கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

‘20-20’ கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று; இலங்கை பாக். மோதல்

second-world-cup-of-twenty20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

இரண்டாவது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் 12 நாடுகள் பங்கேற்றன. “லீக்” முடிவில் அவுஸ்திரேலியா, ஒல்லாந்து, ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ் ஆகியவை வெளியேற்றப்பட்டன. “சூப்பர்-08” சுற்று முடிவில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன.

தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மேற்கிந்திய தீவுகள் ஆகியவை அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. கடந்த வியாழக்கிழமை நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களில் தென்ஆபிரிக்காவையும், நேற்றுமுன்தினம் நடந்த 2வது அரை இறுதியில் இலங்கை 57 ஓட்டங்களில் மேற்கிந்திய அணியையும் தோற்கடித்தன.

20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் அணி 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. 2007ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் நடந்த முதலாவது உலக கோப்பையில் இந்தியாவிடம் தோற்று சம்பியன் பட்டத்தை இழந்தது. பாகிஸ்தான் இந்தப் போட்டித் தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது. “லீக்” ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. “சூப்பர்-8” சுற்றில் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. அதன் பிறகே அந்த அணி விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது.

இலங்கை அணி எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. உலககோப்பையை வெல்ல இரு அணிகளுமே கடுமையாக போராடும். இதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் சென்று யுத்தத்தில் ஈடுபட இளவரசர் வில்லியம் விருப்பம்

21wiliam.jpgஇங்கி லாந்து நாட்டு இளவரசர் வில்லியம், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று யுத்த களத்தில் இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து போர் செய்ய விரும்புகிறார்.

நான் இராணுவ சேவையில் இருந்து விலகி அரசபொறுப்பை ஏற்பதற்கு முன்பு, போர்க்களத்தில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். இவர் சார்ள்ஸுக்கு பிறகு பட்டத்துக்கு வரக்கூடிய இடத்தில் இருப்பதால், போர் முனைக்கு செல்லத்தடை இருப்பதாக நம்பி வந்த அவர், தன் தம்பி ஹரி போர் முனைக்கு சென்று திரும்பிய பிறகு தானும் போர் முனைக்கு செல்வதற்கு தடை இருக்காது என்று நம்புகிறார்.

“என் கண்முன்னாலேயே என் தம்பி ஹாரி போர் முனையில் பணியாற்றி இருக்கும் போது, ஏன் நான் பணிபுரிய முடியாது” என்று கேட்டார். ஆப்கானிஸ்தான் சென்று போர்க் களத்தில் குதிக்க நான் விரும்புகிறேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் இப்போது விமானப் படையில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார்.

உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது எகிப்து

sc-19-06-2009.jpgதென்னா பிரிக்காவில் நடைபெற்றுவரும் கொன்பெடரேஷன் கிண்ண கால்பந்து போட்டியில் உலக சாம்பியனான இத்தாலி அணியை எகிப்து 10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இத்தாலி அணி சர்வதேச கால்பந்து வரலாற்றில் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணி ஒன்றிடம் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜொஹன்னஸ்பேர்க் எலீனா பார்க் அரங்கில் நேற்று “பி’ பிரிவுக்காக நடந்த இந்த போட்டியில் எகிப்து அணி இத்தாலிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதன்மூலம் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் எகிப்தின் மொஹமட் ஹோமோஸ் கோலொன்றை போட்டு வெற்றியை உறுதிசெய்தார். உலக சாம்பியனான இத்தாலியினால் கடைசிவரை கோலொன்றை போடமுடியாமல் போனது.

கடந்த 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் கொன்பெடரேஷன் கிண்ண போட்டி ஒன்றில் ஐரோப்பிய கண்ட அணி ஒன்றை ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று வீழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னர் 2003 ஆம் ஆண்டு கொன்பெடரேஷன் போட்டியில் கெமரூன் அணி ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தேர்வான துருக்கி அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த வெற்றியுடன் எகிப்து அணி கொன்பெடரேஷன் கிண்ண அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. எனினும் “பி’ பிரிவில் இருந்து பலம்வாய்ந்த பிரேசில் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

20.20 உலகக் கோப்பை – இறுதிப் போட்டிக்கு இலங்கை தெரிவானது.

_dilshan_.jpg20.20  உலகக் கிண்ண போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதியாட்டம் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய அணிக்குமிடையே நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

நாண்ய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி இலங்கையை முதலில் துருப்பெரடுத்து ஆடும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி முதலில் துருப்பெடுத்தாடிய இலங்கை குறித்த 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலக்கரத்ன டில்சான் இறுதிவரை துடுப்பெடுத்தாடி 57 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் ஏனைய அணி வீரர்களின் துடுப்பாட்டம் சோபிக்கவில்லை. ஜயசூரிய 37 பந்துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

வெற்றி இலக்கான 159 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய மேற்கிந்திய அணிக்கு முதலாம் ஓவரே பெரும் சவாலாக அமைந்தது. முதலாம் ஓவரில் மெத்யூஸ் வீசிய பந்தில் 03 விக்கட்டுகளை மேற்கிந்திய அணி இழந்தது. இலங்கையில் பந்து வீச்சு பந்து தடுப்பு உயர் மட்டத்தில் காணப்பட்டது. இறுதியில் 20 ஓவர் முடிவதற்குள் மேற்கிந்திய அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இறுதிவரை துடுப்பெடுத்தாடி 50 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப் கிறிஸ் கேளி பெற்றுக் கொண்டார். இலங்கை அணி 57 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்குத் தெரிவானது. போட்டி சிறப்பாட்டக்காரராக டில்சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை லோட்ஸ் மைதானத்தில் இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் இலங்கை அணியினர் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இரானியத் தலைவரின் கருத்துக்கு பிரிட்டன் விளக்கம் கோரியுள்ளது

uk-pm.jpgஅயோ துல்லா கமனெய் அவர்களின் கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்க இலண்டனில் உள்ள இரானியத் தூதரை பிரிட்டிஷ் அரசு அழைத்திருக்கிறது.

இரானில் கடந்த சில நாட்களில் காணப்பட்ட ஒடுக்குமுறையும் மூர்க்கத்தனமும் திரும்ப நடக்கக்கூடாது என்று பிரதமர் கோர்டன் பிரவுன் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸ்ஸல்சில் கூடி, இரானில் நடந்த எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை ஒருமனதாகக் கண்டித்த கூட்டத்தில் பிரவுன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அயதுல்லாவின் பேச்சு, இனி எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் வன்முறை வழியில் ஒடுக்க, இரானிய பாதுகாப்புப் படைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல இருப்பதாக இலண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இரான் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏமாற்று வேலைக்கு இடமில்லை; போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்: அயதுல்லா கமெனெய்

khamenie.jpgஇரானில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல்களை தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் ஏற்கமுடியாதவை என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரானிய அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனெய் கூறியுள்ளார்.

அதிபர் அஹமதிநெஜாத் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கான தனது முன்பெப்போதும் இல்லாத அளவிலான ஆதரவை வழங்கிய பின்னர் முதன்முதலாக பகிரங்க வைபவத்தில் உரையாற்றிய அவர், அந்த போராட்டங்கள் தொடர்ந்தால், அவற்றின் விளைவுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களே பொறுப்பு என்று கூறினார்.

அகங்கார சக்திகளும், அமெரிக்காவிலும் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஊடகங்களும் தேர்தலுக்குப் பின்னர் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்று அயதொல்லா கமெனெய் சாடினார்.

பிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு : குலன்

Pirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_Time

வைகாசி 17ல் பிரபாகரன் இறந்து பின் பிறந்து வைகாசி 19ல் மீண்டும் இறந்தார் என்பது அரசசெய்தி. பிரபாகரன் இறக்கவில்லை என்பது புலம்பெயர் புலிகளின் செய்தி. இன்றைய பிரச்சினை பிரபாகரன் பிறந்ததோ, இறந்ததோ அல்ல. பிரபாகரனால் என்ன நடந்தது என்பதுதான் பிரச்சனை. சரி அவர் உயிருடன் இருந்தால் வரும் போது வரட்டும். பிரபாகரனின் புலிப்பிறப்பும் நடப்பும் இறப்பும் எமக்கும் எம்சமூகத்திற்கும் சிலபாடங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

என்றும் இறந்தகாலமே எதிர்காலத்தின் திறவுகோல் என்பதால் இறந்தகாலத்தை திருப்பிப் பார்க்க வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. ஆனால் பழய பல்லவி பாடிக்கொண்டு இறந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தில் இறந்தகாலத்தின் பிழைகளைத் திருத்துவதும், நல்ல அனுபவங்களை எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்வதுமே மனிதனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, ஓரினத்தின் வாழ்வையும் மேம்படுத்தும். என்சிற்றறிவுக்கு எட்டியதை எம்மக்களின் போராட்டமும் எதிர்காலமும் பற்றி அக்கறை கொண்டவன் என்ற வகையில் ஒரு கருத்துக்களம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது. புலம்பெயர்ந்த இளையவர்களுக்கு எமது போராட்டவரலாறு முழுமையாகத் தெரியாத காரணத்தினால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என பிழையான வழியில் போய்விடக் கூடாது என்ற நோக்கத்திலுமே மிக சுருக்கமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

புலிகளின் ஆரம்பம் இன்றைய விளைவும் – முற்குறிப்பு
தமிழ்மக்கள் மேல் ஏற்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் விளைவாக பல இளைஞர்கள் தனிநபர் தீவீரவாதிகளானார்கள். தனித்து நின்றி போராடுவதனால் பயனில்லை என உணர்ந்தவர்கள் குழுக்களானார்கள். காட்டிக்கொடுப்போர் என்று துரோகிப்பட்டம் கட்டி பலதமிழர்களே கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக கதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளான இணுவிலைச் சேர்ந்த இரு சண்முகநாதன்கள், பஸ்தியாம்பிள்ளை முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். பொலிஸ் இலாகாவில் வேலைசெய்பவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்துதானே ஆகவேண்டும். அது அவர்கள் தொழில்தர்மம். அவர்கள் மாறுவதற்கோ சிந்திப்பதற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படாது கொல்லப்பட்டது எவ்வகையில் நியாயானமது? வாங்கும் சம்பளத்துக்கு மேலாக தமிழ் இளைஞர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிய பஸ்தியாம்பிள்ளை தண்டிக்கப்பட வேண்டியவர்தான். துரோகிகள் என்று கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டனவா என்பது கேள்விதான்.

பின் துரோகிகள் என்பது இனத்துக்குரிய பதமாய் இன்றி தனிப்பட்ட முறையில் தமக்குப் பிடிக்காதவர்கள் எல்லோரும் துரோகிகள் ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அண்ணனுக்குத் தம்பியும் தம்பிக்கு அண்ணனுமாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரை ஒருவர் கொன்ற சரித்திரம் எம்மிடையே பலவுண்டு என்பது வேதனையே. தமிழின அழிப்பு என்பது எதிரிகளால் மட்டுமல்ல தமிழர்களாலேயும் நடத்தப்படத் தொடங்கியதன் விளைவைத்தான் நாமின்று அனுபவிக்கிறோம். இப்படியான கொலைகளுக்கெதிராக ஒரு குரல்கூட வெளிவரவில்லை. அப்படி எழுந்திருந்தால் கொலை செய்யும் இரும்புத் துப்பாக்கி கூட ஒருகணம் சிந்தித்திருக்கும். தமிழ் படுகொலைகள் தமிழ்மக்களால் ஆதரிக்கப்பட்டனவா? ஆதரிக்காவிட்டால் பிழையெனக்கண்ட போது ஏன் தட்டிக்கேட்கவில்லை? சுடப்பட்ட அத்தனைபேரும் துரோகிகளா? யாரை யாரும் கொல்லலாம் துரோகி என்றும் தூக்கலாம். தமக்கு மட்டும் துரோகி என்ற பெயர் கட்டப்பட்டு விடுமே என்ற பயமா? இதை எல்லா இயக்கங்களும் செய்தன. இதில் முக்கியமானவர்கள் புலிகள் இன்று எம்மினத்துக்கே துரோகியாகிப்போய் நிற்கிறார்கள். எம்மியக்கங்கள் எம்மினத்தில்தானே சுட்டுப்பழகியது.

புலிகள் இன்று தமிழினத்தின் துரோகிகளா? தியாகிகளா?
இக்கேள்விகளுக்கு, கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? யார் எதை எப்படி செய்தார்கள் என்பது முக்கியமில்லை. முடிவு என்ன? எம்மினத்தின் இன்றைநிலை என்ன என்பதே முக்கியமானது. எம்மினத்தில் 60 000 பேருக்கு மேல் கொன்றும், கொல்வதற்கு வழிவகுத்தும் நின்றவர்கள் புலிகளும் சில இயக்கங்களும். இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

சிங்களவர்கள் தமிழரைக் கலவரத்தில் கொன்றால் இது இனப்படுகொலை. மக்கள் கொடிபிடித்தார்கள் கோசம் போட்டார்கள். ஆனால் ஒரு இயக்கத்தை மற்றைய இயக்கம் கண்மூடித் தனமாக இராணுவத்தை விட மோசமாக கொன்றபோது ஏன் வாழாதிருந்தீர்? இது எப்படித் தியாகமானது?

சுமார் 500 000க்கு மேல் தமிழர்களை வெளிநாடுகளில் அகதியாக்கி, தம்சொந்த மண்ணை விட்டு அவனியெங்கும் அலையவிட்டு, அவர்களிடமே ஏமாற்றிப் பணம்பிடுங்கி வாழ்ந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

மக்களை ஒருபோராடும் சக்தியாகக் கருதாது அவர்களை பதுங்கு குழிகளாகவும், மறைவிடங்களாக மட்டும் பயன்படுத்தி, போராடும் வலுவை இழக்கச்செய்து, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஈரோசைத்தவிர அனைத்து சிறு இயக்கங்களில் இருந்து பெரிய இயக்கங்களாக வளர்ந்த புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் வரை கொன்று குவித்தது யார்? அவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஒவ்வொரு இயக்கமும் தம்முள் ஒருவரை ஒருவர் கொன்று தீர்த்தனவே அவர்கள் தியாகிகளா? துரோகிகளா? யாருக்கு விரல்விட்டுக் காட்டத் துணிவிருக்கிறது.

ஆயுதம் ஏந்தியவனால் தான் பிரச்சனை என்றால் ஆயுதமே தொட்டுப்பார்க்காத அரசியலில் மட்டும் ஈடுபட்ட அரசியல்வாதியில் இருந்து ஒன்றுமே அறியாத அப்பாவித்தமிழர்கள் வரை கொன்று போட்டவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

எம்மினத்தவனைக் கொல்லத் துப்பாக்கி தூக்கும் போது இவன் என்னினத்தவன் என்று ஒரு செக்கன் கூட சிந்திக்காது நிந்தித்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

அடித்துவிட்டு ஒளிப்பதற்கே மக்களைப் பயன்படுத்தியது மட்டுமல்ல, அவர்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் அருகில் நின்றும் தம்மை மட்டும் பாதுகாத்தவர்களை எப்படித் தியாகிகள் என்பது?

மண்மீட்பு மண்மீட்பு என்றவர்கள் மக்களை, மக்கள் கருத்துக்களை என்றும் காது கொடுத்துக் கேட்டதில்லை. மக்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் ஒடி ஒளித்தார்கள். மக்களை தம்பாதுகாப்புக்காக கேடயமாய் பாவித்தார்கள்? இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? மண் மண் என்றார்களே இன்று மண் எங்கே? ஒரு மண்ணாங்கட்டியைக் கூட மீட்க முடிந்ததா? மண் என்பது இருப்புமட்டுமே அன்றி மக்களாகாது. மக்களில்லாத மண்ணை வைத்து என்ன செய்யுமுடியும்? மண்ணின் பெயரைச் சொல்லிச் சொல்லி மக்களை அழிக்கக் காரணமாக இருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இறுதியாகப் புலிகளால் எமக்கு விளைந்தது என்ன? மக்கள் போராட்டம் என்றாலே பயப்படும் மனநிலைக்கும், தன்னம்பிக்கைச் சிதைவுக்கும், அடிமைத்தனத்தை ஆதரிக்கும் நிலைக்கும், கல்வி செல்வச்சீரழிப்புக்கும் எம்மக்களை உள்ளாக்கி, இறுதியில் விடுதலை என்ற சொல்லை எம் இருதலைமுறைகள் உச்சரிக்கவே பயப்படும் அளவுக்கு செய்துவிட்டு மறைந்த புலிகள் துரோகிகளா? தியாகிகளா?

மற்றவர்களை, தாம் விரும்பாதவர்களை, மற்ற இயக்கங்களை எல்லாம் துரோகிகள் என்று கூறிக்கூறியே தமிழ்மக்களின் உண்மைத் துரோகிகளாய் போனவர்கள் யார்?

இலங்கையரசின் காலத்தில் பேச்சு சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இருந்தது. ஆனால் புலிகள் ஆட்சியில் இச்சுதந்திரமும் பறிக்கப்பட்டது. எதிரியைக் கூட நல்லவனாக்கியது புலிகளே. இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

என்கண்ணில் மக்கள் மட்டுமே பார்வையாளராக இருந்து தற்கொலை செய்து கொண்ட தியாகிகள்.

உயிருடன் மனிதனை ரயர்போட்டுக் கொழுத்த எதிரிக்குப் பழக்கிவிட்டது யார்? வீட்டில் வைத்துப்போடுதல், கவர் பண்ணும்போது போடுதல் போன்றவற்றில் ஈடுபட்டது யார்?

உலகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தன, வென்றன. எந்த இயக்கமும் தற்கொலைத் தாலிகட்டிச் சென்றதில்லை. ஆனால் மக்களின் போரட்ட உந்துசக்தியாக இருக்கும் இளைஞர்களை தற்கொலைக்கு தாலிகட்டி வழியனுப்பும் ஒரு கோழைத்தனமான விடுதலை அமைப்பு மன்னிக்கவும் மாவியா அமைப்பு புலிகளே. ஒவ்வொரு போராளியின் மனதிலும் எதிரியைக் கொல்லுவேன் வெல்லுவேன் எனும் மனத்திடம் தளர்ந்து அடிப்பேனா அன்றி சயனைட்டைக் கடிப்பேனா எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். புலிகள் தம்மைமட்டும் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைக் கலாச்சாரத்தை வளர்த்து ஒரு இனத்தையே தற்கொலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்

இனியாவது சாப்பிடமட்டுமே வாய்திறப்பதை விட்டு விட்டு ஈழத்தமிழ் மக்களே! உண்மைக்காகவும் உரிமைக்காகவும் வாய் திறப்பீர்களா? எப்போ உங்கள் மௌனம் கலையும். சரியான மக்கள் நலன்விரும்பும் அமைப்புகளை உண்மை விடுதலை விரும்பிகளை இனங்காணுவீர்களா? உங்களைக் காக்கிறோம் என்று அரசில் இருந்து புலிகள் வரை இன்னும் எத்தனை எத்தனையோ அமைப்புகள் வரப்போகின்றன. உங்கள் அனுவங்களை வைத்து அடையாளம் காண்பீர்களா? அல்லது கெடுகிறேன் பிடிபந்தயம் என்று முன்புபோல் மீண்டும் மீண்டும் வதைபடப் போகிறீர்களா என்பதையும் நீங்களே தீர்மானியுங்கள்.

புலி இயக்கம் பிரபாகரனால் மட்டுமா ஆரப்பிக்கப்பட்டது?
தனிநபராக பிரபாகரன் பேருந்து ஒன்றை தீயிட்டுவிட்டு மாணவர்பேரவையைச் சேர்ந்த சத்தியசீலன் இடம் உரும்பிராய்க்கு வந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார் என்றும் யூரியூபில் கூறியிருந்தார். அக்காலகட்டங்களில் சிவகுமாரனில் இருந்து தனிநபர் தீவிரவாதிகளே உருவாகியிருந்தார்கள். இருப்பினும் சிலஅமைப்புக்கள் தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றில் மாணவர்பேரவை, இளைஞர் பேரவை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ரெலோ ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் என்பனவும் மிகப்பழமையான இயக்கங்கள். இவைபற்றிய வரலாறு எனக்குத் தெரியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.

நீர்வேலி வங்கிக் கொள்ளையிலேதான் கேபி விமலராசா எனும் ரியூசன் வாத்தியாரின் உந்துறுளியை பாவித்தார் என்ற காரணத்தால் விமலராசா சிறைபோனார். அவர் மாதகலிலுள்ள கடம்பவாதத்தை முகவரியாகக் கொண்டவர். இதனால் இவர் நோர்வேக்குப் போனபோது புலிகளின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அப்போதும் இவர்தொடர்பில் கேபி வந்துபோவார்.

மாணவர்பேரவையைச் சேர்ந்தவர்கள், இளைஞர்பேரவை இரண்டாகி இளைஞர்பேரவை விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு புறப்பட்டவர்கள், தனிநபர் தீவீரவாதிகள் எனப்பலரும் ஒரு அமைப்பாகி மத்திய செயற்குழுவை அமைத்தார்கள். இளைஞர்பேரவையில் இருந்த உமாமகேஸ்வரன் தலைவராகவும் பிரபாகரன் இராணுவ ஆயுதப் பொறுப்புக்களையும் ஏற்றனர்.

புதிய புலி என்றார்கள், உட்பூசல்களில் பிரிந்தார்கள். பிரிந்தவர்கள் புளொட் என்றும் புதியபாதையுடன் புறப்பட்டனர். இவை ஆரம்பகாலமும், ஒருபக்கச்சார்பான தகவல் மட்டும்தான். இக்காலகட்டங்களில் ரெலோ ஈரோஸ் தம்பரிமாணங்களையும் வளர்த்துக்கொண்டது. உட்பூசல்கள் சகோதரப் படுகொலைகளாகப் பரிணாமம் பெற்றது. முக்கிய நோக்கம் திசைமாறியது. இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் தமிழ்தேசிய விடுதலையை ஆரம்பித்தது பிரபாகரன் என்றும் அதன் ஏகபோக உரிமை அவருக்கே உண்டு என்றும் நம்புபவர்களுக்காகவே. அதுமட்டுமல்ல புலியியக்கம் தனியே பிரபாகரனால் மட்டும் உருவாக்கப்பட்டது என்பது தவறானதே.

யார் கெரில்லா, மாவியா?
ஒரு கெரில்லாவுக்கும் கொள்ளைகாரர், மாவியாக்களுக்கும் பலவித்தியாசம் கிடையாது. இவர்கள் அனைவரினதும் இயங்குதன்மை, செயற்பாட்டுத்திறன், நகர்வுகள், நகர்த்தல்கள் அனைத்தும் இரவுகளிலும், கூடுதலாக இரகசியமாகவும், உண்மை முகங்கள் மறைக்கப்பட்டும் இருக்கும். குறைந்த பொருட்செலவில் பெருவெற்றிகளையும், யாரும் எதிர்பாராவண்ணம் சடுதியான தாக்குதல்களையும் செய்வார்கள். அரசியலில் ஆர்வமும் பின்புல உறவுகளும் இருக்கும். ஆனால் வித்தியாசம் ஒன்றே ஒன்று மட்டும்தான் ”நோக்கம்” அதாவது மாவியாவானவன் என்றும் தன்சுயநலத்தில் மிக மிக கவனமாகவும், அக்கறையாகவும் இருப்பான். ஆனால் கொறில்லாவானவன் முக்கியமாக மக்களின் நலத்திலும், மக்களை நேசிப்பவனாகவும், மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவனாகவும் இருப்பான். இப்போ புலிகள் கெரில்லாக்களா? மாவியாக்களா? கெரில்லா தாக்குதல்கள் செய்பவர்கள் அனைவரும் கெரில்லாக்களாகிவிட முடியாது. சந்தணக் கடத்தல் வீரப்பன் பல கெரில்லாத் தாக்குதல்களைச் செய்தவன், இன்னுமேன் மக்களால் நேசிக்கப்பட்டவனும் கூட. ஆனால் இவன் ஒரு விடுதலைப் போராளியாகவோ கெரில்லவாகவோ இருக்க இயலாது. இங்கே புலிகள் மாவியாவா? கெரில்லாவா என்பதை வாசகர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

இனங்காணல்
இனங்காணல் என்பது ஒவ்வொரு மிருகங்களுடனும் ஏன் எல்லா ஜீவராசிகளுடனும் கூடிப்பிறந்த ஒன்றாகும். இது ஏன் தமிழர்களுக்கு மட்டும் இல்லாது போனது? நாலு ஆமியை சுட்டுவிட்டு 40 ஆமி என்று கொண்டாடும் போது மக்கள் புலிகளை அடையாளம் கண்டிருக்க வேண்டும் இது வெறும் வானவேடிக்கை என்பதை உணர்ந்திருக்க வேண்டும். சினிமா பார்த்து கீரோய்ஸ்சத்தில் (நாயகத்துவம்) வளர்ந்தவர்கள் நாயகமார்க்கத்தையே பின்பற்றுவர். மக்களும் கைதட்டி வரவேற்றனர். ஆமியைக் கொல்வதுதான் தமிழ்மக்களின் விடுதலையா? சரி இராணுவத்தை ஈழமண்ணில் இருந்து கலைத்து விட்டதும் எமக்கான விடுதலை கிடைத்துவிடுமா? அக்கேள்விகளும் இதற்கான வேள்விகளும் ஏன் நடக்கவில்லை?

ஒரு கெரில்லாவானவன் முக்கியமாக சகோதரப் படுகொலையைச் செய்யக்கூடாது. காரணம் அச்சகோதரனும் அவன் நேசிக்கும் மக்களின் ஒருவனே. இயலாக் கட்டத்திலோ பல அறிவுறுத்தல்கள் விளக்கங்களின் பின் சில கொலைகள் செய்யப்பட்டிருந்தால் கூட புலிகளை மன்னித்திருக்கலாம். எல்லோரும் தெரிந்து பிழைவிடுவதில்லை. விளக்கவின்மையும் தெளிவும் இல்லாமையே காரணம். சகோதரப் படுகொலைகள் நடைபெற ஆரம்பித்தபோது மக்களாவது தட்டிக்கேட்டிருந்தால் சிலவேளை புலிகள் திருந்தியிருக்கலாம். துப்பாக்கியால் மக்களிள் வாய்கள் பொத்தப்படும்போதே மக்கள் உணர்ந்திருக்க வேண்டும் இது சரியான விடுதலை அமைப்பா இல்லையா என்று. விடுதலை என்ற பெயரில் வளர்ந்த வளர்த்தெடுக்கப்பட்ட மாவியாக் கும்பல்தான் என்பதை இன்றைய நிலை உணர்த்தியுள்ளது. இன்னும் இப்படி பல எம்மத்தியில் உருவாகுவதற்குத் தயாராக உள்ளன. இவற்றை இனங்காண்பதற்கே இக்கட்டுரை முன்னுரிமை கொடுக்கிறது.

மாவீரர் தினத்தையோ பொங்குதமிழையோ ஒரு வெகுசனபோராட்ட நிகழ்வாகக் கொள்ள இயலாது. இது வெறும் வேடிக்கை மட்டுமே அன்றி வேறில்லை. மக்களை ஒரு போராட்ட சக்தியாக்கி அவர்களின் முன்னெடுப்புகளுக்கு பக்கபலமாக ஆயுதங்கள் இருந்திருந்தால் மக்கள் தமக்குரிய விடுதலையை வென்றெடுத்திருப்பார்கள். புலித்தலைமை முடிந்துவிட்டது புலிகள் அழிந்து விட்டார்கள் என்று நிம்மதியாக இருந்து விட இயலாது. தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் சுதந்திரம் உருவாகும் வரை போராட்டம் தொடரும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்தும் போராடவே பிறந்தன. ஒரு சின்னங்சிறிய வயிற்றுக்காக எறும்பு போராடுகிறது. நாம்…?

புத்திஜீவிகள் அன்று கொல்லப்படும் போது கைகட்டி மௌனியாய் சமூகம் இருந்தது. அன்று கூட ஒரு கண்டன ஊர்வலத்தையோ புலிகளுக்கெதிரான குரல்களையோ எழுப்பியிருந்தால் இன்று குறைந்தபட்சம் தமிழர்களுக்கு இந்த நிலைவந்திருக்காது. மக்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறும் அமைப்பு எப்போது மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்தது? அப்போது கூட மக்கள் ஏன் புலிகளை இனங்காணவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருந்தீர்களா? ஆகவே உங்களுக்கு இன்று கிடைத்த தண்டனை சரியானதா இல்லையா?

பிரோமதாசாவின் வேண்டுகோளுக்காவே அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்று அறியப்படுகிறது. சரி ஆயுதம் தாங்காது அரசியலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கிய திறமைசாலியான அமிர் கொல்லப்படும் போது கூட மக்களே வாய் மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள். அன்று துணைத்தளபதி அமிர்தலிங்கம் என்று வாயாரக்கத்திய உங்கள் வாய்கள் ஏன் அடைத்துப்போயின?

எதிரியென நீங்கள் கருதும் சிங்கள அரசுடன் புலிகள் சேர்ந்து பலசெயற்பாடுகளைச் செய்த போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? அப்போது தெரியவில்லையா புலிகளின் இயக்குதன்மை மாவியாக்கள் போல் அமைகிறது என்று? ஏன் இனங்காணவில்லை? எடுத்துக் கூறவில்லை. இன்று உள்ள கூத்தணிகளில் ஒருவரை விரல்விட்டுச் சுட்டிக்காட்டுங்கள் அன்றைய அமிருக்கு நிகராக இன்று வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ பேச்சுவார்த்தையையோ சட்டநுணுக்கங்களையோ அறிந்த அன்றி தமிழர்களின் நிலையை சரியான முறையில் எடுத்துரைக்கக் கூட ஒருமனிதரை? எல்லாவற்றுக்கும் காரணம் யாருமல்ல மக்களே நீங்கள் தான்..

மக்கள் மேல் குற்றச்சாட்டு
அப்பன் உழைத்துக் கொண்டுவர முழுக்குடும்பமும் சாப்பிட்டு வயிறாறும். அப்பன் இறந்தால் பெற்றோரின் பழிகளை சேர்த்து குடும்பவண்டியை இழுக்க மூத்தமகன் என்ற மாடு தயாராகி நிற்கும். குடும்பப் பெண்கள் பெண்கள் என்று யாரோ முன்பின்னறியா ஒருவனில் தங்கிவாழ பிறந்ததில் இருந்து தமிழ்பெண்கள் தயாராக்கப்படுகிறார்கள். இப்படியான ஒரு சமூகக் கட்டுமானத்தில் இருக்கும் மனிதர்களிடம் சுயசிந்தனையை எதிர்பார்ப்பது சரியா? இச்சமூகம் போராடும் குணாம்சங்கள் கொண்டதல்ல என்பதை புலிகள் அறிந்திருந்தார்கள்.

கலாச்சாரம் குடும்பம் என்று மற்றவர்களின் மூளையிலே சிந்திப்பார்கள். திருவள்ளுவர் சொன்னார், கம்பர் சொன்னார், லெனின் சொன்னார், மாக்ஸ், சே, மாவோ, தொல்காப்பியர், யேசு, புத்தன், கீதை என்று மற்றவர்களின் மூளையில் எம்மினம் சிந்தித்தது, வாழ்ந்தது வாழ்கிறது. எம்மக்கள் என்று புரட்சிகரமாக புதிதாக சிந்திக்கிறார்கள் என்ற நிலைவருகிறதோ அன்றுதான் எம்மக்கள் போராட்டத்துக்குத் தயாரானவர்கள் என்று கொள்ளலாம். எம்மக்கள் போராடத் தயாராக இருந்திருந்தால் புலிகள் பிள்ளை பிடிகாரர்களைப்போல் ஆள்பிடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எமது கலாச்சாரமும் சரி, அரசியல் போராட்ட சக்திகளும் சரி மக்களை சுயமாகச் சிந்திக்கவோ போராடவோ அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.

இன்றும் தலைவா உன்னைத் தலையென்று நம்பினோமே விட்டுவிட்டுப் போட்டாயே என்று ஒப்புச்சொல்லி மாரடிக்கும் நிலையில்தான் மக்கள் இன்றும் உள்ளார்கள். இவர்கள் போராட, தன்உரிமைகளை வென்றெடுக்க தயாரானவர்கள் என்று சொல்கிறீர்களா? பிரபாகரன் இறந்துவிட்டார் என்றதும் ஒரு சமூகமே ஆடிப்போய் ஏன் நின்றது? அடுத்து என்ன செய்வது என்று ஏன் முழிக்கிறது. இதை மறைக்க மீட்பர் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று நம்புகிறது. இது ஏன்? இது தன்னம்பிக்கை இல்லாத ஒரு சமூகத்தையே புலிகளும் மக்களும் அரசியலும் கட்டிவைத்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

புரட்சி என்பது புரளும் துப்பாக்கியான றிவோல்வர் போன்றவற்றில் இருந்து பிறப்பதல்ல. புரட்சியும் போராட்டகுணமும் மூளையில் இருந்தே பிறக்கிறது. துப்பாக்கி தூக்கும் ஒவ்வொரு போராளியின் மனத்திலும் நான் எதற்காகப் போராடுகிறறேன் என்ற தெழிவு இருக்கவேண்டும். புலிப்போராளிகளினது பல வாக்குமூலங்களை ஊடகங்களுடாகக் கேட்டும் போது பலதடமை வேதனைப்பட்டேன். ஆமிக்காரன் அடிக்கிறான் அனைப்கலைக்க வேண்டும். அண்ணை யோசிக்காதையுங்கோ நாங்கள் இருக்கிறம். சின்னப்புலிகள் சொன்னவார்த்தை இது. இவர்கள் நாட்டுக்காகப் போராடினார்களா? அண்ணைக்காகப் போராடினார்களா? இது ஒரு விடுதலை இயக்கமா? மாவியா கும்பலா?

போராட்டம் என்பது சமூக, பொருளாதார, சூழல் நிலைகளுக்கமைய மாறுபடும். ஒவ்வொரு கெறில்லாப் போராட்ம் என்றும் சூழல் காலநிலைகளுக்கேற்ப மாறுபட்டே ஆகும். சூழலுக்கு ஏற்ப போராடுபவன்தானே கெறில்லா? புலிகளும் புலம்பெயர்ந்த தமிழரிடம் போதிய பணம் வசதியுள்ளது என்ற சூழலை அறிந்து கொண்டுதான் போராடினார்களோ என்னவே? புலிகள் மக்களை தம்பதுங்கு குழிகளாகப் பாவித்தார்களே தவிர போராட்டம் சக்தியாக என்றும் பார்க்கவில்லை என்பதே உண்மை. அப்படி அவர்கள் மக்களைப் போராடுடம் சக்தியாகப் பார்த்திருந்தால் மக்களைப் போராடவிட்டுவிட்டு ஊக்கசக்தியாகவும் அவர்களைப் பாதுகாக்கும் சக்தியாகவுமே இருந்திருப்பார்கள். செய்தார்களா?

ஏன் இல்லை
ஒரு இறைமையுள்ள நாட்டில் இருந்த ஒருபகுதி பிரிந்துபோவதற்கு பலவரையறைகள் உண்டு. அதற்கு வெளிநாடுகளின் அனுசரணை என்பது மிகமுக்கியமானது. அன்ரன் பாலசிங்கத்துக்கு கூட இது தெரியவில்லை என்றால் பாவம் பிரபாகரனுக்கு இதுவற்றித் தெரிவதற்கு சந்தர்ப்பமே கிடைக்காது. தெருச்சண்டித்தனம் ஊர்சண்டித்தனம் போல் ஒருநாட்டைப் பிரித்துவிட முடியாது. உலகம் முழுவதும் தெருத்தெருவாய் கத்தினாலும் ஒர் இறைமையுள்ள நாட்டினுள் மற்றைய நாடுகள் தான்தோன்றித்தனமாக தமிழர்கள் கத்துகிறார்கள் என்பதற்காக ஊடுருவ முடியாது. அரசியலே தெரியாத புலிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் இது எப்படித்தெரியும்?

புலம்பெயர்நாட்டுத் தமிழ்பெற்றோரே
இனம் இனவுணர்வு, மொழி மொழியுணர்வு என்பது முக்கியமானதும் எம்முடையானானதுமாகும். ஆனால் உங்கள் பிள்ளைகள் சரியான முறையில் சரியான வழியில்தான் அரசியலையும் போராட்டத்தையும் புரிந்திருக்கிறார்களா என்பது மிக மிக முக்கியமானது.

இவ்வளவுகாலமும் இலங்கைக்குள் ஈழம் என்று விழுந்த கொலைகள் இனி……..? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டியது எனது கடன். முடிவெடுப்பதும் வழிநடத்துவதும் உங்கள் திறன்.

உலகக் கிண்ண 2 ஆவது அரையிறுதியாட்டம் இலங்கை – மேற்கிந்தியா இன்று மோதல்

muralitharan-sri-lankas.jpg20 ஓவர் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதியாட்டத்தில் இலங்கைமேற்கிந்திய அணிகள் மோதுகின்றன.  இந்த முறை கிண்ணத்தைக் கைப்பற்ற தீவிரமாக உள்ள இலங்கை அணி மேற்கிந்தியாவின் சவாலை எதிர்கொள்கிறது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதும் அணிக்குப் பலமாக அமைந்துள்ளது. துடுப்பாட்டத்திலும் அவர்கள் சிறப்பாகச் செயற்படுகின்றனர்.

அதேநேரத்தில் மேற்கிந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையோடு உள்ளது.

 மேற்கிந்திய அணியை வெல்வோம் – சங்கக்கார நம்பிக்கை

“ருவென்ரி20′ உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அணியின் கப்டன் குமார் சங்காக்கார தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்;

இலங்கை அணியின் இந்த வெற்றிகளுக்கு தொடக்க வீரர்களான டில்ஷான், ஜெயசூரிய ஜோடி முக்கிய பங்குவகிக்கிறது தவிர பந்துவீச்சில் லசித் மலிங்க, முரளிதரன், மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இக்கட்டான நேரங்களில் துல்லியமான பந்துவீச்சு வெற்றிக்கு நம்பிக்கையளித்தனர்.

இன்று ஓவலில் நடக்கவுள்ள அரையிறுதியில் மேற்கிந்தியாவை எதிர்கொள்கிறோம். இவர்களுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு சாதகமான விடயம். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இம்முறை இறுதியாட்டத்திற்கு முன்னேறி கிண்ணத்தை வெல்வோமென்று தெரிவித்தார்.

‘ருவன்டி-20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகியது – 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா தோல்வி

20-20pakisthan.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இத்தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியுறாது சிறப்பாக ஆடிய தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடியின் சிறந்த ஆட்டத்தால் தோல்வியடைந்ததோடு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பையும் இழந்தது.

நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அப்ரிடி 34 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் 150 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஜெக் கலிஸ் மற்றும் டுமினி ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடி முறையே 64,  44 ஓட்டங்களைப் பெற்றனர். எனினும் பந்துவீச்சிலும் திறமை காட்டிய அப்ரிடி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தென்னாபிரிக்க அணியின் முக்கிய இரு விக்கட்டுக்களைக் கைப்பற்றியதோடு துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த அப்ரிடி நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடும். 

தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் – ஈரான் விடயத்தில் தலையிடவில்லையென அமெரிக்கா அறிவிப்பு

president-ahamadinejad.jpgஈரான் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நேற்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்குத் தயாராகினர். தேர்தலில் தோல்வியடைந்த ஹுஸைன் மூஸாவி ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் கண்டித்து அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 07 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலியானோருக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அனைவரையும் கறுப்பு நிற ஆடைகளை அணியுமாறு ஹுஸைன் மூஸாவி கேட்டுள்ளார். அரச தொலைக் காட்சியொன்று ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த சனக் கூட்டத்தைக் காட்டியது. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக் காரர்களின் செய்திகளைத் திரட்டவோ அல்லது அவ்விடங்களுக்குச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைகேடாக நடந்தது. வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென மூஸாவியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பல நாட்களாக இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை மீறியும் வன்முறைகளும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வாக்குகளை மீள்எண்ணும்படி ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி உத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜன திபதியாக முடியாது. அஹ்மெதி நெஜாத், இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகியுள்ளார். இவரின் வெற்றியை ஹுஸைன் மூஸாவியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மூஸாவி ஈரானின் அமைதியைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது. ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடும் தேவையோ, நோக்கமோ எமக்கில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானில் நடப்பதை அவதானிக்கின்றோம். ஆனால் அதில் தலையிடவில்லையென ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். வாக்குகள் மீள எண்ணப்பட்டாலும் அஹ்மெதி நெஜாதே வெல்வார் என நம்பப்படுகின்றது.