மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் சராசரியாக 60 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
::சர்வதேச விடயங்கள்
::சர்வதேச விடயங்கள்
சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த அதிமுக தொண்டர் சுப்பிரமணி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). அதிமுக தொண்டரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த காங்கிரஸ், திமுக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் புதுச்சேரியிலும் வேலைநிறுத்தம் தொடங்கியது. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. அரசு பஸ்வண்டிகள் சொற்ப எண்ணிக்கையில்தான் ஓடுகின்றன.
140 லோக் சபா தொகுதிகளுக்கு 2வது கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
மொத்தம் 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காலை தொடங்கிய வாக்குப் பதிவு மிதமான முறையில் நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடியும். இருப்பினும் நக்சலைட் பாதித்த பீகார், ஜார்க்கண்ட் மாநில தொகுதிகளில் 3 மணிக்கே வாக்குப் பதிவு முடிந்து விடும்.
இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும், அவற்றின் தொகுதிகளும்..ஆந்திரா 20, அஸ்ஸாம் 11, பீகார் 13, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 1, கர்நாடகா 17, மத்தியப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 25, ஒரிசா 11, திரிபுரா 2, உ.பி. 17, ஜார்க்கண்ட் 9. இவை தவிர ஆந்திர மாநில சட்டசபையின் 140 சீட்கள் மற்றும் ஒரிசாவின் 77 சீட்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு இன்றுடன் தேர்தல் முடிந்து விடும்.
மொத்தம் 121 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராகுல் காந்தி, சரத் பவார், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் விலாஸ் பாஸ்வான், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இன்றைய தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
திமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் இன்று காலை தொடங்கியது. இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள், வெளியூர் பஸ்வண்டிகள், பயம் காரணமாக தனியார் பஸ்வண்டிகள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன.
போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன. இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலை நிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார்.
இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர் பஸ்வண்டிகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் ஓடவில்லை.
பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில பெட்டிக் கடைகள் மட்டும் அரை கதைவை மூடிய நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான். ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.
நாளையுடன் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. எனவே வேலைநிறுத்தம் காரணமாக இன்று வேட்பு மனு தாக்கலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 10-வது நாளாக ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து தெரியவருவதாவது:-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கைது செய்து வானில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி ஆகிய 5 பெண்களுக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.
இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.
இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.
நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.
![]()
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார்.
கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இறுதி ஊர்வலத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மக்கள் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் துரையரசன், இலங்கை எம்பி சேனாதிபதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக சிவானந்தன் உடலுக்கு போலீசார் முன்பாகவே விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ புலிக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் கொடி போர்த்தப்பட்டது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கரூர் காவல் துறை தகவல் தந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்தச் சமயத்தில் கூட வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்கிறார் கருணாநிதி. இதில் அதிமுக கலந்து கொள்ளாது. அதிமுக தேர்தல் பிரசாரம் வழக்கம் போல நடைபெறும்” என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருணாநிதி அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களைச் சட்ட விரோதம் என்று அறிவித்திருக்கிறது.
வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் முதல்வர் கருணாநிதி. இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
