முள்ளி வாய்க்கால் பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நின்ற 34 பேர் உட்பட 134 பேர் பீரங்கித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகவும் 199 பேர் காயமடைந்ததாகவும் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இச் செய்தி தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்ட போது முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் பகுதி மீது படையினரால் பீரங்கித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. யுத்த சூனிய வலயத்தின்மீது பீரங்கி போன்ற கனரக ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை. அங்கு மக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ எமக்கு எதுவும் தெரியாது. அது பற்றிய தகவல் எமக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் 5/9/2009 யுத்த வலயப் பகுதியில் இருந்து தப்பி வந்த மக்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.