து நடவடிக்கை எடுக்கப்படுமென்பதால், பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருக்கக் கூடாதென பிரிகேடியர் தெரிவித்தார். மேற்குறித்த பகுதியிலேயே பொது மக்கள் அதிகம் தங்கியிருப்பதால், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகக் கூறிய பிரிகேடியர்,  இனி பொதுமக்களைப் புலிகளால் வைத்திருக்க முடியாதென்றும் கூறினார்.

இதேவேளை, தற்போது புலிகள் சிக்குண்டுள்ள பகுதிக்குள் படையினர் 800 மீற்றர் தூரம் வரை உட் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுற்றி சுமார் இரண்டாயிரம் கரும்புலிகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனவே, மிகவும் சூட்சுமமான முறையில் படையினர் முன்னேறி வருவதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

new-safe-zone.jpg

முல்லைக் கடற்பரப்பில் சமர்: புலிகளின் வள்ளங்கள் நிர்மூலம்

boat.jpgமுல்லைத்தீவு, வெள்ளிமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி வள்ளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை வட்டாரங்கள் தகவல் தருகையில்,

இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில், கடற்படையினரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த வந்து கொண்டிருந்த நான்கு வள்ளங்கள் மீது கடற்படையினர் பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதன் காரணமாக இரு வள்ளங்கள் முற்றாக நிர்மூலமானதுடன் மேலும் இரு வள்ளங்களைக் கடற்படையினர் கைப்பற்றினர். 14 கடற்புலிகள் இந்ததச் சம்பவத்தில் கொல்லப்பட்டனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையாமுள்ளி வாய்க்கால் மண் அணை படையினர்வசம்

sl-army.jpgமுல்லைத்தீவு கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (08.05.2009) புலிகளின் மண்அணை ஒன்று படையினரால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. பலமணிநேர மோதலை அடுத்தே இந்த மண் அணையை படையினர் மீட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுலின் போது புலிகளின் 35 சடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

vavuniyatents.jpgதமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் தி. சிறிதரன் ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசியசந்தர்ப்பத்தில் அவரிடம் விடுத்த வேண்டுகோள்

05.05.2009

மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.

02. உணவு

அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.

03 முதியோர்களை விடுவித்தல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும் 60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. நோயாளிகள்

பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்

05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்

வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

06. அரச ஊழியர்கள்

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.

07. அரசாங்க அதிபர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.

08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்

பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.

09. தொலைபேசி இணைப்புக்கள்

தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

10. உறவினர்களின் சந்திப்பு

முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.

கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. ஊனமுற்றோர், அனாதை குழந்தைகள், முதியோர், சித்த சுயாதீனமற்றோர்.

ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

13. விதவைகள்

விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும் புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

14. பிரேத அறை

முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும் துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள் உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்

புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால் கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ  

த.சித்தார்த்தன்
புளொட்         

தி.சிறிதரன்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்