அமெரிக்க இராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2008ல் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங் கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து 1980 க்கு பின் இந்த ஆண்டுதான் அதிக அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் பங்கேற்ற பின்னர் தான் வீரர்களிடம் இந்த தற்கொலை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பணப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, மனைவியை விட்டுப் பிரிந்தது, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட வையும் இந்த தற்கொலை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க வீரர்களின் தற்கொலை அதிகரிப்பு குறித்து அமெரிக்க இராணுவத்தின் துணைத் தளபதி பீட்டர் சியாரெலி கூறுகையில் :தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் உரிய முறையில் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஏன் அது தோல்வி அடைந்தது என்பது குறித்து விரிவாக ஆராயப் பட வேண்டும் என்றார்.