கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

“அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்” – த.ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

 

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

 

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

 

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

 

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

 

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

 

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

 

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

 

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

‘றோ இன்றி ஒரு புலியும் அசையாது’ பாவம் தலைவர்: அழித்தவர்களின் முகவர்களே டென்மார்க்கில் அஞ்சலியும் செய்தனர்!

கார்திக் மனோகரன் தன்னுடைய சித்தப்பாவான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அஞ்சலி செய்ய முற்பட்ட நிகழ்வு, தலைவரை அவமானப்படுத்துவதாகவும் அவர் உயிரோடு இருக்கும் வரை வாழ்ந்த லட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவும் அமைந்தது எனத் தெரிவிக்கின்றார் முன்னாள் பெண் போராளியான விமிலினி சிவநேசன். இறுதி யுத்தத்திற்கு முன்னரே போராட்டத்தில் தனது காலை இழந்த அவர் தம்பி கார்த்திக் மனோகரன் சித்தப்பாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் அஞ்சலி வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவை தான் வரவேற்றதாகத் தெரிவித்த விமிலினி, அதனை அவர் தங்கள் குடும்ப நிகழ்வாக எல்லோரையும் அழைத்து செய்திருக்க வேண்டும். அதனை விடுத்து தலைவரின் இலட்சியங்களுக்கு விரோதமான புல்லுருவிகளை அழைத்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது, தலைவரின் இலட்சியங்களை வன்புணர்வு செய்ததற்குச் சமன் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் 2009 இலேயே வீர வணக்க அஞ்சலியைச் செய்திருக்க வேண்டும். அது 15 ஆண்டுகள் கடந்து தற்போதாவது நிகழ்கின்றதே என்ற எண்ணம் வே பிரபாகரனின் இலட்சியக் கனவில் பயணித்த பலருக்கும் இருந்தது. அவர்களும் வெளியே இருந்து நிகழ்வின் உண்மைத் தன்மை தெரியும் வரை வரவேற்றனர். ஆனால் நிகழ்வில் இந்திய உளவுத்துறையான றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சன்னதமாடும் பாரதிய ஜனதா கட்சி சங்கிகள் நிகழ்வை நடத்தினார்கள் என்ற பின்னணி வெளியே வந்ததும் இந்நிகழ்வு பிரபாகரனின் இலட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவே அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அரசியலற்ற பார்வை தொடர்பிலும் அதீத இராணுவ பிரம்மை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் இருந்த போதும் தன்னையும் தனது குடும்பத்தையும் தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அந்த இலட்சியம் தொடர்பில் அவரது எதிரிகளும் கூட முரண்படவில்லை. பிரபாகரனுக்கு ஒரு விடுதலைப் போராளியான கௌரவத்துடனும் மரியாதையுடனும் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தன்னிடம் தோற்றுப்போன எல்லாளனைக் கௌரவித்தவன் துட்டகைமுனு. இன்றும் அந்த கௌரவம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் தற்போது இந்திய உளவுப்பிரிவான றோ வுக்கும் மோடிக்கும் சங்கூதிக்கொண்டு பிரபாகரனனுக்கு அஞ்சலி செய்வது மிக வேடிக்கையானது.

இந்திய அமைதிப்படை காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் காட்டிக்கொடுத்து, பல புலி உறுப்பினர்களையும் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குக் தலையாட்டிக் காட்டிக்கொடுத்தவர் ‘சுக்லா’ என்றழைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர். இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு மரண தண்டனை விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அன்று யாழ்ப்பாணத்திலிருந்து சுக்லா வை இந்திய இராணுவம் தனது ஹெலிகொப்டரில் கொண்டு வந்து கட்டுநாயக்காவில் தரையிறக்கியது. 90களில் சுக்லா புலம்பெயர்ந்து பாரிஸில் தரையிறங்கினார். அன்று புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இருந்ததால் புலிகளைக் காட்டிக்கொடுத்தவர்களும் புலிகளால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும் புலிகளால் மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களும் புலம்பெயர் தேசங்களில் தீவிர புலிகளாக இயங்க ஆரம்பித்தனர். அவ்வாறு மாறியவர்களுள் சுக்லாவும் குறிப்பிடத்தக்கவர். தற்போதும் பிரான்ஸில் தான் இவர் வாழ்கின்றார். பாம்பு கூரூப் என்ற வன்முறைக் குழுவின் பின்னணியிலும் இவர் இருந்தவர். பாரிஸில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் பின்னணியிலும் இவர் இருந்துள்ளார். குறிப்பாக பாரிஸ் சபாலிங்கத்தின் படுகொலையை இவரது குழுவே மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. தற்போது கனடாவில் வாழும் முன்னாள் சுவிஸ் பொறுப்பாளர் முரளியின் நெருங்கிய நண்பர் சுக்லா. சுவிஸில் பாம்பு கூரூப் உருவாக்கப்பட்டதே முரளிக்கு சில பல காரியங்களைச் செய்வதற்காகவே. சபாலிங்கத்தின் படுகொலையில் முரளியினதும், சுக்லாவினதும் கரங்கள் இருப்பதாகவே தற்போதும் நம்பப்படுகின்றது.

இவ்வாறானவர்கள் பிரபாகரனுக்கு இறுதி அஞ்சலி கொண்டாடும் அவல நிலை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட சிறிசபாரத்தினம், பத்மநாபா, அ அமிர்தலிங்கம் போன்றவர்களும் சரி பிரபாகரனால் படுகொலை செய்யப்படாத உமா மகேஸ்வரனானாலும் சரி அவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் அவர்கள் இறந்த நாள் தொடக்கம் அவர்களது அமைப்பினால் ஒரு அரசியல் உரையாடல் நிகழ்வாக முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களின் அரசியல் உரைகளோடு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

முப்பது வருடங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தலைவனுக்கு றோ தமிழீழம் பெற்றுத் தரும் இந்தியாவை எதிர்க்காமல் அணி திரண்டு வாருங்கள் என்று போராட அழைக்கின்றது இந்த றோ கும்பல். இவர்கள் 2009 மேல் ஒரு தடவை மரணித்த வே பிரபாகரனதும் அவரது குடும்பத்தின் மீதும் கோசலம் அடித்து அவமானப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நேசக்கரம் அமைப்பின் சாந்தி வவுனியன் அரசியல் ஒழுக்கமற்ற ஒருவர். இவர் 2009இற்கு பின் தமிழகத்திற்கு தப்பி வந்த பெண் போராளிகளோடு தொடர்பு கொண்டு மரியாதைக் குறைவாக அவர்களோடு உரையாடியவர். சில தகவல்களை வைத்துக்கொண்டு கதைகளைப் புனைந்து தனது விருப்பு வெறுப்புக்கமைய குழுசார்பு மனப்பான்மையுடன் செயற்படுபவர். பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொள்ளும் இவர் ஐபிசி பாஸ்கரனையோ சுபாஸ்கரனையோ கூட அடுத்த தேசியத் தலைவர் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிகழ்ச்சியில் மாவீரன் பிரபாகரன் உரை நிகழ்த்திய நிலா என்ற பாலநந்தினி பாலசுப்பிரமணியம், றோ தமிழீழம் பெற்றுத்தரும் தலைவர் பிரபாகரன் இந்தியாவுடன் மோதியது தான் அவரது தவறு இல்லாவிட்டால் இந்திய றோ வே தமிழீழம் பெற்றுத் தந்திருக்கும் என்கிறார். அக்கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் இறந்தாலும் அவருடைய இலட்சியங்கள் இறக்கவில்லை என்று சொல்லும் நிலா, றோ வோடு சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க அழைப்பு விடுக்கின்றார். இந்த திபாகரன் – நிலா கூட்டின் மதியுரைஞர் தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு. மு திருநாவுக்கரசு, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பழ நெடுமாறன், வெற்றிச் செல்வன் ஆகியோர் நேரடியாகவே றோவின் பராமரிப்பில் உள்ளவர்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிச் செயற்படுபவர்கள்.

ஈழ அரசியலில் றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்ற நிலையே தற்போதுள்ளது. தற்போது அரசியலில் ஈடுபடுபவர்களில் புலித்தேசியம் பேசுகின்ற அல்லது புலிகளுக்காக வக்காலத்து வாங்குகின்றவர்கள் மிகப்பெரும்பாலானோர் இந்திய, இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகளோடு சேர்ந்து செயற்படுபவர்களாகவே உள்ளனர். இதற்கு தமிழ் நாட்டில் கலையகத்தை வைத்துச் செயற்படும் ஐபிசியும் லங்காசிறியும் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. இந்திய உளவுத்துறைக்குச் சேவகம் செய்ய இவர்கள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர்.

றோ வின் ஒரு பிரிவு பழ நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் அணி துவாரகா வந்துவிட்டார், பிரபாகரன் வந்துகொண்டிருக்கிறார், அவருக்குப் பின்னால் மதிவதனி வருகிறார் என்று கதையளக்க, முன்னாள் இந்திய இராணுவ மேஜர் மதன்குமார் அதற்கு ‘பில்ட்அப்’ கொடுக்கின்றார். மறுபக்கம் றோவின் மற்றைய பிரிவு மு திருநாவுக்கரசு வழிகாட்டலில் இயங்கும் திபாகரன் – நிலா கூட்டு துவாரகா வரவில்லை. தலைவரும் வரமாட்டார், மதிவதனியும் வரமாட்டார். அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செய்வோம் என்று கார்த்திக் மனோகரனின் நிகழ்வை தங்களுடைய நிகழ்வாக ஹைஜாக் பண்ணி ஒரு விடுதலைப் போராளியின் நிகழ்வில் கோசலம் அடித்துள்ளனர்.

இவ்வாறு மற்றவர்களுடைய நிகழ்வுகளில் புகுந்து அவற்றை ஹைஜாக் பண்ணுவதை தங்களுடைய திறமை என்று றோவின் ஈழத்தமிழ் ஊதுகுழலாகச் செயற்படும் லங்காசிறியிலும் ஐபிசியிலும் மார்தட்டி வருகின்றார் திபாகரன். தமிழரசுக் கட்சியின் பிரித்தானியக் கிளையைக் கைப்பற்ற இவர்கள் போட்ட திட்டத்தை தேசம்நெற் அம்பலப்படுத்தி இருந்தது. அரசியலில் ஏடே தொடங்கியிராத கார்த்திக் மனோகரன் சித்தப்பாவுக்கும் குடும்பத்துக்கும் நிகழ்த்திய வீரவணக்க நிகழ்வில் றோ – மோடி கூட்டம் கோசலம் அடித்தது மிகக் கேவலமானது. ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் வைக்கும் கூட்டங்களில் தங்களைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான விரோத சக்திகள் புகுந்து அட்டகாசம் பண்ணுவது வழமை. இப்போது அவர்கள் தங்கள் தலைவனின் வீரவணக்க நிகழ்வையே அவ்வாறு அசிங்கப்படுத்துகின்றனர்.


இந்திய புலனாய்வுத்துறையும், இந்திய இராணுவத்தால் பயிற்றப்பட்ட இலங்கைப் புலனாய்வத்துறையும் இணைந்தே இறுதி யுத்தத்தை நடத்தியதாக அதன் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது கனடாவில் வாழும் இவர் தான் இலங்கைச் சிறையில் நான்காம் மாடியில் இருந்த போதும் தன்னைக் கைது செய்ததும் விசாரணை செய்ததும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் என்று தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவு என்றொன்று இலங்கையில் இல்லை என்றும் அங்கு இருப்பதும் இந்திய புலனாய்வுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்தியாவின் நலன்களுக்காகப் பணியாற்றும் புலனாய்வுப் பிரிவு என்றும் அவர் தெரிவித்தார்.

றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்பது போல் பிரபாகரனும் அவரது குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது இந்திய புலனாய்வுப் பிரிவு. அதன் படி அக்குடும்பத்தையே படுகொலை செய்தவர்களின் முகவர்கள் அக்குடும்பத்திற்கு வீரவணக்கம் செலுத்த, ஆயிரம் ஆயிரம் போராளிகளும் மக்களும் அதனை வேடிக்கையாக கடந்து செல்கின்றனர். பாவம் பிரபாகன். அவருக்கு ஒரு கௌரவமான வீர வணக்கத்தை ஈழத்தமிழர்கள்: ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம், மலையக மற்றும் சமூகங்களுடனும் ஒடுக்கப்பட்ட உலக மக்களோடும் இணைந்து சுயவிமர்சனத்தோடு செய்ய வேண்டும்.

 

துவாரகாவாக உயிர்த்தெழுந்தவர் கொல்லப்படும் அபாயம் ! புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வீரவணக்க அஞ்சலி !!

மே 18, 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் வகையிலும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் பிரபாகரனுக்கு வீர வணக்க அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு மக்களாலும் ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டால் துவராகாவாக மாறிய பெண் படுகொலை செய்யப்படுவார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வே பிரபாகரனின் இரத்த உறவான அவருடைய மூத்த சகோதரர் மனோகரன் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இளவயதில் பிரபாகரன் இருந்த தோற்றத்திலேயே இருக்கும் மனோகரன் வேலுப்பிள்ளையின் மகன் கார்த்திக் மனோகரன் தனது சித்தப்பா வே பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு பல்வேறு செவ்விகளை வழங்கிய காரத்திக் மனோகரன் ஈழத்தமிழ் மக்களுக்காக போராடிய தனது சிறிய தந்தையை அவமானப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பணத்தைக் கொள்ளையிடும் வகையிலும் கதைகளைப் பரப்பி வருவதால் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே தாங்கள் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கார்த்திக் மனோகரன் இந்த அஞ்சலி நிகழ்வை தான் தோன்றித்தனமாகச் செய்யவில்லை எனவும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கும் அமையவே இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 18 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த செய்தியை தமிழ் ஊடகப் பரப்பில் தேசம்நெற்றே முதலில் உறுதிப்படுத்தி வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பில் தேசம் நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலாளராக இருந்த கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் வெளியிட்டு இருந்தது. அவர் இச்செய்தியை சர்வதேச ஊடகங்களுக்கும் 48 மணி நேரங்களில் அறிவித்து இருந்தார். இச்செய்தி அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரி.ரி.என் இலும் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அத்தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் செயற்குழுவின் தலைவராக இருந்த எஸ் கருணைலிங்கம். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் செயற்பாட்டாளரான சுவிஸ் ரஞ்சனின் சகோதரர். இச்செய்தி வெளியிடப்பட்டதற்காக தங்களைப் புலிகளின் விசுவாசிகளாகக் காட்டிக்கொண்ட சிலர் அத்தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியும் இருந்தனர். அதன் பின் ரி.ரி.என்னும் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்று கும்பலோடு கோவிந்தாவாக ஜால்ரா அடித்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை முற்று முழுதாக உறுதிப்படுத்தினால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் கொதித்தெழுவார்கள். பிரபாகரன் எப்படி இறந்தார்? இறுதி நேரத்தில் என்ன நடந்தது? என்ற கேள்விகளும் எழும். இலங்கை, இந்திய அரசுகள் மீது யுத்தக் குற்றங்களும் எழும் தமிழர்கள் மத்தியில் இந்தியா நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இதற்காக பிரபாகரன் உயிரோடு தப்பித்துவிட்டார் என்ற வதந்தியை இந்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கசிய விட்டனர். நெடுமாறன், காசி ஆனந்தன் போன்ற இந்திய உளவுப் பிரிவான ரோ வின் முகவர்கள் இதனைப் பரப்புவதில் முன்நிற்கின்றனர். இவர்கள் தான் இப்போது துவாரகா வந்துவிட்டார், பிரபாகரனும் வருகிறார். ஆனால் இம்முறை பிரபாகரன் இந்தியாவை எதிர்க்கமாட்டார் என்றெல்லாம் கட்டியம் கூறுகின்றார் காசி ஆனந்தன்.

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட புலிகளின் ஒரு பிரிவினர் தற்போது இந்திய உளவுத்துறையின் முகவர்களாக சுவிஸில் உள்ள பெண்ணை துவாரகாவாக மற்றியுள்ளனர். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மக்கள் அவர் இனி வரமாட்டார் என்று நம்பினால் துவாரகா வேடம் போட்ட பெண் கொல்லப்பட்டு அவருடைய கதை முடிவுக்கு வந்துவிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்போதைய வேடம் கலைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள் மேலும் இந்திய உளவுத்துறையும் அம்பலப்படுத்தப்படும் என்பதால் போலித் துவாரகா கொல்லப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது நலன்களுக்காகத் தூண்டிவிட்டு தமிழ் – சிங்கள முரண்பாட்டை படுகொலைகளாக மாற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ. இந்திய புலனாய்வுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் விக்ரர் தலைமையில் அனுராதபுரம் படுகொலையை 1985இல் மேற்கொண்டனர். சிங்களக் கிராமங்கள் தாக்கியளிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே. தாங்கள் சொன்னதைச் செய்ததைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயதப் பயிற்சியை இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்திய நலன்களைப் பேணுவதற்கான போராட்டமாக மாறியது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய இந்தியா, 1987 இல் அமைதிப்படையாக இலங்கைக்குள் நூழைந்தது. புலிகளைக் குறைத்து மதிப்பிட்ட இந்தியாவும் இந்திய இராணுவமும் புலிகளிடம் வாங்கிக் கட்டியது.

அடிபட்டுக் கிடந்த இந்தியா தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. பிரபாகரனிடம் எவ்வித அரசியல் பார்வையும் தெளிவும் இல்லாதது இந்தியாவுக்கு மிகச் சாதகமாக அமைந்தந்து. இலங்கை இராணுவத்தை குறைத்து மதிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2006இல் மாவிலாற்றை மூடி சண்டையை வலிந்து ஆரம்பித்து இலங்கை இராணுவத்திடம் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தனர். இதற்குப் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து செயற்பட்டனர். ஒப்பிரேசன் பீக்கன் என்ற 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட தாக்குதல் திட்டமே பின் மீள்திருத்தம் செய்யப்பட்டு 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

2008 பிற்பகுதிகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பிக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. விடுதலைப் புலிகள் சிறிய ரக மல்ரிபரல்கள் கொண்டு தாக்க இலங்கை இராணுவம் கனரக சக்தி வாய்ந்த மல்ரிபரல்களைக் கொண்டு வந்து புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்தது. ஒரு சில மணித்தியாலங்களே கட்டாய இராணுவப் பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விட்டில் புச்சிகளாக வன்னி மண்ணில் உயிரிழந்தனர். இந்த யுத்தம் தோல்வி அடையும் என்பதை 2008 முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் புலிகள் அழிக்கப்பட்டால் தாங்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்பதால் இது பற்றி மௌனமாகவே இருந்தனர். அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் மட்டும் தான், இதனை தேசம்நெற் நேர்காணலூடாக 2009 ஜனவரியில் வெளிப்படுத்தினார். அதில் தமிழ் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்று 2009 ஜனவரியில் வேண்டுகோள் விடுத்தனர். அச்சமயத்தில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் பாரிய உயிரிழப்பொன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் வெளித்தெரியத் தொடங்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் பார்வையற்ற அரசியல் தெளிவற்ற ஒரு முட்டாள்தனமான இராணுவக் கட்டமைப்பாக இருந்தமையால்தான் சர்வதேசம் ‘உங்களை இப்படித்தான் தாக்கி அழிப்போம்’ என்று கால அட்டவணை போட்டு அவர்களுடைய கையில் திட்டத்தை ஒப்படைத்து விட்டு தாக்கி அழித்துள்ளனர். நிலைமை தங்களுக்கு சாதகமாகவில்லை என்பது தெரிந்திருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முட்டாள்தனமாகத் தொடர்ந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மீண்டும் இந்திய அரசியல்வாதிகளை நம்பியதும் அவர்களுக்குப் பின்னிருந்த இந்திய புலனாய்வுத்துறையினரை கண்டுகொள்ளமல் இருந்ததும் தான். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் பிதில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் தமிழகத்தில் திமுகாவுக்குப் பதில் அம்மா ஜெயலலிதா அதிமுகா ஆட்சிக்கு வரும் என்றும் நம்பினர். அதனால் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 16, 2009 வரை சரணடையாமல் யுத்தத்தை இழுத்துக் கொண்டிருந்தனர். இலங்கை அரசோ யுத்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியத் தேர்தல் ஆரம்பிக்க முன்னரே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கச் செயற்பட்டது.

இந்தப்பின்னணியில் நிகழ்த்தப்பட்டது தான் ஏப்ரலில் பிரபாகரன் இருந்த இடத்தை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இத்தாக்குதலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தனர். அச்சண்டையில் பிரபாகரன் உயிர் தப்பினார். அப்போது கூட அவர்கள் சரணடையும் முடிவை எடுத்திருந்தால் வன்னி யுத்தத்தில் 75 வீதமான உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் கதைகளைக் கேட்டும் அசட்டுத்தனமான முட்டாள்தனமான நம்பிக்கையிலும் பாஜாகா வரும் ஜெயலலிதா அம்மா வருவார், அவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பினர். இறுதி யுத்தம் நாளுக்குநாள் இறுக இறுக குறுகிய நிலப்பரப்புக்குள் மக்களும் புலிகளும் தள்ளப்பட்டனர். இந்திய – இலங்கைப் புலனாய்வுத்துறையும் யுத்தத்தை இழுத்தடிக்காமல் முடிவுக்குக் கொண்டுவர என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஏப்ரல் முதல் மே 18 வரையான ஆறு முதல் ஏழு வரையான வாரங்களிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. இந்தப் பேரவலத்திற்குக் காரணம் பாஜாகா வும் ஜெயலலிதாவும் வந்து தங்களை மீட்பார்கள் என்ற நம்பிக்கையே.

மே 16 2009 தேர்தல் முடிவுகள் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பில் மண் வீழ்ந்தது. அதனை அறிந்த சில மணி நேரங்களிலேயே தாங்கள் ஆயுதங்களை மௌனிக்கத் தயார் என்று தங்களுடைய தொடர்புகளுக்கு அறிவித்தனர். எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நேரம் இருக்கவில்லை. வெறும் வாய்வார்த்தைகளை நம்பி சரணடைய வேண்டியதாயிற்று. குறைந்தது சில வாரங்களுக்கு முன் தங்கள் சரணடைவை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்து சரணடைந்திருந்தால் வரலாறு வேறு வதமாக அமைந்திருக்கும். சரணடைந்த முக்கிய தலைவர்கள், தளபதிகள், பிரபாகரன் குடும்பத்தினர் எவ்வித மனிதாபிமானமும் காட்டப்படாமல் படுகொலை செய்யப்பட்டனர். ஆட்டத்தை தொடக்கிய இந்தியா, அதனை முடித்தும் வைத்தது. இப்போது தனது அடுத்த ஆட்டத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது. ஆனால் நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை…

 

புலிகளின் இறுதி ஏழு நாட்கள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அந்த ஏழு நாட்களின் மர்மம் இன்றும் தொடர்கின்றது. இன்னும் தொடரும். இது பற்றி இன்னும் பல புனைவுகள் வெளிவரும். உண்மையை அறியவோ தேடவோ தயாரில்லாத போது புனைவுகள் தான் கோலோச்சும். இப்பதிவின் உள்ளடக்கம் யுத்த நாட்களிலேயே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டவை. இவற்றைக் கோர்வையாகப் பார்க்கின்ற போது இந்த வன்னி யுத்தத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

வாருங்கள் என்ன அன்று நடந்தது என்பதைப் பார்போம். இப்போது 2000ம் ஆண்டுகளில் ஆரம்பித்த ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காமல் புலிகள் முரண்பட்டுக்கொள்கின்றனர். கருணா அம்மான் 2004இல் புலிகளில் இருந்து பிரிந்து செல்கின்றார். 2006 இல் புலிகள் கோடிகளை வாங்கிக்கொண்டு மகிந்த ராஜபக்சவை வெல்ல வைத்தனர். மணலாற்றில் புலிகள் யுத்தத்திற்கு தயாராகினர். கிழக்கு இழப்புகள் அதிகமின்றி இலங்கை இராணுவத்தின் வசமானது. தொடர்ந்து நடந்த யுத்தத்தில் வடக்கும் இலங்கை இராணுவத்தின் வசமாக ஆரம்பித்தது. புலிகளின் தலைநகரான கிளிநொச்சி 2009 ஜனவரியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

2009 ஏப்ரலில் பிரபாகரன் முல்லைத்தீவுப் பகுதியில் இருப்பது சற்லைட் படங்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவத்தின் முற்றுகையை உடைத்து பிரபாகரனைக் காப்பாற்ற நடந்த சண்டையில் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தியத் தேர்தலுக்கு முன்னதாக இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவே இலங்கை இராணுவம் இந்த முற்றுகையை மேற்கொண்டது. ஆனால் இந்தியத் தேர்தலில், மத்தியில் தங்கள் விரோதியான ராஜீவ் காந்தி குடும்பத்தின் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் தங்கள் விரோதியான கலைஞர் கருணாநிதியின் திமுகா வும் தோல்வியடைந்து, மத்தியில் பிஜேபியும் மாநிலத்தில் ஜெயலலிதாவும் வருவார்கள் என்றும் அவர்கள் வந்தால் தாங்கள் காப்பாற்றுப்படுவோம் என்றும் புலிகள் நம்பியிருந்தனர். அதனாலேயே ஏப்பிரலில் சரணடைவுக்குச் செல்லவில்லை.

மே 13 2009: இந்திய பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு. தமிழ்நாட்டில் மே 14 2009 இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த இந்தியத் தேர்தலை நம்பியே புலிகள் ஏப்ரலில் இடம்பெற்ற கடும் மோதலோடு சரணடையாமல் தொடர்ந்தும் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர்.

மே 14 2009 அமெரிக்க அதிபர் ஒபாமா: ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்” கேட்டுக்கொண்டார். இதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் பாதுபாப்பு புலனாய்வு மற்றும் முக்கிய அதிகாரிகள் இலங்கை சம்பந்தமாக இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இவ்வாறான முன்னைய சந்திப்புக்களை வைத்துக்கொண்டே அமெரிக்க கப்பல் வரவிருப்பதாக புலம்பெயர் புலிகள் உப்புச் சப்பற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

May 14, 2009 : Press Trust of India / Washington வெளியிட்ட செய்தி: இலங்கை விவகாரத்தில் ஒபாமா அரச நிர்வாகம் இந்தியாவுக்கு முழுமையாக தகவலை வழங்கி புதுடெல்லியுடன் நெருங்கிப் பணியாற்றி வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்றுகின்றோம் என அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலாளர் ரிச்சட் போச்சர் தெற்காசிய ஊடகவியலாளர் குழுமத்தை வெளிவிவகாரத் திணைக்களத்தின் பொகி பொட்டம் தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது தெரிவித்துள்ளார். ரிச்சட் போச்சர் இலங்கை விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்கிறார் அன்றைய ஒபாமா அரசின் வெளிவிவகார ஆலோசகரன ஹிலரி கிளிங்டன். இவர் இந்தியாவின் அன்றைய வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய ராஜதந்திரிகள் சில தடவைகள் தங்களிடம் விஜயம் செய்ததாகவும் அதனால் தங்களால் இந்தியாவோடு நெருங்கிப் பணியாற்றக் கூடடியதாக இருந்ததாகவும் ரிச்சட் போச்சர் தெரிவித்தார்.

ஒவ்வாரு இணைத் தலைமை நாடுகளின்: பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் ஜப்பான் கூட்டம் முடிந்ததும் கூட்டத்தின் முக்கிய விடயங்கள் பற்றி இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றார் ரிச்சட் போச்சர். நாங்கள் இந்தியாவுக்கு எப்போதும் தகவலை வழங்குவதுடன் முடிவுகள் எடுப்பதிலும் இந்தியாவை கலந்துரையாடியே செய்வோம். ஆகவே இலங்கை விவகாரத்தில் இந்தியாவோடு முழுமையாக இணைந்தே செயற்பட்டு இருக்கின்றோம் எனவும் ரிச்சட் போச்சர் தெரிவித்தார். புலிகளை அழிப்பதில் சர்வதேசமும் இந்தியாவும் எவ்வளவு கூட்டாக இணைந்து செயற்பட்டன என்பதனையே இது காட்டுகின்றது.

மே 14 2009 : முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள் விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் மே 14 2009 உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

மே 15 2009 : இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்தார். புலிகளைக் காப்பாற்ற, மக்களைக் காப்பாற்ற அமெரிக்க கப்பல் வருகின்றது என்ற வதந்தியின் பின்னணி இவைகள் தான்.

மே 15 2009 : படகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன், மகள், மற்றும் இரு உறவினர்கள் இன்று (மே 15 2009) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார்.

மே 15 2009: புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மே 16 2009: இன்று (மே 16 2009) காலை இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமான அரசியல் கட்சிகள் தோல்வியடைந்தன. ஜெயலலிதா அம்மாவின் வரவுக்காக காத்திருந்த தம்பியின் நிலை கையறுநிலைக்கு வந்தது. ஏப்பிரலில் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தத்தை பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து இந்தியத் தேர்தல் முடியும்வரை காத்திருந்தது மிகுந்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. யுத்தத்தின் அதிகூடிய உயிரிழப்புகள் இறுதி ஒரு மாதத்திலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மே 16 2009: ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.

மே 16 2009: ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மே 17 2009: வெள்ளைமுள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400 X 600 மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும், இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன.

மே 17 2009: இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மே 17 2009: சூசை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி வருமாறு கூறியிருந்தார்: “ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை (மக்களை) அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை….. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது…. நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை” என்றார் புலிகளின் சிறப்பு கடற்படைத் தளபதி சூசை.

சூசை மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் நேற்று முன்நாள் (மே 15 2009) இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்…. போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்…..” என்றார்.

மே 17 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன்: “எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”

மே 17 2009: ”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

மே 17 2009: இராணுவம் காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர். இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

மே 17 2009: முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கி இருக்கலாமெனவும் இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதில் புலிகளின் தலைவர் அடங்கவில்லை என்பதை அன்று தேசம்நெற் இன் பிரதான செய்தியாளரான பி எம் புன்னியாமீன் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

மே 18 2009 திவயின : இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 2009: காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 18 2009: புதினம் – இணையத் தளம் : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் நேற்று (மே 17 2009) ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று (மே 18 2009) அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தனர்.

படுகாயமடைந்த பல ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகளும் பொதுமக்களும் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ எனப்படும் பகுதியில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தெரியப்படுத்தி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று (மே 18 2009) அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் – அதாவது இன்று (மே 18 2009) காலை பா.நடேசன் சீ.புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. இவர்கள் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

மே 18 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. இதனை தேசம்செற் பிரதான செய்தியாளரும் தனது தகவல் மூலங்களுடாக உறுதிப்படுத்தி இருந்தார்.

18 May 09 The Economic Times செய்தி வருமாறு கூறுகின்றது: பிரபாகரனதும் அவருடை ஆட்களுடனும் மே 18 காலை நான்கு மணியளவில் சண்டை வெடித்தது. 90 நிமிடங்கள் வெடித்த இச்சண்டையில் கால்நூற்றாண்டுகளாக இந்த நாட்டை பயங்கரத்துக்கு உட்படுத்தியவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏரிப்பகுதியில் மரணித்தார். பாராளுமன்ற உறுப்பினருமான கருணா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் பிரபாகரனது தலையின் மேற்பகுதி வெடித்து காயப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னரே இராணுவம் பிரபாகரனது மகன் சார்ள்ஸ் அன்ரனியையும் அவரது தலைமைச் செயற்பாட்டாளர்களையும் கொன்றுள்ளது.

The fighting with Prabhakaran and his men erupted at 4 am Monday (May 18 2009) and was over within 90 minutes, leaving the man who had terrorized the country for over a quarter century dead near a lagoon in Mullaitivu district. Karuna, who is also an MP and vice president of the ruling Sri Lanka Freedom Party (SLFP), confirmed that the upper portion of Prabhakaran’s head was blown off. By then, the military had already killed his son Charles Anthony as well as all his top associates.

மே 18 2009: புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ, பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களை படையினர் கண்டெடுத்தததகத் தெரிவித்தனர்.

மே 18 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. இதனை தேசம்செற் பிரதான செய்தியாளரும் தனது தகவல் மூலங்களுடாக உறுதிப்படுத்தி இருந்தார்.

May 19 2009: South Asian Media Net க்கு டொக்டர் கோகொண்ன வருமாறு தெரிவித்தார்: அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது. நோர்வே இனிமேல் நடுவர் / ஒழுங்கமைப்பாளர் அல்ல. எல்ரிரிஈ தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க விரும்பினார்கள், கொஞ்சம் காலதாமதமாக.

South Asian Media Net: “The government stance is clear. Norway is no longer the facilitators. The LTTE wanted to surrender their arms a little too late,” Dr. Kohona said.

மே 19 2009 : புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி சூசையின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கரையமுள்ளி வாய்க்காலின் சதுப்பு நிலப்பகுதியில் இவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மே 20 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் மே 20 சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரியவந்தது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இவர்களது உடல்கள் இந்திய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு பின் உடனடியாகவே அவை நீக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு அழிந்து போவார்கள் என்பதை ஒரு கோரமான கனவில் கூட பார்க்க விரும்பாத பெரும்பான்மைத் தமிழர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பமும் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர் என்ற தகவலை ஜீரணிக்க வாய்ப்பே இல்லை. மே 17க்குப் பின் கொல்லப்பட்டவர்கள் அனைவரும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உட்பட, சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறி சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர். இதனை அப்போதே தேசம்நெற் வெளியிட்டு இருந்தது.

தற்போது 15 வருடங்களுக்குப் பின்னும் பிரபாகரனும் குடும்பமும் உயிரத்தெழுந்துவிட்டதாக இந்திய உளவு நிறுவனமான றோ – RAW புலி ஆதரவாளர்கள் சிலரை வைத்து ஒரு நாடகத்தை இயக்குகிறது. இவ்வாறு பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்ற வாதத்திலேயே யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் அர்த்தமற்றவையாக்கப்பட்டன. பல்வேறு புனைக் கதைகளுக்குப் பின் எவ்வாறோ பிரபாகரனும் அவரது குடும்பமும் இல்லையென்ற உண்மையை பலரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக பதினைந்து ஆண்டுகளின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இறுதி நிகழ்வை நடாத்த பிரபாகரனின் சகோதரனின் மகன் முன் வந்திருக்கின்றார். ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள 15 ஆண்டுகள் எடுத்துள்ளது.

மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவன் இறந்த செய்தியை மறைக்கக் கூடாது அவருக்கான இறுதி அஞ்சலிகள் செலுத்தப்பட வேண்டும் என அடேல் பாலசிங்கம் புலத்து விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு தற்போது தமிழ் மக்களின் அரசியலில் இருந்தே ஒதுக்கப்பட்டு விட்டார். உண்மைகளை ஏற்றுக்கொண்டு முன்நோக்கி நகர்வதற்கு ஒரு அரசியல் துணிவும் ஆளுமையும் வேண்டும். அது இல்லையானால் பொய்மையிலேயே காலங்கள் நகர்ந்துவிடும்.

‘Ana Than’ யார் இந்த முகநூல் பொறுக்கி: பாரிஸ் முதல் யாழ் வரை பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தள வன்முறையும் – துஷ்பிரயோகங்களும்!

தமிழ் சமூகத்தில் பொதுவெளியில் முன்னேறி வரும் பெண்களை சாதாரணர்களையும் கூட இலகுவாக விழுத்தித்தள்ளுவதற்காக ஆணகள் கையில் எடுக்கும் பாரிய ஆயுதம் தான் நிர்வாணம் சார்ந்த வசையாடல்கள். இதனை கலாநிதிகளும் கல்லாநிதிகளும் வேறுபாடின்றி செய்கின்றனர். அதனைச் செய்ய முடியாதவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு லைக் போட்டு சிற்றின்பம் காண்கின்றனர்.

