திமுக வேலைநிறுத்தம் தொடங்கியது – நேற்று இரவு முதலே பஸ்கள் ஓடவில்லை – கடைகள் அடைப்பு

திமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் இன்று காலை தொடங்கியது. இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள், வெளியூர் பஸ்வண்டிகள், பயம் காரணமாக தனியார் பஸ்வண்டிகள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன. இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலை நிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார்.

இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர் பஸ்வண்டிகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் ஓடவில்லை.

பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில பெட்டிக் கடைகள் மட்டும் அரை கதைவை மூடிய நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான். ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.

நாளையுடன் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. எனவே வேலைநிறுத்தம் காரணமாக இன்று வேட்பு மனு தாக்கலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *