இராக்கின் ஃபதில் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று உள்ளூர் சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதில் குறைந்தது மூவராவது உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஃபதில் மாவட்டத்துக்குச் செல்லும் சகல பிரதான பாதைகள் அனைத்தையும் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு படைகள் கைப்பற்றிக் கட்டுப்படுத்தியுள்ளன.
சுனி பிரிவு போராளிகள் தமது போராட்டத்தைக் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்கிற எச்சரிக்கைகளை அமெரிக்க வீரர்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இராக்கிய துருப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் இராக்கிய மற்றும் அமெரிக்க போர்வீரர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சுனி பிரிவு தலைவரின் ஆதரவாளர்களுக்கும் போர்வீரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துக்கிளம்பின. இராக்கிய போர்வீரர்கள் ஐவர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட சுனி பிரிவு மனிதர் அல்கைதாவுடன் முன்னர் இயங்கிவந்த எழுச்சி இயக்கம் என்ற குழுவைச் சேர்ந்தவர். பின்னர் அதிலிருந்து அவர் கட்சித் தாவியிருந்தார் என்று கூறப்படுகிறது.