அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு

ships000.jpgவன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.

ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு அது செல்ல வேண்டும் என கப்பல் கேப்டனிடம் தெரிவித்தனர்.இதையடுத்து வேறு வழியின்றி வணங்காமண் கப்பல் இன்று சென்னை கடல் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளது. அனேகமாக அது மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இடம்பெயர்ந்தோர் நலன் கருதி தபால் நிலையங்கள் – தபால் திணைக்களம் நடவடிக்கை

இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் சகல வசதிகளையும் கொண்ட  தபால் நிலையங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக    தபால் மா அதிபர் எம்.கே.பி.திஸநாயக்க தெரிவித்தார். இவ்வாறு எட்டுத் தபாலகங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றை  அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் பூர்த்தியடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான தபால் விநியோக நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தபால்களை விநியோகிப்பதற்கு விஷேட திட்டமொன்றைத் தயாரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும் அந்தப் பகுதிகளுக்கான தபால் விநியோக வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் மீன்பிடித்தடை முற்றாக நீக்கம்

basil.jpgமன்னார் கடற் பிரதேசத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசனையின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை நேற்று முதல் (21) அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தலைமன்னார் கடற்படை இறங்குதுறையில் வைத்து மன்னார் மீனவர்களை நேற்று முன்தினம் (20) சந்தித்த பெசில் ராஜபக்ஷ எம். பி. இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதன்படி கிழக்கு மற்றும் யாழ். குடா மீனவர்களுக்கு 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடலில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 14 ஆம் திகதி நீக்கப்பட்டதோடு, யாழ். குடா மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 19 ஆம் திகதி நீக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களில் 60 வீதமானவர்கள் மீன்பிடித் தொழிலை தமது பிரதான ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். 63 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இவ்வாறு மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக மீன் பிடித்துறை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 19040 மெற்றிக் தொன் மீன் பிடிபட்டது. இந்தத் தொகை 2007 ஆம் ஆண்டாகும் போது 9170 மெற்றிக் தொன்னாகக் குறைந்தது. மன்னார் மாவட்ட மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து பெசில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், அவற்றுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.

இது கால வரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மீனவர்களின் கோரிக்கைப்படி தற்போது 7 தினங்களும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. மீன்பிடிப் படகு இயந்திரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டது. இதன்படி 15 குதிரை வலு கொண்ட படகு இயந்திரங்களை பாவிக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடிக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

இது தவிர மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்காக 275 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்தோடு ஓய்வு அறைகள், குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 180 நாள் திட்டத்தினூடாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

குளிரூட்டிகள், ஐஸ் உற்பத்தி நிலையங்கள் என்பன அமைக்க கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற் பரப்பிற்கு வந்து மீன்பிடிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையில் கடற்படையினருக்கு நேரடியாகத் தலையிட முடியாது எனவும், மன்னார் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை ஆரம்பிப்பதோடு இந்திய மீனவர்களின் வருகை குறையும் எனவும் பெசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தேசிய உணவு வாரம் இன்று ஆரம்பம்

“தேசிய உணவு வாரம்” இன்று (22 ஆம் திகதி) தொடக்கம் இம் மாதம் 28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உள்நாட்டு உணவு உற்பத்தியையும், நுகர்வினையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் உணவு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

“நாம் பயிரிடுவோம் – நாட்டை முன்னேற்றுவோம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்நாட்டு உணவு உற்பத்தி தொடர்பாக தேசிய மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான சட்டமூலத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு தண்டனைகள், அபராதங்கள் போன்றவற்றை மேலும் கடுமையானதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான புதிய திருத்த சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதுடன் சர்வதேச போதை தடுப்பு தினமான இம்மாதம் 26ம் திகதி அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவும் ஜனாதிபதியின் மூலமாக அதற்குப் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப்படு மென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித் தார்.

அத்துடன் சட்டம், ஒழுங்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமை ச்சின் கீழுள்ள ஐந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய வேலைத் திட்டமொன்றை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்வரும் 26ம் திகதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றி ஊடகங்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடு பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை, குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி (மத்தடதித்த) திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுகக் முடியும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்ததுடன் இதற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதெனவும் தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் தடுப்பு அதிகார சபையின் தலைவர் மென்டிஸ் இதுபற்றி விளக்குகையில் :- இன்று நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பருத்தித்துறையிலிருந்து சிலாபம் வரைக்கும் முன்னர் புலிகள் போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளனர்.

இப்போது இது நிறுத்தப்பட்டுள்ள போதும் மீன் பிடிப் படகுகளின் மூலம் இப்போதும் இக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 1,202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு மேலும் 80 லொறிகளில் உணவுப் பொருட்கள் தயார் நிலையில்

a-9-loorys.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதிவழியாக 84 லொறிகளில் கடந்தவாரம் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 80 லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டு அனுராதபுரத்தில் இராணுவ பாதுகாப்பு சோதனைகள் நடைமுறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்திலிருந்து இந்த லொறிகள் இன்று அல்லது நாளை இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்படலாம் என்று கொழும்பு வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்திற்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகளில் 3லட்சம் கிலோ சின்ன வெங்காயமும், சுமார் ஒரு லட்சம் கிலோ வரையிலான புகையிலை 8 லொறிகளிலும், பச்சை மிளகாய், நண்டு, றால் உட்பட்ட கடலுணவுப் பொருட்கள் என்பனவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஏற்றி வரப்பட்டிருப்பதாக கொழும்பு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 4 லொறிகளில் வெற்று மென்பான போத்தல்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பன்றிக்காய்ச்சல்:தொற்றுக்குள்ளான ஐந்தாவது நபர் இனங்காணப்பட்டார்

19swine-flu.jpgபத்தர முல்ல பகுதியில் ஐந்தாவது பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர் இனங்காணப்பட்டார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து சிங்ப்பூர் எயார் லைன்ஸ் மூலம் இலங்கை வந்த ஒன்பது வயது சிறுமியொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக டாக்டர் கீதானி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி-யாழ் ஏ 9 வீதியில் எட்டு எரிபொருள் நிறப்பும் நிலையங்கள் – அமைச்சர் பௌசி தகவல்

fawzi_minister.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கண்டி யாழ்ப்பாணத்துக்கான ஏ 9 வீதியில் புதிதாக எட்டு எர்பொருள் நிறப்பும் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்ர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான 180 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு அமைய இந்த நிலையங்கள் இமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்துக்காக 150 மில்லியன் ரூபாவை செலவிட அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

வணங்காமண் நிவாரணபொருட்களை தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க வேண்டும் – பழ. நெடுமாறன்

ships000.jpgஇலங்கை அரசு திருப்பி அனுப்பிய கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வணங்காமண்’ என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.

அந்தப் பொருட்களை இலங்கை அரசு இறக்கிக் கொள்ள வலியுறுத்துமாறு அப்போதே மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இப்போது கப்பல் திரும்பிவிட்ட நிலையில் மறுபடி சென்றாலும் இலங்கையில் அப்பொருட்களை இறக்க முடியாது.

கப்பல் சென்னைக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதில் பயன் இல்லை. அந்தப் பொருட்கள் வீணாகிப் பழுதடைந்து போக வழி ஏற்பட்டுவிடும். எனவே, கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

பன்றிக் காய்ச்சல் அபாயத்தையடுத்து கொழும்பு சர்வதேச விமான நிலையம், துறைமுகம் உஷார்

19swine-flu.jpgதமது ஆரோக்கிய நிலைமையை உறுதிப்படுத்தும் பிரகடனப் படிவத்தைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு வெளிநாட்டவரையும் நாட்டுக்குள் பிரவேசிக்க இடமளிக்க வேண்டாமென விமான நிலைய மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுச் செயலாளர் இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய சகல குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளையும் அறிவூட்டும் வகையில் விசேட சுற்றறிக்கையொன்றை உடனடியாக வெளியிடுவதற்கு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நேற்று நடவடிக்கை எடுத்தார்.

இதேவேளை இலங்கைக்குள் வருகை தரும் சகல வெளிநாட்டவரும் விமான நிலையத்தில் விசேட பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவர். தேர்மல் ஸ்கேனர் இயந்திரம் மூலம் இலங்கைக்குள் வருகைதரும் சகலரும் பரிசோதிக்கப்படுவர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

புதிய இன்புளுவென்சா ஏ. எச்.1 என் 1 வைரஸ் என்கிற பன்றிக் காய்ச்சல் மேலும் இலங்கைக்குள் வந்து சேர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ் தொடர்பான பரிசோதனை தினமும் 24 மணி நேரமும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

இப்பணியில் ஈடுபடவென நான்கு டாக்டர்களும், நாற்பது பொது சுகாதாரப் பரிசோதகர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் ஆறு மணித்தியாலயங்கள் சுழற்சி முறைப்படி கடமையாற்றுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கைக்குள் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ¤டன் வருகை தந்தவர்கள் பயணம் செய்த விமானப் பயணிகள் 185 பேரும் அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் காண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் இவர்களிடம் இக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.புதிய இன்புளுவென்ஸா ஏ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இந்நாட்டில் நால்வர் இற்றைவரையும் இனம் காணப்பட்டுள்ளனர் என்றாலும் இக்காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய மாத்திரைகளும் பாணி மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாகவும் இவ்வதிகாரி மேலும் கூறினார்.