‘Ana Than’, என்ற முகம்மூடிய முகநூல் நபரால் உருவாக்கப்பட்ட “பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி – சுண்ணாகம்” என்ற முகநூல் பக்கம் ஒன்று தேசம் நெட் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாதம் ஏப்ரல் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த முகநூல் கணக்கில் திட்டமிட்ட வகையில் ஒரு பெண் மீதான தங்களுடைய வக்கிரத்தை கொட்டித் தீர்ப்பதற்காக அந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை தெளிவாக காண முடிகின்றது. நேரடியான கணக்கில் இருந்தே பிரச்சினையை வெளிப்படுத்த தைரியம் இல்லாத இந்த ஆண்கள் குழு ஒன்று போலி கணக்கில் இருந்து பெண் ஒருவரின் நிர்வாணத்தை தாக்கி தங்களை வீரர்களாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஆகப்பெரிய கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணை நிர்வாணம் சார்ந்து கொச்சைப்படுத்தும் குறித்த பேஸ்புக் கணக்கில் சுமார் 400 வரையானவர்கள் நட்பு பட்டியலில் உள்ளனர். Ana Than என்ற முகநூல் கணக்கிலுள்ளவர் குறித்த பெண் தொடர்பான நிர்வாண படங்களை அதிகம் பதிவேற்றி பகிர்ந்துள்ளார். இதே நேரம் தேசம் ஜெயபாலன் குறித்த முகநூல் பக்கத்தில் அதிகமான பதிவுகளை இட்ட குறித்த கணக்கில் பின்தொடர்பவர்களாக உள்ள Ana Than மற்றும் Thabesan Krishna ஆகியோருடன் தொடர்பு கொள்ள முற்பட்டும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

Ana Than என்ற பெயரில் முகநூலைக் கொண்டுள்ள நபரே குறித்த பெண் பற்றிய மோசமான பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவர் தான் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதாகக் கூறி இட்ட பதிவுக்கு 93 பேர் லைக் இட்டுள்ளனர். குறித்த நபர் தான் சுண்ணாகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தகவல்கள் உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அனா தன் என்ற இந்நபர் குறித்த பெண்ணை நன்கு அறிந்தவராக உள்ளார். அப்பெண் மீது காதல் கொண்டது போல் வசனங்கள் பாடல்கள் என்பவற்றை பெப்ரவரி மார்ச் மாதத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதன் பின் ஏப்ரல் மாதம் முதல் அப்பெண் பற்றி தாறுமாறான பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் என்ற முகநூல் பற்றிய விபரம் அந்நூல் திறக்கப்பட்டதும் இவருடைய முகநூல் தளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இந்நபருடைய முகநூல் தளத்தில் 3200 பேர் நட்பாக உள்ளனர். இவர்களில் பலரும் இவருடைய முகநூலைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பலநூறு பேர் மோசமான பதிவுகளைப் பார்த்துவிட்டு, அப்பெண்ணை அரை நிர்வாணக்கோலத்தில் அனா தன் எடிட் செய்த படங்களை போட அதற்கும் லைக் கொடுத்துள்ளனர். ராம் சன்ட் என்பவர் மட்டும் கண்டித்து ஒரு பதிவை இட்டதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆண்களின் ஈனத்தனமும் பாலியல் வக்கிரமும் ஆண்களுக்கே அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இவர்களுக்கு தாய், சகோதரிகள், பெண் பிள்ளைகள் உறவு எதுவும் இல்லாமல் இவர்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் என்று கேள்வியை எழுப்புகின்றது. இந்த மனநோயாளிகளை யாரோ ஒரு அப்பாவிப் பெண் மணம் முடித்து தன் வாழ்க்கை அழிக்கப் போகின்றாளே என்ற அச்சம் என் போன்ற சகோதரர்களுக்கும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் ஏற்படுகின்றது என்கிறார் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகம் உள்ள தாயகத்தில் ஈழத்துப் பெண்களின் நிலைமை இதுவென்றால். புலம்பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் ஈழத்தில் வாழும் சில ஆண்களிலும் பார்க்க மோசமான காட்டுமிராண்டிகளாக உள்ளனர். புலிகள் தொடர்பில் பேசியதற்காக அண்மையில் பிரான்ஸில் வைத்து “சுஜிகூல்” என்ற சமூக வலைதள பிரபலம் ஒருவரை தாக்கியதுடன் நின்று விடாது வேசி என்ற சொல்லில் தொடங்கி அந்த பெண் என்னென்ன தகாத வார்த்தைகளை பேசினாள் என்று தாக்கினோம் என கூறி விமர்சனங்கள் முன்வைத்தனரோ அதே வார்த்தைகளை ஏன் அதை விட அந்த பெண்ணின் பிறப்பு தொடங்கி அம்மா அப்பா அனைவரையும் சேர்த்து பேசி பழிவாங்கியதாக ஆர்கஸம் அடைந்து கொண்டனர் புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள்.

சுஜிகூல் விடுதலைப் புலிகளின் தலைவரை மதித்தே அவருடைய படத்தை தன்னுடைய அறையில் மாட்டியிருந்தார். ஆனால் சுஜிகூலைத் தாக்கிய அக்கா கடை உரிமையாளர் முரளி மற்றும் பதினைந்துவரையான ஈழத்து ஆண்கள் உட்பட முப்பதினாயிரம் வரையானோர் ரிக்ரொக்கில் அப்பெண்ணின் மாலை மயக்கத்தில் இருந்துள்ளனர். இந்த ஈழத்து ஆண்கள் சுஜிகூலை கொழும்பாள், வடக்கத்தையாள் என்றெல்லாம் பிரதேசவாதத்தை இழுத்து அவருடைய பெண்ணுடல் சார்ந்த வசையாடல்களைப் பொழிய சுஜிகூல் அவர்களுடைய வசையாடல் மொழியிலேயே பதிலடி கொடுத்தார். அந்த உரையாடல்களில் பாலியல் வக்கிரத்துடன் தாங்கள் பேசியவற்றை நீக்கிவிட்டு சுஜிகூலின் வசையாடலை மட்டும் பதிவிட்டு தங்களை ஆனையிறவுத் தாக்குதலில் இருந்து திரும்பிய மாவீரர்களாக படம் காட்டினர் லாச்சப்பல் அக்கா கடைச் சருகு புலிக் கும்பல்.

இவர்கள் புலிகளாகக் காட்டிக்கொண்டே இந்த வசையாடல்களைப் புரிந்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனை பாரிஸில் தெருவுக்கு இழுத்துவிட்டு ஆனையிறவுத் தாக்குதல் பாடலையும் போட்டு கேவலப்படுத்தியது அக்காகடை உரிமையாளர் முரளி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட கும்பலே. இவர்கள் ரிக்ரொக்கில் தங்கள் மனைவிமார் காதலியுடன் சல்லாபிப்பது போல் ஆரம்பித்த விளையாட்டே லாச்சப்பலில் புலிகளின் தலைவரையும் சந்திக்கு இழுத்துவி;ட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னரும் ரிக்ரொக்கில் இந்த அந்தரங்கக் கூட்டம் வசையாடல்களை இன்றும் தொடர்கின்றது. இந்த ஆண்களே சுஜிகூல்களை உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

இதே போலத்தான் புலிகளை பாஸிஸ்டுகள் என கூறியதற்காக பெண் சட்டத்தரணி ஒருவரை தேவடியா, அந்த மகளே இந்த மகளே என்றெல்லாம் கொட்டித்தீர்த்தார்கள் நமது புலிக்குட்டிகள்.

இது சாதாரணமான ஒரு விடயமாக கடந்து செல்ல முடியாதது. யாரோ ஒரு பெண் தானே என் கடந்து செல்வோமாயின் இது நாளை நம் வீட்டு பெண்களுக்கும் நடக்கும் அப்போது மட்டும் நியாயம் தேவை நீதி தேவை என வந்து விடுகின்றோம்.

சில மாதங்களுக்கு முன் யாழில் ஒரு ரவுடிக்கும்பல் ஒரு இளம் பெண் இன்னுமொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்தும் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்தும் அவரைப் பலாத்காரப்படுத்தி காதலிக்க வைக்க முயன்றுள்ளனர். இறுதியில் அக்கும்பல் வன்முறையில் இறங்கி பொலிஸ் அழுத்தங்களை ஏற்படுத்தி அக்காதல் தம்பதியின் திருமணத்தை குழப்புவதற்கு முழு முயற்சியும் எடுத்தனர். இறுதியில் அப்பெண் பற்றி முகநூலில் வசையும் பாடினர். இத்தனைக்கும் அப்பெண்ணின் தந்தை ஒரு நீதிபதி, முற்போக்குத் தளத்தில் நன்கு அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர். ஒரு ஆண் நினைத்தால் குறிப்பாக ஈழத்து ஆண், எதனையும் செய்யலாம் என்ற நிலையில் தான் ஈழத்துப் பெண்கள் தாயகத்திலும் புலத்திலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.

மேலும் ஆண்கள் தங்களுக்குள் பிரச்சினைகள் வருகின்ற போது அவர்கள் மோதிக்கொள்வதை விடுத்து மறு தரப்பினரின் குடும்பப் பெண்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாலியல் வக்கிரத்துடன் எழுதுவதை தினம் தினம் காண்கின்றோம். இதனை பாரிஸில் உள்ள லாக்குர்னே ஆலயத்தின் தலைவர் தற்போது சஜித் பிரேமதாஸாவின் கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளராக இருக்கும் குடுமி ஜெயா என்ற ஜெயந்திரன், முன்னர் புலிகளிடம் இருந்த லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் ஆர் ஜெயதேவன் அவருடைய சகபாடி ரரின் கொன்ஸ்ரன்ரைன் போன்றவர்களும் செய்து வருகின்றனர். இதற்கான பல ஆதாரங்கள் தேசம்நெற் இல் ஏற்கனவே வெளியிட்ப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தேசம் திரை காணொளி ஒன்றில் பேசியிருந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா இந்த நிலை பற்றி கூறிய போது “இது ஒருவிதமான உளவியல் நோய். தன்னை ஒரு பெண் நிராகரிக்கும் போது வேறு வழியின்றி உண்மையை ஏற்க மறுத்து அவள் தொடர்பான தூஷணங்கள் பேசுவது, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற பதிவுகளை இடுதல், குறித்த பெண்ணின் நிர்வாண படங்களை பதிவிடுதல் எல்லாமே அந்த உளவியல் நோயின் ஒரு வெளிப்பாடே – அதுவும் ஒருவிதமான இயலாமையின் வெளிப்பாடு தான். பாலின சமத்துவம் தொடர்பான கல்வி அடிப்படையில் இருந்து வழங்கப்படுதல் இந்த நிலமைகளை எதிர்கொள்ள உதவும்” என அவர் மேலும் குறித்த நேர்காணலில் தெரிவித்தார்.

குறித்த பெண் சரியானவரோ? பிழையானவரோ? என்பது தேவையற்ற விவாதம். இங்கு தேவையான கேள்வி: இவர்கள் யார்..? யாரோ ஒரு பெண்ணை பொதுவெளியில் வைத்து நிர்வாணப்படுத்தவும் – அந்த பெண்ணுடைய தொலைபேசி இலக்கத்தை பகிரவும் – வீட்டு விலாசத்தை பகிரவும் – குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பேசவும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஆண் என்பதைத்தவிர எவ்வித மனிதத்துவ விழுமியங்களுமற்ற இவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் தீவிரமாகப் பரவிவரும் ஒரு புற்றுநோய். ஈழத் தமிழ் பெண்க்ளை அவர்கள் தாயகத்தில் வாழ்ந்தாலென்ன புலத்தில் வாழ்ந்தாலென்ன இவ்வாறான ஈழத்து பாலியல் வக்கிரம் கொண்ட சில ஆயிரம் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

கெடுதல் செய்பவனை காட்டிலும் அதனை ஆமோதித்து அமைதியாக இருப்பவனே ஆபத்தானவன் என்பார்கள். குறித்த முகநூல் கணக்கில் நட்பு பட்டியலில் உள்ள 400க்கும் அதிகமான நண்பர்கள் தான் மிக்க மோசமானவர்கள். அதிலும் சிலர் நைஸ், முகவரி என்ன..? ஃபோன் நம்பர் என்ன என விசாரிப்பதும் அதற்கு லைக்ஸ் கிடைப்பதெல்லாம் அத்தனை வக்கிரமான நிலைக்கு தமிழ்ச்சமூகம் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது. குறித்த முகநூல் கணக்கை பின்பற்றும் முகநூல் கணக்குகளில் முற்போகாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மற்றும் அம்மான் படையணி வடமாகாணம், வலி தெற்கு பிரதேசசபை, தோப்புக் காடு விளையாட்டு கழகம், நண்பர்கள் நற்பணி மன்றம், ஆணைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம், சுழிபுரம் கிழக்கு கண்ணகி அம்பாள் ஆலயம் ஆகிய முகநூல் கணக்குகள் நட்பு பட்டியலில் உள்ளன. என்ன அடிப்படையில் நண்பர்களாகினரோ தெரியாது . ஆனால் இந்த கணக்குகளில் இருந்து ஒருவர் கூட இந்த குறித்த பெண்ணுக்காக பேசத் தயாரில்லை.

யாரோ ஒரு பெண் தானே என் கடந்து விட முடியாது. ஏனெனில் இது தான் நாளை நமது வீட்டு பெண்களுக்கும் நடக்கும். யாரோ ஒரு ஆண் நினைத்தால் ஒரு பெண்ணை பொதுவெளியில் எத்தனை தரக்குறைவாகவும் பேசி விடலாம் என்ற தைரியத்தை குறித்த பதிவுக்கு லைக் போட்ட 400 வரையான முதெகெழும்பு அற்ற ஆண்களும் வழங்குகிறார்கள். இங்கு பெண் யார் என்பது பற்றிய விபரங்கள் தேவையற்றது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக நிர்வாணம் சார்ந்த வசையாடல்களால் விவரிப்பது என்பது உங்களுடைய பக்குவப்படாத மனநிலையை அது காட்டுவதுடன் யார் யாருக்கு எதிராக அதை செய்தாலும் தவறு தான்.

அண்மைய காலங்களில் இலங்கையில் மேற்குறித்த பெண்ணுக்கு நடந்தது போன்றுதான சமூக வலைத்தளங்களில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருவதையும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரையான முறைப்பாடுகள் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய சமூக வலைத்தள துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இதே வேளை அண்மையில் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்ட போது “சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவுகளை இடுவோருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். மேலும் FACEBOOK சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, நிர்வாண புகைப்படங்கள் பதிவேற்றப்படல், தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள் புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை ஸ்ரீலங்கா பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. http://www.telligp.police.lk என்ற இணைய முகவரியை அணுகி குறித்த பாதிப்பு தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

The World Press Photo of the Year – உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது !

2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர்.

 

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

 

இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலைப் பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம்.

ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் யுத்தம், மோதல் போன்ற பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அங்கீகரிப்பது அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் சுமார் 99 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தமது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முகமது சலேம், 39 வயதான பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர். புகைப்பட பத்திரிகையாளர். 2003 முதல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010இல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.

“காசாவின் நிலை என்ன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தங்கள் அன்பானவர்களின் நிலையை குறித்து அறிந்து கொள்ள மக்கள் அங்குமிங்கும் அல்லாடிய நேரம் அது. அப்போது இந்தப் பெண், குழந்தையின் உடலுடன் கலங்கி நின்றார். அதனை நான் கவனித்தேன். அந்த வேதனையை ஒளிப்படத்தின் வழியே உலகுக்கு கடத்த நினைத்தேன்” என இந்தப் படம் எடுத்ததற்கான காரணம் குறித்து சலேம் விளக்கியுள்ளார்.

விருது வென்ற குறித்த புகைப்படம் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் பத்திரிகையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்தி திட்ட நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – மேலும் பதற்றமடையும் நிலவரம் !

இஸ்ரேல் ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

 

அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தாக்குதலை மேற்கொள்வோம் என இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் அணுஉலைகளை தாக்கமாட்டோம் எனவும் இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது.என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதேவேளை; இஸ்ரேல் ஈரானில் தாக்குதலிற்கு தெரிவு செய்த இஸ்ஃபஹான் நகரம் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என முன்னாள் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ஃபஹான்ம் நகரம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் இஸ்ரேல் அந்த நகரத்தை தெரிவு செய்தது என்பது குறித்து அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் மார்க் கிமிட் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 

இஷ்பஹான் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என குறிப்பிட்டுள்ள அவர் பயிற்சி ஆராயச்சி மற்றும் ஈரானின் அணுசக்திதிறமையை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இந்த நகரமே பிரதானமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கவர்ச்சிச் ‘செல்லம்’ சுஜியின் அரசியல் அதிரடி! வீறுகொண்ட லாச்சப்பல் ‘புளி’ முரளி!!!

பாரிஸில் முப்பதினாயிரம் வரையான பெரும்பாலும் ஆண்களைத் தன் ரிக்ரொக் வலைப்பக்கத்தில் வீழ்த்தி தன்னைப் பின்தொடரச் செய்து, ஈழத்தமிழர் மத்தியில் அரசியல் அதிர்வொன்றை ஏற்படுத்தி உள்ளார் சுஜி கூல் என்ற பெயரில் உலாவரும் பெண். மாலை மயக்கம் தரும் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் இட்டு ரிக்ரொக் பதிவிடும் சுஜி இடைக்கிடை அரசியல் பதிவுகளும் இட்டுவருகின்றார். இவருடைய பதிவுகளில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைப் பற்றியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பற்றியும் மிகத் தரக்குறைவாக பதிவுகளை இட்டுவருகின்றார். அவ்வாறு கடைசியாக அவரால் இடப்பட்ட பதிவில் சுஜி தமிழ் தூஷண வார்த்தைகளை தாராளமாகவே வீசி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனை வசைபாடியுள்ளார்.

இதனைக் கண்டு வீறுகொண்டெழுந்த ரிக்ரொக் ‘புளி’கள், இவர்களும் கவர்ச்சிச் செல்லத்தை பின்தொடரும் முப்பதினாயிரத்தில் அடங்குவர். இவ்வாறு வீறுகொண்டெழுந்த கச்சா சிவம் என்ற கனடாப் ‘புளி’, இவளுக்கு (சுஜி க்கு) ஏன் இன்னும் சம்பவம் நிகழ்த்தப்படவில்லை என்ற தொணியில் பொங்கியெழுந்து ரிக்ரொக் பதிவொன்றை வெளிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்து உசுப்பேறிய கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு கடைக்காரரான, லாச்சப்பல் அக்கா கடை உரிமையாளர் முரளி என்று அறியப்பட்ட பாலசிங்கம் பாலமுரளி செல்லத் தங்கச்சி சுஜீயை பத்து வரையான ஆண்கள் சகிதம் சேர்ந்து தாக்கியுள்ளார். சுஜியின் கையை உரிமையோடு பிடித்து கன்னத்தில் சில தடவைகள் அறைந்தததுடன் அவருடைய சட்டையையும் இழுத்து சேட்டைகள் செய்துள்ளனர். அத்தோடு சுஜியின் மீது முட்டைகளையும் வீசி அடித்துள்ளனர். சுஜி தன்னுடைய ரிக்ரொக்கில் என்னென்ன வசை பாடினாரோ அவ்வளவு வசையையும் பாலசிங்கம் பாலமுரளியும் அவருடன் வந்த கும்பலும் படியது. சுஜி தனக்கு மாதவிடாய் வந்துவிட்டதாக தெரிவித்த போதும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது தன்னை அணுகியவர்களை அண்ணா, அண்ணா என்றழைத்த சுஜி, ஒரு கட்டத்திலும் முரளி கும்பலின் வன்முறைக்குப் பணியவில்லை. “நீங்கள் செய்வது பிழை என்பதை உணருவீர்கள்” என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வந்தார். பத்து வரையான வெறி கொண்ட சருகு புலிக் கும்பலிடம் மாட்டிய இளம் பெண்ணாக அந்த விடியோவில் சுஜி காணப்பட்டார். ராஜபக்சவை தீவிரமாக ஆதரிக்கும் சுஜி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எதிராகவும் அவ்வமைப்புக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தூஷண வசை பாடியுள்ளார் என்றால் அதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. சொல்லப் போனால் அது சிறுமைப்படுத்திச் சொல்வதாகத் தான் அமையும். ரிக்ரொக்கில் காட்டும் ஆக்ரோஷம் பத்து வீறுகொண்ட ரிக்ரொக் புலிப் போராளிகளைக் கண்டதும் அடங்கிப் போனது. முரளி கும்பலும் ஆனையிறவு முகாமை தகர்த்த கணக்கில் புலிப்பாடலோடு அப்பெண்ணைத் தாக்குவதை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஈழத்தமிழ் சமூக வலைத்தள போராளிகள் பலர் உணர்ச்சி பொங்க ‘இவளுக்கு இது தேவைதான்’ என்ற கணக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த தாயகத்தைச் சேர்ந்த மனித உரிமைவாதியும் பெண்ணிய வாதியுமான நளினி ரட்ணராஜா, சுஜி வெளியிட்டது அரசியல்பதிவேயல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்கின்றார். “சுஜி ஒரு அமைப்பு கிடையாது, அறியப்பட்ட ஒரு புள்ளி கிடையாது. சட்டத்தை உங்கள் கையில் எடுக்கின்ற அதிகாரத்தை யார் தந்தது? வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகள், தாயார் போன்றவர்களையும் இந்த ஆண்கள் இவ்வாறு தானே நடத்துகின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜா.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் இவ்வாறான விமர்சனங்கள் அதுவும் பச்சைத் தூஷணத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் பதிவு செய்யப்படுகின்றது. குறிப்பாக ஹிளப் ஹவுஸ் என்கின்ற மேடையில் இவ்வாறான பச்சைத் தூசணப் பேச்சுப் போட்டிகள் நாளாந்தம் மாலையில் அரங்கேறி அதிகாலை வரை நடைபெறும். அதில் பாலியல் வக்கிரம் மடை திறந்த வெள்ளம் போல் பாயும். அரசியலில் தங்களது பெயரும் அறியப்பட வேண்டும் என விரும்பும் முகவரியற்ற பலர் இத்தளங்களைப் பயன்படுத்தி வருவது ஒன்றும் இரகசியமல்ல. இவ்வாறு இயக்கங்களின் மோதல்களால் சமூக வலைத்தளங்கள் நாற்றமெடுப்பது ஒன்றும் புதிதல்ல. கோட்டும் சூட்டும் போட்டு நுனி நாக்கில் அந்நிய மொழி பேசி நடித்தாலும் கீபோட்டும் மைக்கும் கிடைத்தால் இந்தக் கனவான்களின் பேச்சு கூவத்தையும் மிஞ்சும் நாத்தம் அடிக்கும்.

இவ்வாறான தூஷண மாலைகளைத் தாங்கிய பலர் இன்றும் எம்முன் உயிருடன் உள்ளனர். இந்த முரளி போன்ற ‘புளி’கள் ஆய்வாளர் வி சிவலிங்கம், ரிபிசி ராம்ராஜ், பெண்ணியவாதி ராஜேஸ் பாலா என ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மாற்றுக் கருத்தாளர்களை பச்சைத் தூஷணத்தில் வசைபாடி அவர்களது குடும்பங்களையும் குடும்பப் பெண்களையும் வலைத்தளங்களில் இழுத்து வம்பு செய்து வந்தனர். மனித உரிமைவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பாரிஸில் வாழும் எல்லாளன் என்ற ‘புளி’யும் இவ்வாறான தூஷண மன்னன். மகனுக்கு பிரபாகரன் என்று தான் பெயரும் வைத்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தியதில் இந்தப் புலம்பெயர்ந்த ‘புளி’க்கும்பலுக்கு முக்கிய பங்குண்டு.

இப்போது எழுந்துள்ள அலை ஒரு பெண் எப்படித் தூஷணத்தில் தங்களைக் கேட்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. தங்களுக்கு நிகராக தூஷணத்தில் வசைபாடுகிறாள் என்ற ஆதங்கம் அவர்களுடைய மொழியில் தெரிகின்றது. ஆண்களுக்கு மட்டும் தான் தூஷணம் சொந்தம் அல்ல என்பதை தலைவரை வைத்து சுஜி கட்டுடைத்து விட்டாள் என்ற ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே சுஜி தாக்கப்பட்டுள்ளாள். சுஜி ஒரு உதிரிப் பெண். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகின்றது. தனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறுகின்றாள். ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை. பிரான்ஸில் வாழும் இப்பெண் வே பிரபாகரன் பற்றியும் அவ்வமைப்பு பற்றியும் வெளியிட்டுள்ள பதிவுகள் சாதாரண மனநிலையுடைய ஒருவர் செய்யக்கூடிய பதிவல்ல. அப்படியிருந்தும் சுஜியின் வலையில் வீழ்ந்து முப்பதினாயிரம் வரையானோர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். ஏன்?

இவர்கள் பற்றி நகைச்சுவையாகத் தேசம்நெற்க்குத் தெரிவித்த முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர், “கச்சா சிவமும் முரளியும் மட்டும் கட்டையரோடு நின்றிருந்தால், தமிழீழம் எப்பவோ கிடைத்திருக்கும்” என்றார். மற்றுமொரு போராளி இது பற்றிக் குறிப்பிடுகையில் அப்துல்லா கஸ்டப்பட்டு மீட்டுக்கொண்டு வந்த தலைவர் இவங்கள் செய்யிறதப் பார்த்து சயனைட் கடித்துவிடப்போகிறாராம்” என்றார்.

ஒரு உதிரிப் பெண்ணான, எதிலிப் பெண்ணான சுஜியைத் தாக்க, பாரிஸ் லாச்சப்பல் தமிழர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் பாலசிங்கம் பாலமுரளி பொங்க என்ன காரணம். இவர்கள் போன்ற நூற்றுக்கணக்காணோர் இப்பெண்ணுடன் தொடர்பிலும் இருந்துள்ளனர். ஏன்? அவரிடம் அப்படியென்ன அரசியல் கலந்துரையாடல்களை இவர்கள் செய்துள்ளனர்? இவர்களுடைய உடல்மொழியும் வாய்மொழியும் இவர்கள் சமூகத்தின் முன் பொதுத் தளங்களுக்கே வரத்தகுதியற்றவர்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக யாழ் பல்கலைக்கழகமாக இருந்தாலென்ன லாச்சப்பல் வர்த்தக சங்கமாக இருந்தாலென்ன இவ்வாறான பொறுப்பற்ற தகுதியற்ற நபர்கள் தான் பொறுப்பான பதவிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது அயோக்கியத்தனங்களை மறைக்க சுஜி போன்ற எதிலிகளிடம் வீரத்தைக் காட்டி தங்கள் தமிழ் தேசியப்பற்றை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது தமிழ் தேசியக் கூடாரத்திற்குள் தங்கிருக்கின்ற பெரும்பாலானவர்கள் அயோக்கியர்களாக இருப்பது தமிழ் தேசியவாதத்தின் மிகப் பெரிய பலவீனம் என்றால் மிகையல்ல.

லாச்சப்பலில் உள்ள அத்தனை கடைகளில் தமிழர் வர்த்தக சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பண்பாளன் இல்லாமல் போனது லாச்சப்பலில் கடை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அவமானம். பாலசிங்கம் பாலமுரளி தூஷண பூஷணம் செய்வது இதுவொன்றும் முதற்தடவையல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் லாச்சப்பல் உணவகமொன்றில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஜெனாவை தாக்க முயற்சித்து இருந்தார். மேலும் பாரிஸில் இடம்பெற்ற தமிழர் எழுச்சி மாநாட்டிலும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி மாவை சேனாதிராஜாவைத் தாக்க முயன்றார்.

பணபலத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் தான் என்ற கோஷத்தையும் வைத்துக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உள்ள ‘புளி’ கும்பல் செய்யும் அலப்பறை தாங்கமுடியாத அளவுக்கு கேவலமாகிக் கொண்டுள்ளது. இத்தோடு லாச்சப்பல் வர்த்தகர்களுக்கு பெரும்பாலும் இலங்கைத் தூதரகத்தோடும் நல்ல உறவு நிலையுள்ளது. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பெரும்தொகையான நிதிவசூலிப்பும் நடைபெறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வில் மாற்றம் இல்லை என்ற வீடியோப் பதிவுகளே தினமும் வெளிவருகின்றது. எல்லாம் இவர்களுடைய வங்கிக் கணக்கிற்குத் தான் வெளிச்சம். தம்மன்னா, சுஜி … இனியொரு ரஜி இவர்களுக்கு கிடைக்காமலா போகும்.

ஈழத் தமிழ் சமூகம் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் அரசியல் ரீதியாக அறிவற்றவர்களாக ஒடுக்குமுறையாளர்களுக்கும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்திருப்பவர்களுக்கும் பின்னால் ஓடுபவர்களாகவும் அவர்களுக்கு சேவகம் செய்பவர்களாகவுமே உள்ளனர். ஒடுக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைக் கருத்துக்களுக்கும் எதிராகவும் இவர்கள் மூச்சுவிடுவதில்லை. சுஜி போன்ற உதிரிகளும், எதிலிகளும் அகப்பட்டால் இவர்களுக்கு ‘ஜெயசுக்குரு’தான்.

சமூக வலைத்தளங்களை இயக்கும் பெரும் கோப்ரேட் நிறுவனங்கள் அதனை இயக்குவதற்குக் காரணம் மக்களை வளப்படுத்தவோ அரசியல் தெளிவு பெறச்செய்யவோ அல்ல. இந்த சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி கோப்பிரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை உங்களுக்கு மிக அவசியமானதாக்கி அதனை விற்பனை செய்வதற்கே. அதற்கு சுஜி மற்றும் முரளி கும்பலின் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகள் உணர்வுகளைத் தூண்டி பலரை இதனைப் பார்க்க வைக்கும். அதனால் சமூக வலைத்தளங்களில் இவ்வாறான குப்பை கூளங்கள் தினமும் குவியும். சமூகவலைத்தளங்களை நடத்தும் கோப்பிரேட் நிறுவனங்கள் இந்தத் தரம்தாழ்ந்த பதிவுகளால் இன்னும் இன்னும் மில்லியன் கணக்கில் லாபத்தையீட்டுவார்கள்.

மாறாக இவ்வாறான பதிவு வெளியிடுபவர்களின் நட்பை முறியுங்கள். அவர்களைப் பின்தொடராதீர்கள். மக்களுக்கு அரசியல் தெளிவைக் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வையுங்கள். அதைவிட்டு தமிழ் சமூகத்தை, நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடாதீர்கள்.

உன்னுடைய கருத்தோடு எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால் உனக்கு அக்கருத்தைச் சொல்வதற்கான உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன். (பிரென்ஞ் அறிஞர் வோல்ரயர்)

சுஜியின் அரசியல் பதிவுகள் கருத்துக்கள் அல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்பதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜா தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் நாளை வெளியிடப்படும்.

“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” – சேனன்

‘இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து சிலர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு குழு – இருப்பினும் ‘சக்தி வாய்ந்த குழு’. ஏனெனில் இவர்களில் பலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் – கொடூரங்கள் செய்த அதிகார சக்திகளின் நெருங்கிய நட்புகள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் செய்வதில்லை. தனது சொந்த தேவைகளுக்காக இந்தச் சந்திப்பை பாவித்துக் கொள்ளும் ஷோபாசக்தி தவிர்ந்து யாரும் எதுவும் இலக்கிய -தத்துவ பங்களிப்பு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அந்த சாதனைகளை கூறுங்கள். இவர்கள் மத்தியல் தத்துவார்த்த தெளிவு உள்ளவர் என ஒருவரைக்கூட குறிப்பிட முடியாது. பல ஆண்டுகளாக வெற்று அலட்டல்களை மட்டுமே இவர்கள் செய்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படும் பலருக்கும் உண்மை விபரங்கள் சொல்லப்படுவதில்லை. அரசியற் பின்னணி தெரியாது கலந்து கொண்டு சிலர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

நிதானமான உரையாடல் – அறிவு பூர்வமான விவாதம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லை. அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் யாரும் தந்துவிட முடியாது. வன்முறை மிரட்டல்கள் மற்றும் அவதூறுகள் மட்டுமே இவர்களின் வரலாறாக மிஞ்சி நிற்கிறது.

 

வன்முறை எனச் சொன்னதும் – வெறும் வார்த்தையில் வன்முறை என நினைக்க வேண்டாம். இலங்கையில் நடந்த பல கொடூரங்களை நியாயப் படுத்தல் – மற்றும் – கண்டும் காணாது விடல் – மறைத்தல் – போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் புதிய உச்சக் கட்டமாக இலங்கையில் நடந்த ஏப்ரல் படுகொலை பின்னணி வரலாற்றைத் திரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

 

பாலியல் வன்முறை முதற்கொண்டு பல்வேறு பாரிய குற்றச் சாட்டுகளை எதிர் கொண்டு வருபவர் பிள்ளையான் எனபப்டும் முன்னாள் போராளியும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன். இவற்றில் பல குற்றச் சாட்டுகளுக்கு ஏராளமான சாட்சிகள் ஆதாரங்கள் இன்று வெளிவந்துள்ளன. குறிப்பாக ஏப்ரல் படுகொலை சார்பாக இவரின் தொடர்பு பற்றி சர்வதேச ஊடகங்கள் ஸ்தாபனங்கள் உட்பட பலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றைத் திரிபு செய்யும் நடவடிக்கையின் பகுதியாகப் பிள்ளையானின் ‘பிரச்சாரக் குழு’ ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. இவரை நல்லவர் வல்லவர் அறிவின் சிகரம் என்றெல்லாம் புலம்பித் தள்ளும் குடுப்பம்தான் இலங்கியச் சந்திப்பை ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. கேட்டால் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என இவர்கள் சொல்லக் கூடும். அந்தப் பேச்சு ஒளித்து நின்று குத்தும் நடவடிக்கை. விமர்சனத்தோடு ஒன்றுபடும் களப்போறல்ல இலக்கிய சந்திப்பு. தவிர பிள்ளையான் மேலிருக்கும் விமர்சனம் என்பது தள்ளி வைத்து விட்டு போகக் கூடியதல்ல. அதை மறைத்து இலக்கிய அல்லது வேறுவகை ‘கூட்டுகள்’ போடுவது அரசியல் கேவலம்.

 

பிரச்ச்சார தளத்தை நேரடியாக கட்டும் வலிமை இவர்களிடம் கிடையாது. இலக்கிய சந்திப்பு என்ற போர்வையின் பின் இருந்து கொண்டு அரச ஆதரவு அரசியலை மறைமுகமாக செய்வது இந்த சந்திப்பு குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல. இலங்கை யுத்தம் முடித்தமைக்கு ராஜபக்சவுக்கு நன்றி சொன்னது. ஓடிய இரகுத்தம் ஆற முதல் இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் சென்று கொண்டாடியது. யுத்த மறுப்பு செய்ய மறுத்தது மட்டுமின்றி – யுத்த மறுப்பு செய்தோரை பாசிச ஆதரவாளர் என அவதூறு செய்தது. புலிகள் கொன்று குவிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு படுகொலையை நியாயப் படுத்தியது. பின்பு கொலைகளை தமிழ் மக்கள் மறந்துவிட வேண்டும் என பிரச்சாரம் செய்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சமீபத்து போராட்டங்கள் எதையுமே ஆதரிக்க மறுத்தது. என நாம் அடுக்கிக் கொண்டு போக முடியும்.

 

இவ்வளவு கேவலமான அரசியல் பின்னனி உள்ள இவர்கள் இலங்கை அரச ஆதரவு நிலைப்பாடு என நேரடியாக ஏன் சொல்வதில்லை? தம்மை முற்போக்கு நபர்கள் எனக் காட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் – மற்றும் -சிந்தனையாளர்/இலக்கியச் செயற்பாட்டாளர்/பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் மத்தியில் சில ஆதரவை பெறுவது – அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பை தக்க வைப்பது என்பதும் இவர்களில் பலரதும் நோக்கம். நேரடியாக தமது அரசியல் நிலைப்பாட்டை வாதிக்கும் மன பலம் – மன சுத்தி இவர்களில் யாருக்கும் கிடையாது. பொய்ப் பெயர்களின் பின் இருந்து இயங்குவது – தொலை பேசி மற்றும் தனியார் உரையாடல்களில் குசு குசுப்பது – எவ்வித ஆதாரமும் அற்ற அவதூறுகளைச் செய்வது என்ற வரலாறுதான் இவர்கள் பலரதும் வரலாறு.

 

சந்திரகாந்தன் பெயரில் இம்மாதம் வெளியான (மார்ச்) ‘ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ என்ற நூல் முற்று முழுதான பொய் பிரச்சார நூல். இதை விமர்சித்த அத்தாஸ் பிவரும் புள்ளியை சுட்டிக் காட்டி இருப்பது கவனத்துக்கு உரியது

 

‘…ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை …இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன…’ (“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று – தேசம் (thesamnet.co.uk))

இஸ்லாமுக்கு எதிரான – ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றிய உண்மை எதுவுமற்ற – தாக்குதல் செய்தவர்களை காப்பாற்றும் – இந்த நூலை போற்றிப் புகழ்பவர்கள் அதை என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதை ஊகிப்பது கடினமில்லை. இந்தத் தக்குதலளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் சந்திரகாந்தன் கையால் இந்தப் புத்தக பிரதியை பெற்றுக் கொள்ளும் தலைவிதிக்கு திணிக்கப் பட்டிருப்பது மேலும் கேவலம்.

 

ஒரு காலத்தில் – புலிகள் மற்றய இயக்கங்களைத் தாக்கிய காலத்தில் – மற்ற இயக்கம் சார் புலி எதிர்ப்பு சக்திகள் ஓன்று கூட்டும் இடமாக இருந்தது இலக்கியச் சந்திப்பு. அத்தருனத்தில் அடக்குமுறை சார் நபர்கள் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கக்கப்படக் கூடிய சூழல் இருந்தது. உயிர் பயக் கெடுதி இருத்த போதிலும் இதைப் பலர் துணிந்து செய்தனர் என்பது மிகையில்லை. இன்று அது தூரத்து வரலாறு. அதிகாரத்துடன் ஏதோ ஒருவகையில் இணைந்து தம்மையும் நிறுவனப் படுத்திக் கொண்ட ‘புள்ளிகள்’ பலருக்கும் அத்தகய ‘கடும் விமர்சன’ போக்கு இன்று தேவை இல்லை. பெண்ணியம் – தேசம் – சாதிய ஒடுக்குமுறை – ஆகிய அனைத்துமே இன்று இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பாவிக்கும் ஆயுதங்கள் என குறுகி நிற்கிறது. இஸ்லாமிய வெறுப்பு ஊறிக் கிடப்பது பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. இந்த லட்சணத்தில் இன உறவு பற்றி பேசப் போகிறார்களாம். அதைப் பல மேடைகளில் ராஜபக்ச பேசி நாம் கேட்டு இருக்கிறோம். நீங்களும் ஒப்பிக்கத் தேவை இல்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்தல் – அதனால் தாம் முற்போக்கு என காட்டுதல் ஆகிய ஒற்றை நோக்கை தாண்ட முடியாத இந்த குழுவுக்கு வெளியில்தான் இலக்கியம் இயங்கி வருகிறது.

 

“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று

சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ . சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த நூலின் பெயர் ‘ ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ ஆகும் . இந்த நூல் 23.03.2024 ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது . இவரது இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும் .

இவருக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு பின்னர் ஏன் ‘ சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும் ‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக்கூடும் . இவரது நூலும் அந்த மாதிரித்தான் உள்ளது . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் தலைப்பிட்டுவிட்டு இணையத்தள செய்திகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார் . இந்த நூலைப் பொறுத்தவரை தகவல் மூலமற்ற செய்திகளும் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக இந்த நூலின் பின்னால் அதிகார சக்திகளின் மறைகரங்கள் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது . ஏனெனில் , ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்ற போது சஹ்ரானின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தொலைபேசியில் வைத்திருந்தமைக்காக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது  செய்யப்பட்டு பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் அவ்வாறான எதுவித கெடுபிடிகளும் இல்லாமல் சர்வதேச ரீதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட சஹ்ரான் எனும் தீவிரவாதியின் புகைப்படத்தை முன் அட்டையில் இட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இங்குள்ள கேள்வி என்னவெனில் , பாதுகாப்புத் தரப்பினர் முஸ்லிம்களைக் கைது செய்தமை போன்று ஏன் பிள்ளையானைக் கைது செய்யவில்லை என்பதுடன் அவருக்கு எதிராக ஏன் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகும் . மேலும் சஹ்ரானின் இப் புகைப்படத்தை இவர் இஸ்லாமிய மதத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரான குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் . ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை . அவை மறைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக அச்சு மற்றும் வெளியீட்டுக் கட்டளைச் சட்டம் பிரிவு 02 இன் படி இது குற்றச் செயல் என்பதுடன் பிரிவு 03. இக் குற்றத்திற்கான தண்டனையும் குறிப்பிடுகின்றது .

இந்நூலானது குறித்த சட்டத்தை மீறி வெளியிடப்பட்டுள்ளது . குறிப்பாக இந்நூலானது மிகப்பெரிய பொய்யொன்றைப் பதிவு செய்துள்ளது . பக்கம் 30 இல் ” இரண்டாம் தடவை மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றியல் மரபணுப் பரிசோதனையில் ( DNA ) புலஸ்தினியின் மரணம் உறுதி செய்யப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரமாகவே அமைகின்றது . ஏனெனில் , புலஸ்தினி மகேந்திரன் ( சாரா ஜாஸ்மின் ) எனும் பெண் 26.04.2019 ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு வீட்டில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் 03 பரிசோதனைகள் நடத்தப்பட்டன . இதில் முதல் பரிசோதனையில் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . இரண்டாவது பரிசோதனையிலும் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . சுமார் 04 வருடங்களின் பின் 06.04.2023 ஆம் திகதி வெளியிடப்பட்ட மூன்றாவது பரிசோதனை அறிக்கையிலேயே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது . உண்மை இவ்வாறு இருக்க இவர் , இரண்டாவது பரிசோதனையில் புலஸ்தினி மகேந்திரனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது என்று எழுதியுள்ளமை ஏன் ? மேலும் பக்கம் 32 இல் ” நேரடியாக எதிர்வினையை சிங்கள பௌத்த மக்கள் மீது தொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பாரதூரமாக இருக்கும் . அதனால் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ஐ.எஸ் குழுவினரிடம் இல்லை . இதனால் பௌத்த விகாரைகள் தடுக்கப்பட்டு சிங்கள மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன ” என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகவல் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பொய்யாகும் . ஏனெனில் , கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்தில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இறந்தவர்கள் அனைவரும் தமிழ் கிறிஸ்தவர்கள் . அதேபோன்றுதான் நீர்கொழும்பு கட்டுவாப்பீட்டி தேவாலயமுமாகும் . இம் மூன்று தேவாலயங்களில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் மக்களாக உள்ளமையை மறைத்து சிங்கள் மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன என்ற கருத்தைக் குறிப்பிடுகின்றார் . ஆனால் தொலைக்காட்சிகளில் பேசும் பேசும் போது இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமிட்டு தமிழ் மக்களை அல்லது கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று பேசி வருகின்றார். ஆக இவரின் இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையதாக உள்ளது . இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவெனில் , ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வியாபார நிலையங்கள் மீதான எரிப்புக்களையும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையும் உயிரழிப்புக்களையும் செய்தவர்கள் யார் ? அவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்தவர்களா ? மேலும் சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் என்பரின் நேர்காணல் ஒன்று இந்த நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது . பக்கம் 48 இல் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட தீயை அணைக்க தீ அணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

* 45 நிமிசம் நெருப்பு பத்திக் கொண்டே இருந்துச்சு . தீயணைப்புப் படை வாரதுக்கு எப்படியும் 15 – 17 நிமிசம் போயிருச்சு . நான் அந்த சி.சி.டியில் கவனிச்சனான் . 17 நிமிசத்துக்குப் பிறகு தான் அவங்க வந்ததும் அவர்களுக்குத் தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியவில்லை. இதெல்லாம் இழுத்திட்டு போற நேரம் ஒரு 35 நிமிசம் ஆச்சுது . அப்ப எங்கட பிள்ளைகள் தான் அந்தக் குழாய்களையும் பூட்டிக் குடுக்கக்கூட உதவியிருக்காங்க ” எனக் குறிப்பிடுகின்றார் . இவரின் நேர்காணலில் இருந்து எழும் கேள்வி என்னவெனில் , சியோன் தேவாலயத்திற்குத் தீயணைக்க வந்தவர்களுக்கு தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியாமல் போனமை ஏன் என்பதாகும் . இவர்கள் உண்மையில் தீயணைப்புப் படையினரா அல்லது வேற்று நபர்களா ? மேலும் இவர் குறித்த நேர்காணலின் இறுதியில் பக்கம் 49 இல் ” முஸ்லிம்களுக்குத் தெரியும் , அவர்களுக்குத் தெரியாம இது நடக்கல்ல ” என்பதைத் தொடர்ந்து மூன்று தடவைகள் சொன்னதாகத் தொடர்ந்து மூன்று தடவைகள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன . இங்குள்ள கேள்வி என்னவெனில் , சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் குறிப்பிடும் முஸ்லிம்கள் யார் ? எல்லா முஸ்லிம்களும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை அறிந்திருந்தார்களா அல்லது குறித்த முஸ்லிம் நபர்கள் மாத்திரம் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா ? அவர் உறுதியாகக் குறிப்பிடும் அந்த முஸ்லிம் நபர்கள் யார் ? ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து அதனை மறைத்த குற்றத்தைப் புரிந்த முஸ்லிம் நபர்களுக்கு எதிராக ஏன் இவர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை அத்துடன் அல்லது கோரவில்லை ? மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்த முஸ்லிம் நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் மறைத்த குற்றத்திற்கு பிரதம ஊழியரான றொசான் மகேசனும் உள்ளாக்கப்படுவாரா ? றொசான் மகேசனின் கருத்தானது மிகவும் பாராதூரமான குற்றச்சாட்டாக உள்ளது . முஸ்லிம்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்று குறிப்பிடுவதானது கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை முஸ்லிம்கள் விரும்பியிருந்தார்கள் என்பதாக அரத்தம் கொள்ளப்படுவதுடன் முஸ்லிம்கள் ஈஸ்டர் படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை என்பதாக அமைகின்றது . இதன் மறுதலை முஸ்லிம்கள் . மாற்று மதத்தினர் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றவர்களாக உள்ளனர் . உண்மையில் மதிப்புக்குரிய றொசான் மகேசன் இக்கருத்தைக் கூறினாரா அல்லது இந்நூலின் ஆசிரியர் சந்திரகாந்தன்இக்கருத்தைப் பதிவு செய்துள்ளாரா ? நிச்சயமாக இக்கருத்தானது கத்தோலிக்க கிறிஸ்தவ முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லுறவினைச் சிதைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது . இவ்வாறான ஒரு நிலையை உருவாக்குவதற்காக இக்கருத்து திட்டமிட்டுப் பதியப்பட்டுள்ளதா என்ற பல கேள்விகள் உள்ளன .

மேலும் இந்நூலின் 121 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ” இந்தியாவில் உள்ள ஹெச்.ஜி. ரசூல் என்ற எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்றார் . இந்த வஹாபி குழுவினர் உயர்ந்தது எது ? புத்த சாசனமா ? அல்லது குரானா ? என இலங்கையில் பிரச்சாரம் செய்து புத்த பிக்குகளிடமும் பொதுபலசேனாவிடமும் சமய வெறியை ஊட்டுவதற்குக் காரணமாக அமைந்த அண்மைக்கால வரலாறு நாம் அறிந்ததே ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் ஒரு சில உண்மைகள் இருந்தாலும் நூறு வீத உண்மையாகக் கொள்ள முடியாது . இங்கு பாரிய இருட்டடிப்பொன்று செய்யப்பட்டுள்ளது . பௌத்த பிக்குகளுக்கும் பொதுபலசேனா அமைப்பிற்கும் மத வெறி ஏற்படக் காரணம் வஹாபிசக் குழுவினர் என்ற கருத்தானது பொதுபலசேனா இயக்கம் இயல்பிலேயே சாந்தமான அமைதி போதிக்கும் அமைப்பு என்பதும் அதற்கு மதவெறி வருவதற்குக் காரணம் வஹாபிசக் குழுவினர் தான் என்பதாகவும் உள்ளது . எனினும் வரலாற்றை எடுத்து நோக்கினால் , 30 வருட யுத்த காலத்தில் பொதுபலசேனாவைப் போன்று பல பௌத்த அமைப்புக்கள் உருவாகியிருந்தன . அவை தமிழர் தொடர்பில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாடு தமிழர்களிடம் உண்டு . குறிப்பாக தனிச் சிங்கள் மொழிச் சட்டம் போன்ற மொழி வெறி பிடித்தமைக்கும் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது மதவெறி பிடித்தமைக்கும் காரணம் இந்த வஹாபிச குழுவினர் அல்ல . 1900 ஆண்டளவில் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராகவும் பௌத்த தேசிவாத அமைப்புக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன . அவ்வாறான தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ மிசநெறிகளின் அடிப்படைவாதமே காரணம் என்று குற்றம் சுமத்த முடியுமா ? ஒருபோதும் இல்லை . அது தவறான வாதமாகும் . – இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது . ஆரம்பத்தில் அதன் எதிரியாக கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் . 1915 சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது முஸ்லிம்களின் வர்த்தகம் மறைமுகக் காரணியாக இருந்தது . பின்னர் 1956 களில் சிங்கள மொழி பௌத்த மத மறுலர்ச்சியாக மாறியது . பின்னர் 1970 களில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் போது அது பௌத்த இனவாதமாக வடிவம் கொண்டது . குறிப்பாக 2009 யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதமாக அது வடிவம் கொண்டுள்ளது . பொதுபலசேனா போன்ற பௌத்த இயக்கங்களின் உருவாக்கம் அதன் ஸ்தீரம் என்பது பூகோள மற்றும் தேசிய அரசியல் சக்திகளின் மறைகரம் என சர்வதேச ரீதியாக அறியப்பட்ட கலாநிதிகள் பேராசிரியர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை வெளியிட்டுள்ள நிலையில் வராற்றை இருட்டடிப்புச் செய்து மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போடும் இதுபோன்ற பல கதைகள் இந்நூலில் அதிகம் உள்ளன .

எனினும் இந்நூலில் பக்கம் 121 – 122 இல் மிக முக்கிய விடயம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் சந்திரகாந்தன் . சிங்கள மக்களை மையப்படுத்தி ஏன் இந்த தஃவா தேவைப்பட்டது ? இந்த தஃவா அமைப்பை முன்னெடுத்தவர்கள் தமிழக தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் . தமிழ் நாட்டில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லிவிட்டு அவர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்களா ? இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் . பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணுகுமுறை என்ன விபரீதத்தை தரப்போகின்றது என்ற விமர்சனங்களை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்கின்றார்.

 

இவ்விடயம் மிகவும் முக்கியத்துவத்துடன் முஸ்லிம்களால்  அணுகப்பட வேண்டியதாகும் . தீவிரப் போக்குள்ள தவ்ஹீத் நபர்கள் தொடர்பில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டிய அபாயக் கட்டத்தில் உள்ளது . குறிப்பாக இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹித் அமைப்புக்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பு இருந்ததா என்பது தொடர்பில் ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்த பாராளுமன்ற விசேட குழு பல இடங்களில் கேள்வி எழுப்பியுள்ளது .

இலங்கையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளான தவ்ஹீத் இயக்கங்களின் மூலவேர் இந்தியா குறிப்பாக தமிழ் நாட்டில் செயற்பட்டுவரும் சில தவ்ஹீத் இயக்கங்களாகும் . இங்குள்ள முக்கிய கேள்வி என்னவெனில் , இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹீத் இயக்கங்களுக்கும் படையினருக்கும் தொடர்பிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் நாட்டுத் தவ்ஹீத் இயக்கங்கள் மீதும் எழுத்துள்ளன . மேலும் குறித்த தவ்ஹீத் இயக்கங்களால் இந்தியாவிலும் இலங்கையிலும் மத நல்லிணக்கம் உருவானதை விடவும் இனக் குரோதமும் மத முரண்பாடுகளுமே அதிகம் வளர்ந்துள்ளன . ஆக இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளின் பின்னணியில் ஏதாவது மறை கரங்கள் உள்ளனவா என்ற கேள்வி உள்ளதுடன் இவர்கள் மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் முரண்பாடான விடயங்களையே தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகின்றமை ஏன் ? மேலும் இந்நூலின் பக்கம் 125 இல் தப்லீக் ஜமாஅத் எனும் தலைப்பு இடப்பட்டு அது தொடர்பில் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன . பக்கம் 126 இல் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு ” சாதாரண முஸ்லிம்களை மதவாதிகளாக மாற்றுவதில் பெரும்பங்கை இவர்களே வகிக்கின்றனர் . உயிரைக் கொடுப்பவர்களுக்கு சுவர்க்கத்தில் பெரிய அந்தஸ்து உள்ளது . அப்படியாக உயிரைக் கொடுத்து ஷஹீத் ஆகும் போது நேரடியாக மரணித்தவுடன் சுவர்க்கம் கிடைக்கும் . அப்படியானவர்களுக்கு மரணத்தின் பின்னர் எவ்வித விசாரணைகளும் கிடையாது . அவர்களுக்கு சுவரக்கத்தில் வாழ்வதற்கு 72 கன்னிகள் கிடைப்பார்கள் என்பதாக கற்பிப்பதன் மூலமாக அல்லாஹ்வின் பாதையில் செல்வது என்பதன் முழு அர்த்தங்களையும் புரிந்து கொள்வர் என இந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பக்தி மயமானவர்களாக மாறுகின்ற இளைஞர்கள் ‘ பீஸபீலில்லாஹ் ‘ என்பதன் முழு அர்த்தமான ஜிஹாத் மற்றும் ஷஹித் போன்றவற்றை நோக்கி செல்லக் கூடிய நிலமைக்கு இட்டுச் செல்லப்படுவார்கள் . இந்த தப்லீக் ஜமாஅத்தினர் ஒருபோதும் ஜிஹாத்துக்குச் செல்லுங்கள் . இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குங்கள் என்கின்ற வஹாபிச பிரச்சாரங்களை நேரடியாக மேற்கொள்வதில்லை . சஹ்ரானின் தந்தையார் முகம்மது ஹாசிம் , தப்லீக் பணிகளில் இணைந்து பங்காற்றியவர் என்பது கவனம் கொள்ளத்தக்கது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பிலும் நபர்கள் தொடர்பிலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஈடான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இந்த நூல் , பக்கம் 146 இல் அப்துல் ரவூப் மௌலவி என்பவர் தொடர்பில் புகழ்மாலை சூடியுள்ளது . ” அப்துர் ரவூப் மௌலவி அவர்கள் தனது வசிப்பிடமான ஐந்தாம் குறிச்சி , ஆதம்போடி ஹாஜியார் ஒழுங்கையிலிருந்து முஅத்தினார் வீதியூடாக தனது தந்தையின் பத்ரிய்யாப் பள்ளிக்குச் செல்லும் காட்சி ஒரு தனியழகாகும் . இந்திய அத்தரின் நறுமணம் மௌலவி அவர்கள் வருவதற்கு முன்பாகவே அவ்வீதிகளில் பரவத் தொடங்கிவிடும் . தென்றல் தவழ்ந்து வரும் அந்த இனிய மாலைப் பொழுதுகளில் தூரத்தே வருவோரையும் சுண்டி இழுக்கும் வாசணை அப்துல் ரவூப் மௌலவி வருகின்றார் என்ற செய்தியைச் சொல்லிவிடும் ” என்று புகழ்ந்துள்ளது . இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் , சந்திரகாந்தனின் இந்த நிலைப்பாட்டையே இந்தியத் தூதரும் பொதுபலசேனாவும் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது . இந்தியத் தூதர் சிறிகோபால் பாக்லே 02.10.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருடன் பிரத்தியேக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார் . இது இவரது கிழக்கு மாகாண விஜயத்தின் ஓர் அங்கமாக இருந்தது . அதேபோன்று 21.01.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருக்கும் கலபொட அத்த ஞானசார தேரருக்கும் இடையிலான சந்திப்பு இராஜகிரியவில் இடம்பெற்றது . கலபொட அத்த ஞானசார தேரர் ஏனைய எல்லா இஸ்லாமிய இயக்கங்களை எதிர்ப்பதுடன் சூபிக்கொள்கை ஆதரிக்கின்றார் . அதேபோன்றே சந்திரகாந்தனும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் மீது இந்நூலில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளடன் அப்துல் ரவுப் மௌலவியை மாத்திரம் ஆதரிக்கின்றமையில் ஏதாவது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உண்டா ? மேலும் முக்கியமாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்நூலின் ஆசிரியரான சந்திரகாந்தன் மீது அவரது பிரத்தியேகச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்து வந்த ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் . இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணம் 05.09.2023 ஆம் திகதி சனல் 04 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டது . எனினும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்காமல் சந்திரகாந்தன் நழுவிச் சென்றுள்ளார் . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் 329 பக்கங்களில் நூலை எழுதிய சந்திரகாந்தன் , தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க ஆகக் குறைந்தது ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்காமல் விட்டுள்ளமை மிகப் பெரிய அபத்தமாகும் . பக்கம் 324 இல் முடிவுரை எனக் குறிப்பட்டதுடன் அதில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” குறித்த நூல் அச்சுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் குறித்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய புதிய புரளி கலந்த செய்தியொன்று வெளிவந்தது . அதாவது சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய என்னையும் குறித்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அப்புரளியானது சர்வதேச ஊடகமான லண்டனைத் தளமாகக் கொண்டிருக்கும் சனல் 04 தொலைக்காட்சியில் 05.09.2023 அன்று ஒளிபரப்பாகியுள்ளது ” என தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வெறும் 15 வரிகளில் எழுதியுள்ளமை இந்நூலை வாங்கிய அனைவரையும் ஏமாற்றியதாகவே அமையக் கூடும் .

இந்நூலின் இறுதியாக அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” இந்நூலினை ஊன்றி படிக்கின்ற போது சனல் 4 ஊடாக என்மேல் பரப்பப்பட்டுள்ள என்மீதான புரளிகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை வாசகர்களாகிய ஒவ்வொருவரும் நன்கே புரித்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன் . அதையும் தாண்டிய ஏதாவது சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்தால் சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தமது தாக்குதலுக்கு தயாரான போது ஒருமித்து நின்று சத்தியப்பிரமாணம் செய்த காணொளி அதனைத் தீரத்து வைக்கும் என்று நம்புகிறேன் ” என நூலை முடித்துள்ளார் . இந்நூல் தொடர்பில் குறிப்பிட்டுச் சொன்னால் , இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல் விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன . அச் செய்திகள் தொடர்பில் தகவல் மூலங்களும் இடப்படவில்லை . இந்நூலை வாசிப்பதற்கு முன்பு இருந்த ஈர்ப்பும் அவதானிப்பும் வாசித்து முடித்த பின் அப்படியே இல்லாமற் போய்விட்டது . உண்மையைச் சொல்லப்போனால் இந்த நூலை வாசித்து முடித்த போது மரத்தில் மாடு கட்டிய நகைச்சுவை தான் என் ஞாபகத்திற்கு வந்தது . உங்களுக்கும் மரத்தில் மாடு கட்டிய நகைச் சுவை தெரிந்தால் சிரித்துவிட்டுச் செல்லுங்கள் . தெரியாவிட்டால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள் .