கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் அனுமதி வழங்க உறுதியளிப்பு – 8000 பேர் அனுமதி குறித்து சவூதி ஆலோசனை

hajj.jpgஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் பவுட் பின் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதன் போது இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆனால் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

20-20 உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை – பிரித்தானிய அணிகள் மோதல்

sri-lanka.jpgமேற்கிந்திய தீவுகளின் நடைபெற்றுவரும் 20-20 உலகக்கிண்ண போட்டியின் காலிறுதியின் இறுதிப் போட்டியில் அரையிறுதி வாய்ப்பிற்கான இலக்குடன் இலங்கை இந்திய அணிகள் பலப்பரீட்சை கண்டன. மிகவும் விறுவிறுப்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கார்த்திக்இகம்பீர் இருவரும் களம் இறங்கினர்.கார்த்திக்13, கம்பீர்41, ரெய்னா63, டோனி23, யுவராஜ் சிங்1, பதான்13 ஒட்டங்களை பெற்றனர். இந்திய அணி உதிரிகளாக 09 ஓட்டங்களை பெற்றது. 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் பந்து வீச்சில் துஷார, மலிங்க இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பெரேரா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் ஜயவர்த்தன4, ஜயசூரிய 0, இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். எனினும் இருவரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை .  பின்னர் களம் இறங்கிய ஏனைய வீரர்கள் டில்சான்33, சங்கக்கார46 ,  மத்தியூஸ்46, கப்புகெதர37, ஓட்டங்களை பெற்றனர். உதிரிகளாக 1 ஓட்டம் பெறப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டது.  இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் ஆகியோர் நெஹ்ரா இபதான் இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.வினய் குமார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவுட‌ன் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌‌தீவு அ‌ணி தோல்வி கண்டதால் மேற்கிந்திய தீவு அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.  இப்போட்டியில் பூவா தலையா வென்று முதலில் துடுப்பாடிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்றது.

கூடிய ஓட்டமாக சர்வான் 31 பந்துகளில் 26 ஓட்டங்களையும், சந்திரபோல் 18 ப‌ந்‌துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களையும் பெற்றனர்.  அ‌ணி‌த் தலைவ‌ர் கெ‌ய்‌ல் 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அவுஸ்திரேலியா தர‌ப்‌பி‌ல் ‌‌‌ஸ்‌மி‌த் 3 வி‌க்கெ‌ட்டு‌ம், ஜா‌ன்ச‌ன், ஹ‌ஸ்‌ஸி ஆ‌கியோ‌ர் தலா 2 வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌‌ற்‌‌றின‌ர்.  பின்னர் களம் இறங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் முதலாட்டம் விருவிருப்பாக நடைபெறுமென கிரிக்கட் இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை அவுஸ்திரேலியா அணியும் பாக்கிஸ்தான் அணியும் அரையிறுதியில் மோதவுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையும் பலவீனமும் ஆணாதிக்கத்தின் பிரிவுகளால் பயன்படுத்தப்படுகின்றது! : விஸ்வா

Feminism_Faces _._._._._
அண்மைய சில வாரங்களாக தேசம்நெற் இல் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதி வரும் விஸ்வா இலங்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கேயே வாழ்பவர். ஊடகவியலாளர். தேசம்நெற்றில் அவருடைய செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளிவரும். ‘விஸ்வா’ அவருடைய புனைப்பெயர். அவர் தேசம்நெற் ஆசிரியர் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்.
._._._._._

வவுனியா இடப்பெயர்வு முகாம்களில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இம்  முகாம்களில் உள்ளவர்களை சென்று பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டே வருகின்றது. வுன்னி யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகின்ற நிலையிலும் இவர்களுடைய எதிர்காலம் நம்பிக்கையானதாக இல்லை. 

இந்நிலையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களில் சிலர் குழந்தைகளைப் பிரசவித்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்திருப்பது  பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது இவ்வாறிருக்க, பூனகரி இரணைமாதா நகரில் மீள்குடியேற்றபட்ட குடும்பங்களில உள்ள சுமார் எட்டு திருமணமாகாத  இளம்பெண்கள் காப்பிணிகளாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இருந்து படையினரிடம் சரணடைந்த பெண்களில் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்கி இருந்தனர். இப்பெண்களில் திருமணமாகாத இளம்பெண்களும் உள்ளடங்கி இருந்ததாக புனர்வாழ்வ முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இத் தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது, பூனகரி இரணை மாதா நகரில்  மிள்குடியேற்றப்பட்டவர்களில் 9 வரையான யுவதிகள் திருமணமாகாமல் காப்பிணியாகி உள்ளனர். இவர்களை படையதிகாரிகள் விசாரித்த போது, 7பேர் இதற்கு காரணமாக இராணுவச் சிப்பாய்களை அடையாளம் காட்டியுள்ளதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மற்றைய இருவருக்கு யாரை அடையாளம் காட்டுவதென்பது முடியாமல் போய்விட்டதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. இராணுவத்தினருடனான இப்பெண்களின் உறவு அப்பெண்களின்  விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆயினும் முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய இயலாமை பலவீனங்களை இராணுவம் தங்களுடைய திருப்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டு தமிழ் சமூகத்திடம் உள்ளது.

பெண்களுடைய இயலாமையையும் பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற போக்கு இராணுவத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் சமூகத்திலும் காணப்படுகின்றது. தமிழ்ப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு இராணுவத்தாலும் தங்கள் சொந்த சமூகத்தாலும் உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாட்டு முகவர்களின் பிடியில் பெயர் தெரியாத நாடுகளில் தமிழ் பெண்கள் இயலாமை பலவீனம் காரணமாக முகவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் தமிழ் பெண்களின் சமூக வாழ்நிலையை மிகவும் பாதித்து உள்ளது. தொடர்ச்சியான இடப்பெயர்வும் முகாம் வாழ்வும் அவர்களது கல்வியை வாழ்வாதாரங்களை இழக்கச் செய்துள்ளது. இவற்றுடன் யுத்தம் காரணமாக அல்லது யுத்தத்திற்காக விரும்பியும் விரும்பாமலும் சென்ற அல்லது கொண்டு செல்லப்பட்ட ஆணுறவுகள் இழக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்க விடப்பட்டுள்ளனர். இவர்களுடைய இந்த இயலாமையும் பலவீனமும் அங்குள்ள வேறுபட்ட ஆணாதிக்க பிரிவுகளாலும் பயன்படுத்துகின்ற நிலை அங்குள்ளது.

ஆனால் சமூகம் இந்நிலையின் ஆழ அகலத்தை உணர்ந்துகொள்ளாமல் ‘கலாச்சாரச் சீரழிவு’க்கு இப்பெண்களையே குற்றம்சாட்டுகின்ற தன்மை இன்னமும் மாறவில்லை.

தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான குடிசைளை  அமைப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவத்தினர் உதவியாக அனுப்பப்படுகின்றனர். இது இராணுவத்தினருக்கும் அக்குடும்பங்களுக்கும் இடையே  நட்புறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆண்களுடன் ‘மச்சான்  ஐஞ்சு மணிக்கு தண்ணி அடிப்பம்’ என்று கூடி உறவாடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டு வருகின்றது. இதே போன்று இளம் வயதினரான இராணுவ இளைஞர்களுக்கும் அக்குடும்பங்களிலுள்ள பெண்களுக்கும் நட்பு ஏற்படுகின்றது. இந்நட்பு வேறுபட்ட வகைகளில் வெளிப்படுத்தப் படுவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தொடர்புகள் சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஒரு கலாசார சீரழிவிற்கு இட்டுச்செல்வதாகப் பார்க்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற பகுதிகளில் விரைவில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாத வரை இராணுவ முகாம்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படாத வரை  இந்நிலைமைகள் தொடரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

பிரித்தானியத் தேர்தலில் சிறுபான்மை இனங்கள் தொழிற்கட்சியின் வீச்சியை மட்டுப்படுத்தி உள்ளது! : த ஜெயபாலன்

Stephen_Timms_MP_Easthamஅடுத்தடுத்து மூன்று தடவைகள் தொழிற்கட்சி பிரித்தானியாவில் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. 13 ஆண்டுகள் ஒரு கட்சியின் தொடர்ச்சியான ஆட்சியினால் ஏற்பட்ட சலிப்பு, பொருளாதார வீழ்ச்சி மற்றும் காரணிகளால் இத்தேர்தல் தொழிற்கட்சிக்கு பாதகமாக அமையும் என்றே எதிர்வு கூறப்பட்டது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தொழிற்கட்சி சிறுபான்மை இனங்கள் அதிகம் வாழ்கின்ற பகுதிகளிலேயே தனது தோல்வியைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இத்தேர்தலில் தொழிற்கட்சி 91 ஆசனங்களை கொசவேடிவ் கட்சியிடம் இழந்துள்ளது. அதில் 80 வரையான ஆசனங்கள் சிறுபான்மையினங்கள் அதிகம் வாழாத இங்கிலாந்தின் உட்பகுதிகளிலேயே இழக்கப்பட்டு உள்ளது. வேல்ஸில் நான்கு ஆசனங்களும் இலண்டனில் ஆறு ஆசனங்களும் மட்டுமே கொன்சவேடிவ் கட்சிக்குச் சென்றுள்ளது. ஏனைய ஆசனங்களை தொழிற்கட்சி தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டது.

ஆயினும் லண்டனில் தொழிற்கட்சியினால் இழக்கப்பட்ட ஆசனங்களுக்குரிய தேர்தல் தொகுதிகளிலும் கணிசமான தமிழ் வேட்பாளர்கள் இருந்துள்ளனர். இதில் சில பகுதிகளில் போட்டியிட்ட மூன்று கட்சிகளுமே தமிழ் சமூகத்துடன் ஈடுபாடு கொண்டிருந்தமையால் தமிழ் வாக்குகள் தொகையாக ஒருவருக்கு செல்கின்ற நிலை இருக்கவில்லை. குறிப்பாக கிழக்கு லண்டனில் தொழிற்கட்சி வேட்பாளருக்கு எதிரான பிரச்சாரங்கள் தமிழ் தேசியவாதிகளால் முடுக்கிவிடப்பட்டும் இருந்தது. ரோனி மக்நோல்ரி பா உ க்களின் அலவுன்ஸ் விடயத்தில் பத்திரிகைகளில் அம்பலப்படுத்தப்பட்டு இருந்தமையும் அவரது தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

ஸ்கொட்லாந்தில் தொழிற்கட்சி எந்த ஒரு ஆசனத்தையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினங்கள் வாழ்கின்ற பகுதிகளில் கொன்சவேடிவ் கட்சியின் பக்கம் ஏற்பட்ட சாய்வு வீதம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 50 வீதம் குறைவாகவே இருந்தது.

லண்டன் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 73 ஆசனங்களில் 38 ஆசனங்கள் தொழிற்கட்சிக்கும் 28 ஆசனங்கள் கொன்சவேடிவ் கட்சிக்கும் 7 ஆசனங்கள் லிபிரல் கட்சிக்கும் சென்றிருந்தது. இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பல்வேறு விடயங்களுடனும் தங்களை அடையாளப்படுத்தி வந்தனர். சில சமயங்களில் தமிழ் மக்களின் வேறு வேறு முகாம்களில் இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் இலக்காகி உள்ளனர். அதனையொட்டி ஒரே அமைப்பு வேறுவேறு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தது.

நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்காகப் போட்டியிட்ட டேவிட் ஜோசப் தமிழ் மக்களும் அமைப்புகளும் ஒரே கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்காமல் எப்பாராளுமன்ற உறுப்பினர் தங்களுக்கு ஆதரவு தருகின்றனரோ அவர்களைத் தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். அதன்படி அவர்கள் வேறு வேறு தேர்தல் தொகுதிகளில் வேறு வேறு கட்சிகளை ஆதரித்தனர். குறிப்பாக கிழக்கு இலண்டனில் தமிழ் தேசியத்திற்கான ஆதரவாளர்கள் கொன்சவேடிவ் கட்சிக்கு வாக்களிக்கும்படி கேட்டிருந்தனர். நாடுகடந்த தமிழீழத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் கொன்சவேடிவ் கட்சிக்கு அலுவலகம் ஒன்றை ஈஸ்ற்ஹாமில் திறந்து வைத்தனர். கொன்சவேடிவ் வேட்பாளரை மேளதாளத்துடன் அழைத்து வீதிவலம் வந்தனர். தென்மேற்கு லண்டனில் சென் கந்தையா போன்ற ரமில்ஸ் போர் லேபர் தொழிற்கட்சிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டது.

தமிழர்கள் மிகவும் செறிந்து வாழ்கின்ற ஈஸ்ஹாமில் நாடுகடந்த தமிழீழ அணியால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு மாறாக தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் அதே தொகுதியில் 25000க்கும் அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.  நாட்டின் பல பகுதிகளிலும் தொழிற்கட்சியின் வாக்கு வீதம் குறைந்துள்ள நிலையில் ஈஸ்ஹாமில் தொழிற்கட்சி பெற்ற வாக்குகள் 16 வீதத்தால் அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் சமூகத்துடன் ஈடுபாடு கொண்டவர்கள்; பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ் சமூகத்துடன் ஈடுபாடு கொண்ட தங்கள் ஆசனங்களைத் தக்க வைத்துக் கொண்டவர்கள்:
சாய்மன் ஹீயூச், பரி கார்டினர், ஸ்ரீபன் ரிம்ஸ், ஸ்ரீபன் பொன்ட், விரேந்திர சர்மா, அன்ரூ லவ், கரத் தோமஸ், ஜோன் மக்டொனால், மைக் கேப்ஸ், ஜெரிமி கோபின், எட்வேட் டேவி, சோபியா மக்டோனா, சித்திக் கான், (இவர்களில் சாய்மன் ஹியூச், எட்வேட் டேவி இருவரும் லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஏனைய அனைவரும் தொழிற் கட்சியினர்.)

தமிழ் சமூகத்துடன் ஈடுபாடு கொண்ட ஆனால் தங்கள் ஆசனங்களை இழந்தவர்கள்:
டோன் பட்லர், ஜெரி றையன், ஜோஆன் ரையன், ரொனி மக்நோல்ரி, அன்றியூ டிஸ்மோர், சோனியா க்லின் (இவர்கள் அனைவரும் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஐக்கிய ராஜ்சியம் அல்லது பிரித்தானியா என்பது இங்கிலாந்து வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியது. மே 6ல் நடந்து முடிந்த தேர்தலில் கொன்சவேடிவ் கட்சி இங்கிலாந்தில் மட்டுமே ஏனைய கட்சிகளிளுலம் பார்க்க கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்தின் 650 ஆசனங்களில் 533 ஆசனங்கள் இங்கிலாந்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் 40 ஆசனங்களையும் ஸ்கொட்லாந்து 59 ஆசனங்களையும் வட அயர்லாந்து 18 ஆசனங்களையும் கொண்டுள்ளது. வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் தொழிற்கட்சி முறையே 26 ஆசனங்களையும் 41 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. கோன்சவேடிவ் கட்சி வேல்ஸில் கடந்த தேர்தலைவிட அதிக ஆசனங்களைப் பெற்று தனது ஆசனங்களை 8 ஆக்கியது. ஆனால் ஸ்கொட்லாந்தில் ஒரேயொரு ஆசனத்தையே பெற்றுக் கொண்டது. வடஅயர்லாந்தில் பிரித்தானியாவின் தேசியக் கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. பிராந்தியக் கட்சிகளே போட்டியிட்டு இருந்தன.

தமிழ் சமூகத்துடன் ஈடுபாடு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் தொகுதி நிலை:

Bermonsey & Old Southwak
Simon Hughes        Liberal Democrat      21,590      48.4      +0.7
Val Shawcross        Labour                        13,060      29.2      -2.4
Loanna Morrison   Conservative                7,638       17.1      +4.1

Brent North
Barry Gardiner        Labour                       24,514      46.9      -2.5
Harshadbhai Patel  Conservative             16,486      31.5      +2.2
James Allie               Liberal Democrat       8,879       17.0      -2.5

Brent Central
Sarah Teather  Liberal Democrat           20,026        44.2    +13.1
Dawn Butler     Labour                             18,681         41.2      -8.9
Sachin Rajput  Conservative                     5,068         11.2      -1.9

Croydon Central
Gavin Barwell  Conservative                  19,657         39.5      -0.9
Gerry Ryan      Labour                            16,688         33.5       -7.6
Peter Lambell  Liberal Democrat            6,553         13.2      +0.4

Croydon North
Malcolm Wicks  Labour                          28,949         56.0      +2.4
Jason Hadden   Conservative                12,466          24.1      +1.9
Gerry Jerome   Liberal Democrat          7,226          14.0      -3.2

Eastham
Stephen Timms  Labour                        35,471        70.4        +16.8
Paul Shea            Conservative                 7,645      15.2           +1.4
Chris Brice          Liberal Democrat          5,849      11.6          +0.8

Ealing North
Stephen Pound  Labour                           24,023      50.4       +3.5
Ian Gibb             Conservative                 14,722       30.9       +2.6
Chris Lucas        Liberal Democrat           6,283       13.2        -6.0

Ealing Southall
Virendra Sharma  Labour                        22,024     51.5      -5.8
Gurcharan Singh   Conservative             12,733     29.8      +10.8
Nigel Bakhai          Liberal Democrat        6,383     14.9      -3.3

Edmonton
Andy Love                       Labour                        21,665      53.7     -2.3
Andrew Charalambous  Conservative             12,052      29.8     +2.3
Iarla Kilbane-Dawe        Liberal Democrat       4,252       10.5     -1.5
    
Enfield North
Nick de Bois  Conservative                      18,804      42.3      -0.8
Joan Ryan     Labour                                 17,112      38.5      -2.3
Paul Smith    Liberal Democrat                5,403      12.2      +0.7

Harrow West
Gareth Thomas        Labour                     20,111       43.6      -5.0
Rachel Joyce             Conservative          16,968       36.8      +6.4
Christopher Noyce  Liberal Democrat     7,458        16.2      -2.5
    
Harrow East
Bob Blackman   Conservative                21,435        44.7        +6.1
Tony McNulty  Labour                          18,032        37.6         -7.9
Nahid Boethe    Liberal Democrat          6,850        14.3        +0.1

Hayes & Harlington
John McDonnell          Labour                23,377         54.8       -1.6
Scott Seaman-Digby  Conservative     12,553          29.4      +1.7
Satnam Kaur Khalsa   Liberal Democrat 3,726         8.7        -1.1

Hendon
Matthew Offord    Conservative             19,635       42.3   +5.2
Andrew Dismore  Labour                        19,529       42.1    -3.0
Matthew Harris    Liberal Democrat        5,734       12.4    -1.7

Ilford South
Mike Gapes              Labour                       25,311    49.4     +0.6
Toby Boutle             Conservative            14,014     27.4     +0.1
Anood Al-Samerai  Liberal Democrat       8,679     17.0     -3.6

Ilford North
Lee Scott          Conservative                   21,506      45.8     +2.0
Sonia Klein       Labour                             16,102       34.3     -5.4
Alex Berhanu  Liberal Democrat             5,924       12.6     -1.2

Islington North
Jeremy Corbyn             Labour                      24,276      54.5     +3.3
Rhodri Jamieson-Ball  Liberal Democrat     11,875      26.7     -3.2
Adrian Berrill-Cox       Conservative               6,339      14.2    +2.4

Kingston & Surbiton
Edward Davey   Liberal Democrat                28,428     49.8     -1.3
Helen Whately   Conservative                       20,868     36.5    +3.5
Max Freedman  Labour                                   5,337        9.3     -3.8

Leyton & Wanstead
John Cryer          Labour                                17,511       43.6     -2.2
Farooq Qureshi  Liberal Democrat               11,095     27.6     +2.9
Ed Northover     Conservative                        8,928      22.2    -0.5

Leicester East
Keith Vaz             Labour                              25,804       53.8     -5.0
Jane Hunt           Conservative                     11,722        24.4     +4.6
Ali Asghar           Liberal Democrat               6,817         14.2    -2.3

Mitcham & Mordern
Siobhain McDonagh  Labour                        24,722        56.4     -0.3
Melanie Hampton     Conservative               11,056       25.2    +0.6
Diana Coman             Liberal Democrat          5,202       11.9    -2.1

Tooting
Sadiq Khan     Labour                                      22,038      43.5      +0.8
Mark Clarke   Conservative                           19,514       38.5      +8.0
Nasser Butt    Liberal Democrat                      7,509       14.8      -4.8

Walthamstow
Stella Creasy       Labour                                 21,252      51.8      +1.5
Farid Ahmed      Liberal Democrat                11,774      28.7      +1.6
Andy Hemsted  Conservative                          5,734      14.0      -4.2

பிரித்தானிய மக்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையை வழங்கவில்லை!!! : த ஜெயபாலன்

UK_Party_Leadersமே 6 2010 பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வுகூறப்பட்டது போன்று தொங்கு பாராளுமன்றமாகவே அமையவுள்ளது. பிரித்தானிய மக்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையை வழங்கவில்லை. வழமைக்கு மாறாக இறுதிவரை யார் ஆட்சியை அமைப்பது என்பது முடிவு செய்யப்படவில்லை. கொன்சவேடிவ் கட்சி தனக்கு அடுத்துள்ள தொழிற்கட்சியிலும் பார்க்க கூடுதல் ஆசனங்களைப் பெற்ற போதும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால் குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சி அல்லது கட்சிகளுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

கட்சிகள் பெற்றுள்ள ஆசனங்கள்:

306 : கொன்சவேடிவ் கட்சி
258 : தொழிற்கட்சி
  57 : லிபிரல் டெமொகிரட் கட்சி
  28  : மற்றைய கட்சிகள்

  01 : இன்னும் வெளியாக வேண்டிய ஆசனங்கள் ( வேட்பாளர் ஒருவர் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அத்தொகுதிக்கான தேர்தல் மே 27ல் நடைபெறவுள்ளது. )

650 : மொத்த ஆசனங்கள்

326 : பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு வேண்டிய ஆசனங்கள்

அதே சமயம் பிரித்தானிய அரசியலமைப்பின்படி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாத கட்சியும் குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையை வைக்கலாம் எனத் தெரிவிக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி தனது தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு முற்பட்டுள்ளது.

ஆட்சியை அமைக்க முற்பட்டுள்ள இரு பிரதான கட்சிகளுக்கும் இதுவரை 50க்கும் சற்று அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ள லிபிரல் டெமொகிரட்டிக் கட்சியின் ஆதரவு அவசியமாகி உள்ளது. இக்கட்சி தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் முன்னிலைக்கு வந்தபோதும் அது வாக்காளர்களின் தெரிவாக மாற்றப்படவில்லை. தேர்தலுக்கு முன் இடம்பெற்ற கருத்துக் கணிப்புகளில் லிபிரல் டெமொகிரட் கட்சி தொழிற்கட்சியைக் காட்டிலும் அதிக ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலைக்கு வரும் என்றும் கணிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அவை அனைத்தும் தற்போது பொய்யாகி உள்ளது. லிபிரல் டெமொகிரட் கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற ஆசனங்களிலும் குறைந்த ஆசனங்களையே இம்முறை பெற்றுக் கொண்டுள்ளது.

மூன்றாவது பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள லிபிரல் டெமொகிரட் கட்சி தொழிற்கட்சியுடனேயே கொள்கையளவில் பெரும்பாலும் உடன்படக் கூடிய கட்சி. ஆனாலும் கொன்சவேடிவ் கட்சியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையில் லிபிரல் டெமொகிரட் கட்சி முதலில் கொன்சவேடிவ் கட்சியுடன் எவ்வாறான கொள்கைகளில் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்பது பற்றி ஆராயும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுடன் கொள்கை உடன்பாட்டுக்கு வர முடியாத நிலையில் தொழிற்கட்சியுடனும் ஏனைய சிறு கட்சிகளுடனும் இணைந்து ஆட்சி அமைக்கலாம்.

1974ற்குப் பின் முதற்தடவையாக தொங்கு பாராளுமன்றம் ஒன்று பிரித்தானியாவில் அமைய உள்ளது. மிகவும் இறுக்கமாக இத்தேர்தல் போட்டி அமைந்ததால் இத்தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்களிப்பு வீதம் அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. சகல வாக்களிப்பு நிலையங்களில் இரவு 10 மணிக்கு மேலாக மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்ற போதும் வாக்களிப்பு நிலையங்கள் தங்கள் விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்கு வாக்களிப்பை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதனால் நூற்றுக் கணக்காணவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால் சிறிய எண்ணிக்கையில் தோற்றவர்கள் சில தேர்தல் தொகுதிகளின் வாக்களிப்பு செல்லுபடியற்றதெனக் கோரி சட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இறுக்கமான தேர்தலில் வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாக கணிவிழித்திருந்து தேர்தல் முடிவுகளை அவதானித்து இருந்ததால் ஒரு குறுகிய ஓய்வுக்குப் பின்னரே யாருடன் எக்கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து ஆட்சியை அமைப்பது என்ற முடிவினை எடுக்க வேண்டும் என அவதானிகள் கருத்து வெளியிட்டு உள்ளனர். இதுவரை முன்னிணில் உள்ள இரு கட்சியும் தாங்கள் வெற்றி பெற்றதாகவோ அல்லது தோல்வி அடைந்ததாகவோ தெரிவிக்கவில்லை.

பிரித்தானிய மக்கள் அடுத்த ஆட்சியை யார் அமைக்கப் போகின்றார்கள் என்பதை ஆர்வமுடன் அவதானித்துக் கொண்டுள்ளனர்.

24 ஆண்டுகள் ஆறாத வலியும் மாறாத அரசியலும்: ரி சோதிலிங்கம்

புலிகளின் சகோதரப் படுகொலைகளாலே நடாத்தப்பட்ட தமிழர் போராட்டத்தின் சிதைவு என்பது புலிகளின் அழிவின் பின்னரும் நியாயம் கேட்டுநிற்கிறது.

இன்றும் புலிகளின் இயக்கப்பெயரை, இயக்கத்தின் கொடியை, சின்னங்களை பாவிப்பவர்களிடமும், பிரபாகரன் தமது தலைவர் என்று கூறுபவர்களும், புலிகளின் தொடர்ச்சியாக போராட்டம் என்ற கண்துடைப்பை செய்பவர்களிடமும், இந்த ரெலோ அழிப்பிற்கான நியாயத்தை பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்றனர். ரெலோ அழிப்பின்போது கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர்களும் முன்னாள் ரெலோ தோழர்களும், இன்றும் புலிகளின் தொடர்ச்சி என்று தமது போராட்டங்களை செய்பவர்களிடம் ரெலோ மீதான புலிகளின் கோரப் படுகொலைக்கான நியாயம் கேட்டு நிற்கிறார்கள்.

இன்று புலிகளின் தொடர்ச்சி என்ற போராட்ட சுத்துமாத்துக்களை கொண்டு திரிபவர்களில் பலர் ரெலோ அழிப்பின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகளேயாகும். இவர்கள் ரெலோ மட்டுமல்ல இதர சகோதரப் படுகொலைகளுக்கும் தொடர்புடையவர்களாகவே இருந்துள்ளனர். இன்று 24 வருடங்கள் கழிந்துவிட்டன என்ற காரணத்தை கூறிவிட்டு எவரும் ஒதுங்கிடவிட முடியாது என்பதே பல ரெலோ தோழர்களின் கருத்தாக உள்ளது.

புலிகள் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை என்பது திட்டவட்டமாக ரெலோ அழிப்பின்போது வெளிப்படுத்தப்பட்டு விட்டதொன்று. புலிகள் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து தமிழ் மக்களின் அடையாள இருப்பையே கேள்விக்குள்ளாக்கினர். பெருந்தொகையான மக்களை அரசும் இராணுவமும் கொன்று குவிக்க ஆதரவு கொடுத்தது மட்டுமல்லாமல் தனது இறுதிக்கால அழிவின்போது தமிழ் மக்களை கொலை செய்யவும் புலிகள் தயங்கவில்லை.

சகோதர இயக்கத்துடன் ஏற்படும் முரண்பாடுகளை பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக எதிரி முகாம்களை சுற்றி வளைத்து தாக்குவதுபோல் தாக்கி சகோதரர்களைக் கொலை செய்தனர். இது சரி என்று வாதிடும் புலிகள், இன்றும் தமிழர் சமூகத்தில் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புலிகள் இயக்கத்தை இன்று தமது சுயநலத்திற்காக பாவிக்கின்றனர். அதற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம் இப்படி பலவகையான பெயர்களில் இந்த கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழர்களை கொன்றுதான் சர்வதேச சமூகத்தின் கவனத்தை திருப்ப முடியும் என்ற கருத்தை கொண்டிருந்த புலிகளின் செயற்பாடுகள் புலிகள் மக்களில் அல்ல, தமது சொந்த நலனில் மட்டும் அக்கறையுள்ளவர்கள் என்பதைக் காட்டியது. இன்று இதன் தொடர்ச்சியினை செயற்படுத்துபவர்களும் மக்களின் நலனிலிருந்து விலகி தமது நலன்களையே பிரதிபலிக்கின்றனர். இவர்கள் போராட்டத்தின், மக்களின், சமூகமாற்றத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் என்பதைவிட தமது சொந்த நலனில் இருந்தே மக்கள் நலனை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் சுயநலக் கும்பல்களாகும்.

எதிரியிடமிருந்து தப்பித்துக்கொள்ள இயக்க இரகசியங்களை காப்பாற்ற சயனைட் கொடுத்து கொலை செய்த புலிகள் தாம் மட்டும் உயிர்தப்பவே சரணடைந்தனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் துரோகிகள் என்றால் தாமும் தமது துரோகத்தை பதிவுசெய்துவிட்டனரேயாகும்.

தமது போராட்ட யுக்திகளுக்காக பயன்படுத்திய செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு ஒரு வருடமாகியும் இன்றுவரையில் புலம்பெயர் புலிகள் அமைப்பினர் கைகொடுக்க முன்வரவில்லை. அவர்களுடைய கவனம் முமுவதும் தங்கள் வசம் உள்ள சொத்துக்களையும் வருமானங்களையும் பாதுகாப்பது பெருக்குவது என்பதிலேயே உள்ளது. மே 18 வரை செல்வந்த இயக்கமாக இருந்த புலிகள் மே 18ல் தங்கள் தலைவர் அழிக்கப்பட்டதும் செயர் மார்கற் வீழ்ந்ததால் நிறுவனங்களின் சொத்துக்கள் காணாமல் போவது போல் புலிகளது சொத்துக்களும் மே 18 உடன் காணாமல் போனது.

முள்ளிவாய்க்காலில் அழிவு ஏற்பட்டு ஒரு வருடமாகியும் தமது இயக்கத்தின் தலைமைகள் யார்? என்பது இன்று வரையில் வெளியிடவில்லை என்றால் மக்களுக்கான ஒரு தலைமை இருந்தது என்று சொல்வதில் அர்த்தமில்லை. இவர்கள் அடிப்படையில் மக்கள் நலனுக்காக போராடவில்லை. பிரபாகரனின் தனிப்பட்ட தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்காக இத்தனை மக்களையும் இத்தனை மக்களின் சொத்துக்களையும் மானத்தையும் மரியாதையையும் அழித்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உயிர் மூச்சையும் அழித்துவிட்டனர் புலிகள். இந்த இயக்கத்தினால் இவற்றைவிட வேறு ஏதும் செய்யத் தெரியாது. தமிழர் உரிமைப் போராட்டத்தை பிரபாகரன் மாற்றுவார் என்பது 1980 களிலிருந்து தமிழர் போராட்ட ஆரம்பகால உறுப்பினர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்படியாக பேசப்பட்ட பல கூட்டங்களில் கலந்து கொண்டோர் பலர் இன்றும் புலம்பெயர்ந்த நாட்டிலும் இக்கருத்துக்களுடன் வாழ்கின்றனர். உதாரணமாக யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள கம்யூனிஸ்கட்சி எழுதுவினைஞர் சங்கத்தின் கட்டிடத்தில், மணியம் கட்டிடத்தில் நடைபெற்ற 14 இயக்கங்களின் ஒன்று கூடலின்போதும் இவை மனம் திறந்து பேசப்பட்டது.

புலிகளினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட இன்றுள்ள ரெலோ இயக்கத்தின் செயற்பாடுகளும் அன்னிறிலிருந்து இன்று வரையில் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்தோ அல்லது சமூகத்தின் தேவைகளிலிருந்தோ பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றும் ரெலோ தனது பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிலும் கடந்த காலத்தில் 4 பாராளுமன்ற ஆசனங்களையும் இன்று ரிஎன்ஏ கூட்டாக 2 ஆசனங்களையும் ரெலோ பெற்றிருந்த போதும் மக்களின் தேவைகள், மக்கள் உரிமைப் போராட்டதின் பங்காளிகளாக ரெலோவினரின் செயற்பாடுகள் என்ன? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. வெறுமனே பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது மட்டும் போராட்டமா? இன்றுள்ள ரெலோவினர் ‘உங்கள் கடந்தகால மக்கள் சேவைகள் என்ன?’ என்ற கேள்விக்கு என்ன பதில்களைக் கொண்டிருக்கிறார்கள்? எப்போதும் போல் புலிகளையே காரணம் காட்டும் ரெலோவினர் இன்று புலிகளின் அழிவின் பின்னர் ஒரு வருடமாகியும் ‘ரெலோவின் நிலைப்பாடு என்ன?’ என்ற எந்த அறிக்கைகளும் வெளிவரவில்லை?

புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளின் காலத்தில் ரெலோவின் அடையாள அட்டைகளை பயன்படுத்தியே கொழும்பிலும் இலங்கையின் இதர பகுதிகளில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்றும் பல ஆயுத தளபாடங்களை கொழும்பிற்குள் புலிகள் கடத்தினர் என்றும் விசேடமாக புலிகளின் பிஸ்டல் பிரிவினர் ரெலோவின் அடையாள அட்டையுடன் கொழும்பில் நடமாடினர்.

இன்றுவரையில் ரெலோ தனது கட்சியினை மறுசீரமைப்பு செய்யவில்லை. ரெலோ உறுப்பினர்களின் அந்தஸ்துக்கள் என்ன? ரெலோவின் அடுத்த செயற்பாடுகள் என்ன? என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் வெறுமனே பாராளுமன்றத்திற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவே பல பொதுமக்களும், பல முன்னாள் ரெலோ போராளிகளும், புலிகளுடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டு இன்று ரெலோவிலிருந்து விலகி வாழ்பவர்களின் கருத்தாகவும் உள்ளது.

மேற்குறிப்பிட்ட விடயங்களின் தாக்கம் காரணமாகவும் ரெலோவிருந்து வெளியேறிய சிறீ ரெலோவினரும் அதன் பின்னர் சிறீரெலோவிலிருந்து பிரிந்து சுதந்திரக்கட்சியுடன் இணைந்த ஒரு பிரிவினரும்கூட, இன்றைய ரெலோவினரின் கட்சி அமைப்பு செயற்பாடுகள் மற்றும் ரெலோவின் இன்றைய நிலைப்பாடுகளையே தெளிவுபடுத்துகின்றது.

மே 6 1986 / மே 18 2009 : வரலாற்றை கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மீது வரலாறு ஈவிரக்கம் காட்டுவதில்லை! : த ஜெயபாலன்

Sri SabaratnamPirabakaran V_LTTEஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் தமிழர் தாயகத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தையிட்ட அதே மண்ணில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.

ஆம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000க்கும் அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

”உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.”
என 24 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் தாயகம் எங்கும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கைகளை வழங்கினர். ரெலோவின்  முகாம்கள் மோட்டார் செல் தாக்குதல்களுக்கு இலக்கானது. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள், ஆயுதம் தாங்காதவர்கள், நித்திரையில் இருந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள், சரணடைந்தவர்கள் என்று எவ்வித பேதமுமற்று அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் சித்திரவதைக்கு உள்ளாகி மக்கள் முன்னிலையில் உயிருடன் எரிக்கப்பட்டனர். தங்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பாடத்தை புகட்டுவதற்காக இவை திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டது. தமிழ் மக்கள் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டு வாய்மூடி மௌனிக்க வைக்கப்பட்டனர். அன்று ஒடுக்கப்பட்ட அவர்களது குரல்கள் இன்றும் ஒடுங்கியே உள்ளது. ஒடுக்குபவர்கள் மட்டுமே மாறியுள்ளனர்.

வரலாற்றுத் தவறுகளைக் கற்றுக் கொள்ள மறுப்பவர்களை வரலாறு மன்னிப்பதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இழைத்த வரலாற்றுத் தவறை கற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் எதேச்சாதிகாரத்துடன் தங்கள் அதிகார வெறிக்கான யுத்தத்தைத் தொடர்ந்தனர்.

”தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த 2009 ஏப்ரல் இறுதிப் பகுதியில் ”புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும்.”
என்ற எச்சரிக்கையை அப்போதைய இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பனை மரங்களில் ஒலிபெருக்கியைக் கட்டி அறிவித்தார். அவருடைய எச்சரிக்கை வெளியாகி சில வாரங்களுக்கு உள்ளாகவே  மக்களுக்குள் ஒழிந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தியது ஆயிரக்கணக்கான  பொது மக்கள் போராளிகள் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைமை படுகொலை செய்யப்பட்டது. ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை இயக்கங்களோ அடிப்படையில் ஒரே விதமானவர்கள். இவர்கள் மக்கள் விடுதலை என்பதிலும் பார்க்க தங்கள் அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதற்குப் போராடியவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளின் அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளினால் தமிழ் மக்களே மிகப் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்து உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதை வரவேற்கவோ அல்லது ஒரு தவறை மற்றுமொரு தவறு மூலம் சரிசெய்துவிட்டதாகவோ கொள்ள முடியாது.

இந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நாம் விட்ட வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் எதனைக் கற்றுக்கொண்டோம் என்பதே மிக முக்கியமானது. இவ்வளவு அனுபவங்களுக்குப் பிற்பாடும் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகள் என்பது இன்னமும் தங்களின் அரசியல் தளத்தில் ஊன்றி நின்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கவில்லை. ஒருசாரார் இலங்கை அரசுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்ள மறுசாரார் இலங்கை அரசின் ஒடுக்குமுறையை வைத்து அரசியல் செய்பவர்களாகவே உள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இன்று வரையுள்ள காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு வென்றெடுத்த உரிமைகளிலும் பார்க்க அழிவுகளே அதிகம் மிஞ்சியுள்ளது. அந்த வகையில் அதற்கான காரணங்களை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்பவர்கள் மீளாய்வு செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கான முனைப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எதேட்சையான உணர்ச்சிகரமான கோசங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்டுவது அந்த அழிவு வரலாற்றை மீள நிகழ்த்தவே உதவும்.

வே பிரபாகரனும் சிறிசபாரட்னமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களுடைய முடிவுகள் மட்டுமல்ல உமாமகேஸ்வரனது முடிவும் இவ்வாறு அமைந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இந்த அழிவு வரலாற்றில் இருந்து இதுவரை நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதும் கற்றுக்கொள்ள மறுக்கின்றோம் என்பதும் ஆபத்தான உண்மைகள்.

ஓவ்வொரு மனிதனும் தான் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அவன் அத்தவறைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. இது ஒரு தனிமனிதனுக்கானது மட்டுமல்ல அமைப்புகளுக்கும் பொருந்தும். ஏந்தவொரு அமைப்பும் தங்கள் அமைப்பு விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அத்தவறுகளைத் திருத்திக்கொள்வதில்லை. இதுவே தமிழீழ விடுதலைக்குப் போராடிய அமைப்புகளிலும் நடந்தது. ஓவ்வொரு தடவையும் இவ்வமைப்புகள் தவறுகளைவிட்ட போது அவற்றை நியாயப்படுத்தி வந்தன. நியாயப்படுத்துவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்தன. துரோகிகளைச் சுட்டுக்கொல்வது என்று ஆரம்பித்து தாங்கள் காப்பாற்ற வேண்டிய மக்களையே சுட்டுக் கொல்வதில் வந்து நின்றது தமிழீழ விடுதலைப் போராட்டம். மனித அவலமும் அழிவும் எல்லையைத் தாண்டும் போது தான் சர்வதேசம் தலையிட்டு நிரந்தரமான தீர்வு கிட்டும் என்று அதற்கும் அவர்கள் ஒரு நியாயம் வைத்திருந்தனர்.

இவ்வளவு அழிவுகளின் பின்னும் மதிப்பீடுகள் எதுவும் இன்றி வரலாற்றை ஆராயாமல் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். இப்போது அவர்கள் நாட்டில் இல்லாததால் கடல் கடந்து நாடுகள் கடந்து சென்று தமிழீழம் கேட்கின்றனர். நாடுகடந்த தமிழீழம்.

மே 6ல் சரணடைந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் கிட்டு என்றழைக்கப்பட்ட அன்றைய யாழ் மாவட்ட விடுதலைப் புலிகளின் தளபதி சதாசிவம் கிருஸ்ணகுமாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதியினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். படுகொலைக்குப் பிற்பாடு இருவரது உடல்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. இரு சம்பவத்திலும் கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவரின் வரலாற்றை அவர்களுடன் சேர்த்து எரிக்கவோ புதைக்கவோ செய்தனர். அதனால் அவர்கள் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடங்களும் மர்மமாகவே வைக்கப்பட்டது.

சிறிசபாரட்ணம் படுகொலை செய்யப்பட்டு கால் நூற்றாண்டுகள் ஆகின்ற போதும் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இதுவரை எவ்வித அஞ்சலிகளும் நிகழ்த்தப்படவில்லை. அவர் இறந்துவிட்டதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதிலேயே அவ்வமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு தலைவனது மரணத்தையோ வாழ்வையோ உறுதிப்படுத்தத் திரணியற்ற அமைப்பு தற்போது நாடுகடந்த தமிழீழம் பெற்றுத் தீருவோம் என்று அறைகூவல் விடுகின்றது.

உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் தற்போது வரலாறாகிவிட்டார். 24 ஆண்டுகளுக்கு முன் வே பிரபாகரனது தலைமை மேற்கொண்ட கோரத்தனமான அழித்தொழிப்பு மீளவும் தமிழர் தாயகத்தில் நிறைவேறியது. அன்று கோரத்தனத்தை மேற்கொண்டவர்கள் இன்று அதற்குப் பலியாகி உள்ளனர். வரலாறு ஈவிரக்கம் பார்ப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்கு உணர்த்தி உள்ளது.

தமிழ் மக்கள் மீதானது மட்டுமல்ல அனைத்து மக்களினதும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவை உணச்சி வேகத்தில் பழிவாங்கும் நோக்கில் அல்ல. கடந்த கால வரலாற்றைக் கற்றுக்கொண்டு வரலாற்றுத் தவறுகளைக் திருத்திக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஊடகவியளாளர், தொடர்பு ஊடகங்கள் மற்றும் அவர்களின் அரசியல்: மீராபாரதி

மனிதர்கள் மட்டுமல்ல காட்டில் வாழும் மிருகங்களும் சமுத்திரங்களும் அதில் வாழும் மீன்களும், இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட வானவெளியும் பிரபஞ்சமும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதனை இன்றைய அதிநவீன தொழில்நுட்ப மற்றும் செய்தி பரிவர்த்தனை புரட்சி உலகில் காண்கின்றோம். ஏனெனில் மனிதர்களின் அரசியல் செயற்பாடுகள், இவை ஒவ்வொன்றையும் ஏதோ ஒரு வகையில் நேர்மறையாகவே எதிர்மறையாகவோ பாதிக்கின்றது. இப்படியிருக்கும்பொழுது ஊடகவியளார்கள் மட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பது அல்லது அவ்வாறு கற்பிக்க முனைவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல நகைச்சுவையானதும் கூட. மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும் என வரையறுப்பது வரட்டுத்தனமான வாதமாகும்.

அண்மையில் நடந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் ஊடகங்களில் பணிபுரிபர்களாக இருந்துள்ளனர். இவ்வாறு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவது ஏதோ ஊடகத்துறையின் கற்புத்தன்மையை களங்கப்படுத்தி விட்டது அல்லது களங்கப்படுத்திவிடும் என்ற தொனியில் கருத்துக்கள் வெளிவந்தன. இதன்மூலம் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் இந்த ஊடகங்களை வெளீயிடும் நிர்வாகிகள் அல்லது முதலீட்டாளர்கள் ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லது நடுநிலையானவர்கள் என நம்புவது, வாதிடுபது அல்லது கற்பிதம் செய்வது உண்மைக்குப் புறம்பானது. இவ்வாறு வாதிட முனைபவர்கள் ஒன்று ஊடகவியலிலிருக்கும் அரசியலை புரியாமல் எழுதுகின்றார்கள். அல்லது புரிந்தும் அந்த உண்மையை திட்டமிட்டு மறைக்க முயல்கின்றார்கள் என எண்ணவேண்டியுள்ளது. மறுபுறம் அரசியல் செயற்பாட்டில் தீவிரமாக இருந்த பலர் ஊடகத்துறையைத் தேர்தெடுத்து ஊடகவியலாளர்களாக சிறந்த பங்களிப்பை ஆற்றி ஊடகத்துறைக்கு பங்களிப்பும் செய்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. அதேவேளை ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கும் பலர் வந்துள்ளனர்.

ஒரு மனிதர் தனக்கென ஒரு அரசியல் கருத்தொன்றை கொண்டிருப்பது வரலாற்றில் என்றுமே தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவசியமான ஒன்றும் கூட. அதேவேளை, பொதுசன ஊடகம் போன்ற பலமுனைக் கருத்துகளை வெளியிடக் கூடிய சாத்தியம் கொண்ட ஒரு தொழிலில் தமக்கு எதிரான கருத்துக்களையும் மதிக்கவும் கேட்கவும் கூடிய தன்மையை ஒவ்வொரு ஊடகவியளாலரும் பிரக்ஞைபூர்வமாக கொண்டிருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஊடக நிறுவனங்களும் தமது சொந்த சமூக அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு விதமான அரசியல் சமூக கருத்துக்களை அது தொடர்பான விவாதங்களை விமர்சனங்களை நேர்மையாக வெளியிடுபவர்களாக இருக்கும் பொழுதே ஒரு ஊடகமானது ஒரு சமூகத்தின் காலக்கண்ணாடியாக செயற்படுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கும். அதாவது நாம் ஒரு கருத்துடன் உடன்படவில்லையாயினும் அக் கருத்தை குறிப்பிட்ட நபர் சொல்லுவதற்கும் அதை வெளியிடுவதற்குமான உரிமையை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும் அதேவேளை அக் கருத்தை பிரசுரிக்கவும் வேண்டியது பொதுசன ஊடகங்களின் கடமையும் பொறுப்புமாகும். அப்பொழுதுதான் ஊடக தர்மம் பக்கச்சார்பின்றிப் பேணப்படுகின்றது எனக் கூறலாம். இதற்குமாறாக ஒரு ஊடக செய்தியாளராக அல்லது அதன் நிறுவனராக தனக்கிருக்கும் அதிகாரத்தினால் தனது கருத்துக்கு எதிரான கருத்தை வெளியிடாது புறக்கணித்து இருட்டடிப்பு செய்யும் பொழுது ஒரு ஊடகவியளாளராக, பொதுசன ஊடகமாக இத் தொழிலின் நடுநிலை தர்மத்தை மதிக்காது மீறுகின்றார் அல்லது மீறுகின்றது எனக் கூறலாம்.

இக் கட்டுரையின் நோக்கம் ஊடகவியளர்கள், மற்றும் தொடர்பூடக நிறுவனங்கள் என்பன அரசியலுடன் நேரடியாகவோ அதாவது வெளிப்படையாவோ அல்லது மறைமுகமாகவோ உறவைக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதே. இந்த உறவு தொடர்பாக நாம் ஆழமானதும் விரிவானதுமான பார்வையைக் கொண்டிருக்கவேண்டிய தேவையிருக்கின்றது. இது தொடர்பாக குளோபல் தமிழ் நயூஸ் மின்வலை செய்தி ஊடகத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. துரதிஸ்டவசமாக அக் கட்டுரையாளரையும் வெளிவந்த திகதியையும் மீளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அக் கட்டுரையை வாசித்ததன் விளைவே இக் கட்டுரை.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதாவது மனிதர்கள் அரசியல் மிருகம் என பொதுவாக கூறுவார்கள். பெரும்பான்மையான மனிதர்கள் தமது அரசியலை பொது இடங்களில் வெளிக்காட்ட மாட்டார்கள். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதன் மூலம் மட்டும் தமது பங்களிப்பைச் செய்து அதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். இவர்களது அரசியல் (நிலைப்பாடு) தனிப்பட்டளவில் மறைமுகமானதாகவும் பொதுவானளவில் வெளித்தெரிவதானதாகவும் இருக்கும். மனிதர்களில் சிலர் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது ஆற்றலுக்கமைய தமது அரசியலை முன்னெடுத்துச் செயற்படுவதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர். இந்த வரையறைகள் பொதுசன ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பொதுவானதாக பொருந்துவதாக இருக்கின்றது எனலாம்.

பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் தமது அரசியலை வெளிப்படுத்தாது தம்மை நடுநிலையானவர்களாக வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய தேவை தொடர்பூடகத்துறையைப் பொறுத்தவரை இருக்கின்றது. ஏனெனில் “பொதுசன ஊடகங்கள் நடுநிலையானவை” என்ற ஊடகத் தர்மத்தை முன்னிலைப்படுத்தியே தம்மை நியாயமானவர்களாக நேர்மையானவர்களாக நிலைநிறுத்த முயல்கின்றனர். இதனால் நடுநிலையான ஊடகவியலாளர் என்ற ஊடக தர்மத்தைக் காப்பதற்கும் தம்மை அவ்வாறு அடையாளப்படுத்துவதற்கும்; தமது தனிப்பட்ட அரசியலை மறைக்கவேண்டியோ அல்லது தள்ளிவைக்க வேண்டிய தேவை தம் ஊடகத் தொழில்துறை சார்ந்து ஊடகங்களுக்கும் ஊடகவியளாளர்களாக பணிபுரிபவர்களுக்கு இருக்கின்றது. இதனால் இவர்களுக்கு தனிப்பட்ட அரசியலோ அல்லது அரசியல் பார்வையோ இல்லை என்பது உண்மைக்குப் புறம்பான ஒரு கூற்றும் சற்று மிகைப்படுத்தலுமாகும். ஏனனில் இவர்கள் எந்த கருத்துக்களின் அடிப்படையில் தமது செய்திகளை மற்றும் கட்டுரைகளை எழுதுகின்றனர் அல்லது சேகரிக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் மற்றும் தமது கேள்விக்கனைகளை எவ்வாறு தொகுக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் ஒரு ஊடகவியலாளர்களது அரசியல் வெளிப்படும். மேலும் இவ்வாறான ஆக்கங்களில் எப்படியானவற்றை எவ்வாறு முன்னிலைப்படுத்துகின்றனர் அல்லது பின்னிலைப்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து ஊடக நிறுவனங்களின் அரசியல் வெளிப்படும்.

இதற்கு மாறாக சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவர்களுக்கு ஊடகத்துறை என்பது தமது அரசியலை பொது மனிதர்களிடம் முன்வைப்பதற்கானதும் இதனடிப்படையிலான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கானதுமான ஒரு சாதனமே. ஆகவே ஒரு பொதுசன ஊடகமானது அதைச் செயற்படுத்தும் நிர்வாகிகளைப் பொறுத்தும் பணியாற்றுகின்ற ஊடகவியளாலர்களைப் பொறுத்தும், ஒரு வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ அல்லது ஒரு அரசியல் செயற்பாடாகவோ பரிணாமம் பெறுகின்றது.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் மறைவாகவே வெளிப்படையாகவே இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகவியளாருக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் மறுக்க முடியாத ஒரு உண்மையுமாகும். ஒரு மனிதர் தனது வாழ்க்கைக்கான ஆதராமாக தனது திறன்களுக்கமைய ஊடகவியலாளர் என்ற தொழிலை தேர்தெடுக்கலாம். சில மனிதர்கள் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவும் சூழல் நிலைமைகளுக்காகவும் ஊடகவியளாளர்கள் என்ற புதிய அல்லது இன்னுமொரு அடையாளத்தை தேர்தெடுக்கின்றனர். இவ்வாறன தேர்வுக்கு தமது கருத்துக்களை வெளிக்கொண்டு வரவும் மற்றும் தொடர்ந்தும் சமூகத்தில் செயற்படுவதற்கான ஒரு வழி எனப் பல காரணங்கள் இவர்களுக்கு இருக்கலாம். மறுபுறம் ஒரு ஊடகவியளாலராக நடுநிலையானவராக முடிந்தளவு தனது ஊடக்துறைப் பணியை சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளலாம். இதற்காக தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றோ அல்லது தனக்கென ஒரு அரசியல் இல்லை என வாதிடுவதோ உண்மைக்குப் புற்ம்பானதாகவும் அவசியமற்றதாகவுமே இருக்கும். அல்லது இதன் மறுதலை, இவ்வாறு ஒருவர் கூறுவதே அவரது அரசியலை வெளிப்படுத்துகின்றது எனலாம். அதாவது ஒருவர் தனக்கு அரசியல் இல்லை என மறுப்பதும் ஒரு அரசியல் நிலைப்பாடே.

ஊடகவியளார்க்கு அரசியல் ஒன்று இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதவாது வியாபார மற்றும் இலாப நோக்கத்தையே பிரதானமாகவும் அடிப்படையாகவும் கொண்டு வெளிவரும் ஊடகங்களுக்கும் அரசியல் இருக்கின்றது. ஆனால் இதன் அரசியல் நேரிடையானதல்ல மாறாக மறைமுகமானது. இந்த ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை ஆக்கங்களை வெளிவிடுகின்றது என்பதிலும் அதாவது வடிவமைப்பில் இவற்றிக்கு அளிக்கப்படும் முக்கியத்தும் மற்றும் அவற்றுக்குள் மறைந்திருக்கும் உட்கருத்துக்களின் ஊடாக அதன் அரசியல் வெளிவருகின்றது எனலாம். இவ்வாறான ஊடகங்களின் அரசியலை புரிந்துகொள்வதற்கு இதன் ஆக்கங்களையும் செய்திகளையும் அதன் வடிவமைப்பையும் பல்முனைகளில் கட்டுடைப்பு செய்து ஆய்வு செய்வதன் மூலம் சாத்தியமானது. மறுபுறம் சமூக அக்கறையுடன் சமூக மாற்றத்திற்கான நோக்கத்துடனும்; அரசியல் கட்சிகள் சார்ந்தும் சாராமலும் ஆனால் வெளிப்படையாக தமது அரசியல் நோக்கங்களை முன்வைத்தும் சில பொதுசன ஊடகங்கள் வெளிவருகின்றன. இவற்றுக்கு வியாபாரம் மற்றும் இலாபம் பெறுவதற்கு அப்பால் தமது கருத்துக்களையும் பல்வேறு புதிய கருத்துக்களையும் பொது மனிதர்களிடம் கொண்டு செல்வதும் அது தொடர்பான உரையாடலை ஊக்குவிப்பதையும் மற்றும் புதிய கருத்து மேலாதிக்கத்தை நிறுவுவதையுமே நோக்கமாக கொண்டிருக்கும்.

உதாரணமாக தினகரன் போன்ற தமிழ் பத்திரிகைகள் அராசாங்க நிறுவனங்களே வெளியிடுவதால் இது எப்பொழுதும் எந்த கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ இது சார்ந்த அரசியலையே வெளிக்கொண்டு வருவதாக இருக்கின்றது. வீரகேசரி போன்ற பத்திரிகைககள் நீண்ட காலமாக நடுநிலையான பத்திரிகையாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட ஒரு பொதுசன ஊடக வரலாறு இதற்கு இருந்தபோதும் போதும் இதற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாதது. இதன் அரசியல் குறிப்பாக மிதவாத தமிழ் தேசிய அரசியல் எனக் குறிப்பிடலாம். இப்பத்திரிகை பொதுவாக மலையக மற்றும் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மனிதர்களின் மிதவாத அரசியலை பொதுவாக பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் கூறலாம்.

தினக்குரல் பத்திரிகையானது வீரகேசரி பத்திரிகைக்கு மாற்றீடாக நடாளாவிய ரீதியில் வெளிவந்தபோதும், வடக்கு கிழக்கு தமிழ் தேசியத்தை குறிப்பாக யாழ் மையவாதத்தையும் மற்றும் மிதவாதமும் தீவிரவாதமும் கொண்ட கலவையாக தனது அரசியலை பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் குறிப்பிடலாம். இதுபோன்று பல பத்திரிகைகள் நாடாளாவிய ரீதியில் வெளிவராமல் பிரதேச அடிப்படையில் வெளிவருவதுடன் அப் பிரதேச அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாக இருக்கின்றன. இந்தடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீண்ட காலம் வெளிவந்த ஈழநாடு பத்திரிகை முக்கியமானதும் ஒரளவு “நடுநிலை” போக்குடனும் ஊடக தர்மத்தை பேணி வெளிவந்ததது எனக் கூறலாம். இருப்பினும் இப் பத்திரிகையும் யாழ் மையவாத தமிழ் தேசிய அரசியலையே தனது அடிநாதமாக கொண்டிருந்தது எனக் கூறினால் தவறல்ல. இதேபோல் (யாழ்.) உதயன் ஆரம்ப காலங்களில் வியாபார நோக்கதையே பிரதானமாக கொண்டு வெளிவந்தபோதும் இதுவும் யாழ் மையவாத மிதவாத அரசியலிலிருந்து விலகவில்லை எனலாம். மேலும் யுத்த காலங்களிலும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் குறிப்பாக யாழிலிருந்து வெளிவருதால் அரசியல் முக்கியத்துவம் கொண்ட பத்திரிகையாக மாற்றம் கொண்டது என்றால் தவறல்ல.

இது போன்று ஈழமுரசு ஈழநாதம் என்ற பத்தரிகைகளும் யாழிலிருந்து வெளிவந்தன. இப் பத்திரிகைகள் தமது அரசியலை நேரடியாக வெளிப்படையாக கூறியோ முன்வைக்காதபோதும் யாழ். மையவாத தமிழ் தேசிய அரசியலை முதன்மைப்படுத்தி வெளிவந்தன எனக் கூறலாம். இதற்கு அன்றிருந்த சுழலா அல்லது பத்திரிகை நிர்வாகமாக அல்லது அதில் பணியாற்றி ஊடகவியளாலர்களா என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று. ஏற்கனவே கூறியது போல் தமது செய்திகளையும் ஆக்கங்களையும் எவ்வாறு எதனப்படையில் எழுதுகின்றனர் என்பதைப் பொறுத்தும் எதற்கு முக்கியத்துவமளித்தன என்பதைப் பொருத்தும் இவர்களது அரசியல் வெளிப்படுகின்றது. இதை ஆய்வு செய்வதன் மூலம் நிறுபிக்கலாம். இதனால் இந்த ஊடகங்களுக்கு என சொந்தமாக ஒரு அரசியல் இருக்கவில்லை என கூறி நிராகரிக்க முடியாது. மேலும் இந்த ஊடக நிறுவனங்களுக்கு பொசுசன ஊடகம் என்பது வியாபாரம் என்பதும் இத் தொழில் மூலம் இலாபம் பெறுவதும் முக்கியமானதும் பிரதானமாதுமான ஒரு நோக்கமாக இருக்கின்றது என்பதையும் குறித்துக்கொள்வது அவசியமானது. வடக்கிலிருந்து வெளிவந்த இப்பத்திரிகைகள் போன்று கிழக்கு மற்றும் மலையகத்திலிருந்தும் இவ்வாறன பிரதேச பத்திரிகைகள் வெளிவந்தனவா என்ற தகவல்களை அறியாமையினால் இங்கு குறிப்பிடாது தவிர்க்கின்றேன்.

தினமுரசு போன்ற பத்திரிகைகள் முற்று முழுதான ஜனரஞ்சக அடிப்படையில் வெளிவந்த போதும் தமிழ் தேசிய அரசியலையே பிரதானமாக கொண்டு வெளிவந்தது என்பதற்கு அரசியல் நோக்கம் மட்டுமல்ல வியாபார நோக்கமும் ஒரு காரணம் என்றால் பொய்யல்ல. திசை போன்ற பத்திரிகைகள் குறுகிய காலம் வெளிவந்தாலும் கலை இலக்கிய பார்வையை பிரதானமாக முன்வைத்தாலும் இதற்கும் தமிழ் தேசிய வாத அரசியல் இருந்தது என்பதை நிராகரிக்க முடியாது. இவற்றுக்கு மாறாக சரிநிகர் போன்ற பத்திரிகைகள் மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளிலிருந்து வேறுபடுவது அதனது வெளிப்படையான அரசியலாலும்; மற்றும் வியாபார நோக்கமற்ற அதன் தன்மையாலும் எனக் கூறுவது மிகையானதல்ல. இப் பத்திரிகையானது தமிழ் தேசிய அரசியலை பிரதானமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்தாலும் குறிப்பாக தமிழ் மிதவாத அரசியலிலிருந்தும் மற்றும் புலி தலைமையின் ஏகபோக அரசியலிலிருந்தும் புலி எதிர்ப்பு இயக்கங்களின் அரசியலிலிருந்தும் தம்மை வேறுபடுத்தி ஒரளவாவது “முற்போக்கானதும்” ஆரோக்கியமானதுமான அரசியலுக்கான உரையாடல் களத்தை உருவாக்கி வெளிவந்த ஒரு பத்திரிகை எனக் குறிப்பிடலாம். இப்படி ஒவ்வொரு ஊடகங்களும் தமது அரசியலை ஏதோர ஒரு வகையில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி வந்துதுள்ளன, வருகின்றன.

இதுபோலவே இன்றைய தொழில்நுட்ப தொடர்பூடக தகவல் பரிமாற்றப் புரட்சி காலத்தில் வலை சஞ்சிகைகள் முக்கியத்தும் பெற்றுவருகின்றன என்பது நாமறிந்ததே. மேற்குறிப்பிட்ட பத்திரிகைகள் போன்று இந்த சஞ்சிகைகளுக்கும் அவர்களுக்கான ஒரு அரசியலை கொண்டுள்ளன. உதாரணமாக “தேனீ” போன்றன அரசாங்க சார்பு அல்லது அரசாங்கத்துடன் சமரச போக்கு கொண்ட அரசியலை வெளிப்படுத்தியும் புலி எதிர்ப்பும் மட்டுமல்ல தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலையும் முன்வைத்து தமது செய்திகளை ஆக்கங்களை வெளியிடுகின்றன என்றால் தவறல்ல.

“தேசம்நெட்” தனக்கென ஒரு அரசியலை கொண்டிருந்தபோதும் தனது அரசியல் நிலைப்பாட்டில் இரு எல்லைகளுக்குள் மாறி மாறி பயணிக்கின்றதா என்ற சந்தேகத்தை அல்லது கேள்வியை எழுப்புகின்றது. அதாவது அரச சார்பு மற்றும் புலி எதிர்ப்பு தமிழ் தேசிய அரசியல் என்ற இரு எல்லைகளுக்குள் பயணிக்கின்றதா அல்லது பல் முனைக் கருத்துக்களுக்கு இடமளிப்பதன் மூலம் தனது நடுநிலையைப் பேணுகின்றதா என்பது ஆய்வுக்குரிய வியடம். இதற்கு மாறாக “இனியொரு” போன்றன குறிப்பாக இடதுசாரி அல்லது சமூக மாற்றத்திற்கான அரசியலை நேரடியாக முன்வைக்கின்றன. “குளோபல் தமிழ் நியூஸ்” வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசிய அரசியலை அடிப்படையாகவும், பிரதானமாகவும் கொண்டு ஒரு வலை ஊடகத்திற்குரிய தன்மையுடன் வெளிவருகின்றது எனக் கூறலாம். “தமிழ் நெட்” “தமிழ்வின்”, “சங்கப்பலகை” என்பன யாழ்மையவாத குறிப்பாக புலிகளின் தமிழ்தேசிய அரசியலை முன்வைக்கும் அதேவேளை தமக்கு எதிரானவர்களுக்கான எதிர்ப்பு அரசியலையும் முன்வைக்கின்றது எனக் குறிப்பிடுவது மிகையானதல்ல. இதேபோல “நெருப்பு” “அதிரடி” போன்ற வலை சஞ்சிகைகள் தாம் சார்ந்த இயக்கங்களின் அரசியலை முன்னிலைப்படுத்தியும் புலி எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுக்கின்றன எனக் கூறலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறிலங்காவில் தீவிரமாக செயற்பட்ட ஊடகங்களினதும் ஊடகவியளாலார்களினதும் பங்களிப்பை குறித்துச் செல்வது நல்லது. சிறிலங்காவில் 1970 ஆண்டிலும் பின் 1987ம் ஆண்லும் ஜே.வி.பி யின் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் பின் ஊடகவியாளராக பரிணமித்திருந்தனர். இதில் குறிப்பிடக் கூடியவர்கள் “ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், “யுக்திய” பத்திரிகையின் ஆசிரியர் சுனந்த தேசப்பிரிய, மற்றும் இன்றைய முக்கிய அரசியல் செயற்பாட்டாளரான வீமல் வீரவன்ச பணியாற்றிய “ஹிரு” மற்றும் “லக்திவ” பத்தரிகைகள். இதில் விக்டரும் சுனந்தவும் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகள் தொடர்பாகவும் மற்றும் பொதுவான மனித உரிமைகள் தொடர்பாகவும் அக்கறை கொண்டு மிகவும் தீவிரமாக ஊடகத்துறையில் தென்னிலங்கையில் செயற்பட்டவர்கள் எனக் கூறலாம். மேலும் தமது முழு அரசியற் செயற்பாட்டையும் ஊடகத்துறைககூடாகவே பெரும்பாலும் மேற்கொண்டது மட்டுமல்ல இச் செயற்பாடுகளும் இவர்களது ஊடகங்களும் குறிப்பான ஒரு தாக்கத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தின என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சந்திரிகாவின் ஆடம்பரமான சமாதானப்புறா வருகையானது இருவரையும் இவர்கள் சார்ந்த ஊடகங்களையும் தடுமாறவைத்தது. அன்று விழுந்த விக்டர் ஐவன் இன்னும் அதன் அரசியலிருந்து எழுப்பவில்லை. இப்பொழுதும் மகிந்தவிற்கு சார்பாக இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

சுனந்த அறியமுடியாத சில காரணங்களால் இவ்வாறன அரசியலிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதாக தெரிகின்றது. இவர்கள் இருவரிலுமிருந்து வேறுபட்டது விமல் வீரவன்ச(வின்) சார்ந்த ஊடகத்துறை செயற்பாடு. ஏனெனில் இவர்கள் தாம் சார்ந்த ஊடகத்தை ஒரு இயக்கமாக தொலைநோக்குப் பார்வையுடனே தமது அரசியலின் அடிப்படையில் வழிநடாத்தினர் என்றால் மிகையான கூற்றல்ல. இதற்கு காரணம் இவர்கள் சார்ந்த அரசியல் கட்சி இயக்கமான ஜே.வி.பி அன்று தடைசெய்யப் பட்டிருந்தமையே. ஆகவே ஊடக செயற்பாட்டினுடாக தமது இயக்கத்தை இயங்கு நிலையில் தொடர்ந்தும் வைத்திருந்தனர். தம் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட பின் தம் ஊடகத்துறை செயற்பாட்டை, கட்சி சார்ந்த செயற்பாடாக சாதகமாக இலகுவாக மாற்றிக் கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடியளவிற்கு தம் தொடர்புகளை வலைப்பின்னல்களை ஊடகத் துறையுடாக உருவாக்கியிருந்தனர். சிங்கள தீவிரவாத “இடதுசாரி” அரசியலைப் பொறுத்தவரை இவர்களது ஊடத்துறை செயற்பாடு சாதகமானதே. ஆனால் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிப்படையில் வீமல் வீரவன்ச சார்ந்தவர்களின் ஊடகத்துறை மற்றும் கட்சி அரசியல் முன்னைய இருவரையும் விட தமிழ் பேசும் மனிதர்களது விடுதலைக்கு எதிரானதாகவும் இனவாத அரசியலாகவுமே இருக்கின்றது. வீமல் வீரவன்ச இன்றும் தனது கருத்துக்கள் செயற்பாடுகள் மூலம் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் தமிழ் பேசும் அரசியற் செற்பாட்டாளர்கள் சமூகத்தில் தாக்கம் நிகழ்த்தக் கூடியவாறு ஊடத்துறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இவர்களிடமிருந்து கற்பதில் தவறில்லை.

தமிழ் பேசும் சூழலில் இந்தளவிற்கு ஒரு ஊடகத்துறை அல்லது ஊடகவியலாளர்கள் இவ்வாறன ஒரு தாக்கத்தை செலுத்தியிருந்ததா அல்லது செலுத்தியிருந்தார்களா என்பது கேள்விக்குரியது. பல முன்னால் இயக்க அங்கத்தவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டினாலும் அதனுடன் இருந்த ஈடுபாட்டினாலும் மேற்கொண்டு தாம் விரும்பும் அரசியலை முன்னெடுத்து செயற்பட முடியாத சூழல்நிலையாலும் பொதுசன தொடர்பூடகங்களில் இணைந்து பங்காற்றுவதனூடாக தமது அரசியலை முன்னெடு(த்தனர்)க்கின்றனர். இவர்கள் எந்தளவு பொறுப்புடன் தமது அரசியலை முன்வைத்து ஊடகத்துறையை பயன்படுத்தினர் என்பது தொடர்பாக நாம் பார்ப்பது அவசியமானது. ஏனனில் இதுவே ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவதோ அல்லது அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வருவதையோ மேற்குறிப்பட்ட ஜீ.டி.என். கட்டுரையில் கேள்விக்குட்படுத்தியதற்கான பதிலைத் தரும்.

உதாரணமாக அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வந்த சிவராம் இலங்கையின் ஊடகத்துறையில் குறிப்பிட்ட தாக்கத்தை செலுத்தியவராக கருதப்படுகின்றார். இவரது சிந்தனைத் திறன் மொழியாற்றல் எழுத்தாற்றல் மற்றும் ஊடகத்துறை குறிப்பாக அவரது செய்தி சேகரிக்கும் திறன் தொடர்பாக யாரும் கேள்வி கேட்க முடியாது. இவரது இந்த ஆற்றல்கைளை அனைவரும் வியப்புடனும் மதிப்புடனும் மட்டும் பார்க்கவில்லை சந்தேகத்துடனும் பார்த்தனர் என்பது மறுப்பதற்கில்லை. ஒரு ஊடகவியலாளரா சிறந்தும் பிரபல்யமாகவும் விளங்கியபோதும் இவர் ஊடகத்துறையூடாக முன்வைத்த அரசியல் நேர்மையானதா என்பது கேள்விக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதல்ல. இவர் அரசியலிலிருந்து விலகிய ஒரு பத்திரிகையாளராக, ஆரம்பத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலை அடிப்படையாக முன்வைத்ததுடன் குறிப்பாக புலிகளின் அரசியலை ஒரு புறமும் சிறிலங்கா அரசினதும் மற்றும் அவர்களுடன் செயற்பட்ட தமிழ் இயக்கங்களின் அரசியலை மறுபுறமும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்து தனது ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தவர் எனக் குறிப்பிடலாம். இவ்வாறன ஒரு போக்கை தொடர்ந்தும் பினன்பற்றியிருப்பாரேயானால் ஊடகத்துறையூடாக தமிழ் தேசிய அரசியலில் குறிப்பிட்ட தாக்கத்தை இவரால் ஏற்படுத்தியிருக்க முடிந்திருக்கும். ஆனால் காலோட்டத்தில் இவ்வாறன ஒரு நிலையிலிருந்து விடுபட்டு சிறிது சிறிதாக மாறி, இறுதிக் காலங்களில் புலிகள் சார்ந்த தமிழ் தேசியவாத அரசியலை எந்த விமர்சனமுமின்றி ஊடகத்துறையூடாக பிரதிநிதித்துவப்படுத்தியவர் எனக் கூறலாம். இதை நியாயப்படுத்தி அல்லது தன் பக்க நியாயத்தை இவர் உயிருடன் இருந்தபோது தன் நண்பர்கள் பலரிடம் முன்வைத்திருப்பார்.

இன்றும் இவரது பல நண்பர்கள் அவர் இறுதிக் காலங்களில் முன்வைத்த அரசியலை நியாயப்படுத்தி வாதிக்கலாம். ஆனால் தனது தொடர்பூடக ஆற்றல்கள் அனைத்தையும் புலிகளை நியாயப்டுத்துவதிலும், அவர்களது இராணுவ தந்திரங்களையும் ஆற்றல்களையும், புகழ்பாடுவதற்கு மட்டும் பயன்படுத்தியமையால் புலிகள் தொடர்பான ஒரு மாயை தமிழ் பேசும் மனிதர்களிடமும் குறிப்பாக புகலிட மனிதர்களிடமும் மற்றும் சிங்கள பேசும் மனிதர்களிடமும் ஏற்படுத்தினார் என்றால் தவறல்ல. அதாவது புலிகளின் இராணுவ ஆய்வாளராக இவரும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ ஆய்வாளராக இக்பால் அத்தாஸம் இருந்தார்கள் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன். இதற்கு மாறாக புலிகள் முன்னெடுத்த குறுகிய நோக்கிலான ஆயுதப் போராட்டம் மற்றும் அது செல்லும் திசை தொடர்பாக தனது எழுத்தை ஆரோக்கியமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்திருந்தால் சிலவேளைகளில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் நிலையைத் தவிர்த்திருக்காலாமா என உணர்கின்றேன்.

இவர் 2005 ஆண்டு இறந்தபொழுது, இவர் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருந்தேன். தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் அறிகின்றேன். இதில் ஒரு விடயம் குறிப்பிட்டிருந்தேன். அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது எனக் கருதுகின்றேன். அதாவது ஒருவரது அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்து ஊடகங்களும் ஊடகவியளாலர்களும் அவரை எவ்வாறு விளிக்கின்றனர் என்பது தொடர்பானதே அது. அதாவது தமது கருத்துக்கு சார்பானவராக இருந்தால் “அவர்” என மதிப்புடனும் மரியாதையுடனும் எழுதுவார்கள். இதற்கு மாறாக தமது கருத்துக்கு எதிரானவராக இருந்தால் “அவன்” என எழுதுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறன சொற்கள் எழுதியவரது அரசியலை மட்டும் வெளிப்படுத்தவில்லை மாறாகா ஒரு ஊடகவியளாலராக அவரது நடுநிலையாளராக இருக்கவேண்டிய ஊடக தருமத்தை கேள்விக்குட்படுத்துகின்றது என குறிப்பிட்டிருந்தேன். பல ஊடகவியளாளர்கள் எழுத்தாளர்கள் தமது சமூகத்தின் பிரதானமானதும் பொதுவானதுமான நீரோட்டத்துடன் இணைந்தே தமது ஊடக செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது எந்தவகையிலும் பிரயோசனமானதல்ல. பொதுவான மனிதர்களிடம் இருக்கின்றன அல்லது அவர்கள் மேல் நிலைநாட்டப்பட்ட கருத்தை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதுவதன் மூலம் குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது ஊடகவியளாலர் அக் குறிப்பிட்ட காலத்தில் பிரபல்யமடையலாம். ஏனனில் தம்மை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதும் எழுத்தாளர்களை பொது மனிதர்கள் எப்பொழுதும் கொண்டாடுவார்கள். இதற்கு மாறாக ஒரு பொது கருத்துக்கு எதிரான அல்லது அதை விமர்சனபூர்வமாக முன்வைக்கும் கருத்துக்கு பரவலான வரவேற்பு இருக்காது.

இந்த நிலைமையானது இலங்கையில் மட்டுமல்ல பொதுவாக உலக வரலாற்றில் காணப்படுகின்ற ஒரு பொதுவான தன்மையாகவும் உண்மையாகவும் இருக்கின்றது. இதனால்தான் சமூக கருத்துக்களை சம்பவங்களை ஆரோக்கியமான விமர்சன கண்ணோட்டத்துடன் பார்த்து முன்னெடுத்து செல்லுகின்ற ஒரு கலாசாரமோ அல்லது இந்த நிலையில் செயற்படுகின்ற ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தமிழ் சுழலில் இன்று இல்லை இல்லது மிகவும் குறைவாக இருக்கின்றது என்பது கவலைக்கிடமானதும் துர்ப்பாக்கியமானதுமான ஒரு நிலையுமாகும். இதற்கு இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கிலிருக்கும் சுழலும் ஒரு காரணம் என்பது நாமறிந்ததே.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒன்பது ஊடகவியளாலர்கள் அல்லது ஊடக நிறுவனர்கள் தேர்தலில் பங்குபற்றியிருந்தனர் என பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்காவில் ரூபவாகினியின் பணிப்பாளராக இருந்த பரணவித்தான மகிந்தவின் கட்சி சார்பா பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இதில் பரணவித்தான தனது மாணவப் பருவ காலத்திலிருந்தே ஜாதிக்க சிந்தனையை பின்பற்றுபவராகவும் அந்த இயக்கத்தின் முக்கிய பிரச்சாரராகவும் இருந்துள்ளார். இவருக்கு அரசியல் புதியதல்ல. சிறிரங்கா என்பவரும் ஊடகத்துறையிலிருந்து வந்து ஐ.தே. கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் குறிப்பிட்ட அரசியல் கருத்து சார்ந்து தன்னை வெளிப்படுத்தியவர் அல்ல இவர். வடக்கு கிழக்க பகுதியில் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் த.தே. கூ சார்பாக தேர்தலில் பங்குபற்றி வென்றுள்ளார். இது போன்று பலர் ஊடகத்திலிருந்து அரசியலுக்கும் அரசியலிருந்து ஊடகத்துறைக்கு மாறி மாறி பயணிப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கும் ஊடகங்கத்துறைக்குமான உறவுகள் சிக்கலானதாக இருந்தபோதும் எந்தளவு ஊடக தர்மத்தை மதித்து அதனது சுயாதீனத்தை காப்பாற்றுவார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களும், இவர்கள் சார்ந்த ஊடகங்களும் வரலாற்றில் மதிப்பிடப்படும்.

இதனடிப்படையில் நாம் கற்க வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தனது அரசியலுக்கு அப்பாற்பட்டு ஊடகத்துறை சுதந்திரத்தையும் சுயாதீன தன்மையையும் மதித்து தமக்கு அல்லது தனக்கு எதிரான சம்பவங்களுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது ஊடக தர்மத்தை பொருத்தவரை முக்கியமானது என்பதே. அப்பொழுதுதான் ஒரு ஊடகவியலாளர் அரசியலில் ஈடுபட்டபோதும் தான் சார்ந்த ஊடகத்தின் சுயாதீன தன்மை பாதிக்காது செயற்படலாம். இதேபோல் அரசியல் செயற்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஊடகத்துறையை எவ்வாறு ஒரு அரசியற் செயற்பாட்டிற்காவும் பொது மனிதர்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் ஒரு கருவியாக ஆரோக்கியமாக பயன்படுத்துவது என்பதை பற்றி சிந்திப்பதே. இவ்வாறான ஒரு வழிமுறையே இனிவரும் (சில) காலங்களுக்கான முக்கியமான ஆராக்கியமான ஒரு அரசியல் செயற்பாடாக இருக்கும் என நம்புகின்றேன். இதை செய்ய நாம் தயாராக இருக்கின்றோமா? தமிழ் பேசும் மனிதர்களுக்கான உலகளாவியளவில் ஒரு ஆரோக்கியமான பத்திரிகையை கொண்டுவரமுடியுமா? இதை இன்று செய்யத தவறுவோமாயின் பிற்போக்காளர்களதும் இலாபத்தையே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகளினது பலம் மட்டுமல்ல அவர்களது கருத்துக்களே என்று சமூகத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பனவாக இருக்கும். இது எந்தவகையிலும் சமூக மாற்றத்திற்கு வழிகோலாது என்பது நாம் அறிந்துள்ள கசப்பான ஒரு உண்மை.

மீண்டும் ஒரு தேர்தல்- மே 2010 : முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

tgta.jpgஏப்ரல் 8ல் தானே இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது, பிறகு என்ன “மே தேர்தல்” என குழம்ப வேண்டாம். இது நம் நாட்டு தேர்தல் அல்ல, ஐ.இ (UK)தில் மே 6ல் நடக்கும் பொதுத் தேர்தலும் அல்ல. இது ஒரு விசித்திரமான தேர்தல். உலகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ள தேர்தல், அதுவும் புலம் பெயர் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் தேர்தல்.

மே 2ம் திகதி முக்கிய மூன்று கண்டங்களில், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா வின் முக்கிய நகரங்களில் ஒரே நாளில் “தமிழ் புலி” (Tamil tigers)களின் ஆதரவாளர்கள் இலங்கையின் இறையாண்மையில் (Sovereignty) இருந்து பிரிந்து சென்று தனியான ஒரு ஆட்சியை இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் நிறுவி “தமிழ் ஈழம்” (Tamil Ealam) என்ற தனி இறைமை கொண்ட நாடொன்றை (State) பிறசவிப்பதே இத் தேர்தலின் நோக்கு.

இத் தேர்தலுக்கு “நாடு கடந்த தமிழீழ அரசு(Transnational government of Tamil Ealam)” சுக்கான தேர்தல் என்ற பெயரும் சூடப்பட்டுள்ளது. இந்த நா.க.த.அ சின் இணைப்பாளரான அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை/அமெரிக்க சட்டத்தரணி திரு. வி. உருத்திரகுமரனின் கூற்றுப்படி தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் இலங்கை தமிழர்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் (புலி ஆதரவாளர்கள்) தனித்தனியான குழுவாக, அதாவது நா.க.த.அ சின் அங்கமாக அந்தந்த நாடுகளில் செயல்பட்டு இறுதி இலக்கை அடைய (படாத) பாடுபடுவர்.

சர்வதேச சட்டத்தில் (International Law) இந்த நாடுகடந்த அரசை தஞ்ச அரசு (Government in Exile) என்றும் அழைப்பர். இந்த தஞ்ச அரசிற்கான சர்வதேச சட்டத்தின் வரைவிலக்கணம் பின்வருமாறு அமைகின்றது:

“இறைமையுள்ள நாட்டின் (அரசொன்றின்) அரசாங்கம் அந்நிய நாடொன்றின் இரானுவத்தால் பலாத்காரமாக பறிக்கப்பட்டு, அப்பிரதேசம் அந்நிய நாட்டின் ஆதிக்கதில் இருக்கும் போது அதிகாரம் இழந்த அரசாங்கம் மூன்றாம் நாடொன்றில், அந் நாட்டின் அனுசரணையுடன் தற்காலிகமாக ஒரு அரசாங்கத்தை நிறுவுவது” என்பதாகும்.

இந்த வரைவிலக்கணத்தை இலங்கையுடன், குறிப்பாக இலங்கையின் தமிழ் பிரதேசத்துடன் (வடக்கு, கிழக்கு) பொருத்தி பார்க்கும் போது இது முற்றும் பொருந்துவதாகவில்லை. ஏனெனில் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குற்பட்டது. வடக்கு, கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனியான ஆட்சி ஒன்று நிலவவில்லை. இலங்கை ராணுவம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உள்ளடக்கிய மொத்த ஆள்புல பிரதேசத்திற்கும் சொந்தமானது. இந்த ராணுவத்தை அந்நிய நாட்டு ராணுவமாக கருத முடியாது. இந்த மே 2 தேர்தலில் போட்டி இட்டு நா.க.த.அ சின் உறுப்பினராக வர இருப்போரும் பதவி இழக்கச் செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அல்லர். எனவே இந்த நா.க.த.அ என்பது ஒரு தஞ்ச அரசாங்கம் என்ற வரைவிலக்கணத்துக்குள் வரவில்லை. ஆகவே இந்த நா.க.த.அ என்பது சர்வதேச சட்டவரம்பில் ஒரு பரிசோதனை (Experiment) மட்டுமே. பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 2:1, இருப்பினும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கிலும், நாட்டின் சமகால அரசியல் நிலைமையிலும் இது என்றும் வெற்றி பெற முடியாத ஒரு விடயமே. சுருங்கக் கூறின் ஒரு கனவு, அதுவும் பகற்கனவு.

இந்த நா.க.த.அ தேர்தலுக்காக ஐ. இரா (UK) தில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் முக்கியமாக இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான தனி நாடொன்றை மிக விரைவில் (மூன்று ஆண்டுக்குள்) அமைத்து தமிழரின் சுதந்திர வாழ்வை உறுதிபடுத்துதல், மற்றையது இனஅழிப்பு, போர்குற்றம் தொடர்பாக முக்கியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் சகோதரர், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லல் என்பவையாகும். இவை இரண்டும் நடந்தேறுவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை என்பதை இந்த தேர்தல் வேட்பாளர்கள் வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றனர். இதை விடவும் ஐ.இரா வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வேட்பாளர் ஒருபடி மேலே சென்று இந்த நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் ஆயுத வழிக்குச் செல்வதை விட வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். ஆக இவர்கள் புலிகள் முடித்த இடத்திலிருந்து தொடங்க எத்தனிக்கின்றனர் எனலாம்.

நிற்க, தமிழர்களுக்குகான தனி நாடென்பது “வட்டுக்கோட்டை தீர்மான (VaddukKodai Resolution)” த்தின் அடிப்படையை கொண்டது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானமானது இலங்கையின் பல்லினத்துவ (Multi Ethnic) தன்மையை குறுக்கி அதை இருவின நாடாக காண முற்படுவது. அதாவது இலங்கையில் சிங்களவர், தமிழர் என்ற இரண்டு இனங்களே உள்ளனர் என்றும், இந்த இனங்களுக்கே அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை (Right to self determination) உள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்கும், கிழக்கும் சேர்ந்த தமிழரின் பூர்வீக நிலத்தில் தமக்கான தனி அரசை நிறுவ தமக்கு தார்மிக ரீதியிலான அரசியல் அதிகாரம் உள்ளதாகவும். அதை சிங்கள அரசு முற்றாக நிராகரிக்கிறது என்பதுமே இந்த வேற்பாளர்களின் ஒட்டுமொத்த அரசியல் ஞானமாகின்றது. இந்த அடிப்படையிலேயே தமது நா.க.த.அ சுக்கான கோரிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த நியாயப்படுத்தலை தான் சர்வதேசத்திடமும் கொண்டு செல்லவுமுள்ளார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் இன்னொரு தேசிய இனத்தால், அதாவது இலங்கை சோனகர்களால் (Sri Lankan Moors) நிராகரிக்கப்பட்டது. தமிழர் சொல்லும் பூர்வீக நிலம் என்ற பிரதேசத்தில் சோழனின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு முன்பே சோனகர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே அப்பிரதேசம் தமிழரைவிட சோனகர்களுக்கே அதிகம் உரித்துடையது. இந்த வகையில் இலங்கையின் கிழக்கு தொடர்பாக பேசும் போது அல்லது அது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும் போது இலங்கை சோனகர் புறந்தள்ளபட முடியாதுள்ளனர். எனவே அவர்களின் விருப்பு இல்லாமல் அந்த பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் அதிகாரம் இல்லை. மேலும் இந்த இலங்கை சோனகர் தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கும் போது அத்தகைய சூழ்நிலையை எப்படி இந்த நா.க.த.அ எதிர்கொள்ளும் என்பது தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை.

அத்துடன் புலி ஆதரவாளர்கள் இன்னும் 1970ம் ஆண்டின் சனத்தொகை கணிப்பின்படியே வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பெரும்பான்மை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரை 1.5 மில்லியன் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதையோ, அவர்களில் சுமார் 20% மேலானோர் இலங்கை பிரஜா உரிமையை இழந்து விட்டனர் என்பதையோ, மீதமானோர் வெளிநாட்டு பிரஜா உரிமையை எதிர்பார்துள்ளனர் என்பதையோ இவர்கள் கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர். இதைவிடவும் 2010 ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு தரவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் எதிர்வு கூறமுடியாதுள்ளனர். ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடைபெறும்போது இந்த தனி நாட்டுக்கான கோரிக்கை கிழக்கு தமிழராலும், கிழக்கு சோனகராலும் தோற்கடிக்கப்படும் என்பதை இப்போதே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம். ஆக இந்த நா.க.த.அ யாருக்கு என்ற கேள்விற்கு முகங்கொடுக்க வேண்டியவர் இந்த வேற்பாளர்களே. இதை விடவும் இலங்கையின் கடந்த பொதுத் தேர்தலில் புலிகளுடன் ஒட்டி நின்று பிரிவினையை ஆதரித்த முக்கிய போட்டியாளர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளதையும், இந்த நா.க.த.அ ஏற்பாட்டாளர்களுடன் அரசியல் ரீதியாக ஒத்து போகாத ஒருவகை மிதவாத தமிழர்களே மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.

இருந்த போதிலும் புலம் பெயர் நாடுகளில் வாழும் (புலி) தமிழர்கள் ஆகக் குறைந்தது இலங்கையில் வாழும் தமிழ் இனத்தின் விருப்பு வெறுப்புகளையோ, இந்த நா.க.த.அ தொடர்பான அவர்களின்அபிப்பிராயத்தையோ கருத்தில் எடுக்காமல் ஒருதலை பட்சமாக இந்த முடிவுக்கு சென்றுள்ளதென்பது நா.க.த.அ சுக்கான ஏற்பாட்டாளர்களின் அரசியல் மதியீனத்தையும், தமிழர்களின் இயல்பு வாழ்க்கையில் அக்கறை இல்லா தன்மையும், சர்வதேச அரசியல் நகர்வுகளை மதிப்பிட திராணியில்லா நிலையையும் தெளிவாக காட்டி நிற்கின்றது.

இந்த உத்தேச நா.க.த.அ க்கு மொத்தமாக 135 பிரதிநிதிகள் உலகளாவிய ரீதியில், இலங்கை நீங்கலாக, தெரிந்தெடுக்கப்படப் போகிறார்கள். இதில் 115 பேர் தேர்தல் மூலமும், 20 பேர் நியமன பிரதிநிதிகளாகவும் உள்வாங்கப்படுவர். ஐ.இ (UK) தில் போட்டியிடும் 38 பேரில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். நடைமுறையில் இந்த 135 பேரும் தமிழ் புலிகளின் மே18க்கு பின்னான முகவர்களே. புலிகள் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடித்த அன்றைய த.தே.கூ (TNA) அங்கத்தவலும் பார்க்க இவர்கள் அரசியல் அதிகாரம் எதுவுமே இல்லாதவர்கள். இவர்களுக்கு இருக்கும் அதி கூடிய தகைமை, ஐ.இ (UK) நா.க.த.அரசுக்கான தேர்தல் வேற்பாளர்களின் ஒப்புதல்படி, 2009ம் ஆண்டு தை முதல் வைகாசி மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற அரச எதிர்ப்பு/புலி ஆதரவு ஊர்வலங்களில் கலந்து கொண்டமை. அதே நேரத்தில் இவர்களின் கல்வி தகைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்க வகையில் அனேகமாக எல்லோரும் படித்தவர்கள். ஆனாலும் கனடாவில் போட்டியிடுவோரில் அனேகர் பண விவகாரங்களில் கறுப்பு புள்ளி பெற்றவர்களாம். இந்நிலையில் இவர்களின் தகைமை, தகுதி என்பவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக இந்த நா.க.த.அ சை நிறுவுவதற்கான சாத்தியபாட்டையும் அது சுதந்திரமாக வளர்ந்து செல்லும் சாத்தியத்தையும் (Viability) பார்த்தால் அது ஆரம்பிக்கும் வேகத்திலேயே அதன் முடிவையும் சந்திக்கும் என்பதை எதிர்வு கூர்வதில் சிரமம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஆக, இந்த நா.க.த.அ என்பது ஒரு பொழுது போக்குக்கான விடயம், புலம்பெயர் அப்பாவி தமிழர் இந்த கனவரசின் நடைமுறை செலவினத்தை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுவர். புலம்பெயர் நாட்டின் தேசிய அரசியலில் இருந்து தமிழர்கள் அப்புறப்படுத்தப்படுவர். சர்வதேச ரீதியில் தமிழர் பிரச்சினைக்குரியவர் என்ற நிரந்தர பட்டத்தையும் பெறுவர். எஜமானார்களோ இலங்கையின் முன்னைய புலித் தலைவர்கள் போல் தம் சொந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பர். ஆகவே இந்த அரசியல் நகர்வு என்பது தமிழ் அரசியலில் அத்தியாயம் 2. புத்தியுள்ள தமிழர் இதை எதிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் அமைதியாக இதை நிராகரித்து மீதமுள்ள தமிழரை காத்தல் வேண்டும். இது தமிழர்களின் தார்மீக அரசியல் பணி.

நன்றி, Mohamed SR. Nisthar.(from London)

நாடுகடந்த தமிழீழம் – நிலம் தொடாத வேர் – ரி சோதிலிங்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலங்களிலேயே தடம்புரண்டு விட்டது. அதன் பின்பு நடைபெற்றது ஆயுதத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்டது விடுதலைப் போராட்டம் என்பதிலும் பார்க்க அதிகார வெறியுடனான போராட்டமாகவே அமைந்தது. இந்த அதிகார வெறிக்கான போராட்டத்தில் வே பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றையவர்களை வெற்றி கொண்டு வன்னி மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்து அழித்தொழித்தனர் அல்லது இலங்கையரசு அழித்தொழிப்பதற்கு உதவினர். இந்த அழித்தொழிப்பு வரலாறு அதனுடன் நிற்கவில்லை. ‘தமிழீழத் தேசியத் தலைவர்’ பெற்றுத் தராத தனித்தமிழீழத்தை அவரின் தடங்களைப் பின்பற்றி பெற்றுத் தருகிறேன் என்று மே 18க்குப் பின் உருவான மதிஉரைஞர் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழம் என்று கலையாட ஆரம்பித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் அழிவு இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் அழியும்வரை போராடி முழுத் தமிழர்களையும் இல்லாதொழிக்காமல் பாதுகாக்கப்பதற்கு உதவியுள்ளது என்பது யதார்த்தம். இன்னும் சில பத்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்ந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்ற இனம் இருந்தது என்பதே வரலாறாகி இருக்கும். அது தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. அதனால் தற்போது எமக்கு இருக்கின்ற வளங்களை இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இன்று வெளிநாடுகளில் பேசப்படுகின்ற நாடுகடந்த தமிழீழம் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்களை ஏமாற்றுகின்ற அரசியலின் ஒரு தொடர்ச்சியே. உருத்திரகுமாரனின் சன்றைஸ் வானொலிப் பேட்டியின் போது கூறப்பட்ட கருத்துக்களின்படி புலிகள் ஒரு நிழல் அரசை வைத்திருந்தாகவும் அதன் போராட்ட தொடரச்சியையே இன்று இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற அமைப்பினர் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். தமிழ்ப்பிரதேசங்களில் புலிகளின் படை என்ன செய்தது என்பதும் இன்று வெளிநாடுகளில் இந்த நாடு கடந்த தமிழீழப் படை என்ன நடாத்தி முடிப்பார்கள் என்பதும் எதிர்வுகூறக் கூடியதே.

வணங்கா மண், கண்ணீர் வெள்ளம் போன்ற இன்னோரன்ன நிதி சேகரிப்புக்கும் அதற்குக் கணக்குக் காட்டுவதற்கும் இவ்வாறான அரசியல் சதிராட்டங்கள் அவசியம். ‘நாடு கடந்த தமிழீழம்’ என்றும் ஜனநாயகம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் தமிழர்களின் நலன்களில் அக்கறை காட்டி தமது சுய தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். இப்படியானவர்களை வணங்கா மண் மூர்த்தி தொடக்கம் இல்போர்ட் பிள்ளையார் கோயில் செல்வராஜா வரை இப்பட்டியல் மிக நீளமானது. நாட்டுக்கு நாடு தனித்தனிப் பட்டியல் உண்டு.

இதைவிட புலிகள் அழிக்கப்பட்டு ஒரு வருடமாகும் இந்த சூழ்நிலைகளை மிகத்தந்திரமாக பயன்படுத்தி நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு ஒரு தேர்தல் வைக்கப்படுகின்றது. ‘தேசியத் தலைவர்’ இன் இறுதியாணை நிறைவேற்றியுள்ளதை காட்டி மீண்டும் நிதி சேகரிக்க ஆரம்பிக்கவே இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ உதவப் போகின்றது என்பதே வெளிப்படையான உண்மை. இதில் பல முன்னணிக் கொள்ளையர்கள் சில உள்ளுர் கொள்ளையர்களை இப்போது அமர்த்தி இந்த நாடு கடந்த அரசு உருவாக்கம் என்ற நாடகத்தை தொடக்கிவிட்டு பின்னர் தாமே நேரடியாக களமிறங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

சர்வதேச சட்டதிட்டங்களைப் படித்து சர்வதேச ஜனநாயக நாடுகளில் பல வருடங்களாக வாழ்ந்த உருத்திரகுமாரன் மக்கள் அமைப்புக்கள், மக்கள் போராட்டம் என்பது என்ன? மக்களின் பங்களிப்பு என்பது என்ன? என்ற அர்த்தம் புரியாமலே வானொலியில் பேசினாரா? அல்லது இவரும் மோசடியில் இணைந்து செயற்ப்படுகிறாரா? என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.

சன்றைஸ் வானொலியில் ஒருவரின் கேள்வியில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று கூறும் உருத்திரகமாரன் ஏன் தமிழர்க்கும் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று இருக்காமல் ‘நாடுகடந்த தமிழீழம்’ என்று இயங்குகின்றார்.

இந்த நாடு கடந்த தமிழீழம் என்பது ஆரம்பிக்கப்பட்டது எப்படி? எந்த ஜனநாயக அடிப்படையில் இது உருவாக்கப்படடது? போன்ற விபரங்களை எந்த நாடு கடந்த தேர்தல் வேட்பாளர்களும் பேசுவதாக இல்லை. மாறாக இவர்களது விளம்பரங்களை பார்த்தால் இவர்கள் தமது சுய நலத்தின் அடிப்படையிலே பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவர்களால் மக்களுக்கு செய்த சேவைகள் பற்றி சொல்லவதற்கு எதுவுமே இல்லை. இவற்றைவிட இதில் சிலர் முன்னணி கிரடிற்காட் மற்றும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள்.

‘புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. போராட்டம் தொடரப்பட வேண்டும்’ என்பதே உருத்திரகுமாரனின் கருத்தாக இருக்கிறது. போராட்டம் எங்கே என்றால் ‘புலம்பெயர்ந்த நாட்டில்’ நடக்குமாம். நாடுகடந்த தமிழீழம் என்பதை தான் உருத்திரகுமார் போராட்டம் என்கிறார். தமிழீழம் யாருக்கு என்றால் என்றால் அது தாயகத்தில் உள்ள மக்களுக்காகவாம். இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு வாய்க்கால் வெட்டுகிறார்கள் என்ற அச்சம் நியாயமானதே. இம்முறை உருத்திரகுமாரன் தலைமையில் இந்த முள்ளிவாய்க்கால் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் புலிகளின் போராட்டம் பற்றிய எந்தவித மதிப்புக்களும் இல்லாமல் புலிகளின் பணங்கள் விபரங்கள் சொத்துக்கள் பற்றியோ யார் இவற்றிக்கெல்லாம் இன்று பொறுப்பானவர்கள் பற்றியோ எந்தவித பேச்சுக்கள் இல்லாமல் சிலர் ஒளித்திருந்து இந்த நாடுகடந்த தமிழீழத்தவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். திரைமறைவில் இருப்பவர்கள் யார்? இவர்கள் யாருடன் தொடர்புடையவர்கள்? போன்ற விபரங்களை வெளிப்படுத்தாவிட்டால் பிறகு எப்படி ஜனநாயக அமைப்பு, அது, இது என்று பேசுகிறார்கள். அது மட்டுமல்ல இவையாவும் மக்கள் போராட்டம் என்று உருத்திரகுமாரன் பேசுகிறார். இது உருத்திரகுமாரனுக்கு மக்கள் போராட்டம் என்றால் என்ன என்று விளங்கவில்லை என்பதேயாகும். இவர் சன்றைஸ் வானொலியில் பேசும் போது ‘புலிப் போராளிகள் மக்களிடமிருந்தே வந்தனர். ஆகவே இது மக்கள்’ போராட்டம் என்றார். இவர் சுருக்கமாக ‘தலைவர்’ தமிழ் மக்களிடமிருந்தே வந்தார் ஆகவே இது மக்கள் போராட்டம் என்று சொல்லியிருக்கலாம்தானே.

இதர தமிழ்க்கட்சிகள் ரிஎன்ஏ மற்றும் திம்பு பேச்சவார்த்ததையில் ஈடுபட்ட அமைப்புக்களிடம் எந்தவித கலந்தாலோசனைகளும் இல்லாமல், இதர தமிழ்க் கட்சிகளுடன் எந்த ஒரு கூட்டிணைவையும் ஏற்படுத்தாமல் அல்லது அதற்கான முயற்சிகளையும் செய்யாமல் நாடு கடந்த தமிழீழம் மீண்டும் ஏகபிரதிநிதித்துவம் பாணியில் புறப்பட்டு உள்ளனர். இந்த நாடுகடந்த தமிழிழத்துக்கான ஆணைபெறல் என்பது புலிகள் பாணியிலான ஏகபோக பிரதிநிதித்துவம் என்ற சண்டித்தனமேயன்றி வேறேதுமில்லை.

‘இந்த நாடு கடந்த தமிழீழத்தை தாயகத்துக்குள் புகுத்துவதற்கு ஒரு இடைவெளியை சர்வதேசம் ஏற்படுத்தும்’ என்றும் ‘இந்த இடைவெளியை உருவாவதற்கு சர்வதேச சமூகத்திலும் இந்திய பிராந்தியத்திலும் உள்ள சர்வதேச மயமாக்கலில் ஏற்படவுள்ள சீன இந்திய உறவு விரிசல்களை உருவாக்கும்’ எனவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார். இவர்கள் இதனை நம்பியே ‘மக்கள் போராட்டத்ததை’ நடாத்துகிறார்கள். இவர்களும் நிலத்தை தொடாத ஆணி வேர்களேயாகும். ‘இன்று நாட்டிலுள்ள தலைமைகள் ரிஎன்ஏ இந்தியாவின் கையாட்கள்’ என்றும் ‘இலங்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லை’ என்றும் ‘வெளிநாடுகளிலேயே இந்த உத்தேச தமிழீழத்தை வளர்க்க வேண்டும்’ என்றும் உருத்திரகுமாரன் கருத்துப்பகிர்வு செய்வதன் மூலம் மக்களைத் தொடாத மக்கள் சம்பந்தப்படாத ஒருவிடயத்தை மக்கள் மீது திணிப்பதாகவே உள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழ் இளைஞர்க்கு ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே ஆயதப் போராட்டத்தை புலிகள் நடத்தியதாகவும் இன்று அதன் மற்றுமொரு வடிவமாகவே இந்த நாடு கடந்த தமிழீழம் அமைக்கப்படுவதாகவும் உருத்திரகுமாரன் கருத்து தெரிவித்தார்.

‘இந்த ஆயுதப் போராட்டத்திற்கு புலிகளுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஒரு புலிகளின் நிழல் அரசு இருந்ததாகவும் இதில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் இதில் புலிகள் இன்று ஆயுதங்களை மெளனித்துள்ளதாகவும்’ உருத்திரகுமாரன் தெரிவிக்க முயன்று ‘புலிகளின் தலைவர் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார். மக்கள் போராட்டத்தில் மக்கள் தலைவருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லத் துணிவில்லாதவரை நம்பி இத்தனை வேட்பாளர்கள் தமது சுயமரியாதையை இங்கே இழக்க உள்ளனர்.

இதே வானொலி நிகழ்வில் யூத மக்கள் பெருந்தொகையாக கொல்லப்பட்ட பின்பே இஸ்ரேல் உருவானதாகவும் இதேபோல் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருப்தாகவும் தமிழீழம் மலரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் உருத்திரகுமாரன்.

இந்த உருத்திரகுமாரின் பேச்சில் இவரும் முள்ளிவாய்யகாலில் பெருந்தொகையாக மக்கள் கொல்லப்பட்டதிற்கு புலிகள் மக்கள் இருப்புக்களின் மீது தாக்குதல் நடாத்தி மக்களை கொலை செய்ததற்கும் தொடர்புடையரவாகவே தென்படுகின்றுது. ஜபிசி-வானொலி, ஜிரிவி, தீபம் தொலைக்காட்சி சேவையினர் இந்த தமிழ் மக்களை தொகையாக கொலைக்களத்தில் தள்ளியதில் தொடர்புடையவர்களே. இவர்கள் புலம்பெயர்நாட்டில் இருந்து கொண்டு தமது சுயநலனுக்காக இளைய தலைமுறையினரை உசுப்பிவிட்டதில் பெரும்பங்கு கொண்டவர்களாகும். இப்போது இவர்கள் மீண்டும் நாடு கடந்த தமிழிழத்திற்கான குத்தகையை பெற்றுக் கொண்டுள்னர். இன்று இவர்கள் ‘மக்கள் ஆணை’ என்றும் ‘மக்கள் தீர்ப்பு’ என்ற பொய்யான பிரச்சாரங்களை தொடக்கிவிட்டுள்ளனர்.

ஜிரிவி, ஜபிசி, தீபம் அமைப்பினரும் புலிகளால் மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பங்கு போட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்து இதில் குறிப்பாக முதலாம் கட்ட போர் நிதியிலிருந்து கண்ணீர் வெள்ளம், வணங்காமண், இறுதிக்காலப் போர்நிதி தமிழீழ காப்புறுதி என பலவகைப்பட்ட நிதி சேகரிப்புக்களுக்கு செய்யப்படும் பிரச்சாரங்கள் புலி இணைவு ஊடகங்களான இவர்களாலேயே மக்கள் ஏமாற்றப்பட்டதாகும்.

‘நாடு கடந்த தமிழீழம் கடந்தகால புலிகளின் போராட்ட தொடர்ச்சி’ என்று கூறும் உருத்திரகுமாரன் ‘கடந்த காலத்தில் நடைபெற்றது மக்கள் போராட்டம்’ என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களும் தமிழ்பேசும் மக்களே என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களை ஏன் சுட்டுத்துரத்தினர் என்பது பற்றி மெளனமாகவே உள்ளார்.

முஸ்லீம்கள் தமிழ்பேசும் மக்கள் என்றால் இந்த நாடு கடந்த தமிழீழம் அமைப்பினர் எந்த முஸ்லீம் அமைப்புடன் பிரதிநிதிகளுடன் பேசினர் என்பதை இன்று வரையில் ஏன் வெளியிடவில்லை.

ரிஎன்ஏ தமிழரசுக் கட்சியினர் குறைந்த பட்சம் ஒரு சிங்களவரையென்றாலும் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தி வெற்றியும் பெற்றனர் இந்த 30 வருட மக்கள் போராட்ட ஜனநாயக அனுபவம் என்று கூறும் உருத்திரகுமாரனும் இந்த நாடுகடந்த தமிழீழத்திற்கான அமைப்பினரும் எத்தனை முஸ்லீம்களை இந்த நாடுகடந்த தமிழீழ வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மாறாக இந்த நாடுகடந்த பாராளுமன்றத்திற்கான வேட்பாளர்களில் பலர் முன்னாள் புலிகளும், புலிகளின் பெயரில் தமது சுய தேவைகளை பூர்த்தி செய்தவர்களும் புலிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களிலிருந்து பணங்களை திருடியவர்களும், இதர தமிழ் முஸ்லீம் அமைப்பினரையும் அமைப்புக்களையும் துரோகிகள் என் முத்திரை குத்தியவர்களும், முஸ்லீம்களை தமிழ் இன விரோதிகள் என வர்ணித்து புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் பேசியவர்களும், இதர கட்சிகள், சமூக அமைப்பினர், இயக்கங்கள், சங்கங்களின் மீது பயங்கரவாத்தினை கனடா, ஜரோப்பாவிலும் இலங்கையிலும் நடாத்தியவர்களுமேயாகும்.

இதைவிட வன்னி மக்கள் வன்னி போரின்போது வன்னி மண்ணைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் தலைவுடன் இருந்து பேராட வேண்டியவர்கள் என்றும் போர் கொடுமைகளிலிருந்து தப்பி ஓடியவர்கள் இனத்துரோகிகள் என்றும், தலைவனை விட்டுவிட்டு அரச முகாமிற்கு வந்தவர்களுக்கு (குழந்தைகள், விதவைகள் வயது வந்த முதியவர்கள்) உதவிகள் செய்யக்கூடாது என்றும் இவர்களை அரச முகாம்களிலிருந்து சாக வேண்டியவர்கள் என்றெல்லாம் இந்த நாடு கடந்த தமிழிழத்திறகான வேட்பாளர்களில் பலர் நேரடியாக ஜபிசி, ஜிரிவில் கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான இவர்கள் தமது கடந்தகால தவறுகளையும் மக்கள் விரோதங்களையும் ஒன்று சேர கூட்டி அள்ளி தமது தலையில் வைத்துக்கொண்டு மீண்டும் மக்கள் முன் பசுத்தோல் போர்த்துக்கொண்டு அப்பாவிகள் போன்று நிற்கிறார்கள் தமிழ், சிங்கள, முஸ்லீம்மக்கள் இவர்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் கடந்தகால புலி ஆதரவு பற்றிய ஒரு முழுமையான விமர்சனமேயாகும். இவர்கள் தமது கடந்தகால புலி ஆதரவு பற்றிய சுய விமர்சனத்தை பொதுவாக மக்கள் முன்வைக்காது மக்கள் முன்வந்து நிற்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது.

‘புலிகள் அமைப்பும் மக்கள் அமைப்பு ஜனநாயக அமைப்பு’ என்று அடிக்கடி கூறும் உருத்திரகுமாரன் ஏன் புலிகளின் கடந்தகாலம் பற்றியோ புலிகளின் நிதிகள் பற்றியோ புலிகளின் சொத்துக்கள் பற்றியோ ஏதும் பேசாமல் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்களின் ஜனநாயகப் பண்பும் வெளிநாடுகள் தம்மை தமது நலனுடன் இணைத்தே ஆதரிப்பர் என்பதும் இந்த அமைப்பு எந்த விடயங்களையும் தமிழ் மக்களின் நலனில் இருந்தோ நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலைகிளிலிருந்தோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த நாடு கடந்த அமைப்பின் பேராசிரியர் ஒருவர் தனது கட்டுரையில் இது மக்கள் அமைப்பு என்றும் மக்களிடமிருந்து பணம் வந்தால் மட்டுமே இந்த அமைப்பு இயங்க முடியும் என்றும் எழுதியதும் இந்த அமைப்பும் அமைப்பின் முன்னிணயாளர்களது நோக்கமும் சந்தேகத்தை வளர்த்து விட்டுள்ளது.

கடந்தகால புலிகளின் ‘மக்கள் போராட்டத்தின்’ போது காயப்பட்ட, தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்கள் செய்த பணி என்ன? இந்த நாடு கடந்த வேட்பாளர்களின் பிரசுரங்களில் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவிகள் பற்றி என்ன இருந்தது? தாம் முள்ளிவாய்க்கால் வரையிலான தமது பங்களிப்பின் புலிகளுக்கான ஆதரவின் மதிப்பீடு என்ன? என்ற ஏதாவது கருத்துக்கள் உண்டா? எல்லாமே தமது சுய புராணமும் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றிய ஆழுமையற்ற கருத்துக்களும் வசனங்களுமேயாகும். இவையாவும் இவர்களில் பலர் போராட்டம் மக்களுக்கான சேவை பற்றிய தப்பான அபிப்பிராயமும் இந்த நாடுகடந்த தமிழீழம் என்ற வாகனத்தில் ஏறி தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிதி சேர்த்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் என்ற பலமான சந்தேகம் புலம்பெயர்நாடுகளில் தமிழர்களிடையே வளர்ந்து விட்டது – இதே போன்ற சம்பவங்களால் புலிகளின் கடந்தகால போராட்ட வரலாறு நிறைந்துள்ளதும் இதன் அனுபவ அடிப்படையில் தாமும் பணம் திருடும் நோக்கம் இதில் நிறையவே உள்ளதை புலம்பெயர்மக்களில் பலர் உணர்கிறார்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள மக்கள் என்றுமே தலைவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகியதும் அவர்களைத் தூக்கியெறிந்த வரலாறு கொண்டவர்கள். வன்னி யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் மக்கள் அவர்களைத் தூக்கியெறிந்ததே. அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்களால் தூக்கியெறியப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாடு கடந்த தமிழீழத்தின் தாயகக் கட்சியாக உருவாக்கப்பட இருந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தாயக மக்களால் நிராகரிக்கப்பட்டனர். கொங்கிரஸ் கட்சியில் நின்று புலம்பெயர்ந்த மக்களின் தயவில் போட்டியிட்ட இவர்களை மக்கள் முற்றாக நிராகரித்தனர். உருத்திரகுமாரன் தலைமையில் உள்ள நாடு கடந்த தமிழீழத்தவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.

மானிடம் வெல்லும்.