கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ரணில் விக்கிரமசிங்க வீட்டில் எரியூட்டப்பட்டதாக கூறப்பட்ட எரியாத புத்தங்கள் – ரணில் வீடு எரிக்கப்பட்டது அரசியல் நாடகமா..?

இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்சவையும் – ரணில் விக்கிரமசிங்கவையும் பதவியிலிருந்து விலகுமாறு மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் அன்று நள்ளிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் எரியூட்டப்பட்டது.

எரியூட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தொடர்பான அனுதாப அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வீடு ரணிலின் ஒரே ஒரு வீடு. அஙங்கு சுமார் பழமையான 2000ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காணப்பட்டன. இந்த வீடு பாடசாலை ஒன்றிற்காக  வழங்கப்பட்ட வீடு என்றெல்லாம் அனுதாப அலைகள் வீசின.

இதன் போது நேற்றைய தினம் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட முன்பு அவருடைய வீட்டிலுள்ள புத்தகங்கள் எல்லாம் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்ட பின்ரே வீடு தீமூட்டப்பட்டதாக அந்த காணொளி நீள்கிறது. உண்மையில் புத்தகங்களும் – எந்த முக்கியமான ஆவணங்களும் ரணில் விக்கிரமசிங்க வீட்டிலிருந்து எரியவில்லை – எரிக்கப்படவில்லை.

எனினும் ரணில் விக்கிரமசிங்க வீடு எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பேசிய போது “ இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமக்கு இருந்த ஒரே வீடு இந்த வீடு என்றும் தற்போது அது எரிந்து நாசமாகிவிட்டதாகவும் அதில் சேகரிக்கப்பட்ட அனைத்து பெறுமதிமிக்க புத்தகங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க எதிர்பார்த்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் நுால்களே என்றும் போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் அதில் இருந்தன என்று ரணில் குறிப்பிட்டுள்ளார். அதனை விட பழங்காலத்து சித்திரங்களும் இருந்தன என தெரிவித்துள்ள ரணில்,  எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறு நடந்துகொள்பவர்கள் ஹிட்லரின் சிந்தனையைக் கொண்டவர்கள் என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

கடந்த போராட்டங்களின் போது சுமார் 30 ற்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்ட போதும் இந்த மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது எந்த வன்முறை சம்பவங்களும்  பெரிதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 9ஆம் திகதி போராட்டம் என்றவுடன் பிரதமர் இல்லமும் பாதுகாப்புக்குட்படுத்தப்பட்டது. ஆகவே வீட்டை எரிப்பதற்கான சந்தர்ப்பம் அரிதினும் அரிது.

No photo description available.

இந்த நிலையில் குறித்த வீடியோ சில கேள்விளை எழுப்பியுள்ளது..?

  • வீட்டை எரிப்பதற்காக வந்தவர்கள் எப்படி தேவையான புத்தகங்கள் – முக்கியமான புத்தகங்கள் – முக்கியமான ஆவணங்கள் என்பவற்றை கண்டுபிடித்து பத்திரப்படுத்திவிட்டு எரித்தார்கள் ..?
  • வீட்டை எரிப்பதற்காக வந்தவர்களுக்கு எப்படி இவ்வளவு கால அவகாசம் கிடைத்ததது..?
  • யாருடைய  வீடுகளும் எரிக்கப்படாத குறித்த நாளில் – குறித்த சூழலில் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு மட்டும் எரியூட்டப்பட்டது எப்படி..?
  • ஹிட்லரின் கூட்டம் என ரணில் கூறிய வன்முறை கூட்டத்துக்கு இந்த ஆவணங்கள் மீது மட்டும் என்ன தனிப்பட்ட கவனம்..?
  • வீடு எரிக்கப்பட்ட போது வீட்டில் யாருமே இல்லையே எப்படி..?

இப்படியாக விடை கிடைக்காத பல கேள்விகள்.

பசில் ராஸபக்ஷ, மகிந்த ராஸபக்ஷ ஆகியோர் பதவி விலகிய போது ராஸபக்சஆட்சி முழுமையாக கவிழ்ந்து விடும் அபாயம் காணப்பட்ட நிலையில் கோட்டாபாயவின்ஆட்சியை பாதுகாக்க ரணில் பிரதமராக பதவி ஏற்றார். கோட்டபாய அரசு மீதான மக்களின் கோவம் தன்னுடைய – தனது கட்சியினுடைய எஞ்சிய காலத்து அரசியலுக்கும் தடையாக அமைந்து விடும் என்பதால் மக்கள் அனுதாப அலையை தேடிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றிய திட்டமிட்ட நாடகமாக கூட இது இருக்கலாம்.

சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துளதாம் எரிந்த வீட்டின் எரியாத பக்கங்கள் தொடர்பில். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன இன்னமும் நடக்கப்போகிறது என.

ரணிலுக்கு சார்பான தென்னிலங்கை ஊடகங்கள் பலவும் ரணில் வீட்டில் எரிந்ததாக கூறி எரியாத  2500 புத்தகங்களை பற்றி பேசி ரணில் மீதான அனுதாப அலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த 2500 நூல்களை விட மிகப்பெறுமதியான சுமார் 90000 புத்தகங்களையும் – ஏட்டுச்சுவடிகளையும் கொண்டிருந்த ஆசியாவின் முக்கியமான நூலகமான நமது யாழ் நூலகம்   எரியூட்டப்பட்டதைப் பற்றி இந்த தென்னிலங்கை ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதே கிடையாது என்பதே உண்மை.

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா! ஜனாதிபதி கோட்டாவுக்கு முன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நிரந்தரமாகவே வீட்டுக்குப் போக வேண்டி வரலாம்!!

சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.

“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.

பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.

இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.

ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

“பெட்ரோல் செட்டில் பௌத்த பிக்குவின் அடாவடிக்கு அடங்கும் பொலிஸார்“ – தினமும் கால்கடுக்க காத்துநின்று ஏமாறும் சாதாரண மக்கள் !

