அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தோட்ட தொழிலாளருக்கு இன்று விசேட விடுமுறை – அமைச்சர் ஆறுமுகன்

தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்று வியாழக்கிழமை வாக்களிப்பதற்கு விசேட விடுமுறை வழங்கப் பட்டுள்ளது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தமது வாக்கினை பதிவு செய்யுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; இறுதி நேர நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு காலையிலேயே வாக்காளர்கள் தத்தமது வாக்குச்சாவடிகளுக்கு சென்று தமது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு வாக்களிக்கும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். வாக்களித்த பின்னர் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியும்.

அவ்வாறு வேலைக்குச் சென்ற பின்னர் தொழிலாளர்களுக்கு தோட்டத் நிருவாகம் வேலை வழங்க மறுப்புத் தெரிவித்தாலோ, அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மறுப்புத் தெரிவித்தாலோ, உடனடியாக இ. தொ. கா. தலைமை காரியாலயம், கிளைக் காரியாலயம் அல்லது என்னுடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்க்கூட்டமைப்பை தோற்கடிக்க முயற்சிப்பது பகல் கனவு; இமாம்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன் தலைமையில் பெரு வெற்றியோடு வந்து அமரும் எனக்கூறிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இமாம், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பகற்கனவாகவே முடியும் என்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த அரசாங்கம் எதற்காக மாதாமாதம் அவசரகால பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எது எப்படியிருந்தாலும எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்க இருக்கின்ற வேளையில் ஒரு சில உண்மைகளை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும். கடந்த மே மாத இறுதியில் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இலகுவாக தமிழ்மக்களின் பிரச்சினையைத் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால், ஜனாதிபதி, தான் ஜனாதிபதித் தேர்தலின் பின்புதான் இப்பிரச்சினையை பேச இருக்கின்றேன் என்று வெளிப்படையாகக் கூறினார். ஆனால்,ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பு தற்போது வேறொரு விதமாக ஜனாதிபதி தான் இந்த பொதுத்தேர்தலின் பின்பு வடகிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற புது முகங்களோடு இப்பிரச்சினையை பேசித்தீர்க்க இருக்கிறேன் என்று கூறி வருகின்றார்.

இந்த வேளையில் நான் சார்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக ஒரு உண்மையைச் சொல்ல ஆசைப்படுகின்றேன்.இத்தேர்தலில் வடகிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் ஏக மனதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தலைவர் சம்பந்தன் தலைமையில் பாராளுமன்றம் அனுப்ப இருக்கின்றனர். எனவே, ஜனாதிபதி தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் இதய சுத்தியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச முன்வரவேண்டும். அதற்கு எமது தலைமைத்துவம் தயார். அடுத்து இத்தேர்தலில் எமது கட்சியை எவ்வகையிலேனும் தோற்கடிக்க வேண்டுமென்று பலவித யூகங்கள் வகுத்து ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால், இவை யாவும் பகற்கனவாகவே முடியும்.

எமது தலைவர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று அமோக வெற்றி அடைவதும் உண்மை.எங்களுக்கெதிராக செயற்படுகின்ற சக்திகள் வாக்காளர்களுக்கு தையல் மெஷின்களையும் சைக்கிள்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வாக்குச் சேகரிப்பதற்கு முனைகின்றார்கள்.

எமது கட்சியை நோக்கி பலவிதமான இடையூறுகள் இத்தேர்தலில் விளைவிக்கப்படுகின்றது. அரியநேத்திரனின் ஊர்வல பேரணி மீது விஷமிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதேவேளையில், வடகிழக்கில் எந்தத்தேர்தல் தொகுதியிலும் எமது கட்சியினர் ஒரு சிறு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து எந்தவித முறைப்பாடுகளும் இல்லை என்பதைக் கூறிக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்

pr.jpgகலைக் கப்பட்டுள்ள 6 ஆவது பாராளுமன்றம் சில விசேட விடயங்களை நிறைவேற்றும் நோக்கில் நேற்று மீண்டும் கூடிய போது திடீரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமுகமளித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்ற ஜனாதிபதி. அங்கிருந்து கொண்டு அவசர காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான போசனசாலைக்கு சென்ற ஜனாதிபதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சுமுகமாக பேசிக் கொண்டே பகல் உணவை உண்டார். பாராளுமன்றத்தின் உத்தியோகத்தர்களுடன் பேசவும் அவர் தவறவில்லை.

வவுனியா இரவு தபால் ரயில் கல்கமுவவில் தடம்புரண்டது

கொழும்பு கோட்டையிலிருந்து திங்கட்கிழமை இரவு வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு தபால் ரயில் கல்கமுவவுக்கும் செனத்கமுவவுக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளது.

இச் சம்பவத்தால் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், திருத்த வேலைகள் நடைபெறுவதாகவும் ரயில்வே பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவத்தால் நேற்று கொழும்பிலிருந்து வவுனியா அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் கல்கமுவவரையும் நடைபெற்றன.

அண்மைக் காலங்களில் இந்தப் பாதையில் ரயில்கள் அடிக்கடி தடம்புரள்வதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் கால ரயில் பாதை அமைப்பே இதற்கு காரணம் எனவும், ரயில் பாதைகள் புனரமைக்கப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய எம்.பி.க்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாதென சபாநாயகர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக நியமித்துள்ள இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது தொடர்பில் ஆளுந்தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கிடையே சுவாரஸ்யமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சுமார் ஒரு மணித்தியாலமாக வாதங்கள் நீடித்த போதிலும் புதியவர்களை சத்தியப் பிரமாணம் செய்வதற்குக் கடைசிவரை இடமளிக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காகவென நேற்றைய தினமும் பாராளுமன்றம் இரண்டாவது தடவையாகக் கூட்டப்பட்டது. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் காலை 9.30ற்கு ஆறாவது பாராளுமன்றத்தில் இறுதி அமர்வு கூடியது.  அப்போது, முதலில் தமது புதிய உறுப்பினர்களுக்குச் சத்தியப்பிரமாணம் செய்ய இடமளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார். அதன்போது அதற்கு இடமளிக்க முடியாது என்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது உறுப்பினர்களாக இருந்தவர்கள் மாத்திரமே விசேட அமர்வில் பங்கேற்க முடியுமென்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“கலைக்கப்பட்ட பாராளுமன்றம் அதி முக்கியமான ஒரு விசேட அம்சத்துக்காகப் கூட்டப்பட்டிருக்கிறது. அதாவது அவரசகாலச் சட்டத்தைத் தவிர்ந்த வேறு எந்த விடயமும் இடம்பெற முடியாது. எனவே, புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. அரசியல் அமைப்பில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று விவாதத்தை முடுக்கிவிட்டார் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். அப்படியானால், 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர். எனவே, பாராளுமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது” என்று வாதிட்டார் ஜோசப் மைக்கல் பெரேரா. விவாதத்தில் இணைந்துகொண்ட சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, “இது தொடர்பில் சட்ட மா அதிபரிடமும் ஆலோசனை பெற்றிருக்கிறோம்.

புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. இன்று பாராளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் நேற்றிரவு ஒருவர் இறந்துவிட்டால், அந்த உறுப்பினருக்குப் பதிலாகப் புதியவரை நியமிக்க அவகாசம் இருக்கிறதா?” என்று ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேள்வி எழுப்பினார்.

நான் இறந்தவர்களைப் பற்றிப் பேசவில்லை. உயிருடன் இருப்பவர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்” என்று பதில் கொடுத்தார் பெரேரா. இவ்வேளையில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “அவர்கள் இருவரும் ஏற்கனவே வர்த்தமானிப் பத்திரிகை மூலம் எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் சம்பிரதாயமாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள இடமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு முக்கியமான வாக்கெடுப்பில் பங்கெற்பதற்கு அவர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்படுவதாகும்” என்றார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேராசிரியர் பீரிஸ் மீண்டும் தெரிவித்ததுடன், அவ்வாறான ஒரு நிலை இந்த விசேட அமர்வில் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இதன் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, “இந்த விடயத்தைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தேன், அவர் எனக்குப் பதில் எழுதாமல், என் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்” என்றார். என்றாலும், அதனை நிராகரித்த சபாநாயகர், கடந்த அமர்வில் இணங்கிக்கொண்டதற்கு அமையவே இன்றைய பணிகள் நடைபெறுகின்றன என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோரின் வெற்றிடத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.பண்டாரநயாக்க, அநுர கொபல்லாவ ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டிருந்தது.

வாக்குச்சீட்டில் புள்ளடியிட இம்முறை விசேட பேனா பயன்படுத்தப்படும்

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதற்கு விசேட பேனாவை பயன்படுத்த தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பென்சில் மூலமே வாக்காளர்கள் தமது வாக்கை (புள்ளடியிடுதல்) செலுத்திவந்தனர்.

பென்சில் மூலம் புள்ளடியிடுவதால், அந்த வாக்குச்சீட்டில் அதனை அழித்தும் வேறு மோசடிகளும் இடம்பெறுவதாக அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தல்கள் திணைக்களத்துக்கு முறையிட்டிருந்தன.அதனால் பேனா மூலம் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தன.

இதனையடுத்து பேனா மூலம் வாக்குச்சாவடியில் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பென்சில் மூலம் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்டால் அது நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வாக்களிப்பவருக்கு விரலில் இடப்படும் மையின் நிறமும் வேறுபட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்லறையிலிருந்து பயங்கரவாதம் மீண்டும் உயிர்த்தெழ இடமளியோம் – பிரதமர்

pm.jpgநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அவசரகாலச் சட்டத்தில் எந்தெந்த சரத்துக்களை நீக்குவது என்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி தினத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேர¨ணை சமர்ப்பிக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கோரும் இறுதிச் சந்தர்ப்பமாக இருப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்புமாகும். கடந்த காலங்களில் இந்த எதிர்பார்ப்பு எமக்கு இருந்து வந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருந்தது. இதனாலேயே தொடர்ந்தும் இந்த கோரிக்கையை முன்வைக்க நேர்ந்தது எனவும் பிரதமர் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நேற்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடிய போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :- கடந்த காலங்களில் இந்தச் சபையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் சபையில் ஆதரவு கிடைத்தது. இதனூடாக கிடைத்த சட்ட அதிகாரத்தினூடாக நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் நாடும் மக்களும் நன்மையடைந்துள்ளார்கள். எனினும் சிலர் குற்றம் சாட்டுவது போன்று நாம் அவசரகாலச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததில்லை. எமக்கு அவ்வாறானதொரு தேவை இருக்கவில்லை. பிறந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையை பெற்றுக் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றித்தான் சிந்தித்தோம்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததும் அதனூடாக நாட்டுக்கு கீர்த்தி கிடைத்ததும் இதனால்தான். சிலர் அதனை இன்று மறந்துவிட்டனர். அதனால்தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னமும் ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின் றன. வெடிகுண்டுகள் கைப்பற்றப்படுகிள்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறான ஆயுதங்கள் சிலரது கைகளில் கிடைக்க வழிவகைகள் செய்யப்படக்கூடாது. இந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் மனதிலுள்ள அச்சத்தை போக்கவேண்டும். இதனை செய்து முடிப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமின்றி அதற்கு ஆதரவு வழங்குபவர்கள் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

புலிகளுக்கு துணை போகின்ற சிலர் புலிகளின் தலைவர் மீண்டும் வரப் போகிறார் என தெரிவித்துள்ளனர். இவர்கள் இதனை எவ்வாறு செய்ய முயல்கிறார்களோ தெரியவில்லை. எனினும் பயங்கரவாதத்தை கல்லறையிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதேபோன்று பொதுமக்களை பயங்கரவாதத்தின் பால் தள்ளிவிடுவதற்கும் நாம் தயாரில்லை. நாம் இவ்வாறு செயற்பட்டாலும் பயங்கரவாதத்தை போஷிக்கின்ற சக்திகள், துணை போகின்ற சக்திகள் எமது நாட்டில் இல்லாமலில்லை.

அண்மையில் அமெரிக்காவிலும் இதுபற்றி எச்சரிக்கையும் விடுத்திருந்தார்கள். மும்பாய் தாக்குதலுக்கு உரிமைகோரும் அமைப்பொன்று தெற்காசிய வலயத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது. வங்காளதேசம், நேபாளம், மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த பயங்கரவாதத்தின் நிழல்கள் பரவி வருகின்றமையும் தெரிய வந்துள்ளது. அத்துடன் புலிகளின் நிழல்களும் தமிழ் நாட்டுக்குள் உலவி வருவதாக இந்திய பாதுகாப்பு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இவற்றை மிக எளிதானதாக எடுத்துக்கொள்ள முடியாது. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல ‘பயங்கரவாதம்’ என்ற சொல் அகராதியிலிருந்தே நீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமது உரிமைகளை அனுபவித்து வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.

அவசரகாலச்சட்டம் 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் கிடைத்தன. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரும், ஜே.வி.பி. எம்.பிக்கள் இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி அவசரகாலச்சட்டம் மீதான பிரேரணையை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சமர்ப்பித்துப் பேசினார்.

மதுபானக்கடைகள் பூட்டு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளையும், நாளை மறுதினமும் மதுபான கடைகளை மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளிலும் மதுபான கடைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கிறது.

9 ஆம் திகதி அரச, வங்கி விடுமுறை

எதிர்வரும் 9 ஆம் திகதி அரச மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.

எனவே, அரச கூட்டுத்தாபனங்களின், நியதிச் சபைகளின் தலைவர்கள், மற்றும் தொழில் தருநர்கள் அனைவரையும், தங்களது அனைத்து ஊழியர்களுக்கும் 2010ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குமாறு தொழிலமைச்சர் அதாவுத செனவிரட்ன கேட்டுள்ளார்.