அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அவசரகால சட்ட நீடிப்பில் வாக்களிக்காமை குறித்து கிஷோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

kishore.jpgநாடாளு மன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்டத்தை நீடிப்பது தொடர்பான வாக்களிப்புக்கு சமூகமளிக்காமை தொடர்பில், வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வழமை போலவே அவசர கால சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைவரும் எதிராக வாக்களித்த வேளையில், சிவநாதன் கிஷோர் அந்த வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில், கூட்டமைப்பின் அடுத்த நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தின் போது, இது தொடர்பிலான காரணம் பகிர வேண்டும் என சிவநாதன் கிஷோரிடம் கோரியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமாக செயற்படவோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவோ முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இடைத்தங்கல் முகாம்களில் கழிப்பறை பற்றாக்குறை: ஐ.நா.

idp-100609.jpgஇலங் கையில் போரால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களில் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளில் பெரும் பற்றாக்குறை காணப்படுவதாக ஜ.நா. கூறியுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் சுமார் ஆறாயிரம் கழிப்பறைகள் தேவைப்படும் நிலை இருக்கிறது என்றும் ஆனால் இதுவரை சுமார் மூவாயிரம் கழிப்பறைகளே கட்டப்பட்டிருப்பதாக ஐ.நா.மன்றம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 50 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையே அங்கேயிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

இந்த குறைபாடுகள் தொடர்பில் தமிழோசைடம் கருத்து வெளியிட்ட இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், கழிப்பறைகளை அமைக்கும் பணியை தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவருவதாகவும், கூடியவிரைவில் தேவையான அளவுக்கு கழிப்பறைகள் கட்டிமுடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்கள் முகாம்களில் செயலாற்றுவதில் அரசாங்கம் தடைகளை விதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை

அமெரிக்க இராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008ல் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது.  ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங் கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து 1980 க்கு பின் இந்த ஆண்டுதான் அதிக அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் பங்கேற்ற பின்னர் தான் வீரர்களிடம் இந்த தற்கொலை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பணப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, மனைவியை விட்டுப் பிரிந்தது, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட வையும் இந்த தற்கொலை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க வீரர்களின் தற்கொலை அதிகரிப்பு குறித்து அமெரிக்க இராணுவத்தின் துணைத் தளபதி பீட்டர் சியாரெலி கூறுகையில் :தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் உரிய முறையில் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஏன் அது தோல்வி அடைந்தது என்பது குறித்து விரிவாக ஆராயப் பட வேண்டும் என்றார்.

இரான் தேர்தல் முடிவு குறித்து அமெரிக்க துணை அதிபர் கருத்து

baiden.gifஇரானிய அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து தமக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

என்.பி.சி. என்னும் ஊடகத்துக்கு வழங்கிய நீண்ட செவ்வி ஒன்றில், இந்த விடயத்தில் நியாயமான ஒரு முடிவுக்கு வருவதற்கான போதுமான தரவுகள் இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை என்று பைடன் கூறியுள்ளார். முன்னதாக, இந்த தேர்தல் முடிவுகள் இரானிய மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாக, அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தல்; இடம்பெயர்ந்த வாக்காளர் 26வரை விண்ணப்பிக்க அவகாசம்

election_ballot_.jpgயாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பம் செய்வதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் புத்தளம் அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளன. யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் உள்ளனர். புத்தளத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பித்தால் குறித்த பிரதேசங்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் இது தொடர்பான விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதி தேர்தல் செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுமணசிறி கூறினார்.

ஓமான் கடலில் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர் எழுவர் – மீட்டெடுக்கும் பணி துரிதம்

ஓமான் கடலில் வைத்து சோமாலியா கடற்கொள்ளை யர்களினால் கடத்தப்பட்ட வர்த்தகக் கப்பலில் இலங்கயர்கள் சிலரும் சிக்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின. இதனை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியை நாடியுள்ளதாவும் அமைச்சு தெரிவித்தது.

நியூஸிலாந்துக்குச் சொந்தமான மேற்படி வர்த்தகக் கப்பல் ஓமான் கடலினூடாக செல்கையில் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நேற்று முன்தினம் (13) கடத்தப்பட்டு சோமாலிய கடற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இந்தக் கப்பலில் இலங்கையர் 7 பேர் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் இதனை உறுதிப்படுத்த ஓமான் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் உதவியை நாடியுள்ளதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்தது. அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இதேவேளை மேற்படி கப்பலில் பணி புரிந்த தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கப்பல் சிப்பந்திகளின் உறவினர்கள் கப்பல் கம்பனியை கோரியுள்ளனர்.

ஓமந்தை வரையான புகையிரத சேவை செப்டம்பரில்; நிர்மாணப்பணி ஆரம்பம்

yaal-devi.jpg‘உதுரு மிதுரு’  திட்டத்தின் கீழ் வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. செப்டம்பர் மாதத்தில் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தைவரை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டது.

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக 20 வருடங்களின் பின் வவுனியாவில் இருந்தது தாண்டிக்குளம் வரை ஆரம்பிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்புக்களை அந்தந்த பிரதேச மக்கள் ஏற்றுள்ளனர். இதன்படி ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை காலி மக்களும் யாழ். ரயில் நிலையத்தை அமைக்கும் பணியை ஹம்பாந்தோட்டை மக்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணிக்கும் பணி 2010ல் பூர்த்தி செய்யப்பட உள்ளதோடு இதற்கு சகலரதும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

சவூதி பஸ் விபத்து இலங்கையர் ஐவர் பலி: நால்வர் முஸ்லிம், ஒருவர் சிங்களவர்

சவூதி அரேபியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் கொல்லப்பட்ட ஐந்து இலங்கையர்களினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

29 பேரை பலிகொண்ட இந்த விபத்தில், மரணமடைந்த இலங்கையைச் சேர்ந்த ஐவரில் நான்கு முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் அடங்குவர். இவர்களில் நால்வர் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்படும் காப்புறுதி நஷ்டஈடும், அதேபோன்று சவூதி அரேபியாவிலுமிருந்தும் நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று – 06ஆம் குறிச்சி, இலக்கம் 412, அலியார் மரிக்கார் வீதியைச் சேர்ந்த ருபீன் முபீஸ், நிந்தவூர் இலக்கம் 219/1, பதுரிய்யா வீதியைச் சேர்ந்த சேகு ஆதம்பாவா மீராலெப்பை, அட்டாளைச்சேனை இலக்கம் 64 பி, எம்.பி.சீ.எஸ். வீதியைச் சேர்ந்த மொஹம்மட் ஆமிர் ஹப்ஸான், சம்மாந்துறை இலக்கம் 357 இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த சுலைமான் லெப்பை அப்துல் கபூர் மற்றும் சவூதியில் இவர்களுக்கு பொறுப்பாக இருந்த விதானகமகே மென்டிஸ் அப்புஹாமி ஆகிய ஐவருமே பலியானவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

இந்த விபத்துச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்ப உறவினர்களுக்கு தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களை அவர்களது இடங்களுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக அதிகாரி போப்பிட்டிய தெரிவித்தார்.

இவர்களுக்கு மேலதிக நஷ்டஈட்டுத் தொகையை சவூதி அரேபியாவிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் கவுன்ஸிலர் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சவூதி அரேபியாவிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் வண்டி ரியாத் நகருக்கும் தமாம் நகருக்கும் இடையில் வைத்து திடீரென ட்ரெக் வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் வண்டி திடீரென மோதியவுடன் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. பஸ் வண்டியின் தன்னியக்க கதவுகளும், யன்னல்களும் பூட்டப்பட்டுக் கொண்டதில் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து இலங்கையர்கள், நான்கு சவூதி அரேபியர்கள், மூன்று இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர், ஒரு எகிப்தியர், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

வடபகுதி விவசாயிகளின் கடன்களுக்கு இலவச காப்புறுதி

வடபகுதி விவசாயிகளுக்கு இலங்கை வங்கி வழங்கு கின்ற சகல கடன்களுக்கு இலவசமாக காப்புறுதி வழங்க அவ்வங்கி முடிவு செய்துள்ளது. வடபகுதி விவசாயிகளின் மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் இந்த காப்புறுதித் திட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்திருக் கிறது.

இலங்கை வங்கியும், விவசாய காப்புறுதி சபையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக் கின்றன. விவசாய கடன் பெறுபவர்கள் வரட்சி, வெள்ளம், விவசாய பாதிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகும் பட்சத்தில் இந்த காப்புறுதி மூலம் நிவாரணமளிக்கப்படும் என இலங்கை வங்கித் தலைவர் காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மறைத்து வைக்கப்ப்ட்டுருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், திருகோணமலையில், சேருநுவர பொலிஸ் பகுதியில், பொலிஸார் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

T56 ரக துப்பாக்கிகள் 210, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தற்கொலை அங்கிகள் ஆகியவை அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடத்தில், ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகையான ஆயுதங்கள் இவையாகும்