கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

உலகக்கிண்ண தொடர் தோல்வி – ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி ராஜினாமா !

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம்

மோசடிப் பல்கலைக்கிழகத்தின் துணைவேந்தர் – கலாநிதி செல்வின் குமார்

உலகத் தமிழ் பல்கலைக்கழகம் (யூஎஸ்ஏ) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பல்கலைகழகத்தில் ஆய்வாளர்களும் இல்லை. மாணவர்களும் இல்லை ஆனால் கலாநிதிப் பட்டம் வழங்கப் போகிறார்களாம். இன்றுள்ள மொழிகளிலேயே மூத்த மொழியாகவும் மக்களால் பரிபாஷிக்கப்படுகின்ற பயன்பாட்டில் உள்ள மொழி கடந்த 3500 ஆண்டுகளாக தன்னை நிலை நிறுத்தி வைத்துள்ளது. அம்மொழியின் பெருமையை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அதன் பெருமையை சிறுமைப்படுத்தாமல் ஆவது இருப்பதுவே சாலச் சிறந்தது. உலகத் தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் கடையைத்திற்ந்துள்ள ஒரு கூட்டம் தமிழ் கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் செயலில் இறங்கி உள்ளனர்.

அமெரிக்காவில் இயங்குவதாகக் கூறும் இயங்காத பல்கலைக்கழகம் ஒரு நூறுடொலருக்கு ஒரு இணையத்தை இயக்கிக் கொண்டு உலகத் தலைவர்கள் சிலரது படங்களையும் போட்டு சில பல்பலைக்கழகங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்விணையத்தளத்தில் இப்பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைக்கும் பல்கலைக்கழகங்களின் பகுதி இன்னமும் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான மழைக்கு முளைக்கும் காளான்கள் போன்ற இவ்வமைப்புகள் தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்துகின்றன. இதுவொரு மோசடியான பல்கலைக்கழகம் என இந்தியாவில் இருந்து வெளிவரும் தி ஹிந்து இணையத்தளமும் சுட்டிகாட்டியுள்ளது.

ஆரம்பப் பள்ளியைக் கூட இயக்குவதற்கு லாயக்கற்றவர்கள் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கின்றோம் என்ற பெயரில் ரீல் விட்டுக்கொண்டு தற்போது கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்போகின்றனராம். இந்த கௌரவ கலாநிதிப்பட்டம் என்பது இறால் போட்டு சுறா பிடிக்கும் தந்திரமாக மாறியுள்ளது. முகவரியற்ற இந்த உலகத் தமிழ் பல்கலைக்கழகம் முகவரியுள்ள சிலருக்கு ஆசைகாட்டி கலாநிதிப்பட்டம் வழங்குவதாகக் கூறி தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர். இந்த வலையில் லண்டனில் அறியப்பட்ட சில நல்ல தலைகளும் வீழ்ந்துள்ளது. அல்லது வீழ்த்தப்பட்டுள்ளது.

நவம்பர் 6ம் திகதி பிரித்தானியாவின் முக்கிய பலகலைக்கழகங்களில் ஒன்றான யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரில் இந்த கௌரவ கலாநிதப்பட்டம் வழங்கப்பட இருப்பதாக உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரின் ஹரோ கம்பஸில் நடைபெறும் இந்நிகழ்வுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இப்பல்கலைக்கிகத்தின் மண்டபத்தை வாடகைக்குப் பெற்றதைத் தவிர பல்கலைக்கழகத்திற்கு ஏதும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இது விடயமாக தேசம்நெற், யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரருக்கு ஒரு மின்அஞ்சலையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த மோசடிக் கலாநிதிப் பட்டத்திற்கு கொன்சவேடிவ் கட்சி அமைச்சர் போல் ஸ்கலி, லிபிரல் டெமொகிரட் கட்சிப் பா உ சேர் எட்டேவி பிரித்தானியாவின் முன்னணித் தமிழ் வழக்கறிஞர் அருண் கணநாதன், சட்ட ஆலோசகர் குலசேகரம் கீதார்தனன், கவுன்சிலர் பரம் நந்தா, ஈலிங் அம்மன் ஆலயச் செயலாளர் சொக்கலிங்கம் கருணைலிங்கம், அருணாசலம் ராஜலிங்கம், நாடுகடந்த அரசு சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகிய லண்டனில் அறியப்பட்ட நபர்களுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை விடவும் உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவி டாக்டர் சாந்தினி ஒமகாண்டம், ஏ ஆர் ரகுமானின் சகோதரி டாக்டர் ஏ ஆர் ரெகானா உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச இணைப்பாளர் டாக்கடர் எஸ் எம் ரஸ்மி ரூமி ஆகியோருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சிலருடன் தொடர்புகொண்ட போது அவர்கள் தங்களுக்கு மின் அஞ்சல் வந்ததாகவும் மேலதிக விபரங்கள் தெரியவில்லை என்றும் தங்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றின் அனுசரணையோடுதான் இந்த கௌரவப்பட்டம் வழங்கப்படுவதாக நினைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறான தோற்றப்பாடே அங்கு தெரிவிக்கப்பட்டது. இப்பட்டங்களை தமிழகப் பல்கலைக்கழகங்கள் கூட வழங்க முன்வந்திருக்வில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான மோசடியான கலாநிதிப் பட்டங்கள் தொடர்பாக என் செல்வராஜா “கலாநிதிகளும் கல்லாநிதிகளும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தர். தமிழர்கள் சிலர் இவ்வாறான மோசடியான பட்டங்களை காவிக்கொண்டு திரிவதன் மூலம் கல்வியைiயும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ‘கௌரவ கலாநிதிப்பட்டம்’ வாங்க அழைக்கப்பட்ட சிலர் தாங்கள் அதில் கலந்துகொள்வதுபற்றி முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். தங்களுடைய பெயர்களை ஒரு தலைப்பட்சமாக அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான மோசடியான பட்டங்களை கௌரவ கலாநிதி என்ற பெயரில் பெறுவதன் மூலம் அவர்கள் ஏற்கனவே பெற்ற கல்வித் தகமைகள் மீதும் சந்தேகம் ஏற்படும் நிலையை இப்பட்டங்கள் உருவாக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறான மோசடியான கல்வித் தகமைகளை நிரகரிப்பதும் ஒரு சமூகக்கடமையே.

இந்த கௌரவ கலாநிதிப் பட்டங்களுக்குப்பின் நாடுகடந்த அரசு இருப்பதாக நம்பப்படுகின்றது. நாடுகடந்த அரசு என்ற இந்தக் கருத்துரவாக்கம் கவிஞர் பேராசிரியர் சேரனால் முன்வைக்கப்பட்டு தற்போது இலங்கையில் கௌரவத் தடுப்புக்காவலில் உள்ள கே பி என்றறியப்பட்ட செல்லராசா பத்மநாதனால் (குமரன் பத்மநாதன்) ஏற்றுக்கொள்ளப்பட்டது. கெ பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுசெல்லப்பட விசுவநாதன் உருத்திரகுமாரனால் தற்போது இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த நாடுகடந்த அரசின் பிரதமராக உருத்திரகுமாரன் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து செயற்படுகின்றார். இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் பெறுபவர்களில் ஒருவரான சொக்கலிங்கம் யோகி நாடுகடந்த பிரதமர் அலுவலகத்தின் அமைச்சராக உள்ளார். நாடுகடந்த அரசு என்ற கருப்பொருள் ஆழமானதாக இருந்தபோதும் அதில் தங்களை எம்பிக்கள் அமைச்சர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் உள்ளடக்கமே இருப்பதில்லை. அதனால் நாடுகடந்த அரசு என்பது ஒரு கோமாளித் தனமாகவே பார்க்கப்படுகின்றது. சொக்கலிங்கம் யோகி தமிழர்களின் அகதி அந்தஸ்து விடயங்களில் நிறைய உதவுபவராக இருக்கின்றார். ஆனால் அவர் ஒரு அரசியல் உள்ளடக்கமற்றவராகவே கருதப்படுகின்றார். இந்த மோசடி காலாநிதிப் பட்டங்களுக்குப் பின் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் உள்ளது என்று தெரியவருகின்றது.

லட்சங்கள் சம்பளம் பெறும் பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதில்லை – பௌசர் : கூட்டத்தின் பின்னணியில் மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

இலங்கையில் உள்ள பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் உழைக்கின்ற போதும் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை வெளிக்கொணர்வதில்லை என லண்டன் புறநகர்ப் பகுதியான நியூமோல்டனில் நடைபெற்ற ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் பௌசர் தெரிவித்தார். வைத்திய கலாநிதி சி சிவச்சந்திரனின் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டின் போதே அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார். சி சிவச்சந்திரன் ஒரு மருத்துவ கலாநிதியாக இருந்தும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் ஆய்வுகளையும் தேடலையும் செய்து இந்நூலைக் கொண்டுவந்திருப்பதை பாராட்டிய பௌசர், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தைப் பெற்ற போதும் தங்கள் கடமைகளைச் செய்யாதிருப்பதையே பௌசர் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஓக்ரோபர் 30 காலை 11:00 மணிக்கு ஆரம்பமான நூல் வெளியீட்டில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வெளிவரும் ஆயிரக்கணக்காண நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த அ முத்துகிருஷ்ணனும் கலந்துகொள்டிருந்தார். அவருடைய மதுரை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்திய, “தூங்காநகர் நினைழவுகள் – மதுரையின் ழுழமையான வரலாறு” என்ற நூலும் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் தொடர்பான கனதியானதொரு அறிமுகத்தை ஆய்வாளர் மு நித்தியானந்தன் பதிவு செய்திருந்தார்.

‘கிழக்கு மண்’ நூல் வெளியீட்டு மறுநிர்மாணம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வுக்கு மாதவி சிவலீலன் தலைமை தாங்கினார். ஆனால் இந்நூல் ஆய்வை மேற்கொள்ளச் சம்மதித்திருந்த மயூரன் அம்பலவாணர், கௌரி பரா, பால சுகுமார் ஆகிய மூவரும் நிகழ்ச்சியின் போது சமூகமளித்திருக்கவில்லை. இவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு குறும் அரசியல் காரணிகள் காரணமாக இருந்ததா என்று மறுநிர்மாணம் குழுவிடம் கேட்ட போது அது தங்களுக்கு தெரியாது என அவர்கள் பதிலளித்தன். புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது மிகச் சிறிய வட்டமாக இருந்தாலும் அதற்குள்ளும் பல்வேறு நுண் அரசியல் சதுரங்கங்களுக்கு குறைவிருப்பதில்லை.

வழமையாக தமிழ் புத்தக வெளியீடுகள் நிகழ்வுகள் மிகத் தாமதமாகவே நடைபெறுவது வழமை. ஆனால் மறுநிர்மாணம் குழுவினர் குறித்த நேரத்துக்கு நிகழ்வை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டு நிகழ்வு வழமைக்கு மாறாக இருபது நிமிடங்கள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்கள் வராத குறையை தலைமை தாங்கிய மாதவி சிவலீலன் மிகச் சிறப்புற நூலின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுச்சென்று தலைமையுரையை ஒரு ஆய்வுரையாகவே மேற்கொண்டார். அவர் நூலை ஆழமாகவும் கவனமாகவும் வாசித்திருந்ததை அவரது தலைமையுரை ஆய்வுரை வெளிப்படுத்தியது. மட்டக்களப்பில் இருந்த கண்ணகி வழிபாடு பற்றி நூல் சொல்கின்ற விடயாத்தைக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கண்ணகி வழிபாடு இல்லாமல் போனது என்பதனையும் சுட்டிக்காட்டினார். கண்ணகி வழிபாடு தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து வன்னியூடாக மட்டக்களப்பிற்குச் சென்றதெனக் குறிப்பிட்ட அவர், ஆறுமுகநாவலர் ‘விதவைக்கு எதற்குக் கோயில்’, ‘வாணிபம் செய்தவளுக்கு என்ன கோயில்’ என்று சொல்லி கண்ணகி கோயில்களை மனோன்மனி அம்மன் என்றெல்லாம் அம்மண் கோயில்களாக்கினார் எனச் சுட்டிக்காட்னார்.

கோயில் திருவிழாவில் மேளக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர்கள் வரவில்லை என்றால் நித்திய மேளம் அடிப்பவரை வைத்துத்தான் விழாவைச் சமாளிக்க வேண்டும், நான் தான் இன்றைக்கு நித்திய மேளம் என்று பௌசர் நகைச்சுiவாயாக நிகழ்ச்சியை ஆரம்பித்து நூல்பற்றிய விபரங்களுக்குள் சென்று வந்தார். ‘கிழக்கு மண்’ மட்டக்களப்பின் வரலாற்றைச் சுரக்கமாகச் சொல்வதோடு மட்டக்களப்பு பற்றிய அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நூலாசிரியர் சி சிவச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பின் ஊர்ப்பெயர்களும் அதற்கான காரணங்களும், அங்குள்ள பேச்சுத் தமிழ், சமூக சாதிய அமைப்புகள், சடங்குகள், கலைவடிவங்கள், விளையாட்டுக்கள், சமய வழிபாட்டு முறைகள் எனப் பல்வேறு அம்சங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றுள்ளது.

மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

என்னதான் கூட்டம் நடைபெற்றாலும் கூட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் தான் மிகுந்த சுவாரசியமானதக இருக்கும். அந்த வகையில் இந்தக் கூட்டத்தில் மயூரன் அம்பலவாணர் கூட்டத்தின் முன்னும் பின்னுமான பேசுபொருளாகி இருந்தார். மயூரன் அம்பலவாணர் தலைமைச் செயலகத்தின் செயற்பாட்டாளராக முன்னர் அறியப்பட்டவர். தற்போது இந்தியாவுடன் பிஜேபியுடன் அவர்களின் தீவிர வலதுசாரிப் பிரிவான சிவசேனாவுடன் இவர்சார்ந்த குழுவினர் நெருக்கமாகிவிட்டனர். இதனால் இவரைச் சர்ச்சைக்குள்ளாக்க நாடுகடந்த அரசினரும் ரிசிசி என்கின்ற தமிழ் சமூக மையமும் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் புத்தக வெளியீட்டுச் சூழல் அவர்களுக்கு சாதகமில்லாததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் மயூரன் அம்பலவாணரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரேயே அங்கு வந்திருந்தார்.

மயூரன் அம்பலவாணர் வந்ததும் அவரும் அவருடைய நண்பரும் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவேற்றிய செய்திகள் தொடர்பாக மாதவி சிவலீலன் தம்பதிகள் கேள்வி எழுப்பினர். மயூரன் அம்பலவாணரிடம் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக மாதவி சிவலீலன் தம்பதிகள் சரமாரியாக ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த ஆக்கிரோசத்துடன் கேட்டனர். மயூரன் அம்பலவாணர் மௌனமாகவே நின்றிருந்தார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘பிரபா’ என்ற நபருக்கு எதிராக முகவலைத் தளத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அந்நபர் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே அவர் வெளியே வந்ததாகவும், வெளியே வந்தும் பெண் போராளிகளைக் காட்டிக்கொடுப்பேன் என மிரட்டி அவர்களை பாலியல் ரீதியில் சுரண்ட முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்பதிவுகளில் ஒன்றில் மாதவி சிவலீலனுடன் அவர் வீட்டில் வைத்து மயூரனுடனும் அவருடைய நண்பர் ஒருவருடனும் உரையாடிய விடயமும் அச்சொட்டாக எழுதப்பட்டிருந்தது. அதை வைத்தே அப்பதிவை மயூரன் அம்பலவாணரே மேற்கொண்டார் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டது. மாதவி சிவலீலன் தம்பதியருக்கு பிரபா என்ற தூரத்து உறவுள்ள ஒருவர் இருந்தார். ஆனால் மயூரன் அம்பலவாணர் குறிப்பிட்ட பிரபாவும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்காரப் பிரபாவும் ஒருவர் அல்ல. அது முற்றிலும் இரு வேறு நபர்கள். ஆனால் மயூரனும் அவருடைய நண்பரும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்கார பிரபாவே தாங்கள் குற்றம்சாட்டும் நபர் என்று சொல்லி மாதவி சிவலீலனின் குடும்பத்தாரையும் அவர்களின் உறவான பிரபாவையும் அவருடைய தாயாரையும் பற்றி கீழ்த்தரமான பதிவுகளை ஜேவிபி நியூசில் வெளியிட்டனர். தன்னுடைய வீட்டில் வைத்து தான் நம்பிக்கையோடு தேநீர் உணவு பரிமாறிய பின் தங்களுக்கு தெரியாமலே தங்கள் உரையாடலை ஒலிப்பதிவு செய்தது நம்பிக்கைத் துரோகம் என மாதவி சிவலீலன் தம்பதியினர் மயூரன் அம்பலவாணரைச் சாடடினர்.

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் பா உ சிறிதரனுக்கு எதிரானவர்கள் அவ்விணையத்தளத்தில் பழிவாங்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் மயூரன் அம்பலவாணர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் பா உ சிறிதரனுடன் தேன்நிலவு கொண்டாடிய காலம். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசுவினால் எழுதப்பட்ட நூலை வெளியிட்ட நிகழ்வுகளும் அக்காலகட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்கான அனுசரணையை மயூரன் அம்பலவாணரும் அவருடைய நண்பர்களும் வழங்கி இருந்தனர். நூல் வெளியீட்டு நிகழ்வை இவர்களுக்காக பா உ எஸ் சிறிதரன் மற்றும் முன்னாள் பா உ, மா உ பிரேமச்சந்திரனும் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான பெரிய அரசியலும் சில்லறைத் தனங்களும் தமிழ் அரசியலுக்குள் கொட்டிக்கிடக்கின்றது.

 

சிறுவர்களின் அழகான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகும் தொலைபேசிகள் – பெற்றோர்களே விழித்துக்கொள்ளுங்கள். !

அண்மையில் சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் ஒக்டோபர் முதலாம் தேதியன்று. கொண்டாடப்பட்டிருந்தது.

Better Future for Every Child ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறந்த எதிர்காலம்  
என்ற மகுடவாசகம் 2022 ஆம் ஆண்டின் சிறுவர் தின மகுடவாசகமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் பல பாடசாலைகளில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறுவர் தின கொண்டாட்டங்கள் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பாடசாலை மட்டங்களில் பெரிதாக இடம்பெற்றிருக்காத நிலையில் இந்த வருடம் வெகுவிமரிசையாக பல பாடசாலைகளில் கொண்டாடப்பட்டிருந்தது.
உண்மையிலேயே எங்களுடைய குழந்தைகளுக்கு – எதிர்கால தூண்கள் எனப்படும் சிறுவர்களுக்கு நாம் வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியை பெரியவர்களான நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் ஒரு பக்கத்தில் மாணவர்களிடையே வேகமாக பெருகி வரும் வன்முறை கலாச்சாரம், இன்னொரு பக்கமாக மாணவர்களிடையே வேகம் அடைந்து வரும் போதைப் பொருள் பழக்கம், சிறுவர்கள் மீது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் என  சிறுவர்களின் உலகம் மிகுந்த பாதுகாப்பற்ற ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவை தாண்டி இலங்கையில் இன்றைய தேதிக்கு சிறுவர்களை மிகவும் பாதிக்கக் கூடிய – நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தக்கூடிய ஒரு விடயமாக தொலைபேசி பாவனை உருவெடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதை அண்மையில் வெளியான மூன்று செய்திகள் தெளிவாக வெளிக்காட்டி இருந்தன.
செய்தி 01
கம்பளையில்  பேஸ்புக் பார்ட்டி ஒன்று இடம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்த அந்த பார்ட்டியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தோரில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் 14 தொடங்கி 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் என போலீசார் சுட்டிக் காட்டியிருந்தனர்.
செய்தி 02:
யாழ்ப்பாணம்- வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான். மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த காணொளியை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான். அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செய்திகளையும் இலகுவாக இன்றைய சமுதாயத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் சரி – பல பெற்றோரும் சரி இலகுவாக கடந்து சென்று விடுகின்றனர். இந்த செய்தி தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற தருணம் இது.
உண்மையிலேயே மேற்சொன்ன இரண்டு செய்திகளும் தொலைபேசி பாவனையால் இன்றைய சிறுவர்கள் எந்தளவு தூரத்திற்கு அச்சுறுத்தலான ஒரு உலகில் வாழ தலைப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கூறப்பட்ட இரண்டு செய்திகளிலும் உள்ள தவறுகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் சிறுவர்கள் அல்ல. பெற்றோர்களும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெரியவர்களுமே. சிறுவர்களின் கைகளுக்கு தொலைபேசிகளை கொடுக்கின்ற போது பெற்றோர் அவற்றின் நல்ல விடயங்களை – அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்க மறந்ததன் விளைவே மேற்கூறப்பட்ட இரு அபத்த சம்பவங்களும் ஆகும்.
கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தொலைபேசி – இணையம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் இடையேயான தொலைபேசி பாவனை இன்னும் தீவிர தன்மையினை எட்டி உள்ளது.
Mobile phone use by children – XpertSpeaks
சில பெற்றோர்கள் “என்னுடைய மகன் 24 மணி நேரமும் தொலைபேசியுடன் தான் இருக்கிறான். ” என சிலாகித்துக் கூறுவதையும் இன்றைய காலத்தில் காண முடிகிறது. சரி அந்த சிறுவர்கள் தொலைபேசிகளில் என்ன செய்கிறார்கள் என சற்று கூர்ந்து அவதானித்தால் அவர்கள் பெரும்பாலும்  Free fire,  pubG என வன்முறையை தூண்டக்கூடிய ஆபத்தான கேம்களை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது விளையாட்டு தானே என கடந்து செல்லக்கூடிய விடயம் அல்ல. இந்த விளையாட்டுக்கள் சிறுவர்களின் மனதில் ஏதோ ஒரு விதத்தில் வன்முறை குணத்தை விதைத்து விடுகின்றன. அத்துடன் தொடர்ந்து தொலைபேசி கேம்கள் விளையாடும் போது உடல் சார்ந்த – மனது சார்ந்த பல தாக்கங்களுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை தவிர கள்ளங் கபடமற்ற சிறுவர்களிடத்தில்  பாலியல் சார்ந்த விடயங்களை தவறான புரிதலோடு இந்த தொலைபேசிகள் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களில் ஆபாசமான பல இணைய  தளங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சிறுவர்களின் கைகளில் இருக்கக்கூடிய தொலைபேசிகளை பெற்றோர் கண்காணிக்காது விடுகின்ற போது ஆபாச இணையதளங்களை மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற துர்ப்பாக்கியமான நிலைமையும் இன்று ஏற்படுத்துள்ளது. இது பாடசாலை காலங்களில் சக மாணவியையோ – சக மாணவனையோ – சக சிறுவனையோ –  சக சிறுமியையோ ஆபாசமான கண்ணோட்டத்தில் சிறுவர்கள் நோக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது. இயல்பாகவே பால் சமத்துவக்கல்வி நமது நாட்டில்  சிறுவர்களுக்கு முறையாக கற்பிக்கப்படுவதில்லை. இதனால் பால்நிலை சமத்துவம் தொடர்பான புரிதல் 20 வயதை தொட்ட இளைஞர்களிடம் கூட ஒழுங்காக இருப்பதில்லை. இந்த நிலையில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் இன்னமும் அதிகம் இந்த தொலைபேசி பயன்பாட்டால்  முறையற்ற – புரிதலற்ற பாதையில் செல்ல அதிகம் வாய்ப்புள்ளது.
சிறுவர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு போன்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட ஆரம்பித்ததை அடுத்து சிறுவர்கள் மைதானங்களை – ஓய்வு நேரங்களில் ஏனையவருடன் விளையாடுவதை முழுமையாக நிறுத்தி விட்டனர் என்றே கூற வேண்டும். கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் கூட தொலைபேசிகளில் கேம் விளையாடுவதிலும் – தொலைபேசியுடன் தனிமையில் இருப்பதிலுமே இன்றைய சிறுவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதன் விளைவுகளையே இன்றைய நாங்கள் பல பாடசாலைகளில் காண முடிகிறது. பல மாணவர்களின் உடல் எடை அதிகமாகி சிறுவயதிலேயே அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இதுவும் ஒரு வலமாக தொலைபேசி ஏற்படுத்திய ஆபத்தான விளைவு தான்.
இன்று சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கக்கூடிய அனைவருடைய கைகளிலும் இணைய வசதியுடன் கூடிய போன்களே காணப்படுகின்றன. வேலை முடித்து வந்ததிலிருந்து அடுத்த நாள் வேலைக்கு செல்லும் வரை குடும்பத்தின் அப்பா – அம்மா – அண்ணா – அக்கா என குடும்ப அங்கத்தவர்கள் பலர் தொலைபேசியிலேயே காலத்தை கழித்து விடுகிறார்கள். பெற்றோரும் தொலைபேசியில் பிள்ளைகளும் தொலைபேசியில் என்ற நிலையே அதிக குடும்பங்களில் காணப்படுகின்றது. குடும்ப அங்கத்தவர்களுக்கு இடையே சீரான ஒரு தொடர்பு அல்லது பிணைப்பு இன்று அதிக குடும்பங்களில் இல்லாமலேயே போய் விட்டன. இதனால் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள் – பிரச்சனைகளை கூட பெற்றோர் பெரியவர்கள் கவனிக்காது விட்டு விட்ட சோகம் பல இடங்களில் தொடர்கிறது.
இன்றைய நாட்களில் ஆண்ட்ராய்ட் போன்கள் சிறுவர்களின் கைகளில் அதிகமாக உலவ ஆரம்பித்துள்ளதன் விளைவு எப்படியிருக்கிறது என்பதை அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலை வெளியிட்டிருந்த ஒரு அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தது. அந்த அறிக்கையின்படி,
டிக்டொக் செயலிக்கு அடிமையாகியதன் மூலம் காதல் வயப்படுதல், அதிக நேரம் டிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேவேளை, தரம் 09 ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ, பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர். 
குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர்.  இவ்வாறாக கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால், நீரழிவு, உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவடைதல், என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாவார்கள்.’
என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் குறித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அண்மையில் வவுனியாவில் உள்ள ஒரு பிரபல பாடசாலை அதிபரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அதில் மாணவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்டு இருந்த குறித்த பாடசாலையின் அதிபர் ” மாணவர்கள் முன்னைய காலங்களைப் போல மைதான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் இல்லை. தொலைபேசிகளை பார்க்கின்ற போது மட்டுமே அவர்களுடைய முகங்கள் சந்தோஷமடைகின்றன. இன்றைய தேதிக்கு சிறுவர்களை சந்தோஷப்படுத்த தொலைபேசிகள் மட்டுமே போதுமானவை. இரவு நேரங்களில் அதிகமாக தொலைபேசிகளை பாவிக்கும் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் சோர்வாகவும் – தூக்க மயக்கத்திலும் இருக்கிறார்கள்” என விசனப்பட்டு கொண்டார்.
இன்று பல சிறுவர்கள் அதிகம் எதிர்கொண்டுள்ள குறைபாடு பார்வை தொடர்பானதாகும். இதற்கான காரணம் மாணவர்கள் இடையே அதிகரித்த தொலைபேசி பாவனையாகும்.” ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்ணை சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, பார்வை குவிப்பை ஓர் இடத்தில் செலுத்துவதனால் , நிமிடத்திற்கான கண் சிமிட்டல் 8 தடவைகளை விட குறைகின்றன. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். சில வேளைகளில் பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடலாம்.” என்கிறார்கள் கண் வைத்தியர்கள். இன்று சிறுவர்களை அதிகமாக கண்கிளினிக்குகளில் காண முடிகின்றது. சிறுவயதிலேயே அவர்கள் கண் வலி காரணமாக கல்வி கற்க முடியாத சூழலையும் எதிர்கொள்கின்றனர். இதைத் தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
How to use parental controls on a smartphone | Gadget Cover
எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து சிந்திக்கும் ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களிடம் தொலைபேசி பாவனையை குறைத்துக் கொள்வதற்கு வலியுறுத்த வேண்டும். அதே தொலைபேசிகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர் பிள்ளைகள் தொலைபேசிகளை பாவிக்கும் போதும் சரியான வகையில் அதனை பயன்படுத்துகின்றனரா..? அவர்களுடைய தொலைபேசி பாவனை முறையானதாக உள்ளதா ..? தவறானதாக இருப்பின் ஏன் தவறானது..? என்பவற்றை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தி சொல்லி கொடுத்து  கண்காணிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர் ஒவ்வொருவருடைய பொறுப்பும் ஆகும். ஆனால் பெற்றோர்களும் பெரியவர்களும் பணம் , உழைப்பு, சொகுசான வாழ்க்கை இவை மட்டுமே தேவையானது என்ற கோணத்தில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ள இன்றைய சூழலில் சிறுவர்களுடன் குறிப்பாக தமது பிள்ளைகளுடன் தங்களுடைய நேரத்தை ஒதுக்க தயார் இல்லை என்பது தொலைபேசியில் தொடங்கி சிறுவர்கள் இன்றைய தேதிக்கு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகும்.
இன்றைய தினம் ஒவ்வொரு சிறுவர்களின் கைகளிலும் உள்ள ஆண்ட்ராய்டு போன்கள் அவர்களினுடைய எதிர்காலத்தினை மெல்ல மெல்ல சிதைத்து விடுகின்றன என்பதை ஒவ்வொரு பெற்றோருமே நினைவில் வைத்திருக்க வேண்டும். காலம் வேகமாக நவீன உலகை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் நவீன உபகரணங்களை கையாள ஒவ்வொரு சிறுவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால் சிறுவர்களின் கைகளில் உள்ள தொலைபேசி அளவான வகையில் தேவைக்கேற்றாற் போல் மட்டுமே இருந்தால் அது தேவையற்ற – எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது.
எங்களுடைய சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குவதற்காக இந்த சிறுவர் தினத்தில் நாம் உறுதி பூணுவோமாக. மெல்ல மெல்ல சிறுவர்களை தொலைபேசி உலகில் இருந்து யதார்த்தமான உலகத்திற்கு கொண்டு வந்து வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை அவர்களை உணர வைப்பதற்கு பெற்றோர்களும் பெரியோர்களும் – ஆசிரியர்களும் வழிசெய்ய முன்வர வேண்டும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் தேசம் இணையத்தின்  இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.

மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி! பல்கலைக்கழகம் செல்வோர் 200 பேர்வரையால் அதிகரிப்பு! நாடு முழவதும் பல்கலைக்கழகம் புகும் மாணர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் வீழ்ச்சி!!

அண்மையில் அரசு வெளியிட்ட சட் ஸ்கோர் அடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களின் படி 2021 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் மிகச் சரியாகச் சொல்வதானால் 15765 மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் 192 மாணவர்களை 2020 கல்வியாண்டைக் காட்டிலிலும் 2021 கல்வியாண்டில் கூடுதலாக அனுப்பி வைத்து தீவில் ஒரு கல்விச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

எண்பதுக்களில் கல்வியில் கோலோச்சிய யாழ் மாவட்டம் 2021 ஒன்று கல்வியாண்டில் 477 மாணவர்களைக் குறைவாக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. 2020 கல்வியாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.5வீதம் குறைவாகும். மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களும் சராசரியாக 9.5 வீதமான மாணவர்களை குறைவாகவே பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. விகிதாசார அடிப்படையில் அனுராதபுரம், காலி, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே கூடுதலான 14 முதல் 15 வீதத்திற்கு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் கொழும்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2377 மாணவர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சியும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வீழ்ச்சியும் அண்ணளவாக ஒரே அளவில் அதாவது 16,000 ஆகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு:
மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களைப் போன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் பல்ககை;கழககங்களுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 5.3 வீதத்தால் அதாவது 192 மாணவர்களால் அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவில் கென்ற்இல் வதியும் கணித ஆசிரியர் டேவிட் நோபல் தேசம்நெற்க்குக் கருத்துத் தெரிவிக்கையில் சூம் வழியான கல்விச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மற்றும் கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். மாணவர்கள் எந்த மூலையில் கிராமத்தில் இருந்தாலும் மறுமூலையில் உள்ள நல்லாசிரியர்களிடம் இருந்து கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டுப் பணமோகத்தின் தாக்கங்களும் அது ஏற்படுத்தும் போதைவஸ்து, மது அருந்தல் மற்றும் வாள்வெட்டுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான தமிழ் மாவட்டங்களில் குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புக தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 22வது இடத்திலிருந்து 2021 கல்வியாண்டில் 3வது இடத்திற்கு வந்து தீவில் ஒரு கல்விச் சுனாமியை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் 2021 கல்வியாண்டில் 3804 பேர் பல்கலைக்கழகம் செல்லத் தகுதிபெற்றனர். அத்தோடு தமிழ்வாணணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானத்தில் தீவிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் சுனாமி அதிரடியாக இருந்த போதும் மட்டக்களப்பு கல்வியில் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் செறிந் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு ஆயிரம் பேருக்கு 6 மாணவர்களையே பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. கிழக்கு மாகாணத்தின் நிலையும் இதுவாகவே உள்ளது. ஆனால் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டும் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

திருகோணமலை:
மூவின மக்களும் சரிக்குச் சமனாக வாழும் திருகோணமலை மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 14வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்குத் தாவியுள்ளது.

அம்பாறை:
அம்பாறை மாவட்டம் 2020 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதில் இருந்து 2021 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு ஆறு மாணவர்களை மட்டுமே ஆனுப்பும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 24வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகம் புகும் தகுதியுடைய மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முன்னேறிப் பாய்ந்துள்ளது.

முல்லைத்தீவு:
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் தங்களுடைய சனத்தொகைக்கு கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற நான்கு மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கின்றது. 2021 கல்வியாண்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. வடக்கு கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமே ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது. ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 17வது இடத்திலிருந்த முல்லைத்தீவு மாவட்டம் 2021 கல்வியாண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறி யாழ் மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ளது. ஆனாலும் ஏழாவது இடத்தில் உள்ள யாழ் மாவட்டத்தைக் காட்டிலும் முல்லைத்தீவு மாவட்டம் தனது சனத்தொகைக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது.

மன்னார்:
மன்னார் மாவட்டம் தீவில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மாவட்ட அடிப்படையில் மிகக் கூடுதலாக 69 வீதமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து தீவின் முன்னணிக் கல்வி மாவட்டம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளது. யாழ் மாவட்டத்தைப் போன்று மன்னார் மாவட்டமும் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது.

வவுனியா:
பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் வவுனியா மாவட்டமும் முன்னேறிப் பாய்ந்துள்ளது. 2020 கல்வியாண்டில் தீவின் கடைசி மாவட்டமாக இருந்த வவுனியா 2021 கல்வியாண்டில் 15வது இடத்திற்கு தன்னை நகர்த்தியுள்ளது. மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகச் செய்யும் விகிதாசாரத்தை 59.5 வீதத்தில் இருந்து 63.5 வீதமாக வவுனியா மாவட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி:
வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமே கல்வியில் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சறுக்கியுள்ளது. 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகு விகிதாசாரத்தில் 21வது இடத்திலிருந்த கிளிநொச்சி மாவட்டம் 2021இல் 23வது இடத்திற்று சறுக்கியுள்ளது. மேலும் கிளிநொச்சியின் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதம் 2.5 வீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தன்னுடைய விகிதத்தை அதிகரிக்கத் தவறியிருந்தாலும் வீழ்ச்சியடையவில்லை. அண்ணளவாக தன்னுடைய முன்னைய நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் கல்வியில் பின்னிலையான மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.
இலங்கையிலேயே பல்கைலக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை ஆகக் கூடிய வீதத்தால் 4.72 வீதத்தால் உயர்த்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னணி வகிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்கைல்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை உயர்த்திய மாவட்டமாக வவுனியா மாவட்டம் திகழ்கின்றது. வவுனியா பல்கலைகம் புகும் மாணவர்களின் விகிதத்தை 3.95 ஆல் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் பதுளை, யாழ்ப்பாணம் போன்று தன்னுடைய முன்னைய விகிதத்தை தக்க வைத்துக்கொண்டது. மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்டம் மட்டும் தன்னுடைய பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை 1.78 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனை தெற்கு மாவட்டங்கள் அனைத்துமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகக் கூடுதல் வீழ்ச்சி 5.42 வீகிதம் காலியிலும் அதனைத் தொடர்ந்து 4.94 விகிதம் வீழ்ச்சி கம்பகாவிலும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கல்வியில் மட்டக்களப்பு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க மைல்கலை எட்டியுள்ளது. வவுனியா மாவட்டம் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தை மட்டக்களப்பு மாவட்டத்தைப் போல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் தன் நிலையை முன்னேற்றி தற்போது முதல் இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னிலையை தொடர்ந்தும் தக்க வைத்து வருகின்றது. ஆனால் கிளிநொச்சி தொடர்ந்தும் தன் கல்விநிலையை உயர்த்தத் தவறிவருகின்றது.

யாழில் போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் போதைப்பொருள் பாவித்த சகோதரன் தன்னுடைய சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியால் சகோதரி உயிரை பார்த்துக்கொண்ட கொடூரம் நமது சமூகத்தில் தான் அரங்கேறியுள்ளது. தொடர்ந்து தீவிரமடையும் இந்த போதைப்பொருள் பாவனையின் விளைவு வடக்கிலுள்ள குடும்ப உறவுகளையும் சீரழிக்க தொடங்கியுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே அதிகரித்லு வருகின்றது. வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை இந்த போதைப்பொருள் பாவனை மிகத் தீவிரமடைந்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள் மற்றும் ஊசி போதைப்பொருள் பாவித்ததால் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறை கலாச்சாரத்தையும் தூண்டிவருகிறது.

இளைஞர்களிடையே வேகமெடுக்கும் இந்த போதைப்பொருள் பாவனையை தடுக்க வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரோ – கல்விகற்ற சமூகத்தினரோ – சமூக அமைப்புக்களோ எந்த நடவடிக்கைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொள்ளவில்லை. அன்றாடம் செய்திகளில் நாம் காணும் – இலகுவாக நாம் கடந்து செல்லும் செய்திகளில் உள்ள ” யாழ்.கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது, மாணவனிடம் இருந்து ஐஸ்போதைப்பொருள் மீட்பு, இளைஞர்களிடையே வாள்வெட்டு” என ஏதேனும் ஒரு செய்தி சரி காணப்படும். அந்தளவிற்கு நமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மலிந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்;

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வீடொன்றில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் (11.09.2022) இன்று தன்னுடைய உயிரை மாய்த்துள்ளார். அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இது குறித்து மூத்த சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதன் வெளிப்பாடே இந்த சம்பவமுமாகும். வழமை போல் சில தினங்களுக்கு ஊடகங்களும் இதைப்பற்றி பேசிவிட்டு புதிய பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் அதன் பின்னால் ஓட ஆரம்பிப்பார்கள்.

ஆனால் இது நாம் எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க – போதைப்பொருள் அற்ற சமூதம் ஒன்றை உருவாக்க நாம் விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் என யாருமே சிந்திப்பது கிடையாது. இந்த சுயநல மனோநிலையின் வெளிப்பாடே யாழில் நடந்து கொண்டிருக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களின் நீட்சியும் – பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சியுமாகும்.

இந்த போதைப்பொருள் பாவனை பிரச்சினை புதிய வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை. இது தொடர்பில் யாழ்ப்பாண பகுதியில் உள்ள பொலிசாரும் – பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

இப்போதும் நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.

போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை – யாழில் குடும்ப உறவுகளையும் சீரழிக்க ஆரம்பித்துள்ள போதைப்பொருள் கலாச்சாரம் !

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே அதிகரித்லு வருகின்றது. வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை இந்த போதைப்பொருள் பாவனை மிகத் தீவிரமடைந்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள் மற்றும் ஊசி போதைப்பொருள் பாவித்ததால் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் வாள்வெட்டு – வன்முறை கலாச்சாரத்தை தூண்டிவருகிறது.

இந்த போதைப்பொருள் பாவனையை தடுக்க வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரோ – கல்விகற்ற சமூகத்தினரோ – சமூக அமைப்புக்களோ எந்த நடவடிக்கைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொள்ளவில்லை.  அன்றாடம் செய்திகளில்  நாம் காணும் – இலகுவாக நாம் கடந்து செல்லும் செய்திகளில் உள்ள ” யாழ்.கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது, மாணவனிடம் இருந்து ஐஸ்போதைப்பொருள் மீட்பு, இளைஞர்களிடையே வாள்வெட்டு” என ஏதேனும் ஒரு செய்தி சரி காணப்படும். அந்தளவிற்கு நமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மலிந்துவிட்டது.

தொடர்ந்து தீவிரமடையும் இந்த போதைப்பொருள் பாவனையின் விளைவு வடக்கிலுள்ள குடும்ப உறவுகளையும் சீரழிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் போதைப்பொருள் பாவித்த சகோதரன் தன்னுடைய சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியால் சகோதரி உயிரை பார்த்துக்கொண்ட கொடூரம் நமது சமூகத்தில் தான் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்;

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வீடொன்றில்  போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய 20 வயதுடைய இளம் பெண் (11.09.2022)  இன்று தன்னுடைய உயிரை மாய்த்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இது குறித்து மூத்த சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதன் வெளிப்பாடே இந்த சம்பவமுமாகும். வழமை போல் சில தினங்களுக்கு ஊடகங்களும் இதைப்பற்றி பேசிவிட்டு புதிய பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் அதன் பின்னால் ஓட  ஆரம்பிப்பார்கள்.

ஆனால் இது நாம் எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க – போதைப்பொருள் அற்ற சமூதம் ஒன்றை உருவாக்க நாம் விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் என யாருமே சிந்திப்பது கிடையாது. இந்த சுயநல மனோநிலையின் வெளிப்பாடே யாழில் நடந்து கொண்டிருக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களின் நீட்சியும் – பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சியுமாகும்.

இந்த போதைப்பொருள் பாவனை பிரச்சினை புதிய வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை.

இது தொடர்பில் யாழ்ப்பாண பகுதியில் உள்ள பொலிசாரும் – பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும்  விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

இப்போதும் நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் கல்வி அமைச்சரும் ஆசிரியர்களும் !

இலங்கையில்  போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான  முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக  விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம்  எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது

“பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும்  இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும்   கூறியிருந்தார்.  இதனை  தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது.

 

ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில்  மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து  இளைஞர்கள் வரையில்  உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

இலங்கையின் குறிப்பாக வட-கிழக்கு நகர்ப்புற இளைஞர்களிடையேயும் – மாணவர்கள் மத்தியிலும் தூள், ஊசிபோதை, ஐஸ் போதை பொருள் என இந்த போதைப்பொருள் சர்வசாதாரணமான விடயமாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இதனை தடுப்பதற்கான அடிப்படை  நடவடிக்கைகளில் கூட கல்வி அமைச்சோ – அரசாங்கமோ இறங்கவில்லை என்பதே ஆகக்கவலையான உண்மை.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளில் போதைப்பொருள் உள்ளனவா என சோதிப்பதை விட முக்கியமானது போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும். இதற்கான எந்த  நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு முன்னெடுக்க முனைவதாக தெரியவில்லை. மாணவர்கள தனதுகட்டுப்பாட்டிலுள்ள பாடசாலை நேரங்களில் எந்த பிழையும் நடந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே கல்வி அமைச்சர் கவலைப்படுவதாகவே அமைச்சரின் மேற்சொன்ன  கருத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது.

பாடசாலைகளில் போதைப்பொருள் கிடைக்காவிட்டால் என்ன மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு வெளியில் கிடைக்க தான் போகிறது. இதற்கான தீர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கையினுள் வருவதை தடுப்பது மட்டுமேயாகும் .

போதைப்பொருள் பாவனை கல்வி அமைச்சு மட்டுமே கவனம் செலுத்தி கட்டுப்படுத்துகின்ற விடயமல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு துறையினர் மிக விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

தென்னிலங்கை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடுத்தடுத்து கைது என்ற தகவல்கள் வெளியாகும். ஆனால் வட – கிழக்கில் அவ்வாறான செய்திகளை பார்ப்பதே அபூர்வம். போதைப்பொருள் மிதந்து வந்ததது – போதைப்பொருள் மீட்பு போன்ற செய்திகள் கிடைக்குமே தவிர கடத்தலில் ஈடுபட்டவர்கள்- விற்பனையாளர்கள் கைது என்ற செய்திகளை பார்ப்பதே அபூர்வமானது. திட்டமிட்ட வகையில் நமது பகுதி இளைஞர்களின் கவனம் வேறு திசைக்கு மாற்றப்படுகிறதா என்ற அச்சத்தையும் – சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் மாபியாவுக்கு வாலாட்டுவோராக வட – கிழக்கு காவல்துறை அதிகாரிகள் செயற்படாது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இது தவிர பெற்றோர்களிடமும் – கிராமத்து இளைஞர்களிடமும் சமூக அமைப்புக்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இயக்கங்களை – கருத்துக்களை பரப்ப முன்வர வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படியாக போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க கல்வி அமைச்சு மட்டுமே நினைத்து முடியாது ஒட்டுமொத்த சமூகமுமே பாடுபடவேண்டிய தேவையுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்துக்கான அழுத்தத்தையே கல்வி அமைச்சர் கொடுக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையும் கூட. ஒவ்வொரு பாடசாலைகளும் – ஒவ்வொரு ஆசிரியர்களும் – ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோரும் இதன் தேவையை உணர்ந்து போதைப்பொருள் அற்ற எதிர்காலத்தை உருவாக்க முன்வரவேண்டும்.