அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தமிழரின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தலான தருணத்தில் தேர்தலை எதிர்கொள்கிறோம்

தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தலான தருணத்தில் எதிர்நோக்கியுள்ள தேர்தல் குறித்து சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. என். ஸ்ரீகாந்தா அழைப்பு விடுத்துள்ளார்.  வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழரசு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை மாலை பண்டாரிக்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இந்த கூட்டத்தில் சிறிகாந்தா எம்.பி. மேலும் கூறியதாவது;

தமிழ் மக்களுடைய சுயகௌரவத்திற்கும் மரியாதைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலின் மத்தியில் இந்த தேர்தலை ஜனநாயக ரீதியாக நாம் சந்திக்கின்றோம்.  யாழ். மாநகர சபை, வவுனியா நகர சபைகளில் சிறந்ததொரு நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது.

மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றி யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள ஆட்சியாளரை ஜனநாயக ரீதியிலும் வடபகுதி தமிழ்மககள் ஆதரித்துவிட்டார்கள் என ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்திற்கு பிரசாரம் செய்து தமிழர்களுக்கு இங்கு பிரச்சினை இல்லை என தெரிவிக்கும் நிலை ஏற்படும்.

எனவேதான், தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினையான தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் அபிலாசைகள் சரியாக சமாதானமாக தீர்க்கப்படாததனால் தான் போராட்டம் உருவானது. இந்த போராட்டம் பின்னர் நீண்டதொரு ஆயுதப் போராட்டமாக மாறியது, யுத்தம் நடைபெற்றது.

அரசியல் தீர்வாக நாம் எதிர்பார்க்கும் அமைப்புமுறை வட, கிழக்குத் தமிழர்களுக்கு அவசியமானதாகும்.

நாட்டின் வரையறைக்குள் இதனை பெற்றுக்கொள்ள தமிழ்மக்களுடைய பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் போராடும். ஆட்சியாளர்களுடன் இணைந்து தேர்தலில் குதித்துள்ளவர்கள் ஒரு ஆர்ப்பாட்ட அட்டகாச அரசியல் தேர்தலில் குதித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் அகதி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கல்

vaccine.jpgவவுனி யாவில் அகதி முகாம்களிலுள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ, சொறி, சிரங்கு தடுப்பூசி மருந்தேற்றும் 3 நாள் வேலைத்திட்டம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி இருப்பதாக 40  சுகாதார அமைச்சு தெரிவித்தது. முகாமிலுள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்தத் தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்படவிருப்பதுடன் நோய்தடுப்பு வில்லைகளும் வழங்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சிறுவர்களுக்கான ஐ.நா.பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) ஆகியன ஒன்றிணைந்தே இந்த வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக வன்னிநாயக்க கூறினார். தொண்டர் அடிப்படையில் 1,200 பேரும் குடும்ப சுகாதார மருத்துவச்சிகள் 140 பேரும் இதற்கான நடவடிக்கைகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசுடன் இணைந்து மக்களுக்குப் பணிபுரிய வருமாறு – கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் முரளி அழைப்பு

தமிழ் மக்களுக்கு தேசிய அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள் ளுமாறு அழைப்புவிடுகின் றேன் என தேசிய நல்லி ணக்க ஒருமைப்பாட்டு அமை ச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறு மூலை சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் முரளிதரன், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி ஜனாதிபதி எடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவேண்டும். அதற்கான அழைப்பை இம் மேடையில் வைத்து கிழக்கு மாகாண முலமைச்சருக்கு விடுக்கின்றேன்.

தமிழ் மக்களை தேசிய அரசியலில் இணைத்து இப்பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும்.

இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொரு சிங்கள அமைச்சர்களையும் மட்டக்களப்புக்கு அழைத்து வருகின்றோம். அமைச்சர்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்காக முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர்.

இம்மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக விளையாட்டு அமைச்சரை அழைத்து வந்து இங்குள்ள விளையாட்டு வீரர்களை அபிவிருத்தி செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் யாழ். விஜயம்

0309susil-premajayantha_.jpgகல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ். சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்குக் பாடசாலைகளின் குறைப்படுகள் தொடர்பாக நேற்று  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.

அதிபர், ஆசிரியர் தொடர்பான வெற்றிடம் மற்றும் நிர்வாக பிரிவுகளில் நிலவும் குறைபாடுகளை நிறைவு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

கல்வி நிர்வாக சேவையுடன் இணந்த பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்தே அமைச்சர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.

கல்வி அமைச்சு செயலாளருடன் கோப்பாய் கல்விப் பீடத்தையும் அமைச்சர் குழுவினர் பார்வையிட்டனர்.

கொழும்புச் சந்தையில் யாழ் மீன் விற்பனை – அமைச்சர் பீலிக்ஸ் நடவடிக்கை

filix_perera.jpgவடபகுதி கடற் பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களை கெழும்பு நகரில் விற்பனை செய்யும் நிலையங்கள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். வடபகுதி கடற்பிரதேசங்களில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து வடபகுதியில் பெருமளவில் மீன் கிடைத்து வருகிறது.

அங்கு பிடிக்கப்படும் மீன்களை கொழும்பு மாநகரில் வாழும் மக்களுக்கும் பெற்றுக்கொள்வதற்கான விசேட திட்டமொன்றை மீன்பிடித்துறை அமைச்சர் வகுத்துள்ளார். அதன்படி வட பகுதியில் கூடுதலாக உள்ள மீன்களை குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் கொழும்புக்க கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வடபகுதி மீனவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் – சிவநாதன் கிஷோர்

srilanka-refugees.jpgஅரசாங் கத்தின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது சில காலமாகவே நடைபெற்று வருவதாகவும், இது ‘எல்லோருக்கும்’ தெரியும் என்றும் அவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார். இவ்வாறு வெளியேறுவதற்கு மக்கள் பெரும் பணம் கொடுப்பதாகவும், ஒரு சிலர் விமான நிலையம் வரை அழைத்து செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக எந்த அரசியல் கட்சி மீதோ, எந்த ஒரு தனிநபர் மீதோ குற்றம் சுமத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தனக்கு இது தொடர்பில் உறுதியான நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருப்பதாகவும், முகாம்களில் இருந்து மக்கள ‘நோயாளிகள்’ என்ற போர்வையில் வெளியில் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபய ராஜபக்ஷ், இவ்வாறு மக்கள் தப்பியிருப்பது தொடர்பில் தங்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும், சிலரை கைது செய்திருப்பதாகவும் கூறினார். இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

தமிழரின் ஒரே சக்தி த.தே.கூ. மட்டுமே என்பதை சர்வதேசம் அறியும் : செல்வம் அடைக்கலநாதன்

0308adaikalanathan.jpgதமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உரிமைகளையும் நேர்மையுடன் வென்றெடுக்கக் கூடிய, தமிழர்களின் சக்தியாய்,பலமாய் இருக்கக் கூடிய ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும், புரிந்துகொண்டுள்ளன.

ஜனாதிபதியும் கூட இதனை நன்கு உணர்ந்துள்ள நிலையில், தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும்,களமாக யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்கள் திகழ்கின்றன. இத்தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்ததாவது: “வரலாறு காணாத பேரவலத்தை சந்தித்த வன்னி வாழ் மூன்று லட்சம் மக்களும், இடம்பெயர்ந்து வவுனியாவில் முள்ளுக்கம்பி நடுவில், பரிதாபகர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மரண பீதியுடன் வாழ்ந்து வரும் அவர்களைத் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளாமல், யாழ். மாநகர சபை தேர்தலையும், வவுனியா நகரசபை தேர்தலையும் அரசாங்கம் திட்டமிட்டுத் திணித்துள்ளது. திணிக்கப்பட்ட தேர்தலில் வலிந்து போட்டியிட வேண்டிய காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் விலகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்கு போடும் சிங்கள தேசத்தின் முத்திரையை கிழித்தெறியும் அரிய வாய்ப்பாக இத்தேர்தலை நாம் கருதுகிறோம். கடந்த 61 வருடங்களாக தமிழினத்தின் உரிமைப்போர் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் முன்னெடுத்த போதெல்லாம் அதனைத் திட்டமிட்டு உலக வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழர்களின் உணர்வுகளை அடக்கிய சிங்கள தேசம், பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர தீர்வுக்காகப் பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தலைமைகள் முயன்ற போதெல்லாம் அதனை ஏற்றுக்கொள்ளவோ தமிழினத்துக்கு தீர்வு வழங்கவோ முன்வரவில்லை.

இன்னல்கள், இடர்கள், துன்பங்கள், சோகங்கள் என எமது வாழ்வு தொடரும் இவ்வேளையிலும் தமிழினம் தன்மானத்தை இழந்து சோரம் போகாமல் சுதந்திர தாகம் கிடைக்கும் இறுதி நேரம்வரை பற்றுறுதியுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான வல்லமையும் துணிவும் அரசியல் நேர்மையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமே உள்ளது என்பதனை தமிழ் மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

எமது கரங்களைப் பலப்படுத்த, உரிமையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கும் படி தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படும்

27-air-arabia-a.jpgகட்டு நாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று விமான நிலையத்தின் நிர்வாகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த விமான நிலையதின் பார்வையாளர் கூடத்தை மீண்டும் திறப்பதற்கான அனுமதி பாதுகாப்பு தரப்பிடமிருந்து கிடைக்கப்பெற்றதை அடுத்தே மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்பட்டதை அடுத்து விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் மூடப்பட்டது. பார்வையாளர் கூடம் திறக்கப்பட்ட போதிலும் அக்கூடத்துக்கு செல்வதற்கான அனுமதியும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படவுள்ளன

சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவையை வழங்குவதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டில் இதற்கு முன்னர் எந்த அரசாங்கங்களும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவற்றை செய்து முடித்துள்ளோம் எனவும் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யத்தயாராயுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இன மத மக்களும் சுதந்திரமாக ஒரே கொடியின் கீழ் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். வடக்கு, கிழக்கு, பெருந்தோட்டப் பகுதி ஒன்றில்லாமல் சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர, முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புத்தள நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டின் தேசிய பயணத்தைப் பலப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர். இன்று நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுதந்திர நாடு உரிமையாகியுள்ளது. வடக்கு, கிழக்கிலன்றி மொனராகலை புத்தல பிரதேசங்களிலும் மக்கள் பயங்கரவாத அச்சுறுத்தல்களுடனேயே வாழ்ந்துவந்தனர். புத்தள பகுதியிலும் பலர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டே நாம் உங்கள் முன்னிலைக்கு வந்துள்ளோம். இன்று நாட்டில் பயங்கரவாதம்

மட்டுமன்றி வேறு எந்த வாதமும் இல்லை. வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் எம் இனத்தை அழித்து வளங்களை சூறையாடிய யுகமொன்றிலிருந்தது. அன்று விவசாயிகள் தெருவில் விடப்பட்டனர். விவசாய வளங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டனர். 16 வயதிற்குக் கீழுள்ள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அந்த யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது.

எனினும் அன்று அவ்வாறு செய்தவர்களுக்கு உதவியவர்கள் இன்று இந்த நாடு அபிவிருத்தியடைவதை விரும்பவில்லை. அதனால்தான் நாம் சர்வதேச கடன்களைப் பெறுவதற்கு அவர்கள் தடையாக நிற்கின்றனர். வடக்கிற்கோ, கிழக்கிற்கோ வேறு அபிவிருத்திகளுக்கோ வன்றி நமது சொந்த விடயங்களுக்காக நாம் வெளிநாட்டுக் கடன் பெறுவதாக அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். இதனை மக்கள் நம்பத்தயாரில்லை. ஏனெனில் நாடு முழுவதிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமகாலத்தில் ஐந்து துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகளென பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. கிராமங்கள் பெரும் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மொனராகலை மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு நான்கு கோடி என நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன. எமக்குப் பல அழுத்தங்கள் வந்தன. அவ்வேளைகளில் நாம் அதற்கு அடிபணியவில்லை. ஒரு தடவையல்ல ஆயிரம் தடவையாயினும் நாம் தூக்குத் தண்டனை பெற தயார் என நாம் கூறினோம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் கஷ்டப் பிரதேசம் என்ற பெயரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது ஏகாதிபத்தியவாதிகள் நம்மிடமிருந்து பறித்ததை நாம் மீளப்பெற வேண்டியுள்ளது.

மறந்து கிடந்த கிராமங்களை மீள அபிவிருத்தியில் கட்டியெழுப்ப வேண்டிய காலம் உருவாகியுள்ளது. எமது வளங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொழும்பு மட்டுமன்றி சகல நகரங்களும், சகல கிராமங்களும் ஒரேவிதமாக அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான செயற்றிட்டங்கள் மாகாண சபைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

எமது மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஊவா மாகாண சபையிலும் நாம் அமோக வெற்றிபெற்று ஊவா மாகாணத்தைக் கட்டியெழுப்ப சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பரக் ஒபாமா இந்தியா விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒபாமா வெகுவிரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவருடைய இந்தியப் பயணம் 3 மாதங்கள் கழித்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை  மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.