::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

வன்முறையுடன் முடிந்தது முதல் கட்ட தேர்தல்- 17 பேர் பலி

india-election.jpgஜார்க் கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் பெரும் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் முதல் கட்ட தேர்தல் வன்முறையுடன் முடிந்தது. 124 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நக்சலைட்கள் தங்களது கைவரிசையை சற்று பலமாகவே இன்று காட்டி விட்டனர்.

சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 17 பேர் உயிரிழந்தனர்.

கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தேர்தல் அமைதியாக நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பீகாரிலும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. இங்கு குறைந்த அளவிலான வாக்குப் பதிவே இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. இரு்பினும் கேரளாவில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

நக்சலைட்டுகள் ஆதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் 3 மணியளவிலேயே வாக்குப் பதிவு முடிந்து விட்டது. பிற தொகுதிகளில் 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது. முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடரும் செருப்பு கலாசாரம் – அத்வானி மீதும் செருப்பு வீச்சு

advanil000.jpgபாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார். கத்னி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால்,  அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை. பிடிக்காதவர்கள் மீது ஷூ,  செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி விட்டது. ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசப்பட்டது போல இப்போது இந்தியத் தலைவர்கள் மீதும் ஷூக்கள் வீச்சு தொடர் கதையாகியுள்ளது.

முதலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஷூ வீசினார், இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் நவீன் ஜிந்தால் மீது ஒரு முதியவர் செருப்பை வீசினார். இப்போது அத்வானி மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ப.சிதம்பரம் மீது காரைக்குடியில் உருட்டுக்கட்டை வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி செயல்படுகிறார்:பழ.நெடுமாறன்

neduma2.jpgஇலங்கை அதிபர் ராஜபட்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்பேரில் தவறான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதால் தான் இலங்கைப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என்று கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கை : “போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபட்ச கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்துவருகிறார்.

ஆனால் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகமே என்பது நிரூபணமாகிவிட்டது. ஈழத் தமிழர்களை ராஜபட்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன்” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன்- வைகோ

india-election.jpgமதிமுக பொதுச்செயலாளர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியி தான் போட்டியிடும் விருதுநகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘’என்னை தேர்ந்தெடுத்தால் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து, இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன். இதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை கைது செய்தால் மக்கள் எனக்காக ஓட்டுக்கேட்க வேண்டும். இலங்கை தமிழருக்காக என் மீது தொடங்கப்பட்ட வழக்கு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வைகோ ஆரம்பத்தில் இருந்தே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது அவர் பேசியதில் தவறில்லை” என்று எனக்காக குரல் கொடுத்துள்ளார். இதுதான் நட்பு; தோழமை. மக்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது கோபத்தில் உள்ளனர். அதனால் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்று பேசினார்.

அமெரிக்காவில் தொழில் உற்பத்தி குறைந்துள்ளது

_car2.jpgஅமெரிக்காவில் ஆலைத் தொழில் உற்பத்தி அளவு, கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத மிகவும் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ அமெரிக்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவந்த உற்பத்தி கடந்த மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் உபயோகிப்பாளர்கள் செலுத்திய விலைகளும் தொடர்ந்து சரிவைக் கண்டன. கடந்த ஆண்டைவிட 4 விழுக்காடு அதிகமாக சரிவைக் கண்ட விலைகள், கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத முதலாவது வருடாந்திர விலை வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் ஆழ்ந்த மந்த நிலையிலேயே இருக்கிறது என்றும் அதிபர் ஒபாமா குறிப்பிட்ட நம்பிக்கைச் சுடர் மிகவும் பரீட்சார்த்த நிலையிலேயே இருக்கிறது என்பதனையே இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் முதல்கட்ட வாக்களிப்பு இன்று

india-election.jpgபாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் 124 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்தன.

நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 16ம் திகதி இன்றும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் திகதியும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் திகதியும், 4ம் கட்ட தேர்தல் மே 7ம், திகதியும் 5ம் கட்ட தேர்தல் மே 13ம் திகதியும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13ம் திகதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் கேரளா, ஆந்திரா உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த 124 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்தில் 22, கேரளாவில் 20, உத்தரப் பிரதேசத்தில் 16, மராட்டியத்தில் 13, பீகாரில் 13, சத்தீஷ்காரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பா. ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

ரயில்வே மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநிலம் சரண் தொகுதியில் முதல் கட்டத் தேர்தலை சந்திக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில், பா. ஜனதா தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி (வாரணாசி), யோகி ஆதித் யநாத் (கோரக்பூர்), காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி மகாவீர் பிரசாத் (பஸ்கான்), சமாஜ்வாடி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஞ்சேகர் (பல்லியா) ஆகியோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

முதல் கட்டத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில, மத்திய பொலிஸ் படையினருடன் பதற்றம் நிறைந்த மற்றும் நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் துணை இராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 124 தொகுதிகளிலும் மொத்தம் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 122 வேட்பாளர்கள் பெண்கள். அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் தொகுதியிலும் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் தொகுதியிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

முதல் கட்ட பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் 154 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரிசா மாநிலத்தில் 70 சட்ட சபைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கடற்கொள்ளையை எதிர்த்து உலகம் உறுதியுடன் செயல்பட சோமாலியா கோரிக்கை

somaliya-robbery.jpgஆப்பிரிக்க முனை வழியே பயணம் செய்யும் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை சம்பவங்களை எதிர்த்து அனைத்துலக சமூகம் உறுதியுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சோமாலியாவின் பிரதிநிதி கேட்டுள்ளார்.

இந்த கடற்கொள்ளையர்களுக்கு நிதியுதவி வழங்கி, பின்னணியில் இருந்து இயக்கி வரும் சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்றும் கண்டிக்க வேண்டும் என்றும் சோமாலியத் தூதர் ஐக்கிய நாடுகள் சபைபில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் மட்டும் சோமாலிய எல்லையை அண்மித்த கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

சோமாலியாவின் தென்புறத்தே, பிரான்ஸின் போர்க்கப்பல்களில் ஒன்று, கென்யாவின் கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் 11 பேரை கைப்பற்றியுள்ளதாகவும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கைப் பிரச்சனையை முன் வைத்து தேர்தலை புறக்கணிக்க சரத் திட்டம்?

sarath-kumar.jpgஇலங்கைப் பிரச்சனையை முன் வைத்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கட்சியுடனும் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியுடனும் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால், சரத்குமார் திடீரென மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பாஜகவை கழற்றிவிட்டார். கார்த்திக் பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதனால் இந்த இருவரையும் விட்டு விட்டு தனித்துப் போட்டி என பாஜக அறிவித்துவிட்டது.

இந் நிலையில் சரத்குமார்-கார்த்திக் கூட்டணி அமைக்கலாம், இருவரும் இணைந்து மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த இருவரும் இல்லாமலேயே இன்று புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகியவை இணைந்து புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்கிவிட்டன. இதில் சரத்குமாரையும் சேர்க்க இந்தக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் முயன்று வருகின்றன.

இந் நிலையி்ல் சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனை குழுக் கூட்டம் அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைபாடு குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு முழு அதிகாரமும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் முதலில் கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும், பின்னர் தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று கூறியதாகத் தெரிகிறது. மாவட்ட நிர்வாகிகளையே நியமிக்காமல் தேர்தலில் போட்டியிடுவது வேஸ்ட் என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இலங்கையில் நடக்கும் தமிழர் படுகொலையை கண்டித்து தேர்தலையே புறக்கணிக்கலாம் என்றும் கட்சியின் சில தலைவர்களும் யோசனை கூறியுள்ளனர். இதையடுத்து தேர்தலை புறக்கணிப்பதா அல்லது சில தொகுதிகளில் ம்டடும் போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதா என்பதை சரத்குமார் இன்றோ நாளையோ அறிவிப்பார் என்று தெரிறது.

ஈரோட்டை திரும்பக் கேட்கும் அதிமுக – மதிமுக கடும் அதிருப்தி

jayalalitha.jpgஈரோட்டைத் திரும்பத் தருமாறும், அதற்குப் பதில் மத்திய சென்னையை எடுத்துக் கொள்ளுமாறும் மதிமுகவிடம் அதிமுக கூறியுள்ளதாம். இதனால் வைகோ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக அதிமுக, மதிமுக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தல் முதலே அதிமுகவுடன் இருந்து வருகிறார் வைகோ. ஆனால் லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் மதிமுகவை எவ்வளவுக்கெவ்வளவு ஓரம் கட்ட முடியுமோ அவ்வளவும் செய்து விட்டார் ஜெயலலிதா.

கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த பாமகவுக்கு அது கேட்ட 7 தொகுதிகளையும் தூக்கிக் கொடுத்து உடன்பாட்டை முடித்தார் ஜெயலலிதா. ஆனால் மதிமுக விவகாரத்தில் அப்படியே தலைகீழ். அவர்கள் கேட்டது ஆரம்பத்தில் 7 தொகுதிகள். ஆனால் ஜெயலலிதா சொன்னது 3 தொகுதிகள் மட்டுமே என்று.

இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீண்டு கொண்டே வந்தது. இறுதியில், கிட்டத்தட்ட 2 வார குழப்பத்திற்குப் பின்னர் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஜெயலலிதா திட்டவட்டமாக கூறி விட்டார். இதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வைகோவுக்கு.

இப்படியாக முடிவுக்கு வந்தது மதிமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு உடன்பாடு. இதன்படி, மதிமுகவுக்கு விருதுநகர், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் இப்போது திடீரென புதுப் பூசல் வெடித்துள்ளதாம். ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த விரும்புகிறாராம் ஜெயலலிதா.இதனால் ஈரோட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் மத்திய சென்னையில் போட்டியிடுங்கள் என்று அதிமுக தரப்பில் மதிமுகவும் கூறப்பட்டுள்ளதாம்.

மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து மோத நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் விரும்பவில்லையாம். இதனால் மதிமுகவை மத்திய சென்னையில் தள்ளி விட அதிமுக முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்தத் தொகுதியைத்தான் மதிமுகவுக்காக அதிமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் வேண்டவே வேண்டாம் என்று வைகோ தீர்மானமாக கூறி விட்டார். இந்தத் தொகுதியால்தான் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலவியது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் மத்திய சென்னையை எடுத்து்க கொள்ளுங்கள், ஈரோட்டைத் தாருங்கள் என அதிமுக கூறியுள்ளதால் மதிமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

fasting-100.jpgஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். முதலில் காவல்துறையினர் இதை அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாமல் இப்படி கூடக் கூடாது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள பிளாட்பாரத்தில் பந்தல் போட்டு பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.