கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க வடக்கில் விசேட ஏற்பாடுகள்

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மற்றும் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்கமைய 20 விசேட வாக்குச் சாவடிகளும் கொத்தணி வாக்குச் சாவடிகளும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, வவு னியா மாவட்டங்களிலுள்ள வாக்கா ளர்களின் பெயர்ப்பட்டியல்களை அந் தந்த பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஊடாக பார்வைக்கு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வுள்ளன. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் தேர்தல் நட வடிக்கைகள் குறித்து ஆராயவென நேற்று வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டமொ ன்று நடைபெற்றது.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்க ளுக்கு தற்காலிக ஆளடையாள அட்டையை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக ஆட்பதிவு திணைக்கள த்தின் அதிகாரிகள், தேர்தல் ஆணை யாளர் அலுவலக அதிகாரிகள், மாவ ட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் பலரும் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர். துணுக்காய், மல்லாவி, ஜயபுரம், முழங்காவில் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 20 வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையும் இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் நிலையங்க ளுக்கு வெளியேயும், நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கு வாக்க ளிக்கும் விதத்தில் நிவாரணக் கிரா மங்களுக்கு வெளியேயும் கொத்தணி முறையிலான வாக்குச் சாவடிகள் அமைப்பது எனவும் முடிவு செய் யப்பட்டது. அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் அரச ஊழியர்களின் விபரங்களை சேகரிப்பது தொடர் பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் மூல வாக் காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என தேர் தல் திணைக்களம் அறிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிக்க இருப்பவர்கள் முடியுமானவரை குறிப்பி ட்ட 17ஆம் திகதிக்கு முன்னதாக நேரகாலத்துடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் – ரவி சுந்தரலிங்கம்

பாகம் 6
தேர்தலும் வாக்களிப்பும்

தேர்தல் என்பது குறைந்த பட்சத்தில் மக்களது பொதுமைப் படுத்தப்பட்ட இறைமைகள் குறித்த அரசியல் பங்கீடுகள் பற்றியது. இதனை அரிதான அளவிலாவது தரக்கூடியது, இன்று நடைமுறையில் மட்டுமின்றி, உலகளாவிய அழுத்தத்தின் பால் உள்ளது, முதலாம் நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மிதவாத ஜனநாயக வழிமுறை ஒன்றேதான்.

இறைமை என்பது சமூகத்தினதும் தனிமனிதனதும் உடமைகள் பற்றியவை.

உடமை என்பது பணம் காணி பூமி எனச் சம்பாதித்த வெறும் சடப்பொருட்கள் பற்றியவை மட்டுமல்ல.
அவற்றைவிட, அவனுக்கு அத்தியாவசியமான உயிர், உடல், வாழ்வு என்பவற்றின் உத்தரவாதங்கள் பற்றியவை மட்டுமே என்பதும் அல்ல. இவற்றிலும் மேலாக, அவனது மொழி, சமூக-மனோவியல் இயல்புகளால் கொண்ட தத்துவார்த்தங்கள் சித்தாந்தங்கள், அவற்றின் பேரிலான நோன்புகள் சம்பிரதாயங்கள், காலாகாலமாக இயம்பப்பட்டு வந்த பாரம்பரிய இதிகாசங்கள் புராணக்கதைகள், சகாசவீரர்கள் சமுதாயத் தலைவர்கள் தந்த அறிவு அவற்றாலான உணர்வுகள், என்பன யாவும் அவனது உடமைகளே. இவற்றுடன் இணைந்த நிலத்துடன் அவன் கொண்ட உற்பத்தி உறவுகளில் தங்கிய சரித்திரமும் அவனது உடமைகளைப் பூரணமாக்கும்.

இவ்வகையில், தனி-மனிதனாக முதற்படியாக தற்பாதுகாப்பிற்கும், அடுத்தபடியாக தனதும் தன் குடும்பம் அல்லது பரந்த-குடும்பம் பற்றிய பொருளாதார முன்னேற்றத்தை நாடும் போதும், ஒரு குலத்தின், இனத்தின், நாட்டின் அங்கத்தவனாக அடையாளம் காட்ட வேண்டிய அத்தியாவசியத்தால், அதன் நுகர்வுகளைப் புரிந்தமையால், தனது தனிப்பட்ட இறைமைகளை மனிதன் பொதுமைப்படுத்துகிறான்.

தனிமனிதனாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கும், ஒரு சமூகத்துள்ளே விதிகள் நோன்புகளுடன் வாழ்வதற்கும் இடையிலான வேற்றுமைகளை, இறைமைகளை மாற்றீடு செய்யும் உரிமைகளின் மட்டுப்படுத்தல்களை உணர்ந்தும், தனது மேன்மையை நோக்கிய போக்கையும் அதற்கான இழப்புகளைப் புரிந்துமே அவன் இந்நிலை எய்துகிறான்.

இவ்வாறாக மனிதனது சமூக-பொருளாதார வளர்ச்சியின் வாஞ்சையும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றிய போராட்டங்களும் இணக்கங்களும் புதிய உறவுகளுமே, என்றுமே பரிணாமம் கண்டு கொண்டுள்ள அவனது உடமைகள் பற்றிய விளக்கத்தையும், அவற்றின் அடிப்படையிலான பொதுமைப் படுத்தப்பட்ட இறைமையின் அர்த்தத்தையும் அதன் வீச்சினையும் நிர்ணையம் செய்கின்றன.

எனவே, தேர்தல் என்பது மனிதன் தனியவனாகவும் கூட்டாகவும் தனது இறைமைகளின் பெறுமதியை மாற்றீடு செய்வதற்கான ‘சமூக-பொருளாதார-அரசில் சந்தைப்படுத்தலின்’ வழிமுறையாகும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.

இவ்வாறு பொதுமைப்பட்ட இறைமைகள் பற்றி இல்லாத வரைவுகளுள் இருந்தபடி ஏதாவது தேர்தலை அணுகுபவர்கள் மேற்படி அமைந்த சந்தைப்படுத்தலின் அழையா விருந்தாளிகளே. ஆகவே, பொது இறைமைகளது அவை தங்கிய உடமைகளது உறவுகளை ஏற்பாடு செய்யக் கூடிய வல்லமை கொண்டவராகவோ, அவற்றின்பால் கருமம் ஆற்றக் கூடிய செயலாளராகவோ இருக்க மாட்டார் என்பது திண்ணம்.

எனவே இந்த அரசியல் சந்தைப்படுத்தலில் “விற்பவர் யார்? வாங்குபவர் யார்?” என்ற கேள்வி நியாய பூர்வமாக எழுகிறது.

முதலாம் உலக நாடுகளில் வாழும் சாதாரண மனிதரது (1) நுகர்வுத் தன்மையும் (2) கொள்வனவுத் தன்மையும் (3) உற்பத்தித் தன்மையும் சுமுகமான சமாந்தர நிலமையை எய்தி உள்ளது. ஆதலால், அங்கே எல்லாம் விற்பவர்-வேண்டுபவர் என்ற உறவுகளில் சாதாரணரிடையே பாரிய வேறுபாடுகள் இல்லை எனலாம்.

இவர்களிடமிருந்து சொத்துக்களை பல வகைகளில் சேகரித்து தமது மூலதனத்தை அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவர்களை நாம் பிரித்தே பார்க்கிறோம் என்பதை சகலரும் புரிந்து கொள்ளவர்.

மேலும், சமூக-பொருளாதார சந்தைப்படுத்தல் முதலாம் நாடுகளில் உச்சக் கட்டத்தில் உள்ளமையால், ஒரு நாட்டின் உள்ளே அவ் உறவினிடையே உருவாகும் ஏற்றத் தாழ்வுகளை சுமாராக்க நாடுகளின் அரசுகள் ஒரு புறத்தில் முதலாளித்துவத்தின் பாதுகாவலனாகவும், மறுபுறத்தில் உற்பத்தி உறவுகளை சீர் செய்யும் வகையில் தனிமனித சமூக அத்தியாவசியங்களைப் பூர்த்தி செய்யமுயலும் கருவியாகவும் இயங்குகின்றன.

இதனைவிட ஒருபடி மேலாக இந்நாடுகள் பிராந்திய ஜனநாயகத்தை ஏற்று நடை முறைப் படுத்துவதால், ஒரு புறத்தில் சமூகங்களது ஏற்றத் தாழ்வுகளை முன்நிலைப் படுத்தி சீர்திருத்தம் கோருகின்றன அமைப்புகளை ஏற்றுக் கொள்பவையாகவும், மறுபுறத்தில் மத்திய அரசின் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் யாப்புகளை நடைமுறைப் படுத்தி நிலைமைகளை ஒருமுகப் படுத்தும் கருவிகளாகவும் அமைகின்றன.

ஆகவே, முதலாம் நாடுகளில் இந்த அரசியல் சந்தைப்படுத்தலானது, சாதரணரிடையே ஓரு ‘பண்டமாற்று’ முறையாக, ஒருவரிடம் மற்றவர் பெறுவதற்கும் விற்பதற்கும் விடயங்கள் இருப்பதாலான செயற்பாடகவும் அமைகிறது எனலாம்.

இவ்வாறான ஜனநாயகம் போர்த்த சமூக-அரசியல் மாதிரியானது 60 பதுகளில் மேற்கு ஐரோப்பியா பூராக பரவலாக்கப்பட்டு இன்று, சோவியத் அரசுகளின் வீழ்சியின் பின்னர், கிழக்கு ஐரோப்பியாவையும் உள்வாங்கும் திட்டம் ஆக்கப்பட்டுள்ளதையும்தான் நாம் அறிவோம்.

அதாவது, நாம் வரைவு செய்யும் அரசியற்-சந்தைப்படுத்தலானது பல்வேறு வடிவங்களில், இன்று ஐரோப்பாவில் ஓரிரு நாடுகள் தவிர்ந்த யாவற்றையும் உள்ளடக்கியதாக உருவாகி வருவதை காணலாம் என்கிறோம்.

மூன்றாம் நாடுகளிலோ நிலைகள் நேர்மாறானவை.

மனிதன் தனியவனாகவும் கூட்டானவனாகவும் ‘நாடு’ என்ற ரீதியில் தமது இறைமைகளைப் பொதுமைப்படுத்த முடியாதவனாகவே இன்றும் இருக்கிறான். அவனது ‘நாடுகள்’ இன்றும் பல சமுதாயங்களை உள்ளடக்கிய தன்-அடையாளம் அற்றவையாக, காலனத்துவர் விட்டுச் சென்ற நில-வரைவுகளுடன் மட்டுமே தங்கியவையாகவும், அவற்றினை வியாபிக்க விஸ்தரிக்க முடியாதவையாகவுமே உள்ளன.

சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்தவனோ, தனது சமூக உடமைகளை பாதுகாக்க முடியாதவனாக, அத்து மீறிய செயற் திட்டங்களுடாக பெரும்பான்மை இனத்தினுடைய சொத்தாக சுவீகரிக்கப்படுவதை தடுக்க முடியாதவனாக, அன்றாட இம்சைகளுக்கு உட்பட்டவனாக வாழ்கின்றான்.

காலனித்துவர் விட்டுச் சென்ற அரச-அமைப்பின் அதிகாரங்களை, குருட்டுத்-தனமாகவும் மூர்க்க-தனமாகவும் குரோதத் தன்மையுடன் பேரினவாதக் குழுக்களும், இன வேறுபாடுகளைச் சாதகமாக்கித் தத்தமது மூலதனத்தை வளர்த்திடும் வர்க்கங்களும், அவை சார்ந்த குடும்பங்களும், பிரயோகமாக்கிடும் சூட்ச்சிகளுள் தவிக்கின்றான். அவற்றிக்கு எதிர் முகம் கொடுக்கும்போது பாரிய பின்னடைவுகளையே அவன் சந்திக்கிறான்.

