அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது இருவரும் தேர்தல் குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார்.
மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவர்னர் பர்னாலா, முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன் ஆகியோரிடமும் பிரதமர் நலம் விசாரித்தார். பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.30க்கு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தார்.
அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், தயாளு அம்மாள் ஆகியோர் இருந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமரும் முதல்வரும் தனியே ஆலோசனை நடத்தினர். தேர்தல் குறித்த அந்தப் பேச்சின் போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் உடனிருந்தார். முதல்வர் அறையில் பிரதமர் 15 நிமிடங்கள் இருந்திருக்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.