இவ் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் பால் உற்பத்தியில் 23 வீதம் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையினால் பால் உற்பத்தி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரசார நடவடிக்கையின் பயனாகவே இந்த இலக்கை அடையக் கூடியதாகவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு வருடங்களுக்குள் 150 பால் விற்பனை நிலையங்களை திறப்பதனை சவாலாக ஏற்றுக்கொண்டோம். ஆனால் ஒரு வருடமும் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே சவாலை வெற்றி கண்டுவிட்டோம். இது பால் உற்பத்தியாளர்களதும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வரலாற்றில் ஏற்பட்டுள்ளதுமான பெரும் வெற்றியாகும் என்றும் சபையின் தலைவர் கூறினார். ஹுனுபிட்டியவில் கடந்த 24ம் திகதி 150 வது பால் விற்பனை நிலையம் திறந்த வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கம் பஹா மாவட்டத்தில் கடந்த 24 ஆம் திகதி மாத்திரம் 09 பால்விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.