கந்தளாயில் தமக்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கந்தளாயில் உள்ள மெதகம விகாரையின் விகாராதிபதி ஒருவரே இவ்வாறு எரிபொருள் நிரப்புமாறு கோரி இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்டார்.

பௌத்த துறவி தினமும் எரிபொருள் நிரப்புவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, எரிபொருள் நிரப்பமுடியாது என தெரிவித்ததையடுத்தே பௌத்த துறவி ரகளையில் ஈடுபட்டார்.

தமக்கு எரிபொருள் நிரப்ப முடியா விட்டால் இராணுவத்தினருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இராணுவத்தினருக்கு கடுமையான வார்த்தை பிரயோகங்களை பௌத்த துறவி மேற்கொண்டார்.

இதனையடுத்து பொலிஸார் துறவியை சமாதானப்படுத்தி எரிபொருள் நிரப்பினார்கள். வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் பௌத்த துறவியின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்தார்கள். இதனையடுத்து பௌத்த துறவி புறப்பட்டு சென்று விட்டார்.

………………………………….

இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பெற்றோலுக்கான தட்டுப்பாடு காரணமாக பல கிலோமீட்டர்கள் நீளத்துக்கு வரிசைகள் காணப்படுகின்றன. பல இடங்களில் மக்கள் 5 – 10 நாள் வரை காத்திருந்து 2 லீட்டர் பெற்றோல் பெறும் துர்பாக்கியமான சூழல் காணப்படுகின்றது. மேலும் பல இடங்களில் பல நாட்களாக தொடரும் பெட்ரோல் கரிசையால் 10க்கும் அதிகமானோர் இறந்து போன சோகங்களும் அரங்கேறியுள்ளன.

iftamil - இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை

மக்கள் கால் கடுக்க – மனது வலிக்க நீண்ட வரிசையில் நின்றும் கிடைக்காத இந்த பெட்ரோல் ஆளும் வர்க்கத்தினருக்கும் – சமய குறிப்பாக பௌத்த பிக்குகளுக்கும் – காவல்துறையினர் , அரச ஊழியர்களுக்கு இலகுவாக கிடைத்துவிடுகிறது.  பொலிஸார் தம் இஷ்டத்துக்கு ஏற்ப பெட்ரோலை பதுக்குகின்றனர். மேலும் பல அரச ஊழியர்கள் தமது தேவைக்கு மட்டுமன்றி தமது உறவினர்களின் தேவை தொடங்கி பல தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பயன்படுத்தி அடுத்தடுத்து – அடிக்கடி வந்து பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.

பாவம் சாதாரண மக்கள் ஏன் என்றும் கேட்க முடியாமல் – என்ன செய்வதென்றும் தெரியாமல் கால்கடுக்க காத்து நின்று மன உளைச்சளைடைவது மட்டும் தான் மிச்சம். இதே நேரம் தமது அலுவலகங்களுக்கு சாதாரண மக்கள் வரும் போது மட்டும் வரிசையில் நில்லுங்கள் – அமைதியாக இருங்கள் – என சட்டம் – ஒழுங்கு பற்றி பேசும் உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் என்பது எப்படியானது என்பதை இந்த பெட்ரோல் வரிசைகளுக்கு சென்று பார்த்தால் தெரிந்து விடும். நான் உயர் அதிகாரி என்னை முன்னுக்கு விடுங்கள் என கூறும் அதிகாரி ஒரு பக்கம் – நான் தான் இந்த பிரதேசத்தின் பிரதான அதிகாரி எனக்கு முதலில் பெட்ரோல் நிரப்புங்கள் என கூறி  மக்கள் நீண்ட நேரடமாக காத்து நிற்கும்  வரிசைக்கு நடுவில் நுழைந்து பெட்ரோல் நிரப்பும் அளவிற்கு இந்த அரச அதிகாரிகளின் மனோநிலை பூச்சிய அடைவில் உள்ளது என்பதே சோகம்.

அதே வரிசையில் எனக்கு முன்பு கத்தரிக்காய்களை மூடையாக கட்டிக்கொண்டு நின்ற அந்த விவசாயி எவ்வளவு கேட்டும் ஒரு லீட்டர் பெட்ரோல் கொடுக்க அங்கிருந்த காவல்துறையினரோ – பெட்ரோல் செட் ஊழியர்களோ யாரும் முன்வரவில்லை. பொறுமையிழந்த அந்த முதுமையான விவசாயி பைக்கை உருட்டிக்கொண்டே சந்தைக்கு சென்றுவிட்டார்.

நாளாந்தம் உண்பதற்கு சோறு போடும் விவசாயம் அத்தியாவசியமா – இந்த அரசாங்க அதிகாரிகள் வேலையே செய்யாது தேய்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்காலிகள் அத்தியாவசியமானதா என்றே தெரியவில்லை. இந்த அரச அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்யாததும் கூட இன்றைய நாட்டின் சீர்கேட்டுக்கு ஒரு காரணம்.

இந்த லட்சணத்தில் தான் ஒரே நாடு ஒரே சட்டம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

2009க்கு முன்பு வரை வடக்கில் தென்பட்ட இராணுவத்தின் கோர முகம் இன்று தெற்கிலும் – என்ன செய்ய போகிறார்கள் பெரும்பான்மை மக்கள் !

கார்ள்மார்க்ஸ் அரசு பற்றி குறிப்பிடும் போது “இந்த அரசும் அரச கருவிகளான இராணுவமும் – காவல்துறையும் முதலாளிகளையும் – ஆளும் வர்க்கத்தையும் பாதுகாப்பதற்கானதே தவிர மக்களை பாதுகாப்பதற்கானது அல்ல.” என குறிப்பிடுகின்றார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் கூட  இது அரங்கேறிவருகின்றது. இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் வருகின்றது.

இது இலங்கையில் எத்தனை காலம் கடந்து தென்னிலங்கையும் உணர ஆரம்பித்துள்ளது.

இன்று இலங்கை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்றை பற்றியதே இந்த பதிவும்.

குறித்த காணொளியில் இராணுவ உயர்நிலை அதிகாரி ஒருவர் பெட்ரோல் செட்ல் பெட்ரோல் பெற வந்த போது அவரை தனது காலால் ஓங்கி உதைத்து விழுத்துகின்றார்.

இங்கு இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படவேண்டியவை.

01. சாதாரண மக்களை பாதுகாக்க தானே இந்த இராணுவம் பாதுகாப்பு எல்லாம். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது..?

02.இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்க கூடிய  பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளிலேயே மக்களுக்கு இந்த நிலை என்றால் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் இந்த இராணுவ அதிகாரம் எத்தனை வன்முறையான தாக இருக்கும்..?

இந்த இரண்டு விடயங்களும் மிக ஆழமாக நோக்கப்பட வேண்டியவை. இதே இராணுவ வீரர்கள் தானே 2009 லும் சரி இன்று வரையும் சரி உதைத்து வீழ்த்தப்பட்ட அந்த பிரஜையின் மக்கள் குழுவின் ஹீரோக்களாக மதிக்கப்பட்டவர்கள். இன்று இந்த இராணுவத்தின் உண்மை முகத்தை பெரும்பான்மை சமூகத்து மக்கள் நேரடியாகவே புரிந்து கொண்டுள்ளனர். இதனையே பல சிங்கள சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டும் – குறிப்பிட்டும் வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து வெளியாகிருந்த ஒரு கார்ட்டூன் படம் கூட சிங்கள கார்ட்டூன் ஓவியருடையதேயாகும்.

 

தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இதனை ஒரு நகைப்பான விடயமாக பதிவிட்டு 69லட்சம் ஓட்டுக்களை நீங்கள் தானே கொடுத்தீர்கள். வாங்கி தொலையுங்கல். ஆனந்தமாக உள்ளது என கூறி பதிவுகளை இட்டுள்ளனர்.

உண்மையிலேயே நாம் எந்தளவுதூரத்திற்கு அரசியல் மயப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பதையே இது காட்டுகிறது. அரசபயங்கரவாதமும் – அரசு வன்முறையும் இராணுவத்தின் ஊடாக  யார் மீது பாய்ந்தாலும் அது தவறே. அதை கண்டிக்க வேண்டியதும் அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியதும்  அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் நம்மைப் போன்ற சிறுபான்மை இனங்களின் கடமையாகும். அண்மையிலும் இது போலத்தான். ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மார்பகங்கள் தெரிந்துவிட்டன என தமிழ்தேசிய அரசியல் பேசும் பலர் நகைப்புக்குள்ளாக்கி கூவித்திரிந்தனர். இதே நாம் தான் இறுதிப்போரில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான தமிழ்ப்பெண்களுக்காக நீதி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அடக்குமுறைகள் யார் மீது பாய்ந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்போம். அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

 

இந்த சந்தர்ப்பம் ஒரு வகையில் தென்னிலங்கை சமூகத்துக்கு வட-கிழக்கில் இந்த இராணுவத்தின் கோர முகம் எத்தகையதாய் இருக்கும் – இருந்திருக்கும் என்பதை உணர்த்தியிருந்தால் – இதை அவர்கள் உணர்ந்து கொண்டால் இன்னமும் ஆரோக்கியமான புரிதல் இலங்கையின் இனங்களுக்கு இடையில் வளரும்…!

 

தொடரும் பொருளாதார நெருக்கடி – வடக்கில் நாட்கூலிகளின் பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாகும் இலவச கல்வி !

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்பட்டுள்ள விவைாசி உயர்வானது நாளாந்த உணவுக்கான கையிருப்பையே சிதைத்து விடுகின்ற நிலையில் கல்வி எல்லாம் இரண்டாம் கட்டமாகிவருவதை பல பின்தங்கிய குடும்பங்களில் காண முடிகின்றது.
அண்மையில் கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஆசிரியர் ஒருவருடன் பாடசாலை மாணவர் நிலை பற்றி அறிய தேசம் இணையத்திலிருந்து தொடர்பு கொண்ட போது “ கிராமப்புறம் என்பதால் மட்டுமன்றி இங்குள்ள பல பிள்ளைகளுடைய பெற்றோர் நாட்கூலிகள். நாட்டின் விலையேறந்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளுக்கு காலை உணவு கூட வழங்க அவர்களுக்கு வழி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பிள்ளைகள் காலை உணவு உண்ணாமலேயே பாடசாலைக்கு வருகின்றனர். பல மாணவர்கள் காலைக்கூட்டத்திலேயே மயங்கி விழுந்து விடுகின்றனர். பசியோடு எவ்வாறு இந்த மாணவர்களால் 1.30 மணி வரை இருந்து கற்க முடியும். ஆரமப காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவு திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.” என வேதனையுடன் அந்த ஆசிரியர் பதிவு செய்திருந்தார்.
லட்சம் சிறுவர்களுக்கு உணவில்லையெனில்! - GTN
குறிப்பாக கிராமப்புறங்களில இந்த நிலை இன்னமும் இதிகமாகியு்ளதாக பாடசாலை அதிபர்கள்  பலரும் விசனப்பட்டுக்கொள்வதை காணமுடிகின்றது. கூலி வேலைககு போகும் தந்தை இருக்குமு் குடும்பங்களை கொண்ட பகுதிகளில் உயர்தரம் (12)  சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் (11) அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர் எனவும், ஏன் என வினவப்பட்ட போது தந்தையுடன் வேலைக்கு செல்வதாக மாணவர்கள் கூறியதாகவும் ஒரு பாடசாலை அதிபர் கூறியிருந்தார்.

இது போக பாடசாலை உபகரணங்களின் விலையேற்றம் இன்னும் மாணவர்களை திண்டாட வைக்கின்றது. சாதாரண அப்பியாசக்கொப்பி ஒன்றின் அடிப்படை விலை 100 ரூபாயை தொடுகின்றது. அப்படியானால் ஏனைய பொருட்களின் விலை..?  டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுதான் நேரம் என கருதி பல தனியார் கல்வி நிலையங்களும் காசு கொள்ளையில் முழு மூச்சுடன் ஈடுபடுக்கின்றன. தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும்  பெரும்பாலான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளின் ஆசிரியர்களே. கேள்விகளை பாடசாலை கரும்பலகையில் எழுதிவிட்டு விடை தேவை என்றால் தனியார் கல்வி நியைத்துக்கு வரவும் எனக்கூறும் நிலையே இன்னமும் வடக்கில் தொடர்கிறது. உயர்தரம் மற்றும் சாதாரண தர கற்கைகளுக்கு பாடசாலை கல்வி மட்டுமே போதுமானதாக இல்லாததால் தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டாயமாக போக வேண்டிய சூழல் உள்ள நிலையில் கலைப்பிரிவு மாணவர்களிடம் ரூபா 5000 வரை அறவிடப்படுகின்றது. அதே நேரம் விஞ்ஞான பிரிவு மாணவர்களிடம் ரூபா 10000 க்கும் மேல் அறவிடப்படுகின்றது.  பணம் உள்ள குடும்பங்களுக்கு சரி – இல்லாத – ஏழை மாணவர்களின் நி என்னவாகும்..?  இந்த ஆசிரியத்தை புனிதப்படுத்தும் பலரும் இதை கண்டுகொள்வதே கிடையாது. பொருளாதார நெருக்கடியில் இந்த ஆசிரியர்களின் சுரண்டல் இன்னமும் அதிகமாகி்கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் எரிபொருள் தட்டுப்பாடு வேறு. அரசாங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து ஏதோவொரு வகையில் பெற்றோல் கிடைத்துக்கொண்டே இருக்கறது. அவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றே படிப்பார்கள். ஆனால் தினசரி வேலைக்கு போகும் நாட்கூலிகளுக்கு பெற்றோல் இல்லை. இருந்தாலும் அதன் லீட்டரின் விலை 500 ரூபாய்.  நாட்கூலி 1500 ரூபாயில் பெற்றோல் போடுவதா – பிள்ளையை படிக்க வைப்பதா என்ற சூழலே வடக்கில் காணப்படுகின்றது.
யுத்தத்தின் கோர பிடியிலிருந்து ஓரளவு நிமிர்ந்து கொண்டிருந்த நமது சமூகமானது இன்று மீண்டும் பொருளாதார நெருக்கடியின் சுமையால் தனது கல்வி வாய்ப்பை இழக்க ஆரம்பித்துள்ளது.
எனவே விரைந்து செயலாற்றி மீண்டும் இந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்த – தொடர்ந்து கல்வி கிடைக்க வடக்குக்கான கல்வி அமைச்சின் நிறுவனங்களும் – கற்ற சமூகமும் – புலம்பெயர் தமிழர்களும் – குறிப்பாக தமிழ்தேசியம் என கூவித்திரிந்து கொண்டிருக்கும் வடக்கின் அரசியல் தலைமைகளும் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் –  இது தொடர்பில் அதீத  கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

தனியார் வகுப்பு – தனித்து வகுப்பு: கணக்கு ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்த போட்ட கணக்கு! முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரத்தில் கற்கின்ற 20 மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!!!

முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.

முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.

ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.

தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.

2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.

20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.

மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.

மார்பகங்கள் பற்றி ஆபாசமாக கிண்டல் செய்த சமூக வலைத்தளவாசிகளுக்கு என் மார்பகங்கள் தொடர்பில் பெருமைப்படுகிறேன் என பதிலளித்த ஹிருணிகா!

நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் ஏற்பட்ட  கைகலப்பில் ஹிருணி பிரேமச்சந்திரவினுடைய மார்பகங்கள் வெளித் தெரிந்ததாக  காணொளி ஒன்றை பதிவேற்றி சமூக வலைத்தளங்களில்  இளைஞர்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளவாசிகள் பலரும் பகிர்ந்து அதனை கேலியும் கிண்டலும் செய்திருந்தனர்.

 

இதுபோன்றுதான பதிவுகளை தமிழ் இளைஞர்கள் சிலரும் பகிர்ந்திருந்ததை  என்னுடைய முகநூல் கணக்கிலும் காண முடிந்தது. இன்றைய காணொளியை பகிர்ந்து – கிண்டலடித்த இளைஞர்கள் பலரும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் தொடர்பிலும் அப்போது அரங்கேற்றப்பட்டிருந்த பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் தொடர்பிலும் அதிகம் கோவப்பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். இது போக வித்யா படுகொலை நடந்தபோது கோவப்பட்டது போல தங்களை  காட்டிக்கொண்டவர்களாக கூட இவர்கள் இருக்கலாம்.  இதேபோன்றுதான் கேலியும் கிண்டலும் தன்இன பெண்ணுக்கு – தன் குடும்ப பெண்ணுக்கு நடந்தால் மட்டும் துடித்துப் போகும் நம்மவர்கள் அடுத்த வீட்டுப் பெண்களுக்கு என்ன நடந்தால் எங்களுக்கு என்ன என கிண்டல் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கேட்டால் அனைத்தையும் நகைச்சுவை என கடந்து போகின்றனர். இப்படியான சின்னச்சின்ன நகைச்சுவைகள் தான் பெண்கள் மீதான அடக்கு முறைகளின் ஒட்டுமொத்தமான வடிவம் என்பேன்.

இதற்கு நான் அளிக்கும் பதிலை விட ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வழங்கியுள்ள பதில் இவர்களுக்கு சாட்டையடி போல இருக்கும் என நம்புகிறேன். அவருடைய பதில்.

“I am proud of my breasts! I breastfed three beautiful kids. I nurtured them, comforted them and dedicated my whole body for them. I am sure people who make fun of my exposed breasts ( due to the clash with the police) also sucked thier mothers nipples until its raw when they were infants.

Anyway when you are done talking, making memes and laughing about my breasts , there was ANOTHER civilian died in a queue… Just so you know!

#ආසියාවේආශ්චර්‍ය් #GoHomeGota2022”

“எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!”

– ஹிருணிகா பிரேமச்சந்திர

 

“இன்றைய உணவுக்கு அரிசி இல்லாவிட்டால் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” – யாழில் கடை முதலாளியின் நெகிழ்ச்சியான செயல் !

இலங்கையில் நாளுக்கு நாள் உணவு தொடர்பான நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சில இடங்களில் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு உணவு பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் மாதமளவில் இலங்கை இதை விட பாரிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு சேமிப்பு தொடர்பில் இலங்கை மக்கள் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

 

இந்த கடினமான நேரங்களில் சில சில மனிதர்கள் இன்னொருவரினை புரிந்து கொள்வதே கடினமான விடயம் என்ற நிலை இருக்கையில் அடுத்தவருக்காக உதவிக்கரம் நீட்டுவது எல்லாம் பாராட்டப்பட வேண்டியவை.

 

பொருட்களின் விலை நாளுக்கு உயர்கிறதோ இல்லையோ – பல கடை முதலாளிகள் தங்களுடைய உழைப்புக்காக பொருட்களின் விலையை மலையளவுக்கு உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இவர்களுக்குள் சிலரிடம் இன்னமும் மனிதாபிமானம் உயிரப்புடன் உள்ளது என்பதை காட்டுவது போல சாவகச்சேரி – பாலையடி பகுதியில் கடைவைத்துள்ள முதலாளி ஒருவர் செய்த செயல்தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டிருந்ததது.

 

May be an image of outdoors

கடைமுதலாளி ஒருவர் தன்து கடையின் முன்னால் அரிசியை ஒரு பெரலில் வைத்துவிட்டு “இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” என ஒரு அறிவிப்பையும் பலகையில்  விடுத்துள்ளார்.

சமகால பொருளாதார நிலையில் அடுத்தவனை பற்றியே சிந்திக்காது ஓடிக்கொண்டிருக்கும் பலருக்குள் குறித்த கடைமுதலாளியின் செயல் பலராலும் பாராட்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.

முட்டாள்களிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் – பெற்றோல் வரிசைகளில் முடங்கும் நாட்டின் ஊழியப்படை !

கடந்த இரு தினங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கான வரிசை, உணவுக்கான வரிசை, என பார்க்கும் இடமெங்கும் வரிசைகளே தொடர்கின்றன. பல இடங்களில் எரிபொருளுக்காக நின்ற இளைஞர் குழுக்களிடையே மோதல்கள்.அரச அதிகாரிகள் தொடங்கி தனியார்துறை ஊழியர்கள் என அனைவரும் பெற்றோல் செட்களில் கிடையாக கிடக்கின்றனர். நேற்றைய தினம் பெற்றோலுக்காக நான் சுமார் 12 மணிநேரங்களுக்கு மேலாக காத்திருந்தும் பெற்றோல் இல்லை. வந்த பெற்றோலும் பணம் உள்ளோருக்கும் – அதிகார வர்க்கத்துக்கும் போய் விட்டதாக வரிசையில் நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
தலைமன்னாரில் நாள் முழுக்க மண்ணெண்ணெய்க்காக காத்து நின்ற மக்களுக்கு அதனை கொடுக்காமல் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் பின்புறமாக கொடுத்திருக்கிறார் பெற்றோல் செட் முகாமையாளர்.
மூவர் வரிசையில் நின்றே உயிரிழப்பு.
கடந்த இரு நாட்களில் பெற்றோல் செட்களில் பல மணிநேரம் வரிசையில் நின்றதால் மூவர் வரை மரணம். அதிலும் நேற்று ஒரு வீடியோவை காணக்கிடைத்தது. தந்தை பெற்றோலுக்காக ஆட்டோவுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மகன் பெற்றோலுக்காக மோட்டார்சைக்கிளுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட காத்திருப்பு முடிவில் ஆட்டோவில் காத்திருந்த தந்தை இறந்துவிட்டார். இது தெரியாத மகன் அப்பா அப்பா என் தட்டியெழுப்பியும் அவர் எழவில்லை. இறந்தவரின் தலை கீழே விழ மகன் உடைந்து போய் அழுதுகொண்டே கீழே உட்கார்ந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்த்தது முதல் அவ்வளவு வேதனையாக இருந்தது. https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0EUUPndwrY5aPi5YxADHTHX9yTQek8fR8h2mFD3FhSLXBnZuEB5RCRZy58rRk7bAGl&id=100006710538212
உண்மையில் நாம் மிக நெருக்கடியான சூழலை நெருங்கிகொண்டிருக்கிறோம் என்பதையே கடந்த இரண்டு நாட்கள் தெளிவாக எனக்கு காட்டியுள்ளன.
மருத்துவமனைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இப்படியாக நாட்டினுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
கடந்த பல தினங்களாக இலங்கையின் பெட்ரோல் செட்களில் லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அங்கு இலங்கை மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட நாளாந்தம் தொழிலுக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பெட்ரோல் செட்களில் மட்டுமே காத்துக்கொண்டிருந்த நாட்டினுடைய நாளாந்த வருமானம் என்னவென்பதை அரசாங்கம் நினைத்திருக்கவில்லை.  இது தொடர்பில் எந்த ஒரு ஆக்கபூர்வமான கருத்தையும் கூட இதுவரையில் அரசாங்கம் வெளியிட்டு இருக்கவில்லை.  அரசாங்கமும் அது சார்ந்த அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த ஒரு கவனமும் எடுக்காது இன்னமும் கடன் வாங்குவது தொடர்பில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த நிலைக்கு யார் காரணம்..?
ஒரு படிப்பறிவில்லாத சாதாரண நாட்கூலி வேலை செய்பவர்கள் கூட தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது. இந்த மாதத்துக்கான செலவுக்கு எவ்வளவு தேவைப்படும். வரவு எவ்வளவு..? செலவு எவ்வளவு..? மேலதிக செலவை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? மேலதிக செலவை ஈடு செய்ய என்னென்ன வழிகளில் உழைக்க வேண்டும். கையில் உள்ள பணத்தை மாதம் முடிவுவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல கோணங்களில் சிந்தித்து தன்னுடைய குடும்பத்தை கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்தத் திட்டமிடல்கள் ஓரளவுக்கேனும் இருப்பதாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் கூட  சாதாரண குடும்பங்கள் ஓரளவேனும் தாக்கப்பிடிக்கின்றன.
ஒரு சாதாரண பிரஜையிடம் – இந்த நாட்டின் சாதாரண கூலித் தொழிலாளியிடம் இருக்கக்கூடிய இந்த திட்டமிடல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாமையை இன்றைய பிரச்சனைக்கான ஒட்டுமொத்த காரணமாகும்.
பிரச்சினைகளுக்கான காரணம் அரசியல்வாதிகளே !
சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இன்று பொருளாதார நெருக்கடி சார்ந்து நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் பொறுப்பற்ற அரசியல் தலைவர்களே.! இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பதவியில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்.
மக்களின் உளவியல் நிலை மனோநிலை பற்றி கிஞ்சித்தும் யோசனை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் பதில்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் ஊடகங்களுக்கு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் “21ஆம் திகதியுடன் பெற்றோல் கையிருப்பு முடிந்துவிடும் அதற்குப் பிறகு இந்த நாட்டில் பெட்ரோல் இருக்காது.” எனக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு முட்டாள்தனமான ஒரு அறிவிப்பு இது. மக்களை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத அதிகார வர்க்கத்தின் ஒரு குரலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.
 பெட்ரோல் 21ஆம் திகதியுடன் முடிவடைந்த விடுகிறது என ஒரு அமைச்சர் அறிவித்தால் பாவம் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்..! வேறு வழியில்லை.  இரவு பகலாக காத்திருந்தேனும் அந்த பெட்ரோலை பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களின் உடைய ஒரே நோக்கமாக இருக்கும். இன்று பெட்ரோல் செட்களின் நிரம்பி வழியும் இந்த கூட்டத்திற்கு இந்த அமைச்சரின் அறிவிப்பே காரணம்.
அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் அறிவு தொடர்பாக அழிவு தொடர்பில் ஆருடம் கூற பதவியேற்றுக் கொண்ட ஜோசியர் போலவே அவரைக் காண முடிகின்றது. “இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – எல்லாப் பொருட்களின் கையிருப்பு முடிந்துவிட்டது – கடனுதவி கிடைக்க பல மாதங்கள் செல்லும்.” என மக்களை மேலும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கருத்துக்களையே அவர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மக்களை தெரியப்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் பிரதமர் என்ற நிலை எவ்வளவு கனதியான பொறுப்பில் உள்ளார் ரணில். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவதை இந்த அரசினுடைய நோக்கம் போல தோன்றுகிறது. இவ்வளவு நாள் ராஜபக்சக்கள் விலகி விட்டால் நாடு செழித்து விடும் என போர்க்கொடி தூக்கி கொண்டிருந்த கோட்டகோகம போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க வந்ததும் என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் ரணில் உள்ளாரா..? என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.
உள்ளதே  உணவு பற்றாக்குறை – எரிபொருள் தட்டுப்பாடு – சமையல் வாயு இல்லை என பல பிரச்சினைகளால் நொந்து துவண்டு போயுள்ள மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலின் தேவை அவ்வளவு அவசியமாக உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில்  உணவுத்தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தற்கொலைகள் நடந்தேறிவிட்டன. விரைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.
சரி என்னதான் தீர்வு..?
கடன்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய இறுதியான தருணத்தில் தற்போதைய தலைவர்கள் உள்ளனர். சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மட்டுமே நாட்டை முன்னேற்றும் என்ற ஒரு மாய பிம்பத்தை இலங்கையின் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். சரி வாங்க கூடிய கடன்கள் பற்றிய தெளிவு புரிதலாவது உள்ளதா எனக் கேட்டால் அதுவும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கை சர்வதேசநாணயநிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்பாலும் சலுகையற்ற கடன்களாகவே காணப்படுகின்றன. இந்த சலுகையற்ற கடன்களுக்கு வட்டி வீதமும் அதிகமாகும்.  மேலும் இந்த சர்வதேச அமைப்புகளிடமிருந்து நாம் பெறக்கூடிய கடன்கள் கூட தற்காலிகமாக ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியனவே தவிர பெரிதான மாற்றங்களை தரமாட்டாது. ஏனெனில் கடன்கள் அவ்வளவு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புக்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் எங்களுடைய எதிர்கால தலைமுறையை முழுமையாக மீண்டும் வெள்ளைக்கார நாடுகளுக்கு அடிமையாக்கிவிடும் என்பதே உண்மை.
எங்களுடைய தலைமுறையும் சரி எங்களுக்கு முன்னைய தலைமுறையினரும் சரி முழுமையாக கேள்வி பதில் வினா விடை அமைப்புக்கு பழக்கப்பட்டு விட்டோம். அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படக் கூடிய கல்வியில் பொருளியல் சார்ந்த விஷயங்கள் அடிப்படையிலிருந்தே கற்பிக்கபடுதல் வேண்டும். பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அப்போது மட்டுமே அந்த மாணவர்கள் பின்னாட்களில் வாக்காளர்களாக மாறுகின்ற போது அல்லது அரசியல் தலைவர்களாக மாறுகின்ற போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்க கூடிய பக்குவத்தை உருவாக்க முடியும். தேவையே இல்லாமல் யாரோ அரசன் மூன்று திருமணங்களை செய்து கொண்டார் – ஒரு அரசிக்கு 15 திருமணங்கள் நடந்தன என்றெல்லாம் மாணவர்களுக்கு கற்பித்து கொண்டிருக்கக்கூடிய பாடத்திட்டங்களுக்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் உடன் கூடிய கல்வி முறையை வழங்க முன்வரவேண்டும். விவசாயக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு தற் சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.   இப்படியாக கல்வித்துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களுக்கு சிறப்பான அத்திவாரமாக அமைய வேண்டும் என்பது எதிர் வரக்கூடிய அரசாங்கங்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.
இனவாதம் சார்ந்த பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு ஒற்றுமையோடு அனைத்து இனத்தவர்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இணைவது காலத்தின் கட்டாயமாகிள்ளது. மலேசியா,  சிங்கப்பூர் , குவைத் போன்ற நாடுகளின் பொருளாதார முறைமைகளை நமக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் எல்லாம் ஆட்சி மொழியாகவும் மதமாகவும் பிரதானமான ஒரு மதமும் மொழியும் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும்கூட எல்லா இனத்தவர்களையும் இணைத்துக்கொண்டு பயணப்படக்கூடிய பொருளாதார கட்டமைப்பு ஒன்றை காணமுடிகின்றது. இதுவே இன்றைய கால இலங்கைக்கும் அத்தியாவசியமானது.
மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அரசியல் தலைவர்களை இனிமேல் சரி மக்கள் தெரிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனவாத அரசியலை பேசிப்பேசியே இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் இந்த அரசியல் தலைவர்கள்.
வடக்கு- கிழக்கில் உள்ள  தமிழ்தேசிய கட்சிகளின்  தலைவர்கள் கூட – பாராளுமன்ற உறுப்பினர்களும் தான் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமிழர்களிடம் நாட்டை அளியுங்கள் அவர்கள் இலங்கையை மீட்டுத் தருவார்கள் என்றெல்லாம் இன்னமும் பழைய புலி அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீங்க கூடாது அதில் நீங்குவதில் இவர்களுக்கு இம்மியளவும் உடன்பாடு இல்லை. நுனி நாக்கில் தேனும் அடி நாக்கில் விஷமும் போல இந்த தமிழ் தலைவர்களின் உடைய நகர்வுகள் அமைகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தாலே வெளிநாட்டில் பலருக்கு குடியுரிமை கிடைக்கும். அவ்வாறு வெளிநாட்டில் குடியேறியோர் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு பண உதவி தொடங்கி அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவர். இப்படியாக இவர்கள் பேசக்கூடிய தமிழ் தேசியத்திற்கு பின்னாலேயே நூற்றுக்கணக்கான சுயநல அரசியல் புதைந்து போய் உள்ளது. இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழர்களுக்கு ராஜபக்சக்கள் செய்த கொடுமைகளை இலங்கை அனுபவிக்கிறது என்றெல்லாம் கடந்துவிட முடியாது. ஏனெனில் இங்கு எங்களுடைய தலைமுறையினரும் – எங்களுடைய பெரியவர்களும் – எங்களுடைய எதிர்கால சிறுவர்களும் கூட நடுத்தெருவில் தான் எரிபொருளுக்காகவும் பெற்றோலுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒன்றாய் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது பற்றி சிந்திப்பதே இன்றைய காலத்தின் ஆகப்பெரிய தேவையாகும்.

மனித உரிமையும் ஜனநாயகமும் தனிச்சொத்துடமை என்கிறாரா பாண்டிபஜார் போராளி ராகவன்? இலக்கிய விமர்சகர் வாகீசன்

திரு.சின்னையா ராஜேஸ்குமார்(ராகவன்) அவர்களுக்கு,
‘தேசம்நெட்’ இதழில் வெளியாகியிருந்த ‘தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்’ என்ற எனது கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த தாங்கள் என்னை நோக்கி “எனது பெயரைக் கூடக் குறிப்பிட திராணியற்று என்னை பாண்டிபஜார் போராளி என்று கூறி என் மீது அவதூறு பரப்புகிறார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவரும் அறிவார்கள் கடந்த 2 வருடங்களாக தாங்களும் தங்களது இலண்டன் இலக்கியவாதியாகிய ஒரு நண்பரும் சேர்ந்து எனக்கு ‘தோழர் உஉ’ என்ற பட்டத்தை வழங்கி (நான் ‘உண்மைகள் உறங்குவதில்லை’ என்ற கட்டுரையொன்றினை எழுதியபடியால்) அந்தப் பெயரிலேயே என்னை நோக்கி செய்த அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்குரிய Screenshot எல்லாம் என்னிடம் ஆதாரமாக உண்டு, வேண்டுமானால் பதிவிடத்தாயார். அப்போதெல்லாம் உங்களுக்கு எனது பெயரைக் குறிப்பிட திராணி இருக்கவில்லையா ??? எவ்வளவு கேவலமாக எல்லாம் என்னை விழித்திருந்தீர்கள். விஷப்பாம்பு என்றீர்கள். விஷக்கிருமி என்றீர்கள். ஒரு மனநோயாளி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர் என்றீர்கள். அவதூறு என்பது உங்கள் போன்றவர்களுக்கு எல்லாம் இரத்தத்தில் ஊறிப் போன விடயம்.
நிற்க, இலண்டன் வந்த சபாலிங்கத்தை நீங்கள் சந்திக்க மறுத்ததாக நான் கூறிய விடயத்தை மறுத்த நீங்கள் “சபாலிங்கத்தை நான் சந்திக்க மறுத்ததாக அப்பட்டமான பொய் ஒன்றை உதிர்த்திருக்கிறார். சபாலிங்கம் எனக்கு சிறு வயதிலே பழக்கமானவர். எனது ஊர்க்காரரை தான் திருமணம் செய்து கொண்டார். அவரும் புஸ்பராஜாவும் லண்டன் வந்து என்னை சந்தித்து உரையாடினர். அது பற்றி ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் புத்தகத்தில் புஸ்பராஜா படத்துடன் பதிவு செய்துள்ளார்.” என்று ஒரு அப்பட்டமான பொய்யினைக் கூறி புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற புத்தககத்தில் இருந்து ஏதோ இரண்டு பக்கங்களை Photocopy செய்து பதிவேற்றி மக்களை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண முகநூல் வாசகன் இதையெல்லாம் check பண்ணி பார்க்க மாட்டான் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இப்படி ஒரு மாபெரும் மோசடியைச் செய்துள்ளீர்கள்.
இப்போது நான் குறிப்பிடுகிறேன். எனது கையில் உள்ள ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் (இது 2ம் பதிப்பு) 590 ம் பக்கத்தில் (இந்தப் புத்தகத்தின் 1வது பதிப்பில் 560ம் பக்கம்) உங்களைச் சந்தித்தது பற்றி புஷ்பராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்
“—அதன் பின்பு 1993 ம் ஆண்டு நவம்பரில் லண்டனில் சந்தித்தேன். நீண்ட காலத்திற்கு பின் சந்தித்ததால் பல விடயங்கள் பேச வேண்டி இருந்தது. இருவரும் நீண்ட நேரமாகப் பேசினோம்—-“. இதில் சபாலிங்கம் குறித்தோ அல்லது சபாலிங்கத்துடன் அவர் உங்களை வந்து சந்தித்தது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. இப்போது பகிரங்கமாக உங்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். நீங்கள் கூறியபடி சபாலிங்கத்துடன் வந்து உங்களைச் சந்தித்ததை புஷ்பராஜா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்றால் அது நீங்கள் வைத்திருக்கும் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்தில் உள்ளது என்ன கூறியிருந்தார் என்று பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா ??? முப்பது வருடங்களாக மக்களை ஏமாற்றியது போதும். நிறுத்திவிடுங்கள். இனியாவது தயவு செய்து மனந்திரும்புங்கள்.
._._._._._.
அசோக் யோகன் கண்ணமுத்துவின் பதிவில் இருந்து…
 
நண்பர் சபாலிங்கம் தமிழிழ விடுதலைப்புலிகள் தொடர்பாக ஒரு ஆவணம் எழுத எண்ணி, பல தரப்பினரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த காலம் அது. சபாலிங்கம் புலிகளால் 1994 ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவ் ஆவண முயற்சி தொடர்பாக இராகவனை சந்தித்து உரையாட லண்டன் சென்றிருந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து இராகவனோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றும், அவரால் முடியவில்லை. இராகவன் பக்கத்திலிருந்து எந்த தொடர்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றதோடும், இராகவன் மீது கடுங்கோபத்தோடும் பிரான்சிக்கு திரும்பியிருந்தார்.
 
இந் நிகழ்வு சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. லண்டனில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் இது தெரியும். இச் சம்பவம் எனக்கும் சபாலிங்கம் ஊடாக தெரிந்திருந்தது.
இராகவனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இச் சம்பவம் தொடர்பாக கேட்டிருந்தேன். சபாலிங்கம் லண்டன் வந்து, புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததன் காரணமாக, சபாலிங்கத்தை தான் சந்திக்கவிரும்பவில்லையென்று என்று கூறினார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நண்பர் சபாலிங்கம் அவர்களின் நினைவுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இராகவன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் மீது மரியாதை கலந்திருந்த காலகட்டம்.
 
இந்த தலைமை தாங்கல் தொடர்பாக சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்கள் அதிருப்தியும், என் மீது கடும் விமர்சனங்களையும் கொண்டிருந்தனர்.
வாசன் இப் பிரச்சனையை எழுதிய போது, இராகவன் சபாலிங்கத்தை சந்திக்க விரும்பான்மைக்கான காரணத்தை (என்னிடம் சொன்னதை) சொல்லி இருக்கலாம். ஆனால், இதை மறைத்து, சபாலிங்கத்தை சந்தித்ததாக பொய் ஒன்றை கூறுகின்றார். தவறுகளை ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை பொய்மை , கபடம், மோசடி .. ?
 
இராகவன் தன்மீது வைக்கப்படும் நேர்மையான – உண்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவராகவே, புலிகளின் காலத்திலிருந்து இற்றைவரை தன் வாழ்வை தொடர்கின்றார்.
விமர்சனங்கள் வைப்பவர்களை மனநோயாளிகள் என்றும் அவதூறாளர்கள் என்றும் பட்டம் சூட்டி மகிழ்வது அவரின் உளவியல் மனப்பாங்காக இருக்கின்றது. இப் பட்டங்களை எனக்கும் அவர் அடிக்கடி தாராளமாக வழங்கி மனமகிழ்வு கொள்ளும் ஒரு மனநிலையை தொடர்ச்சியாக பேணுகிறார்.
இராகவன் அவர்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்; நாங்கள் இவ்வாறு முரண்பட்டு கொண்டிருப்பதை விடுத்து, நாம் எல்லோரும் சுயவிமர்சனங்களோடும், உண்மையோடும்- நேர்மையோடும் , பொது வெளி ஒன்றில் அனைத்து முரண்பாடுகளையும் பேசி உரையாடும் தளம் ஒன்றை உருவாக்குவோம். இவ் உரையாடலில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். நீங்களும் அவசியம் வரவேண்டுமென விரும்புகின்றேன்.