அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பிரித்தானியா செல்லும் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு விசா வழங்கும் நடை முறையில் இன்று முதல் மாற்றம் கொண்டு வரப்படுகின்றது என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.  குறிப்பாக பிரிட்டனுக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் வங்கிக் கணக்கில் காட்டவேண்டிய பணத்தொகை சம்பந்தமான விடயங்களில் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இம்மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 28 நாள்களுக்கு முன்பாக தமது வங்கிக் கணக்கில் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் வங்கிக் கணக்கில் குறித்த பணத் தொகையைக் கட்டாயம் வைப்பிலிட்டிருக்க வேண்டும் என இம்மாற்றத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு அமைவாக வங்கியில் பணம் வைப்புச் செய்திருக்கும் விண்ணப்பதாரி மாணவர்கள் வங்கி அறிக்கைகள் மூலமாகவோ அல்லது வேறு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்கள் மூலமாகவோ அதனை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்

011009army_exhibition1.jpgஇலங்கை இராணுவத்தின் பவள விழாவை முன்னிட்டு கொழும்பு,  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ள இராணுவக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. கண்காட்சி ஏற்பாடுகளை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் புலிகளுடனான யுத்தத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் புலிகளுக்கெதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றின் வீடியோக் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன.

இராணுவத்தின் வளர்ச்சி,  முன்னேற்றம் பற்றிய தகவல்கள், புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றனவும் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி முடிவடையவுள்ளது.  இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமினி பொன்சேகாவின் உருவச்சிலை திரை நீக்கம்

0110009gamini.jpgகாலஞ் சென்று பிரபல சிங்கள திரைப்பட நடிகர் காமினி பொன்சோகாவின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கின் முன்பாக திரை நீக்கம் செய்து வைத்தார் அமைச்சர்களான மேவின் சில்வா,  ஜீவன் குமாரதுங்க,  மற்றும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா உட்பட பல அரசியல் வாதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ரவீந்திர ரன்தெனிய,  மாலனி பொன்சேகா,  உட்பட பிரபல சினிமாக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்

காமினி பொன்சேகா மன்றம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா,  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபே குணவர்தன, மற்றும் சிங்கள சினிமா கலைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
 

கல்வி நிருவாகச் சேவை நியமனங்கள்!

இலங்கை கல்வி நிருவாகச் சேவையில் நிலவும் மூன்றாம் வகுப்பு தரத்திலான அதிகாரிகளின் வெற்றிடங்களுக்காக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நிமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறு 225 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குத் தகுதியானவர்கள் வரையறுக்கப்பட்ட மற்றும் பகிரங்கப் போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 9 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணக்கிராமங்கள் – உறவினர்களை பொறுப்பேற்க புதிய விண்ணப்பபடிவம்

Wanni IDPsநிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு ஏதுவாக வவுனியா மாவட்டத்திற்கென புதிய விண்ணப்பப் படிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் மாதிரி விண்ணப்பப்படிவம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யுமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ.எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

விண்ணப்பப்படிவங்களை பொறுப் பேற்பதற்கென வவுனியா அரச அதிபர் அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளரின் அலுவலகத்துக்கு முன்னால் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் வழிகாட்டலு டன் அரச அதிபர் அலுவலகம் இப் புதிய விண்ணப்பப்படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளி மாவட்டங்களிலுள்ளவர்கள் முன்பு போன்றே விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களின் உரிமைகளை ஒழித்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி – சிறுவர்தின செய்தியில் ஜனாதிபதி

290909mahinda.jpgசிறுவர்களை ஆயுதமேந்தவைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்த யுகத்துக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மூன்று தசாப்த கால பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த இலங்கையர்கள் என்ற பெருமையுடன் இம்முறை உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த பயங்கரவாதத்தினால் எமது நாட்டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களுமே. எமது பிள்ளைகளின் வாழ்விடங்களும் இல்லாதொழிந்தன.

படைவீரர்கள் தமது உயிரைப் பலியாக்கி வெற்றிகொண்ட தேசத்தினை நமது பிள்ளைகளுக்காகக் கட்டியெழுப்பு வது நமது பொறுப்பாகும். சகல சிறுவர்களுக்கும் அன்பு, பாதுகாப்பு, அரவணைப்புடன் சிறந்த எதிர்கால மொன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பெரியவர்களான நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘வெற்றிபெற்ற தேசத்தை சிறார்களுக்காக கட்டியெழுப்புவோம்’ என்ற தொனியில் இம்முறை உலக சிறுவர் தினம் அனுஷ் டிக்கப்படுகிறது. இதற்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் மற்றும் வறுமை என்பன சிறுவர் முன்னேற்றத்தில் பெரும் தடையாகவுள்ளன. பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல் இந்த சவாலையும் வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் எனவும் ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியா, பசுபிக்தீவில் பூகம்பம் 13 அடி உயரத்திற்கு மேல் சுனாமி அலை

300909samova_tsunamy.pngபசுபிக் பெருங்கடலிலுல், இந்தோனேசியாவின் தென் பகுதிக் கடலிலும் பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 113க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் உள்ள சமோவோ தீவில் 8.3 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் இலங்கை நேரப்படி நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இலங்கை நேரப்படி நேற்றுப் பிற்பகல் 3.46 இற்கு பத்தான் நகருக்கு அருகில் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இது கொழும்பிலிருந்து 2380 கிலோ மீற்றர் தொலைவில் இலங்கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. 85 கிலோ மீற்றர் கடல் ஆழத்திலேயே இந்தப் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

பூகம்பத்தினால் 10 நிமிடங்கள் வரை அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியால் இலங்கையிலும் கரையோரப் பிரதேசங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பி.ப. 4.10 மணி அளவில் இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், 5.10 மணி அளவில் வாபஸ்பெறப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நியூசிலாந்துக்குக் கிழக்கே இருக்கும் இந்தக் குட்டித்தீவின் தென் கிழக்கே 120 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நில அதிர்வு 8.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்தது.

கடலோரத்தில் உள்ள பகுதிகளில் இராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. சில உடல்கள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. மண்ணுக்குள் பலர் புதைந்திருக்கலாம் என்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

சுனாமி அனர்த்தத்தால் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு விமானப் படையினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சி 130 விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ போய்ச் சேர்ந்தன.

இதேவேளை, டொங்கன் தீவில் 13 அடி உயரத்திற்கும் கடல் அலைகள் மேலெழும்பி யதாகவும் இதில் ஐந்து பேர் பலியானதாகவும் நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்தது.

ஜப்பானில் சூறைக்காற்று

இதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பாடசாலைகள் மூடப்பட்டதுடன் மீனவர்கள் கரைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. ஜப்பானில் சூறைக்காற்று வீசியதுடன், கடும் மழையும் பெய்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் பூகம்பம்

அதேநேரம், நேற்றுப் பிற்பகலில் இந்தோனேஷியா, இந்தியா, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் 7.9 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக வானிலை அவதானமையம் அறிவித்தது. எனினும், பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நியூசிலாந்து அரசாங்கம் இந்தச் சுனாமியின் தாக்கம் இங்கும் உணரப்பட்டதாக அறிவித்துள்ளதுடன் ஐந்து பேர் இதில் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதேசம் முழுதும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்களை விளிப்புடன் இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. சமோவோத் தீவில் கடல் பாரிய இரைச்சலுடன் குமிறியதாகவும் மலை போன்ற உயரத்தில் கடல் அலைகள் எழும்பியதாகவும் அறிவிக்கப்பட்டது.

காணாமல் போனோரைத் தேடும் பணிகள் முடிவடைந்த பின்னரே உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கையை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் தெரி வித்துள்ளனர். மீட்கப்பட்ட பிரேதங்கள் பொது இடங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. சொந்தங்களை இழந்தோரின் விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

மலையகச் சிறுவர்களை கொழும்பில் வேலைக்கமர்த்தும் தரகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

மலையக சிறுவர், சிறுமியரை கொழும்புக்கு வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி தெரிவித்தார்.

இவ்வாறான தரகர்களைக் கண்டறிவதற்கென குழுவொன்றை நியமித்துச் செயற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

அதேநேரம் மலையகத்திலிருந்து பெண்பிள்ளைகளைப் பிற இடங்களுக்கு வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்ல முயற்சிப்போர் குறித்த தகவல்களைப் பொது மக்கள் பெற்றுக்கொடுத்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மஸ்கெலியாவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை (02) நடைபெறுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த யுவதிகளின் குடும்பத்தவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, சிலர் அறிக்கைகளை வெளியிட்டதோடு அந்த யுவதிகளின் பிரச்சினையைக் கைவிட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் பணிப்பெண்களாகக் கட மையாற்றிய மஸ்கெலியாவைச்சேர்ந்த இரண்டு யுவதிகள், கறுவாதோட்டம் கழிவு நீரோடைப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பெற்றோர் முறைப் பாடு செய்ததையடுத்து சடலங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யுவதிகளின் தாயாரை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2009: சிறுபோக நெல்கொள்வனவுக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – 70,000 மெ. தொ. நெல்லை கொள்வனவு செய்ய திட்டம்

190909paddy.jpg2009 சிறுபோக நெல் கொள்வன வுக்கென அரசாங்கம் 2,000 மில் லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் இதன் மூலம் 70, 000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க நாட்டரிசி நெல் ஒரு கிலோவை 28 ரூபாவிற்கும் சம்பா ரக நெல்லை கிலோ 30 ரூபா வாகக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறுபோக அறுவடை இடம்பெற்று வருவதால் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவை, அனுராதபுரம் மாவட்டங்கள் உட்பட கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இக்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து வலயங்களாக இப்பிரதேசங்கள் கணிக்கப்பட்டு இவற்றிலி ருந்து 70, 000 மெற்றிக் தொன் நெல் இம்முறை கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்கான சகல நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதுடன் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக இக்கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இதுவரை 10,000 மெற்றிக் தொன் நெல் மேற்படி சபையினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொலனறுவையில் 4, 200 மெற்றிக் தொன்னும், அனுராதபுரத்தில் 350 மெற்றிக் தொன்னும் வட மேல் மாகா ணத்தில் 2400 மெற்றிக் தொன்னும் கிழக் கில் 2800 மெற்றிக் தொன்னும் தெற்கில் 1,000 மெற்றிக் தொன்னும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் சிறுபோக நெல் கொள்வனவு இடம்பெறும் இவ்வேளையில் 2008, 2009 பெரும்போக நெல் கொள்வனவின் மூலம் பெறப்பட்ட நெல்லை சந்தையில் விற்பனைக்கு விட நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிணங்க 15,000 மெற்றிக் தொன் நெல்லை விற்பனை செய்யத் தீர்மானிக் கப்பட்டுள்ளது. பொலனறுவைக்கு 7,000 மெற்றிக் தொன், கிழக்கு மாகாணத்துக்கு, 7,000 மெற்றிக் தொன், வட மேல் மாகாணத்திற்கு 1,000 மெற்றிக் தொன் என, இவ்விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஏழு ஆபிரிக்க நாடுகளுடன் வெனிசூலா ஒப்பந்தம் கைச்சாத்து

நிலக்கரி அகழ்தல் ஒப்பந்தத்தில் ஏழு ஆபிரிக்க நாடுகளுடன் வெனிசூலா ஒப்பந்தம் செய்துள்ளது. வெனிசூலாவில் நடந்த ஆபிரிக்க தென்னமெரிக்க நாடுகளின் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

முரிட்டானியா, மாலி நைகர், சிராலியோன், தென்னாபிரிக்கா, அங்கோலா, தன்சானியா ஆகிய நாடுகளுடனே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. ஆபிரிக்க நாடுகளிலுள்ள எண்ணெய், எரிவாயு, இரும்பு ஆகிய மூலப் பொட்களை அகழ்தல் ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட வேலைகளில் வெனிசூலாவின் கம்பனிகள் ஈடுபடவுள்ளன.

அமெரிக்க மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கெதிராக மாற்று அணியொன்றை உருவாக்கும் திட்டம் பற்றியும் இம்மாநாட்டில் பேசப்பட்டது. நாணயம், இராணுவம் வங்கி உள்ளிட்ட முக்கிய விடயங்களை தென்னமெரிக்க ஆபிரிக்க நாடுகளிடையே பொதுவான அமைப்பொன்றின் கீழ் கொண்டுவரவும் இந்நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளின் உருக்குத் தொழில் இரும்பு, நிலக்கரி அகழ்வுத் தொழில்கள் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றும் பங்களிப்புகளை வெனிசூலாவின் அறிக்கை குறைவாக மதிப்பிட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.