கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்

fily-ap.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு மட்டக்களப்பு சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஏ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துறை நீலாவணை தொடக்கம் வெருகல் வரை வாகன பவனி மூலம் வன்னி மக்களுக்காக பொருட்களை சேகரிக்கும் பணியினை எதிர்வரும் 16 ஆம், 17 ஆம், 18 ஆம் திகதிகளில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சென்னையில் நாளை வாக்குப் பதிவு – வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆரம்பம்

india-elc.jpgசென்னையில் வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி ஆரம்பமானது.

மொத்தம் 52,175 வாக்குச் சாவடிகளுக்குப் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை ஒரு இனக் குழுவுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல – அமைச்சர் டளஸ்

dalas.jpgஇந்த நாடு ஒரு இனக்குழுவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளல்ல. அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். தேசிய ரயில்வே நூதனசாலை நேற்று (11) மருதானை ஒல்கொட் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

அனைவரையும் சமமாக மதிக்கும் இலங்கை நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனைய மதத்தவரை ஏற்று மதிக்கக் கூடிய நிலையை உருவாக்க முயன்று வருகிறோம். இலங்கையிலுள்ள அப்பாவி பொதுமகன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து பேசுவதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது.

ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக எமக்கு கற்பிக்கவோ ஆலோசனை வழங்கவோ எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. உலகில் எங்காவது ஒரு நாட்டில் தினமும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான பொதுமக்கள் இறந்து வருகின்றனர்.

ஆனால், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். இந்த செயற்பாட்டை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருட்டுத்தனமாக தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் அவதானித்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிந்தவூரிலிருந்து உணவுப் பொருட்கள்

islam.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென நிந்தவூர் பிரதேச செயலகமும், ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் இணைந்து இளைஞர்களின் உதவியோடு நிந்தவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மனிதாபிமான முறையில் சேகரிக்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பலதரப்பட்ட உலருணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா தெரிவித்தார்.

தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிய பிரச்சினைகள் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது – அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவிப்பு

Minister Tissa Vitharanaசர்வ கட்சி பிரநிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  எனவே, கூடிய விரைவில் தீர்வு யோசனையை தயாரித்து முடித்து விட முடியுமென நம்பிக்கை வெளியிட்ட பேராசிரியர் விதாரண, எனினும் அதற்கு காலவரையறையொன்றை கூற முடியாதென்றும் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வு யோசனையொன்றை தயாரித்து பரிந்துரை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்திருந்தார். இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து ஏற்கனவே பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது அக் குழு நூறாவது சந்திப்பையும் தாண்டி கூட்டங்களை நடத்தி வருகிறது.

தீர்வுயோசனையை தயாரிப்பதில் ஏற்கனவே 90 சதவீதமான விடயங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டபோதிலும் 10 சதவீதமான விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லையென கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் தீர்வு யோசனை தயாரிப்பு பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது;

பிரச்சினைக்குரியதாக இருந்த அனைத்து விடயங்களிலும் தற்போது பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இதற்கமைய ஒவ்வொரு விடயங்களாக கலந்துபேசி தீர்வு யோசனையை தயாரிக்கும் பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, நீண்ட காலம் செல்வதற்குள் தீர்வு யோசனையை தயாரித்து முடித்துவிட முடியுமென நம்புகிறேன்.

எமது இந்த யோசனை தயாரிக்கப்பட்டதும் முதலில் (பிரதான எதிர்க்கட்சியான) ஐ.தே.க.விடம் அதை முன்வைத்து கலந்துபேசிய பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடனும் இந்த தீர்வு யோசனை குறித்து கலந்துபேச எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்குறித்த கலந்தாலோசனைகளின்போது ஏதேனும் திருத்தங்கள், புதிய யோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அவை குறித்தும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்தாராயப்பட்டு அனைவரது பொது இணக்கப்பாட்டையும் எட்டக்கூடிய வகையில் ஏற்புடைய திருத்தங்கள் உள்வாங்கப்படும்.

இறுதியான தீர்வுயோசனை அறிக்கை குறித்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

இலங்கையில் ரத்தக்களறி ஏற்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் கவலை

20090424063601srilanka4.jpgஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பாருக்கும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் போர் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடப்பதை உலகம் கவனித்து வருவதாகவும், இரு தரப்பாரும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அங்கு ரத்தக்களறி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கார்டன் வைஸ் பீபீஸி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் இறுதியில் இடம் பெற்ற தாக்குதல்களும், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் ஒரு முறை இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மெனிக்பாமில் தயார் நிலையில் இரு தீயணைப்பு படை வாகனங்கள்

international-firefighters-day.jpgசெட்டி குளம் மெனிக்பாம் பகுதியில் இரண்டு தீயணைப்புப் படை வாகனங்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இங்கு தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலேயே தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்பகுதியிலிருந்து இரு தீயணைக்கும் படைப் பிரிவும், பாவனைக்குரிய அம்புலன்ஸ் வண்டிகளும் பணியாளர்களும் 24 மணி நேரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை தீர்மானம் என்ன கேலிக்கூத்தா? – குலன்

Pirabakaran_V_2008EelamAmir_Mangayatkarasi_._._._._._

….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவாழ் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

: தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தமிழீழப் பிரகடனம் 14 மே 1976

_._._._._._

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி எழுதவந்த விடயத்திற்கு முன் வரலாறு பற்றி ஒரு முற்குறிப்புக் கொடுக்கவேண்டிய அவசியம் இங்குள்ளது. 1976க்கு முன்னிருந்த முக்கிய பல தமிழ் அரசியற் கட்சிகள் தமிழ் மக்களின் ஏகோபித்த நலன்கருதி தம்வேற்றுமைகளை மறந்து மக்களுக்காக ஒன்றாக இணைந்து உருவாக்கப்பட்டது தான் தமிழர் விடுதலைக் கூட்டணி. இது எமது சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
 
இக்கூட்டணியின் இளைஞர் அமைப்புத்தான் தமிழ் இளைஞர்பேரவை. இன்று தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவே தலைமை வகித்தார். இளைஞர்பேரவை என்பது கூட்டணியின் அரசியல் கருத்துக்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர் அமைப்பாகவே இருந்தது. மாவை சேனாதிராஜா அவர்கள் சிறை சென்றபோது யாப்பானது வெறும் பாராளுமன்றத்தை நோக்கிய யாப்பாக இன்றி விடுதலை அமைப்புக்குரிய யாப்பாக நாம் அதை மாற்றினோம். மாவை அண்ணர் சிறை மீண்டதும் முரண்பாடுகள் முண்டியடிக்க இளைஞர் பேரவை இரண்டானது. அதில் தீவீரவாதத்தை விரும்பிய இளைஞர்களாகிய நாம் இளைஞர்பேரவை விடுதலைஇயக்கம் என்று பிரிந்து சென்றோம். இப்படிப் பிரிந்து சென்ற நாம் தனிநபர் தீவீரவாதிகளுடனும், அமைப்புகளுடனும் இணையத் தொடங்கினோம். இருப்பினும் நாம் உடைந்தாலும் பாதை தவறிப்போகவில்லை. எமது போராட்ட வழியில் குறியுள்ளவர்களுடன் இணையத் தொடங்கினோம். இதில் முக்கியமான சிலரை நினைவு கூருவது மிக முக்கியமானது. இறைகுமாரன், உமைபாலன், வாசுதேவா, சந்ததியார், உமாமகேசன், செந்தில், சேயோன், கனககுலசிங்கம், புஸ்பராஜா, இராசநாயகம் போன்ற பலரை இங்கு குறிப்பிடலாம். எனக்கு இன்று தொடர்புகள் அற்றுப்போனதன் விளைவாக எல்லோரது பெயர்களையும் குறிப்பிட முடியவில்லை. முக்கியமாக உயிருடன் இருப்பவர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
 
இந்த பிரிந்துபோன தீவிரவாத எமது இளைஞர் அமைப்பு தனிநபர் தீவிரவாதிகளாக இருந்த பலரை உள்வாங்க முயன்றதன் விளைவாக பிரபாகரன் போன்றோருடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தது. அக்காலகட்டத்தில் தான் பிரபாகரன் உமாமகேஸ்வரன் ஒன்றாக இணைந்து செயற்படத் தொடங்கினர். மாணவர்பேரவை, இளைஞர்பேரவை விடுதலை அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்தனர். உருவாகிய அந்த அமைப்புக்கு ஒருமத்திய செயற்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு உமாமகேஸ்வரன் தலைவராகவும் தளபதியாக பிரபாகரனும் நியமிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில்தான் சி.ஐ.டி யாக கடமையாற்றி தமிழ் இளைஞர்களை 4ம்மாடியில் சித்திரவதை செய்து வந்த இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தகவல் கொடுத்து அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் காட்டிக்கொடுப்போர், பொலிஸ் சி.ஐ.டி களும் தேடித்தேடிச் சுடப்பட்டனர். புதியபுலிகள் தோற்றம், உட்பூசல்கள் காரணமாக புளொட் பிரிவு, புளொட் புலிகள் கொலைமுயற்சிகள், சகோதரப் படுகொலைகள் என்று பல பல….
 
இந்த இளைஞர் பேரவை பிரிவதற்கு முன்னரே இந்த வட்டுக்கோட்டை மகாநாடு பண்ணாகத்தில் நடந்தது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 5 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வட்டுக்கோட்டைத் தொகுதி ஐவரில் இன்று உயிருடன் இருப்பது நான் மட்டுமென்றே கருதுகிறேன். ஏன் இதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அன்று எனக்கு இருந்த வேதனையும் வலியும் எனக்கு மட்டும்தான் தெரியும். நாம் பலர் ஊர்வலமாகச் சென்றபோது பொலிசாரினால் அடித்துதைக்கப்பட்டோம், பிடித்துச் செல்லப்பட்டோம் அதை எழுதுவதற்கு நான் தகுதி உடையவனா? இல்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்குக.
 
இனி சொல்ல வந்த முக்கிய விடயத்துக்கு வருகிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வைத்தே 1977 தேர்தல் நடந்தது. அன்று இருந்த மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியியும் எம்வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. 98 சதவிகிதமான மக்கள் அன்று தமிழ் ஈழம்தான் முடிந்த முடிவு என்று அறுதியாகவும் உறுதியாகவும் ஆணையிட்டதன் விளைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியானது, என்றும் தமிழர்களுக்குக் கிடைக்காத எதிர் கட்சி என்ற நிலையை அடைந்தது. இதுவும் எம்சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும். அந்த ஆணையானது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கீழ் ஏகோபித்த தமிழ் பேசும் மக்களின் ஆணையாகும். அதாவது வடக்குக் கிழக்கு மக்களுடன் முஸ்லீம்களும் இணைந்து தான் வாக்களித்தார்கள் என்பது மிகமுக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இத்தீர்மானமானது வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரம் கொண்ட தனித் தமிழீழம் என்பதாகும். இது சுயநிர்ணய கோட்பாட்டின் கீழ் ஒரினம் தன் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டது. தனித் தமிழீழம் அடையும்வரை விடாது போராட வேண்டும் என்பது முடிவாக்கப்பட்ட ஒன்றானது. விடுதலைப் போராட்டம் எனும்பொழுது இளைஞர்கள் முக்கியத்துவம் பெறுவது இயற்கையே.
 
இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எங்கேயும் இத்தீர்மானம் காலவதியாகும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தத் தேர்தல் ஆணையை வைத்தே புலிகள் போராடி வந்தார்கள் என்று பிரபாகரனே தொலைக்காட்சிகளில் செவ்வியதை யாவரும் செவிமடுத்திருப்பர். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளாய்வு செய்வதோ மீழுறுதிப்படுத்த முயல்வதோ அன்று வாக்களித்த தமிழ் மக்களை கொச்சைபடுத்தும் செயலாகும். அந்த மக்கள் ஆணை என்பது காலவதியற்றது. இதை மீளுறுதி செய்வதற்கு வெளிநாடுகளில் இருக்கும் நீங்கள் யார்? இங்கே வாக்களித்த பலர் ஈழத்தில் பிறந்தவர்களே இல்லை. இவ்வளவு காலமும் தம்முயிர்களை ஈர்ந்த தமிழ்தனையர்கள், யுவதிகள், பொது மக்களின் உயிர்களுக்குக் கொடுக்கும் சன்மானமா இது?
 
தமிழ் மக்களுக்கு சிங்கள இனவாத அரசால் இழைக்கப்பட்ட இன்னல்களை, எதிர்நோக்கும் பேரழிவுகளை மக்கள் முன்கொணர்ந்து மக்களை விழிப்புறச்செய்து தானைத் தளபதி என்று கருதப்பட்ட அமிர்தலிங்கம் போன்றோர்க்குக் கிடைத்தபரிசு தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்). மக்களை அன்று தட்டி எழுப்பியது யார்? இளைஞர்களைத் தான் சொன்னார்கள் ஆயுதம் ஏந்தியாயினும் ஈழம்பெறும் வரை போராடுங்கள் என்று. அன்றைய தலைவர்கள் தம்தகுதிக்கு ஏற்ப போராடினார்கள், கிளர்ச்சியை ஆதரித்தார்கள்.
 
அமிர்தலிங்கம் அவர்களைத் துப்பாக்கி இரவைகள் துளைப்பதற்கு முன்சொன்ன வார்த்தைகளை இங்கே கேளுங்கள். “தம்பிமார்களே எங்களாலை ஆயுதம் தூக்கிப் போராட இயலாது. நீங்கள் போராடுங்கள் எம்மால் இயன்றவரை நாம் போராடுகிறோம். ஒருவரின் வழியில் இன்னொருவர் குறுக்கிடாமல் மக்களின் நலனுக்காகப் போராடுவோம். இந்தியாவின் உதவியின்றி எமக்கு ஒருதீர்வு கிடைக்கப் போவதில்லை.” இந்த அரசியல்மேதை சொன்ன பொன்னான வார்த்தைகள் இன்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் இன்று கூட மறுக்க இயலுமா? முடியுமா?

அன்று இந்திய மத்திய அரசின் லோக்சபாவிலேயே தனித் தமிழனின் குரலாக ஒலித்தது அமரர் அமிர்தலிங்கத்தின் குரல் ஒன்றே. அன்று தேசத்தின் குரல் என்ன செய்தது? அதன்பின் யாராலாவது அது முடிந்ததா? உங்கள் குரல்கள் கணக்கெடுக்கப்பட்டதா? துப்பாக்கிகளின் துர்ப்பாக்கிய தீர்வுகள் திருத்தியமைக்க முடியுமா? அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோரை மீளத்தர முடியுமா? உலக நாடெங்கும் நின்று தெருத்தெருவாய் கத்தினோம் யாருக்குக் கேட்டது. எவ்வளவு கேட்டது. ஒரு தனிமனிதனாகச் செய்ய முடிந்ததை இரண்டு இலட்சமாக நாம் தெருவில் இறங்கியும் முடியவில்லையே.
 
இன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீழுறுதி செய்கிறார்களாம். இது வேடிக்கையா? கேலிக்கையா? இன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் 90 விதமானவர்கள்  யாழ்பாணத் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இங்கே கிழக்குத் தமிழர்களினதும் இஸ்லாமியத் தமிழர்களினதும் கருத்துக்கள், விருப்புக்கள் சாகடிக்கப்படுகிறன்றன. புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம்கள், கிழக்கு முஸ்லீம்களின் கருத்துக்களுக்கு இடமெங்கே? அங்குள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க நீங்கள் யார்? சரி அங்கே ஒரு நடுநிலையாக தேர்தலை நடக்த முடியாது என்று கருதினால் ஐ.நா அதை அங்கே செய்யட்டும்.
 
வெளிநாட்டில் எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் நீங்கள் ஈழத்து மக்களின் தலைவிதியை இங்கு வசதியாக இருந்து கொண்டு தீர்மானிக்க இயலுமென்றால் பிராந்திய வல்லரசுகளான அண்டை நாடுகள் தம் பாதுகாப்புக்கருதி ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது சரி என்றாகிவிடும் என்பதை உணர்க.
 
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் குறுஞ்செய்தி வந்தது 99 சதவிகிதமானவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று. இது மிகப்பெரிய வேடிக்கை. நோர்வேயில் எந்த மாநகரசபையை தமிழீழம் ஆக்கப்போகிறீர்கள். 99 சதவிகிதம் என்பது எதைவைத்துக் கணிக்கப்பட்டது என்பதுதான் என் கேள்வி? சரி எத்தனை சதவீதமானவர்கள் வாக்களித்தார்கள் என்றால் அது இவர்களுக்குத் சரியாகத் தெரியுமா? இன்று நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் எத்தனை? இதில் எத்தனை பேர் 18 வயதைத் தொட்டவர்கள்? இந்த 18வயதைத் தொட்டவர்களில் சமூகம் அழித்தவர்கள் எத்தனை வீதம்? இதுவாவது தெரியாது? அதாவது குஞ்சு குருமான்கள், விசா இல்லாதோர், பாஸ்போட் இல்லாதோர் எல்லாமுமாகச் சேர்த்து சுமார் 20 000 க்கும் குறைந்த நோர்வே வாழ் ஈழத் தமிழர்கள் 3 மில்லியன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லை?
 
இந்த வாக்கெடுப்பை நடத்திய உதுறுப் (கத்துதல், அழைத்தல் என்பதே தமிழாக்கம்) என்ற அமைப்பின் இணையத்தள வெளியீட்டில் இருந்து.
 
18 வயதுக்கு மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள் தொகை 8797 (எந்த தேர்தல் ஆணையகம் இதைத் தந்தது)
 
வாக்களித்தவர்கள் தொகை 5633 இதில் தமிழீழம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 5574
 
ஆகவே நோர்வேவாழ் தமிழர்களில் வாக்குரிமை கொண்டவர்களில் ஈழம் வேண்டுவோர் எத்தனை வீதம்? 63 சதவீதம் என்பதே சரியானது (5574தர 100 கீழ் 8797). இதில் வாக்களிக்காதவர்கள் 35 வீதம் என்பதையும் கவனிக்க.
 
தமிழர்சார் உதுறுப் தன்தலையங்கத்தில் எழுதியுள்ளது: 99சதவிகிதமான நோர்வே தமிழர்கள் தனித்தமிழீழம் பிரிவதையே விரும்புகிறார்கள். நோர்வேயில் தமிழர்கள் செறிந்து வாழும் எந்தப் பகுதியில் ஈழம் காணப்போகிறார்கள். ஈழத்தில் நடுநிலையாக ஒருதேர்தல் நடத்தினால் என்ன விளைவு கிடைக்கும் என்பதை இதற்கு அனுரசணையாக இருந்த பின்புலத்தார் உணர்வார்கள்.
 
கிழக்கிலங்கை, ஈழக்கதை இன்றி ஏதோ ஜனநாயகம் இல்லாத துப்பாக்கித் தனிநியாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வடபகுதி முஸ்லீங்கள் சொந்த பூமியை விட்டு விரட்டப்பட்டு விட்டார்கள். யாழ்பாணம் ஆமியின் பிடியில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கணக்கில் இருக்கிறது. வன்னியில் புலியழிப்பென மக்கள் அழிப்பு நடக்கிறது. இவர்கள் கருத்துக்கள் கணிக்கப்பட்டதா? இதற்குச் சரியான பதில் சொல்ல வேண்டியவர்கள் அங்குள்ள மக்கள் மட்டுமே. சரி அங்கு தேர்தல் நேர்மையாக நடத்த முடியாது என்றால் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட தேர்தல் எந்த வகையில் முறையானது. இதை ஒரு கருத்துக் கணிப்பாகவே கருதவியலாது. வாக்களித்தவர்கள் யார்? குறிப்பிட்ட வட்டங்களில் உள்ள குழுக்கள். கருத்துக் கணிப்பு என்றும் பரந்துபட்டே எடுக்கப்படும். இந்த வகையான தேர்தல் வெறும் கேலிக்கூத்து என்பதே உண்மை.

இந்தக் கேலி, போலித்தேர்தலில் பங்குபற்றாத பலர் என் காதுபடச் சொன்ன விடயம் என்னவென்றால் ‘கண்டநிண்டவன் எல்லாம் தேர்தல் நடத்துவான். இனி அதை வைத்தோ பாராளுமன்றம் போக வேண்டும்’ என்பர். இவர்களின் கோமாளிக் கூத்துக்கு நாங்களும் ஆடுவதா? ஈழத்தில் எம்மக்களை கோமாளிகளாக்கி கொன்று போட்டது போதாதா? இங்கும் இளைஞர்களைத் தூண்டி இரத்தக்களரிக்குத் தயார்படுத்துகிறார்களா? இராஜதந்திரம் புத்திசாதுரியமான வளைந்து கொடுப்புக்கள் மூலம் எமது நோக்கு வென்றெடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் துப்பாக்கிகளே தமிழர்களின் தலைவிதியை அவசர அவசரமாகத் தீர்மானித்தன.
 
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கொடுத்த மக்கள் ஆணை என்பது என்றும் காலாவதியாவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் என்று எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. அங்குள்ள மக்கள் கொடுத்த தீர்ப்பை அங்குள்ள மக்களே தம்தலைவிதியை தீர்மானிக்க வேண்டும்.
 
எமது மக்களின் கிளர்ச்சிகளும் உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை என்பதுதான் காலம் தந்த பதில். அங்குள்ள மக்கள் என்றோ ஒருநாள் தம்மிடையே உள்ள சக்திகளைத் திரட்டி சரியான தலைமையை தெரிவுசெய்து தம்போராட்டத்தை வென்றெடுப்பார்கள். பலாத்காரத்தினால் மக்கள் எழுற்சியைக் கட்டுப்படுத்த இயலாது. இது சரித்திரச் சான்று.
 
ஈழத்தமிழர் விடுதலைக்கு நாமே ஏகப்பிரதிநிதிகள் என்று எம்மக்கள் போராட்டத்தை மழுங்கடித்தன் விளைவு இன்று எம்தமிழினம் விடுதலை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இனி எத்தனை தலைமுறை எடுக்குமோ? இது சுடுகிறது மடியைப்பிடி என்று செய்யும் காரியமல்ல. தாமே ஒட்டுமொத்த தமிழினத்துக்கும், தமிழீழத்திற்கும் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டவர்களே ஈழத்தமிழர் அழிவுக்கு மட்டுமல்ல மக்களின் தன்னம்பிக்கை இழப்புக்கும் காரணமானவர்கள். தன்னம்பிக்கை இழப்பு என்பது தற்கொலைக்குச் சமனானது. ஒரு இனத்தின் தன்னம்பிக்கை மழுங்கடிக்கப் படும்போதுதான் அடிமை நாடகம் அரங்கேறும்.
 
தனிநபர்களின் தலைமையில் விடுதலைப் போராட்டங்களைக் கட்டி எழுப்புவதை விட்டு விட்டு, அதாவது கதாநாயகத்துவம் (கீரோயிசம்) அற்ற மக்கள் அமைப்பைக் கட்டி எழுப்புங்கள். மக்களின் குரல்களுக்குச் செவிசாயுங்கள். விடுதலை மக்களுக்கே தவிர மண்ணுக்கல்ல. மண் என்பது வெறும் இருப்பு மட்டுமே. மண்தான் முக்கியம் என்றால் எமது மண் சிந்துநதிப் பள்ளத்தாக்கிலும் இருக்கிறது. அதையும் போய் மீட்போமா?
 
இக்கட்டுரையைத் தொடர்ந்து பலகட்டுரைகளை ஏனைய வாசகர்களும் எழுதுவீர்களாயின் ஒரு ஆரோக்கியமான கருத்தியலை நாம் பகிர்ந்து கொள்ளலாம். பின்னோட்டங்களும் சிந்தனையைத் தூண்டுவதாய் அமையும்.

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவேண்டாம்: நாடு கடத்தப்பட்ட “சனல் 4” ஊடகவியலாளர்

channel-4news.jpgசிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய “சனல்4”  ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கத்தினால் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சுத்தமாக இல்லை.

இலங்கை அரசாங்கம், முகாம்களை புனரமைக்கவும், பராமரிக்கவும் அதிகரித்த அளவு வெளிநாட்டு நிதிகளை எதிர்பார்த்து இருக்கிறது. அவர்கள் எந்த அளவு நிதிகளை திரட்ட முடியுமோ, அந்த அளவுக்கு திரட்ட முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த நிதிகள் அங்குள்ள பொது மக்களுக்கு பயன்படுத்தப்படப் போவதில்லை.

தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவ முன்னெடுப்புகளுக்காகவே இந்த நிதிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர், இதனாலேயே இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் பல வருடங்களாக தமிழ் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருக்கிறார்கள். எனவே தொண்டு நிறுவனங்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யக்கூடாது என பிரித்தானிய ஊடகவியலாளரான வோல்ஸ் கோரியுள்ளார்.

கடற் புலிகளின் தளபதி – செய்தித் தொடர்பாளர் பலி

ilanthirayan.jpgஇலங்கையில் கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் முக்கிய தளபதியான செழியன் பலியாகிவிட்டதாகவும் அதே போல விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் பலியாகிவிட்டதாகவும்  கூறப்படுகிறது.

கடற் புலிகளின் இரண்டாவது தளபதியான செழியன் கடற்படையினருடன் நடந்த பல மோதல்களில் பங்கேற்றவர். கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கடற்படையினருடன் நடந்த சண்டையில் காயமடைந்திருந்தார். ஆனாலும் இப்போதைய போரிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த மண் அணையை கைப்பற்ற நடந்த மோதலில் செழியன் பலியானதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதே போல இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் படுகாயமடைந்துள்ளார் என்று கூறப்பட்டது.  இந் நிலையில் அவரும் பலியாகிவிட்டதாகத் கூறப்படுகிறது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர் இளந்திரையன். விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இத்தகவல்களை இந்திய இணையத்தளங்களும் தெரிவித்துள்ளன.