மாற்றாரது உடமைகள் தனது பெயரில் சுவீகரிக்கப்பட்டு, பொதுவில் சொத்துக் படைத்தவனாக காட்டப்படும் போதிலும் தனது இறைமைகளைக் கூட பொதுமைப்படுத்த முடியாதவனாகவே பெரும்பான்மை இனத்தில் மிக மேலதிகமானவன் இன்றும் உள்ளபோது, சிறுபான்மை மனிதனோ தனது இறைமைகளை எவ்வாறு நிரூபித்துக் கொள்வது என்ற கேள்வியில் மட்டுமே தங்க வேண்டியவனாக இருக்கிறான்.

அவன் இருக்கும் ‘நாடுகள்’ எந்த இனத்தவனது உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாதவையாகவும், மாறாக அவனது உயிரை ‘நாட்டின்’ எதிரியாக அல்லது பாதுகாவலனாக பணயம் பேசியே தமது அடையாளத்தையும் ஸ்திரத்தையும் நிலை நாட்டுவனவாகவும் உள்ளன.

ஆதலால், தேர்தல் என்பது ஒரு பேரின-வழக்காகவும் சகலரதும் இறைமைகளையும் கொச்சைப்படுத்தும் பெரும்-தேசியவாத அரசியல் வர்க்கங்களது “குடியானவர்-ஜனநாயகமாகவே” மூன்றாம் உலக நாடுகளில் உள்ளன.

சிறுபான்மை இனத்தவனுக்கோ, “தனது ‘நாட்டில்’ தன்-பங்கு என்ன என்பதை தானே முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளபோது, தேர்தலில் தன்-பங்கு என்ன முடிவைத் தரும்?” என்ற கேள்வி வெறும் எண்கணிதப் பரீட்ச்சையே அன்றி வேறெதுவுமல்ல.

எனவே, மொத்தத்தில் மூன்றாம் நாடுகளில் தேர்தல் எனும் அரசியல் சந்தைப்படுத்தல் அதிகாரமயப்படுத்தப்படாத (un-empowered) சகல மனிதனும் அவன் சமூகங்களும் சமுதாயங்களும், அதிகாரத்தில் உள்ளவனுக்கு தனது இறைமைகளை சிறிது சிறிதாக தாரைவாரத்துத் தந்த வண்ணம் உள்ளன. கைமாறாக அதிகார வர்க்கத்தினர், பொதுவாக சில குடும்பங்களைச் சார்ந்தவர்கள், பண்டைய பெருமைகளையும் எதிர்காலக் கனவுகளையும் இலகுவாக வழங்குவதை நன்றியுடன் பெறவேண்டிய நிலையலேயே அவன் உள்ளான்.

எனவே, தேர்தல் எனும் அரசியற்-சந்தைப்படுத்தலில் அதியாரமயப்படுத்தப்படாத சகல மனிதனும் ‘வாக்குகளால்’ தமது இறைமைகளை ஊர்ஜிதம் செய்திடலாம் என்ற போலியான வாதத்துள் அவனது ‘தலைவர்களால்’ இட்டுச் செல்லப்படுகிறான்.

அரசாங்கத்தின் அல்லது அரச எதிர்க்-கட்சியின் ஆதரவாளனாக, அதிகாரவர்க்கங்களின் தயவிலேயே தமது ‘வாழ்வுக்கும்;’ சாவிற்கும் தங்கியிருப்பவர், அதிகாரமயப்படுத்தப்படாத தமது மக்களுக்கு உண்மையான தலைமையை எப்படிக் கொடுக்க முடியும் என்பது சமூக-பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய சகல மூன்றாம் உலக நாடுகளிலும் பரந்து காணப்படும் ஒரே கேள்வியாகும்.

இந்நிலையைச் சீர் செய்ய, தனது இறைமைகளை தமதென ஊர்ஜிதம் செய்திட, தனது சமுதாயத்தினை தேசியவாதம் அல்லது இராணுவமயப்படுத்தல் என்பவற்றுள் உட்படுத்துவதே மாற்றுத் தலைமைகளது மேலெழுந்தவாரியான பதிலாக இன்றுவரை இருந்து வந்துள்ளது.

இவ்வழிகள் இன்று, உலகளாவிய-சந்தைப்படுத்தலின் காலகட்டத்தில் 9/11 நிகழ்வின் பின்னடியில், பல பிரதேசங்களில் சர்வதேசியத்தை நிர்வாகம் செய்பவர்களால் மிக வன்முறையாக நிராகரிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்தாக வேண்டும்.

உணர்ந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் பாரிய இடைவெளி உண்டு என்பதையும் புரிந்தும்தான் நாம் காரியமாற்ற வேண்டும்.

இவையாவும், பரந்துபட்ட சகல சமூகங்களுக்கும் பொதுவானவை என்பதுடன், எமது ஆய்வுகளின் தேடலின் பிரகாரம் நாம் காணும் பொது-அறிவும் ஆகும்.

அதாவது, இவை வெற்றுப் பொதுப்-புத்திகளிலோ, இலட்சியக் கோட்பாடுகளற்ற புத்தி-ஜீவித-சுத்தியற்ற போலி அரசியல் அவதானிப்புகளிலோ தங்கிய தத்துவங்கள் அல்ல. எனவே, இவை முகமோ முறையோ பாராது, நாட்ட ஓட்டங்களைத் தாண்டி, இலட்சியக் கணிப்புகளைக் கொள்ள முனைபவன் கருத்தில் கொள்ள வேண்டிய வரையறுப்புகள் ஆகும்.

இவற்றிலான வரைவினுள் இருந்தபடி சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை எப்படி நோக்குவது?

வெற்று அரசியல் விஞ்ஞாபனம்
வெளிநாடுகளில் புலிகளுக்காக ‘வேலை’ செய்தவர்கள், தமிழீழத் தேசியவாதிகள், மகிந்தா அரசினை ‘இன ஒழிப்பு’ குற்றச்சாட்டில் சர்வதேசிய மனிதாபிமானக் கோட்டில் நிறுத்துவோம் என அமரிக்க-வழக்கறிஞர் ஒருவரை கூட்டித் திரிந்தவர்கள், புலிகள் இயக்கமாக அழிக்கப்பட்ட பின்னர் ராஜபக்ஷா சகோதரர்களை சந்திக்க வரிசையில் நிற்கிறார்கள் என்பதைச் சாடும் பலத்த விமர்சனங்களை நாம் காண்கிறோம். இவற்றை நாமும்தான் செய்திடலாமா என்ன?

2001 இல் ரணில் அரசுடன் புலிகள் புரிந்துணர்வு ஏற்பாடு கண்டபின் ‘சமாதானம்’ ஒன்று நிலவியது. நிலமைகள் சமாதானம் என்று கூடப்பட்ட போதிலும் பின்னணியில் கொலைகளும், மீண்டுமொரு போருக்கான ஏற்பாடுகளும் நடந்த வண்ணம் இருந்த காலமுமிது.

அப்போது அமைச்சராக இருந்த ஒரு ஜெயவர்த்தனாவை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர் A9 சாலையை புதுப்பிப்பதற்கான வர்த்தக ஒப்புதல்களுக்கு பொறுப்பானவர், மற்றும் இறக்குமதி தொடர்பான சான்றுப் பத்திரிகைகளை வழங்குபவர் என்பதால் அவருடன் ‘பிசினஸ்’ செய்த தமிழர்களோ அவரை மறந்திருக்க மாட்டார்கள். அவர் இங்கிலாந்து வந்தபோது பல இடங்களில் எடுப்பு எடுத்து, மாலைகள் போட்டு அமைச்சருடன் ‘போட்டோ’ பிடிக்க போட்டா போட்டி போட்ட புகலித் தமிழர்களும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

இம்மாதிரியான அன்றைய நிகழ்வுகள் இன்று நடப்பவற்றின் முன்காட்டிகள். ‘தொப்பி பிரட்டிகள்’ என இஸ்லாமிய தமிழ் சமூகத் தலைவர்களை ‘தமிழ் அறிஞர்கள்’ வர்ணித்த போது, தம்மைத் தெரிந்தும் உணர்ந்திராத தமிழரது நடுத்தர வர்க்கங்களின் அரசியற் கலாச்சரமும் இது.

எனவே, சமூக-அரசியல் அறிவினை சுயசிந்தனையை கொண்டவர்கள், தமிழீழக் கோரிக்கையின் அரசியல் வரலாற்றைப் புரிந்தவர்கள், இவற்றினால் ஆச்சரியமோ ஆத்திரமோ கொள்ள முடியாது.

தமிழீழக் கோரிக்கை கொழும்பின் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான ஒரு பேச்சுவார்த்தையின் உச்சவரம்பை ஸ்திரமாக்கும் யுக்தியாகவே நடுவர்க்கங்களால் முன் நிறுத்தப்பட்டது.

அக் கோரிக்கையில் தமிழரது உடமைகள் குறித்தோ அல்லது தமிழ் பேசுவோரது பிராந்திய ஜனநாயகம் குறித்தோ ஆழமான கருத்துகள் இருக்கவில்லை. பலகலைக்கழக நுளைவிற்கான தரப்படுத்தலே தனிநாட்டுப் போராட்டத்தின் பிரதான காரணம் என்று தமிழீழவாதிகள் கூறுவதிலிருந்து அவற்றினைப் புரிந்து கொள்ளலாம்.

அக் கோரிக்கையை, நடுத்தர வர்கங்களைச் சார்ந்த இளைஞர்கள் சிலரும் அவ்-வர்க்க அபிலாசைகளால் உள்வாங்கப்பட்ட மற்றைய சமூகத்து இளைஞர்களும் இலட்சியக் குறிக்கோளாக ஏற்ற பின்னரே அவர்களது இரத்தத்தாலும் தியாகங்களாலும் அதனை ஒரு அரசியற் சித்தாந்தமாக மாற்றி அமைக்கும் முயற்சியும் இடம் பெற்றது.

நிலமைகள் பாரதூரமானபோது இயக்கத்து உட்பிரச்சனை அல்லது மாற்று இயக்கத்துடனான பிரச்சனை காரணமாக நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் பெரும் திரளாக “தமிழீழப் போரிலிருந்து” வெளியேறியதில் இருந்தே இக்கோரிக்கையின் இரு-இளை அவிழ்வினைக் கண்டு கொண்டிருக்கலாம்.

எனவே, நடுத்தர வர்க்கங்களால் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான யுக்தியாக முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையும் அதன் பேரிலான யுத்தமும் சமூகத்தில் பின்தங்கியவரது பாரமாகச் சுமத்தப்பட்டு அவர்களது இலட்சியமாகவும் அழுத்தப்பட்டது. (இவைபற்றிய விரிவு வேறொரு தடவையில்)

இவற்றை கூர்ந்து அவதானித்து வந்தவர்கள் நடுத்தரவர்க்கத் தமிழரது அரசியல் கலாச்சாரம், ‘போரின்’ முடிவில் பழைய நிலையை மீண்டும் எய்திடும் என்பதை எதிர்பார்த்தே இருந்திருப்பர். ஆனால், அப் போர் சடுதியாக, அதிலும் உலக அரசுகளின் இணக்குடன் முடிவுக்கு வரும் என்றோ, பின்னோக்கும் அரசியற் கலாச்சாரம் அவர்களை டட்லி-பண்டாரநாயக்க காலத்து நிலைப்பாடுகளுக்கு இழுத்துச் செல்லப் போகிறது என்று முன்கூறிடுவது இலகுவான விடயமல்ல.

ஆனால், இந்த அரசியல் வர்க்கத்தினரோ தேர்தல் என்றதும் குட்டையைக் கண்ட தாரா போலாகி உள்மனதுள் குதூகலம் கண்டிடுவர் என்ற விடயமோ சுலபமாக யாரும் கொள்ளக் கூடிய எதிர்பார்ப்பு.

இது வெறும் தனித் தமிழீழம் பேசித் தடம் புரண்ட தேசியவாதிகளை மட்டும் கொண்ட கூட்டம் அல்ல. பலவிதமான புரட்சிகள் பேசி மற்றவர்களைப் புரட்டி எடுத்து, முடிவில் தம்மைப் பலதடவை பிரட்டிப் பிரட்டிப் பிதட்டிக் கொள்பவர்களும், நடத்தையில் செயற்பாடுகளில் அகராதி-வார்த்தைகளில் சற்றே வேறுபட்டவர்களாகக் காணப் பட்டாலும், அரசியல் முடிவுகளில் அதே இடத்தில்தான் காணப்படுட்டவர்.

தம்மைப் பரிசீலனை செய்வது, சுயவிமர்சனம் செய்து தமது பழைய நிலைப்பாடுகளுக்கு அவற்றையொட்டிய செயற்பாடுகளுக்கு, மற்றவர் மீதான கடுமையான வார்த்தைகளுக்கு வன்முறைகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்பதெல்லாம் கிண்டலுக்கு இடமான அவசியமற்ற விடயங்கள் இவர்களுக்கு.

எனவே, இரகசியப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் என்பவற்றிலேயே அவசர நாட்டமும் நம்பிக்கையும் கொண்டவர்களாக இவர்கள் என்றும் இருப்பர். மேலும் தம் முரண்பாடுகளுக்கு, தாம் சற்று முன்னே கூறியவற்றிக்கும் தற்சமய நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளுக்கு, அவ்வப்போது மற்றவர்களது நடத்தைகளால் ‘விளக்கம்’ கொடுப்பதையே ஆய்வாகவும் கற்பிப்பர் இவர்.

எனவே, மற்றவரது சமூக-பொருளாதார அரசியல் அகராதிகளுள் ஒழிந்து வாழும் இவர்களது தனிப்பட்ட அரசியல் அகராதியில் எஞ்சிவிடுது ‘யதார்த்தம்’ என்ற ஒரு சொல்லு மட்டுமே.

இறுதியில் இதுவே இவர்களது அரசியல் விஞ்ஞாபனம்.

தேர்தல் பண்டி(கை)க் காச்சல்

இலங்கைத் தீவின் அரசியல் அங்கு வாழும் சாதாரணர்களின் கைகளில் இல்லை என்பதற்கு இன்று போலியாக கத்தி எழுப்பப்படும் தேர்தல் காச்சலே அத்தாட்சி.

சிங்கள நாட்டு அரசாங்கத்தின் உத்தியோக எதிர்க் கட்சியினர் தமது வேட்பாளரை நிர்ணையம் செய்ய முடியாதபடி, அரசின் இராணுவத் தளபதியையே பொது வேட்பாளனாக முன்நிறுத்தப்பட வேண்டியதிலிருந்து தேர்தலின் போலித் தன்மையை ஊகித்துக் கொள்ளலாம். அதே தருணம் இலங்கை அரசியலின் ஓட்டத்தின் போக்கினையும் கணிப்புடன் குறித்துக் கொள்ளலாம்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் சமுதாயங்களது பங்கு என்ன என்று அங்கலாய்த்துக் கொள்வதுதான் இன்று எமது அரசியல் கட்சிகளது செயற்பாடாக உள்ளது.

புலிகள் பலாத்காரமாக தமிழரதும் தமிழ் பேசும் சமூகங்களதும் அரசியலை தம்வசம் எடுத்தமையும், காலப்போக்கில் சடுதியான அவர்களது மறைவும் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன என்பதை இப்போதுதான் சிலர் உணரத் தொடங்குகிறார்கள்.

புலிகளின் பலாத்கார அரசியலின் நேரடி விளைவாக இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த தமிழ் பேசும் சமூகங்கள் தம் சுயஇயல்பை ரத்து செய்து சிறீ லங்கா அரசுடன் போவதின்றி வேறு வழி இல்லை என்ற நிலைமையை ஏற்க வேண்டியவரானார்கள். மேலும், இஸ்லாமிய மதவாரியான தேசியச் சித்தாந்தங்கள், பல ஆதி ராகங்களைக் கொண்டிருந்தாலும், கீதங்களாக உருப்பெற காரணகர்த்தர்களும் புலிகளே என்கின்றன அதன் சார்பான எழுத்துக்கள்.

புலிகளது வஞ்சகங்களுக்கும் படுகொலைகளுக்கும் உட்படுத்தப்பட்ட தமிழ் அமைப்புகளோ தமக்கு வேறு வழி இல்லை, பாதுகாப்பிற்காக கொழும்பில் உள்ளோம், புலிகள் இல்லாது போகின் எமது அரசில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்கள். இது நடக்கக் கூடிய காரியமோ இல்லையோ அவர்களது-பாதுகாப்பு என்ற விடையத்தையும், புலிகளது அட்காசத்தையும் உணர்ந்தவர்கள் ‘ஒரு வேளை?’ என்ற கணிப்புடன் காலா அவகாசத்தைக் கொடுத்தார்கள்.

இன்று புலிகளோ இல்லை. அவர்களது ஆதரவாளர் என்று இருந்தவர்களும் எவ்வளவு தூரம் தமது தமழீழ நிலைப்பாடுகளைவிட்டு ஓட முடியுமோ ஓடுகிறார்கள். ஏன், அவர்களது அங்கத்தவரே அரசியல் வரம்புகளை மறந்து வக்கற்று தமது ‘பிசினஸ் இன்ரறஸ்டுகளைக்’ காப்பாற்ற மகிந்தா குடும்பத்தினரிடம் போய்ச் சேர்கிறார்கள்.

இந் நிலையில், “(புலிகளுக்கு) மாற்று-அரசியல் பேசியவர்களது நிலைப்பாடுகள்தான் என்ன?” எனக் கேட்டால், வெவ்வேறு திக்கில் அரசுடன் நிற்கும் அவர்களது ‘யதார்த்த நியாயங்கள்தான்’ காதுகளை நெருக்குகின்றன.
இவற்றிலிருந்து புலிகளது நடத்தைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எவ்வளவு ஆழமானவை என்பது துலக்கமாகிறது.

புலிகள் தம்கைகளில் அதிகாரத்தை மட்டுமின்றி, அதற்காக தமிழரது மிடுக்கை மட்டுமின்றி, அவற்றின் அடிகோலிகளாக இருக்கும் மக்கள், பொருளியல், மனோவியல் என்ற சகல தளங்களையுமே கைப்பற்றி வைத்திருந்ததால் இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல, கூடவே மற்றைய தமிழ் பேசும் சமூகங்களும் அரசியற் தளமற்ற பேதைகள் ஆகி உள்ளார்கள்.

எனவே, சிலகாலங்களுக்கு இச்சமூகங்களது தலைமைகள் பட்டியுள் அடைபடப் போகும் ஆடுகள் போல மேயவைத்து சாய்த்து செல்லப்படுவது, சகிக்க வேண்டிய எதிர்பார்த்த விடயமே.

ஆனால், காலப்போக்கில் தமது சமுதாயங்களின் உண்மையான பலம்-பலவீனம், அடிப்படை நிலைப்பாடுகள், தமிழ் பேசும் சமூகங்கள் இடையேயான ஒத்துழைப்பு-போட்டி, சிங்கள அரசுடனான சர்ச்சை-உறவின் அவசியம், வௌ;வேறு பிரதேசங்களில் தமிழ்-சிங்களம் பேசும் சமூகங்கள் இடையேயான உறவுகள்-போட்டிகள், பற்றிய நிலைப்பாடுகளை சமூக-சுயநிலை பெற்றபின் எடைபோட்டு முடிவுகளை எடுக்கும் சமூகத்-தலைவர்கள் உருவாகுவர் என்பதில் ஐயமே இல்லை.

ஆனால், அதற்கு பல அரசியற் கட்டங்களைத் தாண்ட வேண்டியவையாகவே இச்சமூகங்கள் உள்ளன என்பதையும் ஏற்றாக வேண்டும்.

அரசியற் பிரதிநிதித்துவம்
அதிகாரமயப்படுத்தப்படாத மக்களுக்கு ‘அதிகாரத்-தலைமை’ கொடுப்பதற்கான இரு வழிகளும் அதாவது, தேசியவாதம் இராணுவத்துவம் என்பவை, தவிர்க்கப்பட வேண்டிய நிலையில், தலைமைகள் என்பது வெற்றுக் கோதானவே என்பது தத்துவார்த்த உண்மை மட்டுமல்ல, யதாரத்தங்களின் யதார்த்தமுமே.

எனவே, ஜனநாயகப் பிரதிநிதித்துவம் என்பது தேசியத்தை அண்டிய சித்தாங்களின் கூட்டான வடிவங்களையே தங்கி இருக்க முடியும். அவைகள் அற்றுப் போகும்போது அப்பிரதிநிதித்துவங்கள் வெறுமையானவை என்பதை யாரும்தான் கண்டு கொள்ளலாம். இதனை ஜேவிபியினரது வர்க்கப் போரின் தோல்வியின் பின்னர் தம்மை சிங்களத் தேசியக் கொடியால் போர்த்துக் கொண்டதிலிருந்தும், புலிகள் போனபின் வாயற்று நிற்கும் சகல தமிழ் அரசியற் கட்சிகளது அரசியல் நடத்தைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

அதாவது, வளர்ச்சியற்ற மூன்றாம் உலக நாடுகளில் தேசியவாதம், தேசியத்துவம் என்பவையே இன்றும் மக்களை அணி திரட்டும் வாதங்களாக உள்ளன. சமூக-பொருளாதாரம், பிராந்திய அல்லது சமூக ஜனநாயகங்கள் பற்றியவை இரண்டாம்தர விடயங்களாகவே இடம்பெறுகின்றன. இதனை அவற்றை முன்னெடுக்கும் வர்க்கங்களைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய போதிலும், பெரும்பான்மையினரது முன்னெடுப்புகளாலான குளப்ப நிலையும் காரணிகளாகின்றன.

எனவே, இங்கெல்லாம் அரசியல் அதிகாரத்தை தேர்தலூடாகவோ பலாத்காரமாகவோ கைப்பற்றிக் கொள்பவர்கள் தேசியவாதத் தன்மை அற்ற நிலையில் பிரதிநிதுத்துவம் மறுக்கப்பட்டவராகவும் ஆழுமை அற்றவராகவும் காணப்படுகிறார்கள்.

இந்நிலையில் தனது சமுதாயத்தையாவது சமூகமாக மாற்றிக்காட்டிட வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தவர் ஆகி புதிய வடிவங்களில் செயலாற்ற முயல்கிறார்கள்.

இச்சூழலில், பெரும்பான்மையினரின் ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேசி மக்களது உடமைகளை அவைபாலான இறைமைகளை இவர்களால் பெற்றுத் தரமுடியும் என நம்புவோர் புலிகளது தனிநட்டையும் உமாவின் ‘பொங்கலுக்கு தமிழீழத்தையும்’ காத்திருந்த பேதைகளிலும் பேதைகளாவர். மேலும், சிங்கள ஜனாதிபதிகளை கடந்த மூன்று தடவைகளில் நிர்ணையம் செய்த புலிகளுக்கு என்ன நடந்தது என்பதும் ஒரு பாடம்.

கொழும்பில் இருக்கும் அதிகாரத்தில் பங்கு கேட்பவர்கள் கொழும்பிலேயே தங்கிவிவதும், அங்கேயே தமது அரசியல்-பொருளாதார மூலதனங்களை அமைத்துக் கொள்வதும் தற்செயலான விடயங்களல்ல. சிங்களவாதக் குழுக்கள் பிராந்தியங்களில் ஆரம்பித்திருந்தாலும் கொழும்பு அரசைக் கைப்பற்றுவதையும் அதனை காத்துக் கொள்வதையுமே தமது இறுதிக் கருமங்கள் ஆக்கிக் கொள்கின்றன என்பதும் புதுமையானவை அல்ல.

ஜேவிபியினர் கொழும்பிற்கு அப்புறமானவர்கள் என்பதும், தமிழ் தேசிய வாதிகளாயினும் பிரதேச விடுதலை கேட்டு உயிர் நீர்த்த புலிகளும் அவர்களின் கிழக்கு மாகாண மீதியான TMVP யினரும், கொழும்பைத் தாண்டியவர்கள் என்பதும் தொடர்புகள் இல்லாத விடயமல்ல.

கொழும்பும் அது அமைந்துள்ள மேற்கு மாகாணமும் பொருளாதாரத்தில் இலங்கைத் தீவின் மற்றைய பிராந்தியங்களிலும் பாரியளவில் வேறுபட்டவை என்பதும், அவ்வகையில் பின் தங்கியவர், அதிகாரமயப்படுத்தப் படாதவர்கள், யாவரும் புவியியல் ரீதியில் வறண்ட வலையத்துள் (dry zone) வாழ்பவர்கள் என்பதும் கவனத்திலிருந்து இலகுவில் புறம்பாக்கிடும் விடயமுமல்ல.

சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் நகர்புறப்படுத்தப்பட்ட (urbanised) தொழிலாளர்களிடமிருந்து எழவில்லை என்பதும், அவை குடியானவர் சமுதாயங்கள் சமூகங்களது இளைஞர்கள் வசமிருந்தே இதுவரை எழுந்துள்ளன என்பதும் சாதாரண விடயமல்ல.

வெள்ளையரிம் இருந்து பெற்ற விடுதலையின் உற்சாகம் சில வருடங்களே தங்கிற்று. அதன்பின் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்கள் பேரில் அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண்ட சிங்களவாதக் குழுக்கள் தீவினை அழிவிற்கே இதுவரை இட்டுச் சென்றுள்ள போதிலும் கொழும்பின் பொருளாதாரம் வளர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலைகளையெல்லாம் ஒருமைப்படுத்தி அவற்றுள் இருந்து கணிப்புகள் சொல்பவன், வறண்ட வலையத்து மக்கள் அதிகாரமயப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கே முதலில் வர முடியும்.

அடுத்து அவனது கேள்வி, “அதனை எப்படி நிஜமாக்குவது?” என்பதாகவே அமையும்.

“நாம் இனங்களாகவே அதனை செயற்படுத்த முடியும்” என்பது தேசியவாதத்தின் நியாயமான பதில்.

ஆனால், அதற்கோ உட்சூழலோ ஒருபோதும் சாட்சியமாக இருக்கவில்லை. சரி, இது தர்க்கத்திற்குரிய விடயமென தற்செயலாக ஏற்றுக் கொண்டாலும், புறச் சூழலோ தேசியவாதத்தின் தனிநாட்டிற்கு இடம் கொடுப்பதாக எப்போதும் இல்லை.

“அப்படியானால், வெளியாரது நிர்ப்பந்தம் என்ற ஒரே காரணத்தால், தேசியம் என்ற அபிலாசை அதனூடாக அடையக் கூடிய உடமைகளின் இறைமைகள் எல்லாவற்றையும் மக்கள் மறந்து போகவேண்டியது தானா?”

முடியாது! ஆனால், பாறைக் கல்லுகளுடன் மோதியபடி தாவரங்கள் அவற்றிடையே வளர்வதில்லை. சர்வதேச- சந்தைப்படுத்தலும், பிராந்திய பூகோள-அரசியலும் தேசியவாதத்தின் தனிநாட்டிற்கு சாதகமாக இல்லாது போகினும், பிராந்திய-ஜனநாயகத்தை அவை எதிர்க்கின்றன அல்லது மறுக்கின்றன என்பது தவறு. எனவே தேசியவாதத்தின் தனிநாட்டுக் (separate state) கோரிக்கைக்கும் தேசியத்துவத்திற்கும் (statehood) இடையிலான விளக்கங்களைக் புரிந்தாக வேண்டும். இங்கேதான், ‘காந்தியப் போராட்டத்தின்’ பின்னணியில் தெலுங்கான தேசியத்துவத்தை இந்திய மத்திய அரசு இன்று ஏற்றுக் கொண்டதை நாம் அவதானிக்க வேண்டும்.

ஆனால், இதற்கான அரசியற்-காரணங்கள் பலவென ஒப்பிக்கப்பட்டாலும், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சியும் அதனுள்ளான பிரதேசவாத ஏற்றத்தாழ்வுகளுமே அடிப்படைக் காரணிகள் என்பதை நாம் மறந்து போகலாகாது.

ஆகவே, அதிகாரமயப்படுத்தப்படாதவரிடம் பரந்துபட்ட ஓரணிப்போக்கு இடம்பெறும் போதே, அதனுள் தேசியத்துவங்களையும் சமூக-அடையாளங்களையும் அவைசார்ந்த உடமைகளையும் பேணிடலாம் என்பதும், காலப்போக்கில் அவற்றின் இறைமைகளையும் ஊர்ஜிதம் செய்திடலாம் என்பதும் எமது வாதம்.

ஆகவேதான், இலங்கையில் வறண்ட பிரதேசத்திற்குரிய ஒரு பொருளாதாரத் திட்டமும், அதற்கேற்ற போருளாதார-முன்னேற்றத் திட்டமும் வேண்டும் என்கிறோம்.

இவற்றினை இந்த ஜனாதிபதித் தேர்தலும் அதன் வேட்பாளர்களும் விரும்பினால்கூட தர முடியாதவை என்பதையும் நாம் அறிவோம். ஏனெனில், அவர்களுக்கு அதற்கான சமூக-பொருளாதாரச் சிந்தையோ, தொலைநோக்கோ, அதற்கான ஞானமோ இல்லை என்பது பட்டவாரத்தனம்.

இல்லாவிடில் ‘சுதந்திரம்’ பெற்ற 60 ஆண்டுகளில் 40 வருடங்களை உள்நாட்டுப் போர்களில் களித்திருக்கமாட்டார், தமது வங்கிச் சேகரிப்பை பல்லாயிர மடங்காக மாற்றி இருக்க மாட்டார். 50 வருடங்களின் பின்னர் இன்னுமொரு தடவை, இராணுவம் அரசைக் கைப்பற்றப் போகிறது எனக் கூக்குரல் போடமாட்டார்.

ஆனால், இவை அனைத்தையும்விட, இவர்களோ இவர்கள் நடத்தும் அரசாங்களோ சுதந்திரமாக அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலையை இழந்துவிட்டமையே அதற்கு முக்கிய காரணமாகும் என்கிறோம்.

புலிகளை அழிப்பதற்கு பேரம் பேசியதில் தமது நாட்டின் இறைமைகளை அடகு வைத்தார்கள், நாட்டின் சுய இயல்பின் பெரும் பகுதியை இழந்தனர்.

புலிகளை தோற்கடிப்பது என்ற பேரில் தமிழர்களை அழித்தமையால் மனிதாபிமானத்தையும் தன்-ஞானத்தையும் இழந்தனர், அதனாலும் சுய இயல்பு அற்றவராகினர், இனிமேல் வெளியார் அழுத்தங்களிலேயே முடிவுகள் கொள்பவருமாகினர்.

இலங்கையின் சமுதாய அணிகளை (civil society) எல்லாம் ஒழித்து எஞ்சியவற்றை அரசாங்கத்தை ஆழும் குடும்பங்களின் கைக்கூலிகளாக இராணுவமயப்படுத்தி விட்டதால், சமூக-நீதி அரச-நீதி என்பவை அடியொட்ட அற்றுப் போய், ஆழுமை என்பதும் அரசின் இறைமை என்பதும் தொடர்பற்றவை என்றாக்கினர்.

பொருளாதார ரீதியில் மற்றைய அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் வட்டிக்-கடன் வாங்கிச் ‘சீவனம்’ செய்யும் சிறீ லங்கா தனது எந்தப் பிரதேசத்தையும் பொருளாதாரத்தில் வளர்த்திடும் சுய-வக்கற்றது. ஏன், 2001 இன் பின்னர் கொழும்பிலும் அதனைச் சுற்றியும் இடம்பெற்ற மூலதனத்தில் 40% மேலான பங்கு வெளிநாட்டுத் தமிழர்களது என புள்ளி விபரங்கள் சொல்வதில் பல உள்ளார்த்தங்கள் உண்டு.

ஆகவேதான் அரசும், அதிகார வர்க்கங்களும் கூட அதிகாரமயப்படுத்தப்பட வேண்டியவை ஆகிவிட்டன எனலாம்.

இவ்வாறு, அரசிடமோ அரசாங்கத்திடமோ உண்மையான அதிகாரம் இல்லாத நிலையையே தூர்ந்துபோன-அரசு (failed state) என வர்ணிக்கிறோம்.

எனவேதான், இத்தேர்தல் வெளியாருக்கான காட்சியே அன்றி இலங்கைவாழ் மக்களது முடிவில் தங்கியவை அல்ல என்கிறோம். இவற்றினால் ஏற்படப்போகும் ஏதாவது விளைவுகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றும் கருதுகிறோம்.

சர்வதேசிய நிர்வாகிகளுக்கு புலிகளை அழிப்பதற்கான முடிவை எடுப்பதற்கும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 15-20 வருடங்கள் எடுத்தன என்றால், சிறீ லங்காவை தம்வழி கொண்டுவர சிலகாலம் எடுக்கும் என்பதை புரியாதவர்கள் அல்லர் அவர்கள். அதற்கு அரசியற் குடுப்பங்களது அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்பதையும் பல புதிய ஜனாதிபதிகளை உருவாக்கவும் வேண்டும் என்பதையும் தெரிந்தவர்கள் அவர்கள்.

எனவே, தேர்தலில் நாமும் ஏதாவது சொல்லிட வேண்டும் என்ற அவாவோ, அறிவிலாமையால் எழும் செருக்கோ, எம்மிடம் இல்லை.

தமிழ் பேசும் மக்களும், அவர்கள் போலவே அதிகாரமயப்படுத்தப்படாத சிங்கள மக்களும், இந்நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்வாரேயாகின், குறைந்தபட்சம் தமது ‘அரசியற்-தலைவர்கள்’ போலாகாது, தத்தமது சுயமரியாதைகளையாவது காப்பாற்றியவராக எஞ்சுவர்.

நன்றி.
ரவி சுந்தரலிங்கம்

12 மார்கழி 2009
Academic Secretary- ASATiC
E-mail: academic.secretary@gmail.com

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கவே ஐக்கிய தேசிய கட்சி – ஜே.வி.பி கூட்டு

dew.jpgஇலங்கை யின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. – ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார். எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல.

மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது. எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது. இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள் – அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை

macca.jpgஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.

உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடு த்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

பொன்சேகாவின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூற்று நகைப்புக்குரியது – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

msri-sens.jpgதாம் பதவிக்கு வந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு வழிங்குவதாக ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது நகைப்புக்குரிய ஒரு விடயமாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திர்பால சிறிசேன தெரிவித்ததார். மஹாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி ஆகியவற்றின் தேவைக்காகவல்ல அவருக்குப் பின்னால் இயங்கும் மற்றுமொரு சக்தியின் அழுத்தத்துக்காகவே.

சரத்பொன்சேகா கட்சி பேதம் அற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஜே.வீ.பி கூட்டத்துக்கு வராத அவர்  ஐ.தே.க கூட்டத்துக்கு யானைச் சின்னத்துடன் வந்தார். இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் தெரிவையே இந்தியா விரும்புகின்றது : த ஜெயபாலன்

rajapaksa_and_soniaஜனவரி 26ல் நடைபெறவுள்ள இலங்கை அரசத் தலைவருக்கான தேர்தல் தீவின் கடல் எல்லைக்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. நடந்து முடிந்த உள்நாட்டுப் போரை கால அட்டவணைக்கு உட்பட்டு முடித்துள்ள இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அதன் பலனை இத்தேர்தலில் அனுபவித்துவிடத் துடிக்கின்றார். ஆனால் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசுத் தலைவரின் நடவடிக்கைகள் மேற்கு நாடுகளின் அரசியல் ராஜதந்திரங்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால் ஐ நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றக் கங்கணம் கட்டி நின்ற மேற்கு நாடுகளின் முயற்சிக்கு இலங்கை அரசு தனது இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி நெத்தியடி வழங்கியது.

இலங்கை அரசுத் தலைமைக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐநா மனிதவுரிமைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia (Plurinational State of), Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, Zambia.

அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள்: Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, United Kingdom of Great Britain and Northern Ireland;

வாக்களிப்பில் இருந்து விலத்தி இருந்த நாடுகள்: Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, Ukraine.

பிரித்தானியா உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ‘மேற்கு நாட்டு அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை விடுத்து இந்தியா, சீனா, ரஸ்யாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள். அவர்கள் தான் இலங்கை அரசின் மனித உரிமை நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்’ எனச் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களே தங்களை அணுகும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தெரிவித்து இருக்கின்றார்கள். இவ்வாறு மேற்கு நாடுகள் இலங்கை அரசு மீதான தங்கள் கட்டுப்பாட்டை பெரும்பாலும் இழந்த நிலையே தென்பட்டது. அதனால் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்காக மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள், ஜிஎஸ்பி பிளஸ் என்ற வடிவங்களில் சில அழுத்தங்களைப் பிரயோகித்த போதும் இலங்கை அரசு மீதான தங்கள் கட்டுப்பாட்டை நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

குறிப்பாக மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க, பிரித்தானிய மேற்கு நாட்டு அரசுகளும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் புரிந்துள்ளதால் அவர்களால் ஒரு எல்லைக்கு அப்பால் இலங்கை அரசு மீதும் அழுத்தங்களைக் கொண்டுவர முடியவில்லை. மேலும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற மேற்கு நாடுகள் மேற்கொண்ட அதே பரப்புரையிலேயே இலங்கை அரசும் தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தது.

Sri Lanka: Recharting US Strategy after the War.(pdf)
http://docs.google.com/fileview?id=0B8kHEIyKsdALYWRhYjc3MDAtNjY0Yi00NmVjLWE5YjUtMzYxM2E1Njg1MTA4&hl=en என்ற அமெரிக்க செனட்டின் வெளியுறவுக்குழு டிசம்பர் 7ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்த நாட்டை மேற்கு நாடுகளில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்திவிடும் என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் நலன்களில் மாற்றம் ஏற்படும் என்பதை வருமாறு சுட்டிக்காட்டுகின்றது: ”யுத்தம் முடிவடைந்த நிலையில் ஐக்கிய அமெரிக்கா இலங்கையுடனான உறவுகளை அதன் புதிய அரசியல் பொருளாதார யதார்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் மீள்மதிப்பீடு செய்ய வேண்டும். மனிதத்துவம் தொடர்பான விடயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கை ஒரு விடயத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது. இது உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உதவப் போவதில்லை. இது அப்பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் நலன்களில் குறுகிய மாற்றங்களை ஏற்படுத்தும்.’

இவற்றின் பின்னணியில் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டு அதனைத் தனிமைப்படுத்தி அதனை மேற்குக்கு எதிரான அணியியை நோக்கித் தள்ளுவதிலும் பார்க்க இலங்கையில் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசினை ஏற்படுத்த வாய்ப்பிருந்தால் அதனை முயற்சி செய்வது மேற்குநாடுகளுக்கு அதீத பலனைக் கொடுக்கும். அந்த வகையில் வருகின்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மூலம் ஒரு ‘ரெஜீம் சேன்ஜ்’க்கு மேற்குலகம் முயற்சிக்கின்றது. அதற்கான ஒரு முயற்சியாகவே ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு சந்தித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை தேசம்நெற்றில் வெளியான முன்னைய கட்டுரைகளில் சுட்டிக்காட்டி இருந்தோம். இச்சந்திப்பு போர்க்குற்றம் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கு அல்ல என்றும் சுட்டிக்காட்டி இருந்தோம்.

இந்த ‘ரெஜீம் சேன்ஜ்’ இன் பின்னணியிலேயே சூரிச் மாநாடும் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்புகளும் அதன் பின்னணியில் உள்ள நாடுகளுமே அதற்குச் சான்று. தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன் தமிழர் தகவல் நடுவத்துடன் International Working Group (IWG) என்ற அமைப்பும், Essex பல்கலைக் கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் Initiative on Conflict Prevention through Quiet இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக தமிழர் தகவல் நடுவத்தின் நிறைவேற்றுச் செயலரான வி வரதகுமார் தெரிவித்துள்ளார்.

International Working Group on Sri Lanka என்ற இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார்‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார்.

Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது. இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். சூரிச் மாநாட்டில் தேர்தல் விடயம் உட்பட பல தலைப்புகளில் சிறப்பு ஆய்வு அறிஞராக அழைக்கப்பட்ட ஜோன் பக்கர் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பின் ஒட்டாவா கிளையில் நிபுணத்துவ ஆரோசகராக பணியாற்றுகிறார். இவர் பிரித்தானியாவில் உள்ள Essex பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிகின்றார்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகள் நாடுகளைத் தவிர சுவிஸ்லாந்து நாட்டின் வெளிநாட்டு அமைச்சும் சூரிச் மாநாட்டிற்கு நிதியுதவி வழங்கி உதவியுள்ளது. ‘இந்த நாடுகள் எல்லாம் இலங்கையின் விடயங்களில் தலையிடுகின்றது என்றால் அதற்கு ஒரு நோக்கம் இல்லாமல் இருக்காது’ என ஈபிஆர்எல்எப் தலைவர் சுகு இந்த மாநாட்டின் இறுதிநாள் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ரெஜீம் சேன்ஜ் ஒன்றை மேற்கு நாடுகள் விரும்புகின்றது’ என்றும் தெரிவித்தார். மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ‘ரெஜிம் சேன்ஜ் ஒன்றுக்காக தமிழ்க் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும்’ எனச் சூரிச் மாநாட்டில் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இலங்கை அரசின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அடிப்படையில் திறந்த பொருளாதாரத்தை ஆதரிக்காத கட்சி. ஒப்பீட்டளவில் அதன் உறவுகள் கீழைத்தேய நாடுகளுடனேயே நெருக்கமாக இருந்தது. மேலும் இலங்கை அரசுக்கு முண்டுகொடுக்கின்ற ஜேவிபி, ஜேஎச்யு ஆகிய தேசியவாதக் கட்சிகளும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தீவிர சிங்கள தேசியவாதத்தை தம்முள்ளே கொண்டுள்ளன. 2009ல் மட்டுமல்ல 1971ல் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியை அடக்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது இந்தியாவும் சீனாவுமே.

2009ல் இலங்கை அரசின் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், கியூபா, வெனிசுவெலா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளே இலங்கை அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தன. இவற்றில் கியூபா, வெனிசுவெலா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் இலங்கையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்காத போதும் மேற்கு நாடுகளின் – காலனித்துவ நாடுகளின் செயற்பாடுகளுக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இலங்கைக்கான அந்த நாடுகளின் ஆதரவு அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தத்தில் இலங்கை அரசின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியா. ஏனைய அனைத்து நாடுகளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்து இந்தியா தனித்து நின்று இலங்கைக்கு விரோதமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு இருந்தால் இலங்கை அரசால் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக காலனித்தவ நாடுகளையும் அவர்களது ராஜதந்திரங்களையுமே இறுதிவரை நம்பி இருந்தனர். அதற்கான மிக உயர்ந்த விலையையும் செலுத்தினர்.

இவற்றின் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தீர்மானிக்கப் போகின்றது. யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் அரசியல் எதிர்காலம் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதில் மேற்கு உலகிற்கும் கீழைத்தேய உலகிற்கும் பாரிய முரண்பாடு உண்டு. இந்த முரண்பாட்டின் இரு துருவங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டும் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு மேற்கு நோக்கியும்- சீனா, இந்தியா உட்பட்ட கீழைத்தேய நாடுகள் ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சி நோக்கிச் சாய்வதும் இயல்பானதே.

ஆனால் இந்தத் தேர்தலில் குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு கவனத்திற்குரியது. ஆனால் இந்தியா தனது நிலைப்பாடு பற்றி எவ்வித சமிக்ஞையையும் வெளிப்படையாக வழங்குவதாக இல்லை. தேர்தலில் நிற்கின்ற இரு பிரதான போட்டியாளர்களும் இந்தியாவுடன் தங்கள் நல்லுறவை உறுதிப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை மீறிச் செயற்பட முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. அதனால் நேரடியான எவ்வித சாய்வையும் இந்தியா மேற்கொள்வதற்கான தேவை அங்கில்லை.

ஆனால் மேற்கு உலகிற்கு எதிரான அணியில் உள்ள இன்றைய அரசின் பக்கம் ஒரு மென்போக்கு இந்தியாவுக்கு உள்ளது. சீனா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய போட்டியாளர்களை இலங்கையில் கையாள்வதிலும் பார்க்க மேற்குலகை கையாள்வது இந்தியாவுக்கு சற்று கடினமானதாகவே அமையும். அதனால் இன்றைய ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்படுவதில் இந்தியாவுக்கு எவ்வித சங்கடமும் இல்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவில் நிற்கும் சரத் பொன்சேகா அரசியலுக்கு அறிமுகமாகாதவர். அவர் எவ்வித அரசியல் முடிவுகளை மேற்கொள்வார் என்பது பற்றி எதிர்வுகூறக் கூடிய நிலையிலும் இந்தியா இல்லை. அதனால் தெரியாதா ஒருவரிலும் பார்க்க நல்லதோ கெட்டதோ அரசியலில் அறிமுகமான ஒருவர் ஆட்சிக்கு வருவதை இந்தியா சாதகமாகவே கணிக்கும்.

இந்திய அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகளும் இன்றைய ஜனாதிபதி ராஜபக்ச பற்றிய ஒரு மென்போக்கையே வெளிப்படுத்துகின்றன. அண்மையில் தமிழ்கட்சிகள் தங்கள் அடையாளங்களைக் களைந்து தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தம் மகிந்த ராஜகபக்ச அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தனிப்பட்ட முறையில் கருத்து வெளியிட்ட இந்திய ராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததன் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரியவருகின்றது. இந்திய ராஜதந்திரிகள் தேசியக் கட்சிகளுடன் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து செயற்படுவதே சரியானது என்ற வகையில் அழுத்தங்களை வழங்கி உள்ளனர்.

தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என்று பொதுப்படையாக இராணுவத் தளபதியாக இருக்கும் போது சரத் பொன்சேகா சரியாகவே விமர்சித்திருந்தாலும் அது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை. குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றக் கூடிய ஆளுமை தமிழக அரசுக்கு உள்ளது. இன்று தமிழக அரசுக்கும் மகிந்த அரசுக்கும் மிக நெருக்கமான உறவுகள் ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும் அதனையொட்டி வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களின் விடுவிப்பும் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வு. இது தற்போதைய இலங்கை தமிழக ஆளும் குழுமங்களிடையேயான உறவுகளை மிகவும் வலுப்படுத்தி உள்ளது.

இந்திய இராஜதந்திர மற்றும் புலனாய்வுத்துறையினரின் பின்புலத்தில் இயங்கும் SAAG இணையத்தளத்தில் கேர்ணல் ஆர் ஹரிகரன் (Col. R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90.He is associated with the South Asia Analysis Group and the Chennai Centre for China Studies.), பி ராமன் (B Raman is Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute for Topical Studies, Chennai.) ஆகியோர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இந்திய ராஜதந்திரத்தின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தக் கூடியவை.

நவம்பர் 14ல் கேர்ணல் ஹரிகரன் ‘Comments on Gen Fonseka’s Resignation’, என எழுதிய கட்டுரையில் ‘President Rajapaksa has built close relations with Indian leadership. Probably he made no major move that would impact India’s strategic relations with his country without consulting India. – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைமையுடன் நெருக்கமான உறவை கட்டமைத்துள்ளார். அனேகமாக அவர் இந்தியாவின் நடவடிக்கைத் – திட்டமிடல் – உறவைப் பாதிக்கின்ற ஒரு நகர்வை இந்தியாவுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கமாட்டார்” என எழுதியுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கான போட்டியில் இந்தியாவின் தெரிவு யாராக அமையும் என்பது பற்றி கேர்ணல் ஹரிகரனின் பதில் வருமாறு: ‘I think Rajapaksa has a better equation with Indian leadership. He is a seasoned politician who has cultivated the Indian leaders over the years. On Tamil autonomy issue he has no great differences with India, although he has pushed it down in his list of priorities for political reasons. – நான் நினைக்கின்றேன் ராஜபக்ச இந்திய தலைமையுடன் மேலான சமன்பாட்டைக் கொண்டுள்ளார். அவர் ஒரு பருவகால அரசியல்வாதி. அவர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் தலைவர்களை பயிரிட்டுள்ளார். தமிழர்களுடைய சுயாதீனம் தொடர்பில் அவருக்கும் இந்தியாவிற்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக அவ்விடயத்தை முக்கியப்படுத்தலின் வரிசையில் பின்தள்ளியுள்ளார்.’

கேர்ணல் ஹரிகரன் சரத்பொன்சேகா பற்றி எழுதுகையில் ‘General Fonseka has his networking more with Indian military leadership than with political leaders. His strong views smacking of Sinhala nationalism rather than Sri Lanka nationalism makes Government of India uncomfortable. -தளபதி பொன்சேகாவினுடைய வலைப்பின்னல் இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்ததிலும் பார்க்க இந்திய இராணுவத் தலைமைகளுடனேயே கூடுதலாக இருந்தது. இலங்கைத் தேசியவாதத்திலும் பார்க்க சிங்களத் தேசியவாதத்தில் அவர் கொண்டுள்ள சுவை இந்திய அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசு பற்றிக் குறிப்பிட்ட விடயத்தையும் சுட்டிக்காட்டிய கேர்ணல் ஹரிகரன் இறுதியாக இவ்வாறு தனது கட்டுரையை முடிக்கின்றார். ;. ‘So overall, India would probably prefer Rajapaksa to continue as president. ஆகவே முழுமையாக் எடுத்துக் கொண்டால் அனேகமாக இந்தியா ராஜபக்ச ஜனாதிபதியாகத் தொடர்வதையே விரும்பும்.’

பி ராமனும் கேர்ணல் ஆர் ஹரிகரனுடைய தொனியிலேயே தனது கட்டுரையை வரைந்துள்ளார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு தளபதி பொசேகாவின் இராணுவத் தலைமையிலும் பார்க்க மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலைமையே பிரதான காரணம் என்கிறார். அதனால் ‘Gen. Fonseka Devalues Himself – தளபதி பொன்சேகா தன்மதிப்பைக் குறைக்கின்றார்’ என்ற தலைப்பில் பி ராமன் நவம்பர் 17ல் கட்டுரையை வரைந்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது என்ற வகையில் பி ராமனின் கட்டுரை அமைந்துள்ளது. கட்டுரையை அவர் வருமாறு முடிக்கின்றார். ‘Fonseka has only devalued himself. The political forces in Sri Lanka which are exploiting his pique as a stick to beat Rajapaksa with are playing an unwise game. They may end up by diluting the professionalism of the SL Army. – இதன் மூலம் பொன்சேகா தன்மதிப்பை மட்டுமே குறைத்துள்ளார். அவருடைய கடுப்பை இலங்கையில் உள்ள அரசியல் சக்திகள் ராஜபக்சவை அடிப்பதற்கான தடியாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது ஒரு புத்திசாதுரியமான செயல் அல்ல. இவர்கள் சிலவேளை இலங்கை இராணுவத்தின் தொழில்நேர்த்தியை பலவீனப்படுத்துவதில் முடிப்பார்கள்.’ இவை இந்திய ஆளும் குழுமத்தின் போக்கை நாடி பிடித்துப் பார்க்க உதவுகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை 2016 வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற உள்விருப்புடனேயே இந்தியா சில அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருப்பதாகத் தெரிகின்றது. பிரதான போட்டியாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத்பொன்சேகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வீரர்கள் என்ற இறுமாப்புடனேயே தேர்தல் களத்தில் குதிக்கின்றனர். இத்தேர்தலில் இந்த இரு தலைவர்களின் தேர்தல் கொள்கை விளக்கங்களில் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுதி மொழியும் வழங்கப் பட்டிருக்கவில்லை. இரு தரப்பிலும் தொங்கிக் கொள்ளும் சிறுபான்மையினக் கட்சிகள் வழமைபோல் வெறும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தங்கள் ஆதரவை வழங்கி உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வரை, நடந்து முடிந்த அத்தனை தேர்தல்களிலும் ஆளும் மகிந்த அரசின் கூட்டே பெரும்பாலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மகிந்த அரசைத் தோற்கடிப்பதற்கு எதிர்த்தரப்பு முற்றிலுமாக இணைந்து செயற்படுத்துவதன் மூலமே அதனைச் சாத்தியமாக்க முடியும்.

ஆனால் எதிர்த் தரப்பின் நிலை அவ்வாறு இல்லை. ஏற்கனவே பிளவுகள் வெடிக்க அரம்பித்து உள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் கூட எதிர்த் தரப்புடன் முழுமையாக இல்லை. இரு வேட்பாளர்களுக்குமாக சிறுபான்மைக் கட்சிகள் பிளவுபட்டு உள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்ட தமிழ்ச் சமூகம் இத்தேர்தலில் ஆர்வம் காட்டுவதாக இல்லை. 2005 தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்க அனுமதிக்காமல் செய்ததன் மூலம் மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றியீட்டச் செய்தது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புமே. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமற் போய்விட்டார்கள். அவர்களுடைய பினாமிகள் மட்டுமே உள்ளனர். அவர்களால் இத்தேர்தல் தொடர்பாக ஒருமித்த முடிவை எடுக்க முடியாது என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்காவோ அல்லது சரத் பொன்சேக்காவுக்காகவோ தமிழ் மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியாது. அப்படிக் கேட்க முற்படுவது தமிழ் அரசியலில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரும் அரசியல் பல்டியாகவே அமையும். ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது மகிந்தவின் அரசியல் தலைமையே என்றளவில் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்க சில தமிழ் தலைமைகள் முன்வருகின்றன. பொதுவாகவே தமிழ் தலைமைகளிடம் யுஎன்பி சார்புப் போக்கு என்றும் உள்ளது. அதனால் தமிழ் மக்களின் வாக்கு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமையும் என்ற முன் கணிப்பு ஒன்றுள்ளது.

இவற்றின் பின்னணியில் இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுடைய நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கு ஒலித்தன. ‘சரத் பொன்சேகாவையோ அல்லது ராஜபக்சவையோ தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது. இருவருமே தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்கள். அதனால் தமிழ் மக்கள் இத்தேர்தலில் தங்களுக்கு என்று ஒரு வேட்பாளரை நிறுத்துவதையும் நாங்கள் பரிசீலிக்கின்றோம்’ என சூரிச் மாநாட்டில் கலந்துகொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் ‘தேசம்நெற்’க்குத் தெரிவித்தார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இந்தியா சென்று திரும்பியபின் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றியும் ஆர் சம்பந்தனே தமிழ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஊகங்களும் தெரிவிக்கப்பட்டது. ‘ஆர் சம்பந்தன் தோல்வி அடையும் தேர்தலில் போட்டியிடவும் மாட்டார். வெற்றி பெறும் தேர்தலை விட்டுவிடவும் மாட்டார்.’ என்ற அடைமொழிக்கமைய தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு உடன்பட மறுத்துள்ளார். பெரும்பாலும் ஆர் சம்பந்தன் உட்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் மௌனம் காப்பார்கள் என்றும் ஊகிக்கப்படுகின்றது.

ஆனால் அண்மையில் இந்தியா சென்றிருந்த சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் தவறினால் தான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார். தற்போது இந்தியாவுக்கு நெருக்கமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான ரெலோ இயக்கம் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான ஒரு அஸ்திரமாகவும் இந்த தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான கோரிக்கை அமையலாம்.

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் மகிந்த ராஜபக்சவே கூடுதலான நன்மையடைவார். கடந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாததால் வெற்றியீட்டிய அவர் இத்தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாமலேயே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. ஆனால் அந்த வாக்குகள் சரத் பொன்சேகாவிற்குச் செல்வது மகிந்த ராஜபக்சவின் வெற்றியைப் பாதிக்கும். அதனால் தமிழ் தேசியவாதி ஒருவரை தேர்தலில் நிறுத்துவதன் மூலம் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் வாக்குகள் செல்வதைத் தடுக்க முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதில் இருந்தே அழுத்தமாக வருவதால் இந்த நகர்விற்குப் பின்னணியில் இந்திய இருக்கலாம் என்ற முடிவுக்கே வரமுடியும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ இயக்கம் ஒப்பீட்டளவில் அரசு சார்பு நிலைப்பாடுகளையே எடுத்துவருகின்றது. அந்த வகையில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற முடிவுக்குப் பின்னால் இந்திய – இலங்கை அரசுகள் இருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. மேலும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தாங்கள் தமிழ் தேசியத்திற்காக நிற்பதாகக் காட்டிக் கொள்ளவும் முடியும். அதே சமயம் மகிந்த ராஜபக்சவைத் திருப்திப்படுத்தியதாகவும் அமையும். ரெலோ ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழ்த்த நினைக்கின்றது.

இந்த அரசியல் நகர்வுகளின் மையம் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா மகிந்த ராஜபக்சவை 2016 வரைக்கும் பதவியில் அமர்த்துவதை நோக்கி நகர்கிறது என்ற முடிவுக்கே வரவைக்கின்றது.

மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடுமா துருப்பிடித்த தமிழ்த் தேசியம். : யூட் ரட்ணசிங்கம்

Mahinda Rajaparksa and Sarath Fonsekaமீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல், தமிழ்பேசும் மக்கள் தம் வாக்குமூலம் பேசவேண்டிய நேரம், எதிர்த்தரப்பிலே இரண்டு இனவாத அரசியலின் பிரதிநிதிகள். இவர்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல மக்களைக் கொன்று குவித்த இரு கொலைகாரர்கள்.

சிங்களத் தேசிய இனவாதத்துக்கும் தமிழ்த் தேசிய இனவாதத்துக்கும் இடையில் நடந்த கொடூரமான போரில் செத்து மடிந்தன ஏதுமறியா அப்பாவி உயிர்கள். அதை முன்னின்று நடாத்தியவர்களும் வேடிக்கை பார்த்தவர்களுமே இன்று களமாட காத்திருக்கின்ற காவல் தெய்வங்கள். ஜனநாயகம் தத்தெடுத்த தவப்புதல்வர்கள். இவர்கள் ஜனாதிபதியாக வேண்டுமென்று களம் இறங்கியிருக்கிறார்கள்.

1) இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
2) இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

இவர்கள் இருவரையும் தராசிலே போட்டால் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது. (பகுத்தறிவு இல்லாவிட்டாலும் அந்தமுள் தன் பண்பிலிருந்து மாறாது) களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில்லாது நிலை தடுமாறி நிற்கிறார்கள்.

போர்க்களத்திலே சந்தித்த பெரும் சவால்களையெல்லாம் முறியடித்து வெற்றி கொண்டவர் என்ற வீராப்புடன் சரத் பொன்சேகாவும், போர் சூழ்ந்த வேளையில் எத்தனையோ அரசியல் சவால்களையெல்லாம் எதிர் கொண்டு இந்தப் போரை வென்று முடித்தவர் என்று உரிமை கோரும் மகிந்தாவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களாகக் காணப்படுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் வாக்குகள் இரண்டாக பிரிந்து போகும் நிலை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற வேளை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மீண்டுமொருமுறை களத்திற்காக காத்து நிற்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது வாக்கெடுப்புக்கு போகவேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர். (அதாவது 50% க்கு குறைவான வாக்குகளைப் பெற்றால் எந்த ஒரு நபரும் ஜனாதிபதியாக முடியாது. ஜனாதிபதியாக வேண்டுமாயின் 50%க்கு அதிகமான வாக்குகள் பெறவேண்டும்)

களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ் பேசும் மக்களுக்கு இன்று ஓர் தலைமை இல்லை. இருக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு கூறு மக்களையும் பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டு நிற்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்கள் ஒரு பிரதிநிதியை நிறுத்தி வாக்குகளை ஓரிடத்தில் குவிப்பார்களேயானால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு போகவேண்டிய நிலையை உருவாக்கும். அப்படியான நிலை உருவாகுமேயானால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் அதன் அரசியல் தலைவர்களுக்கும் ஏன் உலகத்திற்குமே ஓர் செய்தியைச் சொல்லும்.

அந்த வேளையில் தமிழ் பேசும் மக்கள் தமது தரப்பின் அரசியல் கோஷங்களை முன் வைக்கக் கூடிய களநிலையைத் தோற்றுவிக்கும். ஓர் நிரந்தரமான தீர்வை நோக்கிய பேச்சை உருவாக்கக்கூடிய அரசியல் சூழலை உருவாக்கக்கூடும்.

இந்த அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளும் அரசியல் திராணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உண்டா? சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களை ஒரு புள்ளியில் ஒன்று சேர்க்கும் அரசியல் திறனும் நேர்மையும் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் எதற்காக மீண்டும் மீண்டும் அதே குட்டையில் ஊறிய மட்டைகளை களத்திற்கு எடுத்து வருகிறார்கள்?

ஏன் இந்த தமிழ் அரசியல் சற்று வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கக் கூடாது? சம்பந்தனால் இதை செய்ய முடியாது என்று கண்டுகொண்டால் ஓர் மாற்று அரசியல் திட்டத்தை வகுப்பதுதானே ஓர் முஸ்லீம் பிரதிநிதியை நிறுத்தி அவரை ஆதரியுங்கள் என்று கேட்கலாம். ஓர் மலையக வேட்பாளரை கொண்டுவந்து நிறுத்தலாம். புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தாலும்கூட இன்றுவரை தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிக்கலாம் அல்லது புலிகளை ஆதரிக்காத சிங்கள இடதுசாரியான சிறிதுங்க ஜெயசூரியவை ஆதரிக்கலாம்.  அதன்மூலம் அவர் கையைப் பலப்படுத்தலாம், சிங்கள மக்களின் முற்போக்கானவர்களின் ஆதரவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள இது உதவலாம்.

எதற்காக மீண்டுமொருமுறை தமிழர் வாழ்வை பாழ்படுத்துகின்ற அரசியல் முன்னெடுப்புகளை செய்கிறார்கள்? தமிழர் வாழ்வில்  எத்தனை தடவைகள் இப்படியான வாய்ப்புகள் கிடைத்தன? தமிழர் வாழ்வை தமதாக்கிக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தம் மக்களின் வாழ்வை வளப்படுத்த இப்படியான வாய்ப்புகளை பயன்படுத்தினார்களா?

தழிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் அதன் வரலாறு காணாத அழிவு வரையில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புலிகளின் தலைமை தலைவரின் சுயநலபோக்கினால் இப்படிக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் குழப்பியடிப்பதிலும் வெளிநாட்டு சக்திகள் மத்தியில் நம்பிக்கையீனத்தை உருவாக்குவதிலும் குறியாக இருந்தார்களே தவிர கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதையும் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் ஸ்திரத்தையும் கொண்டிருக்கவில்லை.

தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை இன்றிருக்கும் நிலையிலிருந்து ஒருபடி மேலே கொண்டுசெல்ல இந்தத் தேர்தல் உதவுமா என்று பார்ப்பதும் அப்படி இருக்குமாயின் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தவறுவது தனது சுயநலம் கருதி பிரபாகரன் போராட்டத்தைச் சிதைத்தற்கு ஒப்பாகும்.

ஆகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாமா? அப்படியாயின் அது எவ்வாறு என்பதை சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

தமக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு தவறவிட்டு பழியை எதிரியின் மீது சுமத்துவதால் என்ன பயன்?

சர்வதேசம் இன்று இலங்கையின் அரசியலை உன்னிப்பாக அவதானித்து வருகின்ற வேளை ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு தள்ளப்படுமேயானால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோஷத்தை முன்வைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இது அமைந்துவிடக்கூடும்.

உலகம் முழுவதும் மாவீரர்தினம் கொண்டாடி மகிழ்வதைவிட உருப்படியான அரசியல் முன்னெடுப்புக்களை செய்வதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.

இன்று தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்தை விட அதிகமானவற்றைத் தருவதாக முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்ற நேரம், தேர்தலின் வெற்றி யாருக்கு என்று தெரியாது இடைநடுவில் நின்றுபோகுமேயானால் அதன்பின் ஏற்படும் பேச்சுவார்த்தை மேசையில் பதின்மூன்று என்ன பதினைந்தே தருவோம் என்று கூறுகின்ற நிலையை உருவாக்கும் காலம் சிலவேளைகளில் உருவாகிவிடும்.

அந்த நிலையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் நகர்வுகளை உடனடியாக தொடங்க வேண்டிய காலத்தில் இன்று நாம் உள்ளோம். 35 ஆண்டு காலம் புஜத்தை நம்பி அரசியல் செய்த நாம் இனியாவது புத்திசாலித்தனமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அந்த மக்களுக்கு ஓர் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக் கூடிய ஓர் நிரந்தரத் தீர்வை நோக்கி செயல்படுவோம்.

இந்த தேர்தலைத் தவறவிட்டால் மீண்டும் 6 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டி வரும். ஏற்கனவே 60 ஆண்டு காலம் இப்படியே காத்திருந்து காத்திருந்து கழிந்தது.

கடந்த 60 ஆண்டு காலம் அகிம்சைவாதிகளும் ஆயுததாரிகளும் வைக்கோல் போரிலே படுத்திருக்கும் நன்றியுள்ள மிருகம் போல் நடந்து கொண்டார்கள். அதே அரசியலை அழியவிடாது பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக சிலர் இப்போதும் செயல்படுகிறார்கள்.

செயல்படுவது ஒன்றும் தப்பில்லை, இவர்களால் உருப்படியான எதையாவது தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதுதான் அன்றும் இன்றும் இவர்கள் முன் விடைதேடி விரிந்து கிடக்கும் வினா.
 
தனிமனிதனில்  அரசியலைப் பார்ப்பதும் பின் தனி மனிதனை பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பதுமாக தமிழ் அரசியல் நகர்ந்தது கடந்த காலங்களில். இப்போதும் இராணுவத் தளபதியைக் கொண்டுவந்து மகிந்தாவை பழிவாங்க வேண்டுமென்று பேச்சுத் தொடங்கிவிட்டது.

சரத்பொன்சேகா ஜனாதிபதியானால் அரசாட்சி இராணுவ மயப்படுத்தப்பட்டு முழுநாடே புத்தமயமாகும் என்று தெரிந்தும் கூட ஒரு தனி மனிதனை பழிவாங்கும் அரசியலுக்காக அலுவல் பார்க்கிறார்கள்.

“எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்” என்று அதற்கும் ஒரு விளக்கம். இம்முறையும் தமிழர் வாழ்வு சுடு சட்டியிலே இருந்து துள்ளி அடுப்பிலே வீழ்ந்த கதையாகவே முடியும். 

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் – ஓர் அறிமுகம் : என் செல்வராஜா

ETDRC_Logoஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும்
(European Tamil Documentation and Research Centre – ETDRC)

தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்த போதும் கணிசமான தொகையில் தமிழர்கள் பரந்துள்ள நாடுகள்:
01 – இந்தியா 02 – இலங்கை 03 – மலேசியா 04 – சிங்கப்பூர் 05 – அவுஸ்திரேலியா 06 – தென் ஆபிரிக்கா 07 – பிரித்தானியா 08 – பிரான்ஸ் 09 – ஜேர்மனி 10 – சுவிஸ்லாந்து 11 – இத்தாலி 12 – நோர்வே 13 – சுவிடன் 15 – அமெரிக்கா 14 – கனடா

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவியல் வளங்கள்:
1. பல்கலைக் கழகம்
 1.1 SOAS : School of Oriental and African Studies
 1.2 ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் நூலகங்களின் தெற்காசியப் பிரிவு

2. பொது நூலகங்கள்
 2.1 பிரித்தானிய நூலகம் (British Library)
 2.2 லண்டன் உள்ளுராட்சி சபை நூலகங்கள்

3. சிறப்பு நூலகங்கள்
 3.1 தமிழர் தகவல் நடுவம் – லண்டன் (அரசியல் மற்றும் சமூகவியல் துறை)
 3.2 உலகத் தமிழர் நூலகம் (ஒன்ராரியோ, கனடா)

4. தனியார் நூல் சேகரிப்புகள்
 4.1 முல்லை அமுதனின் சேகரிப்புகள்
 4.2 என் செல்வராஜாவின் சேகரிப்புகள்
 4.3 இன்னும் பலர் …..

தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தகவல் வளங்களையும் இந்த நூலகங்கள் கொண்டிருக்கின்றனவா ? 
தமிழ்ச் சமூகத்திற்கான இந்த அறிவியல் வளங்களை ஒரு ஆய்வாளர் எளிதில் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதா ?
தமிழரல்லாத ஒரு ஆய்வாளரால் தமிழ்ச் சமூகம் சார்ந்த ஒரு ஆய்வை மேற்கொள்ள இந்நூலகங்கள் போதிய பின்புலத்தை கொண்டுள்ளனவா?

இல்லை!!!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தமிழரின் சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் எந்தவொரு தமிழ் அல்லது தமிழரல்லாத ஆய்வாளருக்கும் தேவையான தகவல் வளங்களையும் அத்தகவல்களைப் பெறுவதற்கான வழிகாட்டலையும் வழங்குவதற்கு தமிழர்களின் வாழ்வியல் பின்புலத்தில் அமைக்கப்பட்ட அறிவுசார் தகவல் களஞ்சியங்களே பொருத்தமானவையாகும்.

இந்த எண்ணக்கருவில் பிறந்ததே ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC) ஆகும்.

நோக்கங்கள்:

* தமிழ், தமிழர் தொடர்பான நூல்களையும் ஆவணங்களையும் ஆய்வேடுகளையும் ஒளி, ஒலிப் பதிவுகளையும் சேகரித்து பாதுகாத்தல்.

* தமிழ், தமிழர் தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான மூலாதாரங்களை அடையாளம் கண்டு ஆய்வாளருக்கு வழிகாட்டுதல்.

* இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களுக்கான காப்பகமாக செயற்படுதல்.
 
* சர்வதேச ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பினை மேற்கொண்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தல்.

* சர்வதேச பல்கலைக்கழக நூலகங்களின் தமிழியல் பிரிவினருடன் தொடர்பினை ஏற்படுத்தி நூலக வளங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

செயற்பாடுகள்:

இதன் அடிப்படையில்
* ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC)  என்ற அறிவியல் நிறுவனம் Charity Commissionஇன் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவிலக்கம் : 1127365

* தற்போது ETDRC தற்காலிகமாக 48 Hallwicks Road, Luton, LU2 9BHஇல் இயங்குகிறது.

* நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தனிப்பட்ட சேகரிப்பான 3000 நூல்களுடன் ETDRC தற்போது இயங்குகிறது. நிர்வாகக் கட்டட வசதி ஏற்பட்டதும் மேலும் பலர் தங்களின் தனிப்பட்ட சேகரிப்புகளை வழங்குவதற்கு முன் வந்து உள்ளனர்.

* மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தற்போது ETDRCஇன் சேவைகள் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எம்முள் எழும் சில வினாக்கள்:

இன்றைய போர்க்காலச் சூழலில் இது அவசியமா?
முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழர்களின் அடையாளம் இப்பொழுது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அதனால் தமிழர் பற்றிய வாழ்வியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் சேகரித்து பாதுகாப்பதும், அதை தமிழர்களும் தமிழர்கள் அல்லாதவர்களும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்ய வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தமிழர்களுக்கான ஆவணக் காப்பகம் தாயக மண்ணில் அல்லவா உருவாக்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் எதற்கு?
1981ல் யாழ்ப்பாண நூலகமும் பின்னர் ஹாட்லி கல்லூரி நூலகமும் எரியூட்டப்பட்டதன் பின்னர் அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கான ஒரு ஆவணக் காப்பகத்தை இலங்கைக்கு வெளியே உருவாக்குவது அவசியமானது.

தாயகத்தில் ஏற்கனவே தேசிய நூலகமும் பிராந்திய பொது நூலகங்களும் இயங்கி வந்த போதிலும் வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு அவற்றை இலகுவாகப் பயன்படுத்த எவ்வித வசதியும் இல்லை.

3.2 மில்லியன் இலங்கைத் தமிழர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பற்றிதும் இவர்களின் அறிவியல் தேவைகளுக்குமான ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமும் மேற்கு நாடொன்றில் அவசியம். அது உலகின் தலைநகரான லண்டனில் அமைவது மிகவும் பொருத்தமானது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறைக்கு தமிழ் தெரியாத நிலையில் இந்த தமிழ் நூலகம் அவசியமா?
முதலில் ETDRC ஒரு பொதுநூலகம் அல்ல. அது தமிழ் நூலகமும் அல்ல. தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்குமான ஒரு ஆய்வு நிறுவனம்.

இரண்டாம் தலைமுறையினருக்கு கல்வி மொழியாகத் தமிழ் இல்லை. எதிர்காலத்தில் தமது வேர்களை தேட முற்படும் இத்தலைமுறையினருக்கும் இவ்வாறான காப்பகங்கள் அவசியம்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இந்த அறிவியல் நோக்கம் கொண்ட அமைப்பு தழைத்து வளர்வதற்கு உங்கள் உதவி முக்கியமானது.

சிறுதுளி. பெரு வெள்ளம்!

நிறுவனத்தின் சேகரிப்பினை வளர்த்தெடுக்க உங்களால் முடிந்த வரையில் நூல்களையும் ஆவணங்களையும் வழங்குங்கள்!
மாதம் ஒர் சிறு தொகையை ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கினூடாக சென்றடைவதற்கான ஒர் ஒழுங்கை ஏற்படுத்துங்கள்!

Bank  :  Abbey
Account Name :  ETDRC
Sort Code :  09-01-27
Account No :  24459051

நிறுவனத்தின் நிதிவளம் செழிப்பின் தனியானதொரு கட்டிடத்தில் விரைவிலேயே செயற்பட வாய்ப்பு ஏற்படும்.

எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் எமது தமிழ் வேர்கள் பற்றி அறிய வேண்டாமா ?
புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது தமிழர் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம் பற்றிய அறிவியல் தகவல்களை பன்னாட்டவரும் அறிய வழிவகை செய்ய வேண்டாமா ?
முடிவு உங்கள் கைகளில்.
சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!

நன்றி!!!

._._._._._._.

ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனமும் ஆவணக்காப்பகமும் நடாத்தும் விருந்துபசார நிகழ்வு டிசம்பர் 12ல் நடைபெறவுள்ளது. ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்தினதும் ஆவணக் காப்பகத்தினதும் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கான உங்கள் ஆதரவை வழங்குவதன் மூலம் ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கும் ஆவணக் காப்பகத்திற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 6:30 pm till late

32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA

Contact: N Selvarajah : 07817 402 704 or 01582 703 786

 

ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும் இருவர் கட்டுப்பணம்

vote.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிடு வதற்காக நேற்றும் ஒரு அரசியல் கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் நேற்று வரையும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

போருக்கான நோபல் பரிசு கொ(கெ)டுப்பு! : நோர்வே நக்கீரா

obama-nobel.jpgசுவீடன் நாட்டில் அல்பிரெட் நோபல் என்பவர் 21.10.1833இல் இமானுவேல் அல்பிரட்டுக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு தந்தையை அதிகம் பிடிக்காது. தாயின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தார். இரசாயனவியலில் திறமைகளைக் கொண்டு இவரே டைனமைட்டை கண்டுபிடித்தார். இதனூடாக பெருந்தொகையான செல்வம் குவிந்தது. அப்பணத்தின் ஒருபகுதி சுவீடனில் இரசாயனவியல், பௌதீகவியல் போன்றவற்றுக்கான நோபல் பரிசாகக் கொடுக்கப்பட்டாலும் சமாதானத்துக்கான பரிசை நோர்வே நாடுதான் கொடுக்கவேண்டும் என அல்பிரட் நோபல் அவர்கள் முன்மொழிந்திருந்தார். நோவேயிய ஆட்சிமன்றத்தால் தெரிவு செய்யப்படும் குழுவே சமாதானத்துக்கான நோபல் பரிசை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

ஒபாமாவுக்கு எதற்கு?
2009ம் ஆண்டுக்கான 108 ஆவது சமாதானப்பரிசை ஏன் அமெரிக்க அதிபர் பராக் உபாமாவுக்கு கொடுக்கிறோம் என்பதை நோபல்குழு நோகாமலே சொன்னது. அதாவது சர்வதேச ரீதியாக இராஜதந்திரத்தைப் பலப்படுத்தியதற்காகவும் மனித ஒத்துழைப்பை ஊக்குவித்ததற்காகவுமே இப்பரிசு இவ்வருடம் வழங்கப்படுகிறது. முக்கியமாக அணுவாயுதமற்ற உலகை உருவாக்குவதற்கான ஒபாமாவின் நோக்கமும் இதில் அடங்குகிறது.

இப்பரிசுக்கான முன்மொழிவைக் கேட்டதுமே பலர் அதிர்வடைந்தனர். இது காலமுதிர்வுக்கு முன்னரே கொடுத்து விட்டார்கள் ஒபாமா வாக்களித்தபடி எதையுமே செய்யவில்லை என்று பல நோவேயிய மக்கள் குழம்பிக் கொண்டனர்.

ஒபாமா தகுதியுடையவரா?
எதையும் மிகச்சுலபமாகச் சொல்லலாம் ஆனால் செய்வது என்பதுதான் கடினமானது. சர்வேதேச ரீதியில் இராஜதந்திரத்தை ஏற்படுத்தினார் என்றால் எங்கே, எப்போ என்பதற்கான போதிய தகுந்த ஆதாரங்கள் கிடையாது. கூடிப்பேசலாம் ஆனால் நடந்தது என்ன? ஈராக்போர் முடிந்ததா? ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறதா? புஸ்சினால் தொடக்கி வைக்கப்பட்டு சர்வதேச சித்திரவதை முகாம் முற்றாக செயலிழந்ததா? சிலவேளை இவரது இராஜதந்திரம் இலங்கையில் பலித்திருக்கிறது எனலாம். கடைசி நேரத்தில் புலிகளுக்குக் கைகொடுப்பேன் என்று கைவிட்டது ஒரு நல்ல இராஜதந்திரி தானே. இதுபற்றி நோர்வே உயர்மட்ட இராஜதந்திரிகள் தான் நன்கறிந்திருப்பார்கள். இவர்கள் ஒபாமாவுக்கு பரிசளிப்பது ஆச்சரியத்துக்குரியது அல்லவே. இந்தப்பரிசு தனக்குத் தகுதியுடையதா? இல்லையா என்பதை உணரமுடியாத ஒபாமாவுக்கு இது பரிசல்ல, பரிசுகெடுப்பாகும். தன் சொந்தநாட்டிலே தான் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். இவரது சுகாதார மீழ்கட்டமைப்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது.

ஒபாமா இப்பரிசை மறுத்துரைத்து தான் சொன்னதை, சமாதானத்துக்கான பங்களிப்பை செய்த பின்பு எனக்கு இந்த சமாதானப்பரிசைத் தாருங்கள் என்று கூறியிருந்தால் ஒபாமா மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரே. நோபல் குழுவாவது தன்பிழைகளை உணர்ந்திருக்கும். தான் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், இதனால் கடைசிவரையும் கிடைக்க முடியாத ஒன்றை எப்படியாவது எடுத்து விடவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ?

அல்பிரெட் நோபலின் சமாதானப் பரிசுக்கான முன்மொழிவில் முக்கியமானது இராணுவம், இராணுவத் தளபாடங்கள், இராணுவப்பலக் குறைப்பு என்பது. இதை ஒபாமா செய்தாரா? ஈராக்கில் இருந்து தன் இராணுவத்தை வெளியில் எடுப்பேன் என உறுதியளித்தவர் இன்னும் அதற்காக பெருமுயற்சியை செய்யவில்லை, மாறாக 15 000 அமெரிக்கப் போர்வீரர்களை நவீன இராணுவத் தளபாடங்களுடன் அனுப்பி வைத்துவிட்டு நோர்வேக்கு நோபல்பரிசு வாங்க வருகிறார். இவர் எந்தவிதத்திலும் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. இது பரிசளிப்பா? பரிசு அழிப்பா? பரிசு கெடுப்பா? இப் பரிசுகெட்ட பரிசைவாங்க ஒரு பரிசளிப்பு விழாவா?

ஒரு சமாதானத்துக்கான பரிசை வாங்கவரும் ஒருவரின் பாதுகாப்புக்காக பலமில்லியின் குரோண்கள் பாவிக்கப்படுகிறது. தெருவிலே கிடக்கும் அள்ளுறுகளின் வாய்மூடிகள் உலோகங்களால் ஒட்டப்படுகிறது. பலமுக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடைசெய்யப் படுகின்றன. ஒஸ்லோவின் முக்கிய இடங்களில் நுழைவனுமதி மறுக்கப்படுகிறது. இவர் தங்கியிருக்கும் கிராண் கொட்டல் முற்றாக வெற்றிடமாக்கப்பட்டு ஒபாமாவுடன் வந்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. கொட்டலுக்கு வெளியே ஒபாமா வந்து கையசைக்கும் வேளை யாரும் சுடாதிருக்க குண்டுகள் துளைக்கா கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒபாமாவின் பாதுகாப்புக்காக அமெரிக்காவிலிருந்து தனிவிமானத்தில் எடுத்து வரப்படுகிறது லீமுசீன் எனும் மோட்டார் வண்டி. இந்த மோட்டார் வண்டியை எந்தச் சன்னமும் துளைக்காது. குண்டுகள் உடைக்காது. 13மிமீ தடிப்புடைய சிறப்புத் தயாரிப்புக் கார் கண்ணாடியை பசுக்காவே நொருக்காது. இப்படியான பாதுகாப்புகளுடன் வரும் ஒபாமாவுக்கு ஏன் மில்லியன் பணச்செலவில் பாதுகாப்பு. பரிசை எல்லாம் வெள்ளை மாளிகையில் கொடுத்துவிட்டு செலவுசெய்யும் பணத்தைப் பிரயோசனமாக வறியநாடுகளின் வளர்ச்சிக்கோ ஏன் அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் கறுப்பின மக்களின் தொழில் வாய்ப்புக்கோ பயன்படுத்தியிருக்கலாமே.

இவர் வந்து இறங்கும் விமானநிலையத்தில் இருந்து ஒஸ்லோ வரை இராணுவப்பாதுகாப்பு. இப்பகுதிகளில் அசையும் கதலிகள் (இராடார்கள்) இராணுவ வாகனங்களில் பூட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எந்த விமானமும் எல்லைக்குள் நுழையுமுன்னரே முன்னரே சுட்டுவிழுத்தக் கூடியவாறு பீரங்கிகள் மூக்கை நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இவ்வளவும் எதற்கு? சமாதானப்பரிசு பெறவரும் ஒபாமாவால் நோர்வே போர்கோலம் பூண்டிருக்கிறது எனலாம்.

இராணுவத்தையோ துப்பாக்கிகளையோ தெருவில் காணாத எமது பிள்ளைகள் பயப்படுகின்றனர். இப்படியான இராணுவ பொலிஸ் நடமாட்டத்தைக் கண்டு நோபல் பரிசே அழுகிறது, நாறுகிறது. சமாதானப் பரிசுக்கே போர் பயம் என்றால் சமாதானம் எங்கே? இது பரிசா? பரிசு கெடுப்பா? ஒருவனின் வருகைக்காக நாடே போர் வேடம் தாங்குகிறது என்றால் அவன் போரைக் கொண்டுவாறான் என்றுதானே அர்த்தம். இந்தப் பரிசு கெடுப்பை எப்படி யாரிடம் சொல்லுவது. பரிசைக் கொடுத்து சமாதானத்தைப் பரிசு கெடுக்கிறார்களே.

Related News: அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்