::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இறக்குமதி செய்யப்பட்ட அதிக போஷாக்குடைய உணவுப் பொருட்களை மீளப் பெற யுனிசெஃப் முடிவு

அனுமதியின்றி அதிக போஷாக்குடைய உணவு வகைகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ததாக இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, ஐ. நா. மன்றத்தின் குழந்தைகள் மேம்பாட்டு நிதியமான யுனிசெஃப் அமைப்பு, அந்தப் பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

அதிகபோஷாக்குடைய சத்துணவுப் பொருட்கள், உலகம் முழுவதும் உள்ள சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு யுனிசெஃப் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அந்தப் பொருட்கள், அப்படிப்பட்ட பலவீனமான குழந்தைகளின் சிகிச்சைக்கு மிகவும் அவசியம்.

போஷாக்கு குறைவாக உள்ள பலவீனமான குழந்தைகள், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். அவர்களில் 50 சதத்துக்கும் மேற்பட்டோர், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் உள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட போஷாக்குடைய குறிப்பிட்ட சத்துணவுப் பொருள் மிகவும் அதிக விலை உடையது என்று கூறும் இந்திய அதிகாரிகள், அதன் வீரியத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாறாக, உள்ளூரிலேயே கிடைக்கும் போஷாக்குடைய சத்துமிக்க பால் வகைகளைப் பயன்படுத்துமாறு யுனிசெஃப் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஆனால், அந்த இரு பொருட்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தினமும் 30 கொலை அச்சுறுத்தல்கள்

000-obama.jpgபராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவருக்கான அச்சுறுத்தல்கள் 400 சத வீதமாக அதாவது ஒரு வருடத்தில் மூவாயிரமாக அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதியின் இரகசிய சேவையில் நூலை எழுதிய ரொனால்ட் கெஸ்லர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இரகசிய சேவையின் சங்கேதக்குறியீடு “ரெனிகேட்’ என்பதாகும்.

அதில் ஒபாமாவுக்கான சில அச்சுறுத்தல்கள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் ரென்னீசீயில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் சதி முயற்சி குற்றச்சாட்டும் இதில் உள்ளடங்கியுள்ளதாக டெய்லி ரெலிகிராப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி விற்பனைசெய்யும் நிலையத்தில் திருடி 88 கறுப்பின மக்களை சுட்டு, மேலும் 14 பேரை காயப்படுத்தி அமெரிக்க வரலாற்றில் முதலாவது கறுப்பின ஜனாதிபதியை படுகொலை செய்ய சதிமுயற்சி மேற் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த விடயத்தை இரகசிய சேவை மூடி மறைத்து விட்டது. ஏனெனில் இந்த விபரங்களை வெளியிடுவது இதே மாதிரியான குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று இரகசிய சேவை அஞ்சியதே இதற்கு காரணமென இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமான அச்சுறுத்தல்கள் நம்பத்தகுந்தவையற்றவையாகும். ஆனாலும் ஒவ்வொன்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளன.

சோமாலியாவை தளமாக கொண்ட இஸ்லாமிய குழுவான அல் சாபாப் ஜனவரியில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வை குழப்பக்கூடுமென புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சவால்கிடைத்திருந்தது. இதனையடுத்து இரகசிய சேவையானது 94 பொலிஸ், இராணுவ, பாதுகாப்பு முகவரமைப்புகளை சேர்ந்த 40 ஆயிரம் பேரை பணியில் ஈடுபடுத்தியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள் அடங்கிய குழுக்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் நிலைகொண்டிருந்தன. அருகிலிருந்த கட்டிடங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.  ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றபின் அவருடைய இரு மகள்மாருக்கும் இரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மலியாவுக்கு (11) ரேடியன்ஸ் என்ற சங்கேத குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மகள் சஸ்னாவுக்கு (8 வயது) ரோஸ்பட் என்ற குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு ரீநைசன்ஸ் என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் துணை ஜனாதிபதி ஜோபைடனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தாயாருக்கு இரகசியசேவையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் மூவரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்- ஈரான்

iran_composite.jpgஈராக் கிலிருந்து தமது நாட்டின் நிலப்பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த மூன்று அமெரிக்கர்களை தடுத்து வைத்துள்ளதை இரான் உறுதி செய்துள்ளது.

தமது அண்டை நாடான இராக்கிலிருந்து இரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வடக்கு எல்லை நகரமான மரிவானுக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய அதிகாரி தெரிவித்தார்.

அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளா என்பது அறியப்படவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராக்கின் குர்டிஸ்டான் பகுதியில் மலையேறிக்கொண்டிருந்த போது தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைப்பகுதியில் இவர்கள் மூவரும் தற்செயலாக வழிதவறிச் சென்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களை கூடிய விரைவில் திருப்பியனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலரி கிளிண்டன் இரானைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதியாக நிஜாத் இன்று பதியேற்பு – இரண்டு வாரத்தில் புதிய அமைச்சரவை

ஈரான் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹ்மூத் அகமது நிஜாத்,  இன்று தமது பதவியைப் பொறுப்பேற்கின்றார்.

ஈரானில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதித்  தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அகமதி நிஜாத் அமோக வெற்றி பெற்றார். மிதவாத தலைவரான மிர் ஹசைன் மவுசாவி தோல்வியடைந்தார்.

அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு செய்து அகமதி நிஜாத் வெற்றி பெற்றதாக கூறி,  எதிர்க்கட்சித் தலைவர் மிர் ஹசைன் மவுசாவியின் ஆதரவாளர்கள் ஈரானில்,  போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டம் வன்முறையாக மாறியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மவுசாவி,  முன்னாள் அதிபர் முகமது கடாமி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்நிலையில்,  அகமது நிஜாத்தை ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி,  அதிபராக அங்கீகரித்துள்ளார். பாராளுமன்றத்தில்  இன்று அதிபராக நிஜாத் பதவி ஏற்கிறார். இதை தொடர்ந்து இரண்டு வாரத்தில் அவர் தனது அமைச்சரவையை அமைக்க உள்ளார்.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம்

rajanikanth.jpgரஜினி காந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்ன தானம் வழங்க வந்த அவர் பேட்டி அளிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கேயோ பிறந்து,  தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார்.  இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய்,  தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் அவர்.

தற்போது சவுதிப் பெண்களும் வீட்டுப் பணியாளர்களாக..

housemaids.jpgசவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிவது என்பது எவரும் பார்த்து பொறாமைப் படக்கூடியதொன்றல்ல.சவுதி வீசா அனுசரனை நடைமுறைகளின் படி அவர்கள் தமது கடவுச்சீட்டினை வேலை வழங்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 20 மணித்தியாலங்கள் வரை அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட முடியும்.வீட்டு உரிமையாளர்ளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் இந்த வீட்டுப்பணிப்பெண்கள் உள்ளாக்கப்படக்கூடும்.

அவர்களின் சம்பளங்கள் வழமையில் ஊதிய ஆவணங்களில் பதியப்படுவதுமில்லை.இவர்கள் சட்ட ரீதியாக வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் கூட அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லாத காரணத்தால் அதுவும் சாத்தியமில்லை.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து தப்பியோடி தத்தமது நாட்டு தூதரகங்களில் தஞ்சமடைகின்றனர்.கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்ட ஹியுமன் ரைட்ஸ் வொச் அமைப்பு, சவுதி ஆரேபியாவிலுள்ள வீட்டுப் பணியாட்கள் நடத்தப்படுகின்ற விதம் அடிமைத் தனத்தை ஒத்தது என சுட்டிக்காட்டியது.

சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற வாக்குறுதியை நம்பி சுமார் 2 மில்லியன் பெண்கள், அனேகமாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பெரும் ஆபத்துகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள்.

ஆனாலும் சவுதியில் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, உள்நாட்டவர்களுக்கு தொழில் வழங்குவதற்கான புதிய வழிவகைகள் குறித்து சிந்திப்பதற்கு அரசகாங்கத்தைத் தூண்டியுள்ளது.

சவுதிப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக தொழிற்புரிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுமதியளிக்கப்பட்டது.இவர்களில் முதலாவது குழுவினர் தற்போது தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுவார்கள். இவர்களின் சம்பளத் தொகை ஒப்பீட்டு அளவில் உயர்வானதும் நிலையானதும் கூட. இவர்கள் வேலை முடிந்ததன் பின்னர் அங்கேயே தங்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனாலும் இந்த தொழிலை தகுதி குறைந்தது என பார்க்கும் அனேகமாக சவுதிவாசிகள் மத்தியில் இவ்வாறு உள்ளுர்ப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு கிளம்பிய வண்ணமே உள்ளது..

பரக் ஒபாமா இந்தியா விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒபாமா வெகுவிரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவருடைய இந்தியப் பயணம் 3 மாதங்கள் கழித்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை  மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி அகினோ காலமானார்

n13.jpgபிலிப் பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொராஷோன் அகினோ நேற்றுக் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 76 சிலகாலம் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அகினோவின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் 10 நாட்கள் துக்கம் கடை பிடிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி குளோரியா மெகாபாக்ல் அரோயோ அறிவித்துள்ளார். அகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர் பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

இந்திய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று பதவியேற்பு

01-nirupama.jpgஇந்தி யாவின் புதிய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று சனிக்கிழமை பதவியேற்கிறார். சிவ்சங்கர் மேனனிடமிருந்து இன்று காலை 7 மணிக்கு பதவியை பொறுப்பேற்கும் நிருபமாராவ் கோகிலா ஐயருக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகும் இரண்டாவது பெண்ணாவார்.

58 வயதுடைய நிருபமா வெளிவிவகார சேவையில் பல முக்கியமான பதவிகளில் இருந்துள்ளார். இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்த நிருபமா சீனத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.

அதிகளவு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் புதிய பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் குறித்து பூரணமாக அறிந்திருப்பதாகவும் முன்னோக்கிச் செல்வதே தனது எதிர்பார்ப்பெனவும் ஏ.என்.ஐ.செய்திச் சேவைக்கு நிருபமா கூறியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில் முஷாரப் மீது வழக்கு

musharap.jpgலண்டனில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பர்வேஸ் முஷாரஃப் மீது வழக்குத் தொடரலாம் என பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய போது முஷாரஃப் குறித்து நசீர் அகமதிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்தது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரஃப் ஆஜராக மறுத்தால் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றார்.

சர்வதேச சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது லண்டனில் உள்ள முஷாரஃப் பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தியது தொடர்பான வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.