“விடுதலைப் புலிகளின் கதியே மாவோயிஸ்ட்டுகளுக்கு ஏற்படும்’

அரசியல் கருத்தொருமைப்பாட்டை மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்தும் கேலிக்கூத்தாக்குவார்களேயானால் இலங்கையின் விடுதலைப் புலிகள் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆகியோரின் தலைவிதியே மாவோயிஸ்ட்டுகளுக்கும் ஏற்படுமென்றும் நேபாள காங்கிரஸ் தலைவரும் 22 கட்சி கூட்டணியின் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் முன்னாள் மன்னர் கயநேந்திராவின் நிலைமையே தற்போது நேபாளத்தின் மாவோயிஸ்ட்டுகளின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் 2 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிரிஜா பிரசாத் கொய்ராலா மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.

2008 ஜனவரி 2 இல் பிரசண்டாவின் ஒலிப்பதிவு நாடா பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதன்மூலம் மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக எமது சர்வதேச நண்பர்கள் கொண்டிருந்த இணக்கப்பாட்டை மாற்றிக்கொண்டனர். நாங்கள் கருத்தொருமைப்பாட்டு அரசியலில் இணைந்து கொள்ளுமாறு மாவோயிஸ்ட்டுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவர்கள் இதுவரை அதனை நிராகரித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து செய்வார்களேயானால், துரதிர்ஷ்டவசமாக அவர்களின் தலைவிதி இலங்கை தமிழ்க் கிளர்ச்சியாளர்களின் நிலைமையை ஒத்ததாக அமையும்.

மாவோயிஸ்ட்டுகளோடு கருத்தொருமைப்பாடு , ஒத்துழைப்பு, ஐக்கியம் என்பனவற்றை உள்ளடக்கிய அரசியலைக் கொண்டுவருவதற்கு நான் காலத்திற்கு காலம் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தேன். பிரசண்டாவுடன் ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயற்சித்து வந்தேன். அவரின் இரட்டைத் தனமான பேச்சும் இரட்டைத்தனமான தன்மையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கருத்தொருமைப்பாட்டு அரசியலை உடைப்பதாக அது உள்ளது என்று கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறியதாக நேபாள ரெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *