அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

காலி, ஹெயார பகுதியில் நேற்று முன்தினம் (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காலி, கராபிடிய வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். கடமை முடிந்து வீடு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பொலிஸ் பொறுப்பதிகாரி கே.பி. சுமனசிறி பயணித்த மோட்டார் சைக்கிளும் மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஸ்தலத்தில் பலியானதோடு மற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கராபிடிய பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் பிரேத பரிசோதனை நேற்று (16) நடைபெற்றது. அவரது இறுதிக் கிரியைகள் இன்று (17) ஹெயாரயில் நடைபெறவுள்ளதாக கராபிடிய ஆஸ்பத்திரி பொலிஸார் கூறினர்.

எஸ். பி ஜமால்தீன் படுகொலைக்கு 10 இலட்சம் ரூபா கொந்தராத்து – பொலிஸ் விசாரணையில் அம்பலம்; மூவர் கைது

jamaldeen.jpgகல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பணிப்பாளராயிருந்த பொலிஸ் அத்தியட்சகர் எச்.எல். ஜமால்தீன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைதீவு விசேட அதிரடிப்படையினர் (14ம் திகதி) இம் மூவரையும் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் அருகில் வைத்து பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப் படையினர் முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். மருதமுனை அல்-ராஜ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றகுமான், மத்திய முகாம் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் (வீரா புலி உறுப்பினர்) நற்பிட்டிமுனை முகம்மது காசிம் ஹம்ஸா ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இச்சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் தகவல் தருகையில்:

கொந்தராத்து அடிப்படையில் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு புலி உறுப்பினரொருவரால் ஜமால்தீன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இதற்காக மருதமுனை அல்ராஜ் முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றஹ்மான் என்பவர், புலி உறுப்பினரான வீரா என அழைக்கப்படும் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் என்பவருக்கு 10 இலட்சம் ரூபா கொந்தராத்து வழங்கியுள்ளாரென விசாரணைகளில் அம்பலமாகியிருக்கிறது.

கொந்தராத்தாகக் கொடுக்கப்பட்ட தொகை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த முகம்மது காசிம் ஹம்ஸா, என்பவரூடாக அல்ராஜ் உரிமையாளர் வழங்கியுள்ளார். நற்பிட்டிமுனை காசிமே 10 இலட்சம் ரூபாவை புலி உறுப்பினரான செல்லத்தம்பி தேவேந்திரனிடம் கையளித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீனை அல்-ராஜ் முகவர் நிலைய உரிமையாளரான நஜிமுல் றகுமானின் கட்டளைப் பிரகாரம் தான்தான் சுட்டுக் கொலை செய்ததாக புலி உறுப்பினரான வீரா என்றழைக்கப்படும் செல்லத்தம்பி தேவேந்திரன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். காரைதீவு விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெற்ற குழந்தைக்கு தாய்ப்பாலுடன் விஷம் கலந்து கொடுத்த பே(தா)ய் – குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

தான் பெற்றெடுத்த குழந்தையொன்றுக்கு தாய்ப்பாலுடன் விசத்தைக் கலந்துகொடுத்து குழந்தையை கொலைசெய்ய முயற்சிசெய்த தாயை கண்டி பொலிஸார் நேற்று முன்தினம் (14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் துனுவில பிரதேசத்தைச் சேர்ந்த கீதாகுமாரி ரத்நாயக்க (29) என்ற திருமணமாகாத அப்பெண்ணை பொலிஸார் கண்டி மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

கண்டி பெரியாஸ்பத்திரியில் குறை மாத நிலையில் பிரசவித்த இக்குழந்தை மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தாயினால் பெறப்படும் தாய்ப்பால், தாதி ஒருவரினூடாக குழந்தைக்கு ஊட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை குறித்த தாயினால் தாதியிடம் வழங்கப்பட்ட தாய்ப்பால் நிரம்பிய போத்தலில் தாதிக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து குறித்து தாய்ப்பால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து தாயிடமிருந்து விசப் போத்தலொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரி வெளிநாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பெண்ணின் பிள்ளைகளுக்கு பணிசெய்வதற்காக அக்காவின் வீட்டில் குறித்த பெண் சிறிது காலம் வாழ்ந்து வந்துள்ளார். இவ்வேளை இத்தாய்க்கும் அக்காவின் கணவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டிருக்கலாமென்றும் இதனூடாக இக்குழந்தை பிறந்திருக்காமென்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஐந்து இலட்சம் பக்தர்கள் மடு உற்சவத்தில் பங்கேற்பு

madhush_2.jpgமடுத் திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பூரண பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் இடம்பெற்ற இத்திருவிழாவில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டு மடு மாதாவைத் தரிசித்தனர்.

மடுத் திருப்பதிக்குச் செல்லும் பாதைகள் புனரமைக்கப்பட்டு மின்சாரம் உட்பட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பயமின்றி இந்தத் திருவிழாவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற வெஸ்பர்ஸ் ஆராதனையும் நேற்று விமரிசையாக நடத்தப்பட்டது.

மடு மாதா திருவிழாவிலும் கொழும்பு மறை மாவட்டப் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினார். அத்துடன் கொழும்பு மறை மாவட்ட முன்னாள் பேராயர் பேரருட் திரு ஒஸ்வோல்ட் கோமிஸ், யாழ். ஆயர் பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு ஆராதனைகளை நடத்தினர். கடந்த பல வருடங்களுக்குப்பின் தடையின்றியும் அச்சமின்றியும் மடுத்திருவிழாவைத் தரிசிக்கக் கிடைத்தமைக்காக மக்கள், அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

கடந்த காலங்கள் போலவே மக்கள் மடுத்திருப்பதி வளவில் கூடாரங்களை அமைத்து குடும்பத்துடன் மடுமாதா திருவைக் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது. வாகனப் போக்குவரத்துக்கள், யாத்திரிகளுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான கடைகள் உட்பட சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மக்களுக் கான முழுமையான பாதுகாப்பினை பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திருவிழாவில் மறையுரையாற்றிய யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம், மடுத்திருப்பதியில் மீண்டும் விமரிசையாக திரு விழாவை நடத்தும் சூழலை ஏற்படுத்தித் தந்த இலங்கை அரசாங்கத்துக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

அவர் தமது மறையுரையில் மேலும் தெரிவித்ததாவது :-மருத மடுத் திருப்பதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. அமைதியாக இருந்த பூமி யுத்த பூமியாக மாறியது. எனினும் நீண்டகாலத்திற்குப் பின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் பங்கேற்கும் சிறப்புத் திருவிழா இம்முறை கொண்டாடப்படுகிறது.

ஆலயமே தகர்ந்து விடுமோ என்ற ஒரு அச்சமான சூழ்நிலையிலிருந்து இத்திருப்பதி மீட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆலயத்தை மீள புனரமைத்துப் பாதுகாப்பு வழங்கி நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் இங்கு வருவதற்கு வழியமைத்த படையினருக்கும் எமது பாராட்டுக்களும் அன்னையின் ஆசீர்வாதமும் உரித்தாகட்டும். இத்திருநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்ற திருநாள். கொழும்பு மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் தலைமையில் இத்திருவிழா நடக்கிறது.

அதேவேளை நாடளாவிய ரீதியிலிருந்து மீண் டும் அனைத்து மக்களும் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெறும் பெருவிழாவாக இது நிகழ்கிறது.

எனினும் எமது மனங்களில் கவலை உள்ளது. இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இத்திருவிழாவில் பங்கு பற்ற முடியாமல் அவர்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளமையே அந்த தந்தயே தனக்குக் காரணம். இம்மக்கள் விரைவாக மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். அதற்காக அன்னையின் ஆசீரை வேண்டி நிற்போம் எனவும் யாழ். ஆயர் மேலும் தெரிவித்தார்.

‘வணங்கா மண்’ நிவாரணப்பொருட்கள் விநியோகிப்பதில் புதிய சிக்கல்:இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தகவல்

containers.jpgசென்னை யிலிருந்து ‘கொலராடோ’ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியகற்றுவதில் புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார். இதன் காரணமாக, புலம்பெயர்ந்த மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்வதில் மேலும் சில தினங்களுக்கு தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். இந்நடவடிக்கை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர்ந்த மக்களால் சேகரித்து அனுப்பப்பட்ட 880 மெற்றிக் தொன் நிறையுள்ள நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கின்றன. இந்த பொருட்களை வவுனியாவுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்காக மிகவும் பிரயத்தனங்களை எடுத்துள்ளோம்.

துறைமுகத்தில் இருந்து பொருட்களை வெளியகற்றுவதற்கான சகல பணிகளும் முடிவடைந்தவுடன் இவ்வார இறுதிக்குள் அவற்றை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். ஆயினும், கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ள பொருட்கள் தொடர்பாக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் பூரணத்துவமானவையாக இல்லை என்பதால் புதிய சிக்கல் தோன்றிள்ளது.

அதாவது, இந்தக் கப்பலில் மருந்துப்பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவை ஏற்றப்பட்டுள்ளதாக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதில் என்னென்ன மருந்துகள் எவ்வளவு அளவில் இருக்கின்றன? என்ன உணவுப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளன? இவை அனைத்தும் பாவனைக்கு உகந்தவையாகவும் தரமானதாகவும் இருக்கின்றனவா? – போன்ற முழுமையான விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் எந்தக் கொள்கலனில் என்ன பொருள் இருக்கின்றது என்ற குறிப்பும் எழுதப்படவில்லை.

எனவே, இப்பொருட்களை வவுனியா மக்களுக்கு விநியோகிப்பதற்கு முன்னர் அவற்றின் தரம் மற்றும் அளவு தொடர்பான தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகச் சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் எமக்கு அறிவித்துள்ளார். ஒவ்வொரு கொள்கலனையும் திறந்து பார்த்து மேற்படி விபரங்களை பெறவேண்டியுள்ளதால் கொழும்பு துறைமுகத்தில் இருந்து பொருட்களை வெளியகற்றுவதற்கு இன்னும் சில தினங்கள் செல்லலாம்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் விட்ட இந்த தவறின் விளைவாக இப்படியொரு புதிய பிரச்சினை தலைதூக்கியுள்ளதுடன் அடுத்த வாரம் நடுப்பகுதியிலேயே நிவாரண பொருட்களை வவுனியாவுக்குக் கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறோம். எவ்வாறிருந்தபோதிலும் இப்பணிகளை முடிந்தளவு துரிதப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சுக்கு சென்று சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பலரிடம் இது விடயமாகப் பேசியுள்ளேன்” என்றார்.

லண்டனிலிருந்து கப்டன் அலி கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ‘வணங்கா மண்’ என்ற பெயரில் இங்கு வந்த கப்பல் நிவாரணப் பொருட்கள், பின்னர் சென்னை துறைமுகத்தில் இறக்கப்பட்டன. அங்கிருந்து கொலராடோ கப்பல் மூலம் மீண்டும் இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, காங்கிரஸ் அலுவலகத்தில் பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம்

கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தியின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில், அதன்மேல் விடுதலைப்புலிகளின் தேசியக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் படம் இருக்கக்  காணப்பட்ட சம்பவத்தால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14 ம் திகதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவத்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு பக்தவத்சலம் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்கிரஸ் கொடி எரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதன் மீது விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் பிரபாகரன் படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா நடைபெறுவதால், தாமதமாக பொலிஸாருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் பொலிஸார் நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடி எரிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவுக்கு 4.78 பில்லியன் டாலர் ஐஎம்எப் உதவி!

பொருளா தார நெருக்கடியைச் சமாளிக்க ஐஎம்எப்பிடமிருந்து சிறப்பு எடுப்பு உரிமை மூலம் 4.78 பில்லியன் டாலர் நிதியைப் பெறுகிறது இந்தியா. உலகம் முழுக்க நிலவும் பொருளாதார மந்தத்தைப் போக்க, 250 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியை வழங்குகிறது ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதி அமைப்பு.

ஐஎம்எப்பில் அதன் உறுப்பு நாடுகள் வைத்துள்ள அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து 74 சதவிகிதம் அளவுக்கு இந்த முறை நிதி உதவி அளிக்கப்படுகிறது. இது தவிர சிறப்பு எஸ்டிஆர் உதவி மூலம் 33 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதற்காக ஐஎம்எப்பின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த இருவித நிதி உதவி மூலம், உலக நாடுகள் மொத்தம் 316 பில்லியன் டாலர்கள் நிதி உதவியைப் பெறுகின்றன. உலகம் முழுக்க பொருளாதார மந்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், உலக நாடுகளின் கூட்டு முயற்சியே இந்த நிலை மாற உதவும் என்பதையும் புரிந்து கொள்ள ஐஎம்எப்பின் இந்த நடவடிக்கை உதவும் என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வவுனியா அகதி முகாம்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி: 3 வது நாளாகவும் கடும் மழை

flood.jpgவவுனி யாவில் நேற்றும் 3 வது நாளாகவும் தொடர்ந்து கடும் மழை பெய்ததினால் அகதி முகாம்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மக்கள் உணவு, குடிநீர் பெறமுடியாமல் அவதியுறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

சுவாமிநாதனுக்கு பதிலாக புதிய விஞ்ஞானிகள் குழு

இலங்கையின் வடகிழக்கில் விவசாய பணிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட எம்.எஸ்.சுவாமிநாதன் மறுத்துவிட்டதை அடுத்து வேறு குழுவை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. போர் நடந்த வடகிழக்கு பகுதியில் விவசாய பணிகளை சீரமைக்கும் நோக்கில் இலங்கை அரசு வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை துவக்க முயற்சித்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு உதவ வேண்டும் என இலங்கை அரசு, இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனை கேட்டு கொண்டது. அவரும் ராஜபக்சேவை சந்தித்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக தமிழ் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில் வடகிழக்கில் தமிழர்களின் துயர் தீரும் வரை அந்த திட்டத்துக்காக நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என எம்.எஸ். சுவாமிநாதன் உறுதியாக கூறிவிட்டார்.

இதையடுத்து தற்போது இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த சில விஞ்ஞானிகளை கொண்ட குழுவை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இலங்கையில் விளைச்சலுக்கான சீசன் துவங்குவதாலும், வட கிழக்கு பகுதியில் கன்னிவெடிகளை அகற்றும் பணி வேகமாக நடந்து வருவதாலும் இந்த குழுவினர் இந்த மாத இறுதியில் இலங்கை செல்வார்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் வடகிழக்கில் மண்ணின் தரம், விவசாய வசதிகள், வானிலை ஆராய்ச்சி போன்றவை தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை தர இருக்கிறார்கள்.

“விடுதலைப் புலிகளின் கதியே மாவோயிஸ்ட்டுகளுக்கு ஏற்படும்’

அரசியல் கருத்தொருமைப்பாட்டை மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்தும் கேலிக்கூத்தாக்குவார்களேயானால் இலங்கையின் விடுதலைப் புலிகள் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆகியோரின் தலைவிதியே மாவோயிஸ்ட்டுகளுக்கும் ஏற்படுமென்றும் நேபாள காங்கிரஸ் தலைவரும் 22 கட்சி கூட்டணியின் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் முன்னாள் மன்னர் கயநேந்திராவின் நிலைமையே தற்போது நேபாளத்தின் மாவோயிஸ்ட்டுகளின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் 2 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிரிஜா பிரசாத் கொய்ராலா மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.

2008 ஜனவரி 2 இல் பிரசண்டாவின் ஒலிப்பதிவு நாடா பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதன்மூலம் மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக எமது சர்வதேச நண்பர்கள் கொண்டிருந்த இணக்கப்பாட்டை மாற்றிக்கொண்டனர். நாங்கள் கருத்தொருமைப்பாட்டு அரசியலில் இணைந்து கொள்ளுமாறு மாவோயிஸ்ட்டுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவர்கள் இதுவரை அதனை நிராகரித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து செய்வார்களேயானால், துரதிர்ஷ்டவசமாக அவர்களின் தலைவிதி இலங்கை தமிழ்க் கிளர்ச்சியாளர்களின் நிலைமையை ஒத்ததாக அமையும்.

மாவோயிஸ்ட்டுகளோடு கருத்தொருமைப்பாடு , ஒத்துழைப்பு, ஐக்கியம் என்பனவற்றை உள்ளடக்கிய அரசியலைக் கொண்டுவருவதற்கு நான் காலத்திற்கு காலம் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தேன். பிரசண்டாவுடன் ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயற்சித்து வந்தேன். அவரின் இரட்டைத் தனமான பேச்சும் இரட்டைத்தனமான தன்மையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கருத்தொருமைப்பாட்டு அரசியலை உடைப்பதாக அது உள்ளது என்று கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறியதாக நேபாள ரெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.