கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தற்காலிக தாக்குதல் நிறுத்தம்: நிபந்தனைகளுடன் பரிசீலிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு

krambukkela.bmpஇலங்கையின் போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் மனிதாபிமான நலனுக்கான தற்காலிக தாக்குதல் நிறுத்தம் ஒன்று தேவை என்ற ஐ.நா. மன்றக் கோரிக்கை தமது நிபந்தனைக்கு அமைய பரிசீலிக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.மன்ற கோரிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கை அரசின் பாதுகாப்பு விவகரங்களுக்கான பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல,  நிஜமான பலன் ஏற்படும் என்றால் மட்டுமே அப்படி ஒரு தாக்குதல் நிறுத்தம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களை வெளிவர விடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே அரசாங்கம் வழங்கிய 48 மணிநேர அவகாசத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பாக கூறுகையில் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இருபது சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையும்,  மற்றும் சர்வதேச சமூகமும் தெரிவிக்கும் ஆலோசனையான மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் என்னவகையான மாதிரிகள் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் எதுவும் குறிப்பிடாதபோதிலும் களநிலைமைகளுக்கு ஏற்ப அவை நேரத்துக்கு நேரம் மாற்றமடையும் என்று கூறியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில்,  அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒத்தாசையுடன் ஐ.நா. பாதுகாப்புச் சபை மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அறிவுறுத்தியிருந்ததுடன்,  புலிகளையும் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை, எதிர்காலத்தில் அரசாங்கம் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மோதல் இடைநிறுத்தம் பரிசீலிக்கப்படுமே தவிர,  வேறுவகையான செல்வாக்கின் அடிப்படையிலோ அன்றேல் அழுத்தத்தின் அடிப்படையிலோ அமையமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பு பிரதேசம் பாதுகாப்பு தரப்பினரை கொல்லும் பிரதேசமாக மாறியுள்ளது.

அதனால், அவர்கள் காயமடைந்து வருகின்றனர். சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர்கள் திருப்பித் தாக்குவதில்லை. நாங்கள் எதிரிக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துதல் போன்வற்றை நிறுத்தி விட்டோம். காரணம் சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான். ஆனால், புலிகள் இதனை வாய்பாகக் கொண்டு மக்களுக்கு பின்னால் மறைந்திருந்து படையினரைத் தாக்குகின்றனர்.

இந்தக் கட்டத்தல் யுத்த நிறுத்தத்துக்கு அரசாங்கத்துக்கு எவ்வித ஆர்வமும் கிடையாது. சிவிலியன்கள் பாதுகாக்கப்பட்ட பின்னர் புலிகளை படையினர் அழித்தொழிப்பார்கள் என்றார். 

மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்தால் தற்காலிக மோதல் நிறுத்தம் சாத்தியம் – இலங்கைக்கான ஐ.நா.நிரந்தர பிரதிநிதி பளிகக்கார

இலங்கையில் வடக்கு பகுதியில் மோதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலி யுறுத்திவரும் நிலையில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்தால் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இணங்குவது சாத்தியமென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தமக்களை (தமிழ்பொதுமக்கள்) வெளியேற புலிகள் அனுமதியளிக்க தயாரெனில் குறைந்தது அவர்களில் ஒரு பகுதியினரையாவது செல்வதற்கு அனுமதியளித்தால் தற்காலிக சண்டைநிறுத்த அனுசரணையை வழங்க அரசாங்கம் இணங்கக்கூடும் என்று ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி எச்.எம். ஜி.எஸ் பளிகக்கார கூறியுள்ளார்.

இதனை குறுகியகால இடைநிறுத்தம் என்றோ அல்லது அரசு முன்னர் வழங்கிய 48 மணிநேரம் என்றோ கருதமுடியும் என்று நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் வைத்து அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

புலிகள் அவர்களை வெளியேறவிடவில்லை என்பதே இந்த விடயமாகும். அவர்களை மனிதக்கேடயங்களாக வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பளிககார கூறியுள்ளார்.

புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயம் முழுமையாக சுற்றிவளைப்பு. மக்களை பாதுகாப்பாக விடுவிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்கிறார் இராணுவப் பேச்சாளர்

srilanka_army1.jpgபுலிகளின் சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகள் ஊடுருவியிருக்கும் பாதுகாப்பு வலயத்தை அண்மித்துள்ள அதேசமயம், சகல முனைகளிலும் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும், தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத விதத்திலும் கடற்பரப்பிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார்.கடற்படையினர் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் கடற்பரப்பிலும் புலிகள் தப்பிச் செல்ல முடியாத விதத்தில் நான்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஐ. சி. ஆர். சி. யின் ஒத்துழைப்புடன் இதுவரை புலிகளின் பிடியிலிருந்து பதினைந்து தடவைகள் சுமார் ஆறாயிரம் வரையிலான பொதுமக்களை கடற்படையினர் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தற்பொழுது புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரிகேடியர் உதய நாணக்கார மேலும் தகவல் தருகையில்,புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 59,441 பொது மக்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தப்பிவரும் பொது மக்களின் வருகையை தடுக்கும் வகையில் புலிகள் பல்வேறு வழிவகைகளை பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப்பங்களில் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்திய போதிலும் தப்பி வரும் பொதுமக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எஞ்சியுள்ள பொது மக்களையும் எவ்வாறாவது பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் தமது சகல வளங்களையும், பலத்தையும் நாளுக்குநாள் முழுமையாக இழந்து வருகின்றனர். புலிகள் சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதுடன் பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடுருவியுள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படையினர் பதில்தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளனர் என்றார்.

புதுமாத்தளன் வடபகுதியில் நிலைகொண்டுள்ள கிராமத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர், பிரசன்ன டி சில்வா தலைமையிலான படையிலும், இரணைப்பாலைக்கு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கே நிலைக் கொண்டுள்ள இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையிலான படையினரும் தமது நிலைகளை நாளுக்குநாள் விஸ்தரித்துவருவதுடன் புலிகளின் மண் கரண்களையும் கைப்பற்றிவருகின்றனர்.

மூன்று படைப்பிரிவுகளுக்கும் உதவியாக கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான இராணுவத்தின் எட்டாவது விசேட படைப்பிரிவும் களமுனையில் ஈடுப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் தினங்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் படையினர் நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வட இலங்கையில் மோதல்கள் கடுமையடைகின்றன

srilanka_army1.jpgவட இலங்கைப் போர்முனைகளில் கடந்த இரண்டு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னர், பழமாத்தளனுக்கு வடக்கே விடுதலைப்புலிகள் அமைத்திருந்த மண் அரண் பகுதியையும், அதனோடு இணைந்த அகழிப் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சண்டைகளில் 46 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரணைப்பாலைக்கு வடக்கே உள்ள முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டைகளில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்தச் சண்டைகளில் படைத்தரப்பிற்குக் குறைந்த அளவிலான சேதங்களே ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், தமது முன்னரங்க மண் அரணைத் தகர்த்து ஊடுருவ முயன்ற இராணுவத்தினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதல்களில் இராணுவத்தினருக்குப் பலத்த சேதங்கள் எற்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகளும் கூறியிருக்கின்றார்கள்.

மேல் மாகாண தேர்தல் – தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏப்ரல் மாதம் 17 வரை

 ‘மேல்மாகாண சபைத் தேர்தலையொட்டி அடையாள அட்டையற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 17 வரை மட்டுமே ஏற்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களினூடாக தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2,3 மற்றும் 4ம் திகதிகளில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகளில் மாத்திரம் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட அரச அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.மேல் மாகாண சபைத் தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாக்தாத் வட்டகையில் பாதுகாப்பு படைகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன

iraq.jpgஇராக்கின் ஃபதில் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று உள்ளூர் சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதில் குறைந்தது மூவராவது உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஃபதில் மாவட்டத்துக்குச் செல்லும் சகல பிரதான பாதைகள் அனைத்தையும் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு படைகள் கைப்பற்றிக் கட்டுப்படுத்தியுள்ளன.

சுனி பிரிவு போராளிகள் தமது போராட்டத்தைக் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்கிற எச்சரிக்கைகளை அமெரிக்க வீரர்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இராக்கிய துருப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் இராக்கிய மற்றும் அமெரிக்க போர்வீரர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சுனி பிரிவு தலைவரின் ஆதரவாளர்களுக்கும் போர்வீரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துக்கிளம்பின. இராக்கிய போர்வீரர்கள் ஐவர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட சுனி பிரிவு மனிதர் அல்கைதாவுடன் முன்னர் இயங்கிவந்த எழுச்சி இயக்கம் என்ற குழுவைச் சேர்ந்தவர். பின்னர் அதிலிருந்து அவர் கட்சித் தாவியிருந்தார் என்று கூறப்படுகிறது.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் மக்களின் அவலங்கள் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்குகின்ற அவலநிலை குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் து.வரதராஜா அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பாதுகாப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், பொக்கணை, புதுமாத்தளன் போன்ற கிராமத்தில் அதாவது 25 சதுர பரப்பளவில் கிட்டத்தட்ட 300,000 மக்கள் செறிவாக வசித்து வருகின்றனர். மக்கள் வசித்துவரும் பகுதியில் இருந்து இராணுவத்தினர் 750M-2 ஓட் தூரத்திலே இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இராணுவத்தினரின் எறிகணை, பல்குழல், தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு, பொஸ்பரஸ்குண்டு என்பன மக்கள் மீது செறிவாக வீசப்பட்டு வருகின்றமையால் நாள்தோறும் சராசரியாக 30-50 வரையான மக்கள் இறந்தும் 75-150 வரையான மக்கள் காயமடைந்தும் வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 523 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சுகாதாரம்

2008 ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டுக்குரிய மருந்துப்பொருட்கள், 2009 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டுக்கான மருந்துப்பொருட்கள் ஆகியவை எமக்கு வவுனியாவில் கிடைக்கப்பெற்றும் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறாததன் காரணமாகவும் ஏ9 பாதை மூடப்பட்டதன் காரணமாகவும் இந்த மருந்துப்பொருட்கள் எமது மாவட்டத்திற்கு வந்துசேரவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கப்பல் மூலம் திருகோணமலை ஊடாக இங்கு கொண்டுவரக்கூடிய நிலைமை இருந்தும் அனுப்பிவைக்கப்படவில்லை. பலமுறை தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் மருந்துகள் கோரப்பட்டும் மூன்று தடவைகள் சொற்ப மருந்துகளே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய மருந்துகளான மயக்க மருந்துகள், இரத்தப்பை, கிருமிகொல்லி மருந்துகள் (Oral, Antibiotic) சிறுவர்களிற்கான சிறப் வகை மருந்துகள், ஜீவனி போன்றன முற்றாக முடிந்துள்ளன.

நீர் சுகாதாரம்

தற்போதைய மிகச் சிறிய நிலப்பரப்பில் (கடற்கரை, வயல், சேற்று நிலம்) மிகச் செறிவான மக்கள் வாழ்ந்து வரும் இச்சூழலில் இங்குள்ள மக்கள் தறப்பாளினால் ஆன வீடுகளினை நெருக்கமாக அமைத்து அதற்குள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிற்கான போதியளவான மலசலகூடம், போதியளவான நீர்வசதி இல்லாதுள்ளமையால் இங்குள்ள மக்களிற்கு அதிகளவான தொற்று நோய்கள் ஏற்பட ஏதுவாகவுள்ளது. அத்துடன், மலசல கூடங்கள், நீர் வசதிகளினை அதிகளவில் நிறைவேற்றுவதற்கு போதியளவான இடசவதியில்லாதுள்ளதுடன் அவ்வாறான வசதிகளினை ஏற்படுத்துவதற்கு போதியளவான மூலப் பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளினைப் பெறுவதற்கான அரச சார்பற்ற நிறுவனங்களும் இங்கு இல்லாதுள்ளமையும் பாரியதொரு பிரச்சினையாகவுள்ளது.

கற்பவதிகள்

இங்குள்ள கற்பவதிகளிற்கான எந்தவிதமான போஷாக்கான உணவுகளும் (மரக்கறி வகைகள், இறைச்சி, முட்டை, பால், பால்மா வகைகள், பழவகைகள்) என்பன கிடைக்கப் பெறாமையால் இங்குள்ள கற்பவதிகளிற்கு குருதிச் சோகை நோய் பெரும்பாலும் அவதானிக்கப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விரைவில் நோய்வாய்ப்படும் நிலை உருவாகியுள்ளது. இதில் கற்பவதிகள் ஷெல்தாக்குதல் பயணத்தில் பெரும்பாலான நேரம் பதுங்குக் குழிக்குள் அவசரமாக செல்வதனால் அவர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவதும் விழுந்து அடிக்கடி வைத்தியசாலைக்கு வருவதும் அதிகரித்துள்ளது. அதனால், கருச்சிதைவும் அதிகம் இடம்பெறுகின்றது. கடந்த இரண்டு வாரத்திற்கு மட்டும் எறிகணைத் தாக்குதலினால் 20 கற்பவதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் 08 கற்பவதிகள் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துள்ளனர். நான்கு சிசுக்கள் கருப்பைக்குள்ளேயே காயமடைந்து இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டனர். அத்துடன், 05 கற்பவதிகள் ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்ட இறந்த உடல்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டன.

குழந்தைகள்

தினந்தோறும் 20-50 வரையான குழந்தைகள் காயமடைகின்றனர். 10-15 வரையான குழந்தைகள் ஷெல் தாக்குதல்களினால் இறக்கின்றனர். அத்துடன் தினமும் ஒரு குழந்தையாவது நோய்வாய்ப்பட்டு மருந்து பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இறக்கின்றது. கடந்த 26.03.2009 ஆம் திகதி வைத்தியசாலையில் சிறுவர் விடுதிக்கு அண்மையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் விடுதியினை விட்டு ஓடி வீடு சென்று மறுநாளே திரும்பி வந்தனர். மருந்து சீராகக் கொடுக்கப்படாததன் காரணமாக இரு குழந்தைகள் இறந்து விட்டனர்.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு போதிய உணவு இல்லாததன் காரணத்தால் பால் கொடுக்க முடியாதுள்ளதாகக் கூறுகின்றனர். பதிலாக கொடுப்பதற்கு எஸ்.எம்.ஏ. லக்டோஜன் பால்மா வகைகள் இல்லாதுள்ளமையால் பிள்ளைகள் பெரிதும் நலிவுற்றுக் காணப்படுகின்றார்கள். அத்துடன் ஷெல் தாக்குதலில் தாய்மாரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பால்மா இல்லை. இதுதவிர குடும்ப அங்கத்தவர்கள் காயமடைவதையும் இறப்பதையும் பார்த்த சிறுவர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாப்பான வேறு இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அநாதைகளாக திரிவதும் அவதானிக்கப்படுகின்றது.

உணவு

இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் கச்சேரியால் வழங்கப்படுகின்ற நிவாரணத்திலேயே தங்கியுள்ளனர். 3 இலட்சம் மக்களுக்குத் தேவைப்படும் அளவிலும் பார்க்க மிகவும் குறைவான அளவிலேயே உணவு அனுப்பப்படுகின்றது. அதிலும் அரிசி ஒரு தடவை மட்டுமே வந்தது. இங்குள்ள மக்களில் 70% மான மக்கள் மரக்கறி உண்டு இரண்டு மாதங்களாகி விட்டது. மூன்று மாதங்களாக சுகாதாரத் திணைக்களத்தினூடாக வந்து சேர வேண்டிய திரிபோசா, சோளன் சோயா மாவும் வரவில்லை.

வன்னியில் 5000 பொதுமக்கள் பலி, 15000 க்கும் மேற்பட்டோர் காயம்: ஸ்ரீகாந்தா பா.உ

srikanthaa.jpgவன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இது வரை 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்னியில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுத்தத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களில் 500க்கும் மேற்பட்டோர் உரிய மருத்துவ வசதிகள் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான உயிரிழப்புகளுக்கு எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களே காரணமாகின்றன எனவும், வன்னிப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்களையும் குண்டுத் தாக்குதலைகளையும் உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடும் மோதல்; புலிகளின் பாரிய மண்அணை படை வசம்

srilanka_army1.jpgமுல்லைத் தீவு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கரியமுல்லைவாய்க்கால் பகுதியில் புலிகளின் மண்ணனையொன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். புலிகளிடமுள்ள மிகச் சிறிய பகுதியையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 53, 57, 58ஆம் படைப்பிரிவின் இரண்டாம் தாக்குதல் படையணியுடனான மோதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இராணு வத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது புலிகளின் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதில் மூன்று சடலங்கள் பழுதடைந்திருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார். இதேநேரம், பல ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியில் காயமடைந்த 512 நோயாளர்கள் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்

people-_flee.jpgவன்னியில் இடம்பெற்றுவரும் மிக மோசமான போர் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 512 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் வழித்துணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நோயாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட “கிரீன் ஓசன் ஓ’ கப்பல் நேற்று இரவு 8.35 மணியளவில் புல்மோட்டையை வந்தடைந்தது.

புல்மோட்டையை வந்தடைந்த “கிரீன் ஓசன் ஓ’ கப்பலில் இருந்த 512 நோயளர்களையும் 20 செஞ்சிலுவைச் சங்க சர்வதேசப் பணிப்யாளர் 8 படகுகளை வேலைக்கு அமர்த்தி கரைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதுவரை செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழு முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் மோதல் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 5500க்கு மேற்பட்டோரை கப்பல் மூலம் அழைத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவினரால் அழைத்துவரப்படும் நோயாளர்கள் திருகோணமலை, புல்மோட்டை, கந்தளாய், பதவியா மற்றும் வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டோரில் இறந்தவர் தொகை 46

pullmottaiindiadoctors.jpgபெப்ரவரி 11ஆம் திகதி தொடக்கம் மார்ச் 14 ஆம் திகதி வரை திருகோணமலைக்கு முல்லைத்தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு திருகோணமலை, கண்டி, கொழும்பு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நண்பகல் 12 மணிவரை 46 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை ஆஸ்பத்திரியில் 32 பேரும் கண்டிபோதனா வைத்தியசாலையில் 09 பேரும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் 05 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதிதாக 33 குழந்தைகள் பிறந்துள்ளன. திருகோணமலைக்கு கூட்டி வரப்பட்ட 3,635 முல்லைத்தீவு பொதுமக்களில் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே 3,236 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்விபரம் வருமாறு;

வவுனியா ஆஸ்பத்திரி, நலன்புரிமுகாம்2,019
மன்னார் ஆஸ்பத்திரி908
கொழும்பு தேசிய வைத்தியசாலை61
கண்டி போதனா வைத்தியசாலை 54
மகரகம போதனா வைத்தியசாலை01
பொலநறுவை ஆஸ்பத்திரி 100
கந்தளாய் ஆதார வைத்தியசாலை57
தம்பலகமம் ஆஸ்பத்திரி 35

நேற்று சனிக்கிழமை வரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் பெப்ரவரி11 தொடக்கம் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஈழத்தமிழருக்காக இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்படவில்லை: கலைஞருக்கு ராமதாஸ் பதில்

26-ramsoss.jpgமுதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் பிரச்சனையால்தான் இரண்டு திமுக ஆட்சியையே பறிகொடுத்தது.   எங்களுக்கா ஈழத்தமிழர் நலனில் அக்கறை இல்லை என்று ராமதாசுக்கு கேள்வி கேட்டு அறிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இலங்கை தமிழர்களுக்காக, இரண்டுமுறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கலைஞர் கூறிவருகிறார். இரண்டு முறை ஆட்சியை இழந்தது ஈழத் தமிழர்களுக்காகவா? என்பதை அலச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசான காங்கிரஸ் அரசால், அன்றைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

பிறகு, ஆட்சி கலைப்புக்கு என்ன காரணம்? நெருக்கடி நிலைக்கு எதிராக தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மிகவும் கோபம் கொள்கிறார். அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆட்சி கலைக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

1983-ம் ஆண்டில் தான், இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது, கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்யும்படி அப்போது யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. அவராகவே ராஜினாமா செய்தார்.
 
இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது; எத்தனையோ வெளிநாடுகளின் பிரச்சினையை ஐ.நா. கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரா முகமாக இருந்துவிட்டது.

நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது என்றெல்லாம் குற்றம்சாற்றி ராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மேல் சபைக்கு போட்டியிட்டு உறுப்பினராகிவிட்டார் என்பது வேறு விவகாரம். அதற்கு பின் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி கண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது.

37 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திராகாந்தியின் துணையுடன் கலைத்தார்.  அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். இது வரலாறு.

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? வி.பி.சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, அப்போது தி.மு.க. அரசு ராஜீவ்காந்தியின் ஆசியோடு கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில், ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதாகும்.

எனினும், அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும், அப்போது எதற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று சுருங்கச் சொன்னால் இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல், டெல்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள், உருவான கூட்டணி மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் ஆட்சி பறிக்கப்படவில்லை. எனவே, ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனிமேலும் கூறினால் அதனை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது’’ என்று தெரிவித்துள்ளார்.