வன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் தங்கியிருக்கும் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தையும், கல்வி கற்றல் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்காக கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு அடுத்த வாரம் வவுனியா செல்கிறது. கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தலைமையில் மேற்படி குழுவினர் செல்லவுள்ளனர்.
நிவாரணக் கிராமங்களில் தற்காலிக கொட்டில்கள், பாடசாலைகள் இயங்கியபோதும் தற்போது மக்கள் வந்து தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களில் பாடசாலை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே இங்குள்ள சிறுவர் சிறுமியர் வெறுமனே சாப்பிடுவதும், விளையாடுவது மாகவே உள்ளனர். இவர்களுக்கு தினமும் வாசிக்கக்கூடிய சிறுவர் சஞ்சிகைகள், சிறுவர் பத்திரிகைகள், சிறுவர் கதைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.
அத்துடன் வந்துள்ளவர்களில் ஆரம்ப பிரிவு, உயர் பிரிவு என எத்தனை மாணவர்கள் உள்ளனர்? அவர்களின் தேவைகள் என்ன? என்பது பற்றியும் மேற்படி குழுவினர் ஆராயவுள்ளனர்.