ஹட்டன் மகளிர் தின நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகரன்

“உலக மாதர்கள் சகல துறைகளிலும் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள். அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு இம்சைகளை வெளிக்காட்டுவதற்கு மிகவும் அஞ்சியுள்ளனர். அவர்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமை என அமைச்சர் பி. சந்திரசேகரன் தெரிவித்தார். அட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மலையக மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் பி. சந்திரசேகரன் தொடர்ந்து கூறியதாவது, பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு மிகவும் தகுதியுள்ளவர்களாவர். அவர்கள் மத்தியில் திறமைகள் நிறையவுள்ளன. அவையாவும் இலைமறை காய்களாகவே உள்ளன.

சதாகாலமும் அவர்களை ஆண்களுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் அடிமைகள் என்று நினைப்பது தவறு, இன்று சகலரும், சகலதுறைகளிலும் பங்கு கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். ஐ. நா. அறிக்கை படி 80% பெண்கள் அகதிகளாகவே உள்ளனர்.பெண்கள் சமுதாயத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். அவர்கள் தலைதூக்கமுடியாமல், வழி தெரியாமல் அவதியுறுகின்றனர்.

40 வயது சென்ற ஒரு பெண் தொழிலாளி தான் 60 வயது தோற்றமுள்ளவராக காட்சி அளிக்கின்றார். காரணம், குடும்பத்தில் கஷ்டம், சரியான வருமானமில்லை, உணவு இல்லை வேலைவாய்ப்பு இல்லை சமூகத்தில் முன்னேற முடியாமல் ஆண்வர்க்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டமாதர்கள், வீட்டில் மாத்திரமன்றி வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் இம்சைக்குட்படுத்த ப்படுகின்றனர். குறைந்த கூலியைப் பெற்று, கூடுதலான வேலை செய்துள்ளவர்கள் பெண்களேயாகும். அவர்கள் மத்தியில் கல்வி அறிவுண்டு ஆற்றலும் உண்டு.

தோட்ட கமிட்டிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அதேபோன்று பிரதேச சபை, மாகாண சபை, நகர சபை, பாராளுமன்றத்தில் அவர்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும். தோட்டக் கமிட்டிகளில் 10 ஆண்கள் பிரதிநிதித்துவத்துக்கு, 3பெண்கள் இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும். இதில் மகளிர் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களின் மே தினத்தைப் போன்று மகளிர் தினத்தன்று சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *