கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்!

edward-kennedy-democrat.jpgஅமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றியவர் எட்வர்ட் கென்னடி. நேற்று தமது 77 ஆவது வயதில் மரணமானார். இவர் 2008  ஆம் ஆண்டு முதல் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக செல்வாக்குப் பெற்ற ஜனாதிபதி என்று பெயரெடுத்த ஜோன் எப். கென்னடியின் சகோதரர் ஆவார்.

இது குறித்து எட்வர்ட் கென்னடி குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹேன்னிஸ்போரட்டில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த எட்வர்ட் கென்னடி செவ்வாய் இரவு இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தின் மையமாகவும் எங்கள் சந்தோஷமாகவும் இருந்தவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

ஆஷஸ் தோல்வியின் எதிரொலி

eng0000.jpgஆஷஸ் தொடரை இழந்ததற்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. 132 கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் 2வது முறையாக இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன்பு பில்லி முர்டோச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1890ம் ஆண்டுகளில் 2 முறை ஆஷஸ் தொடரை இழந்துள்ளது.

ஆஷஸ் தொடரை இழந்ததன் மூலம் உலக டெஸ்ட் தர வரிசையிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

வோர்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட் ஆகியோர் ஓய்வுக்கு பின்னர் ஆட்டம் கண்டு வரும் அவுஸ்திரேலிய அணி இந்த ஆஷஸ் தொடரில் கடைசி டெஸ்டில் 197 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது. கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் ஹவுரிட்சை களம் இறக்காததும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தோல்வி கண்ட அவுஸ்திரேலிய அணி கப்டன் ரிக்கி பொண்டிங்கிற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெற்றி கண்ட இங்கிலாந்து அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. தோல்விக்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படுவார் என்ற சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது, கப்டன் பொறுப்பில் இருந்து ரிக்கி பொண்டிங்கை நீக்க வேண்டும் என்று சொல்வது முற்றிலும் நியாயமற்றது. ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

அதற்காக சிறப்பாகவும் தயார் ஆனோம். வெல்லாவிட்டாலும் நமது வீரர்களை குறித்து பெருமைப்பட வேண்டும. அணி வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடினார்கள். தொடரை இழக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையிலும் கப்டன் பொறுப்பில் பொண்டிங் சிறப்பாகவே செயல்பட்டார். எங்கள் அணியை குறித்து நாங்கள் எந்தவித மாய தோற்றத்தையும் சிந்திக்கவில்லை. மிகவும் சிறப்பான வீரர்களை இழந்த பிறகு அவுஸ்திரேலிய அணியை மறு கட்டமைப்பு செய்து வருகிறோம். இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் பேர் அணியில் இருப்பதால் ஏற்றம் மற்றும் இறக்கங்கனை சந்தித்து வருகிறோம்.

அதில் ஒரு பகுதியை தான் ஆஷஸ் தொடரிலும் சந்தித்தோம். சுமார் 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். அப்படி இருக்கையில் அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்து இருந்தாலும் பலன் கிடைத்து இருக்காது. தோல்விக்கு தேர்வாளர்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். களத்தில் ஆடுவது வீரர்கள் தான். எங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணி கப்டன் ஸ்டிராஸ் கூறுகையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பானதாகும். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள். இந்த போட்டி தொடரில் உணர்ச்சிபூர்வம், நம்பிக்கை ஏமாற்றம் கவலை ஆகியவை நிறைந்து இருந்தது. வெற்றியின் பாதைக்கு வர முடியாத நிலையில் அந்த பாதையை எட்டிப்பிடிப்பது எப்படி என்ற கஷ்டத்தை இதில் உணர்ந்தோம். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கிடைத்த இந்த வெற்றியின் பெருமை அனைத்து வீரர்களுக்கும் சாரும். இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டனர். பொண்டிங்கை, பிளின்டொப் ரன்- அவுட் செய்த விதம் சிறப்பானதாகும் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக தோல்வி தழுவியவர் என்ற விதத்தில் ரிக்கி பொண்டிங் தன்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். பில்லி முர்டாக்கின் தலைமையின் கீழ் இங்கிலாந்தில் இரண்டு ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா இழந்த பிறகு தற்போது பொண்டிங் தலைமையில் இரண்டு முறை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வி மூலம் நான் என்னை மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த தலைவராகவும் வளர்த்துக்கொள்ளும் உறுதி என்னிடம் இப்போது வலுவடைந்துள்ளது. எனக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் என்ன கேட்பார்கள் என்பது பற்றி கவலையில்லை. தற்போது பத்திரிகையாளர்களை சந்திப்பதுதான் எனக்கு கவலையளிக்கிறது.

கடந்த முறை ஓவலில் அடைந்த தோல்வி, தற்போது அடைந்துள்ள தோல்வி எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நான் இப்போது ஏமாற்றம் அடைந்திருப்பது போல் யாரும் வேறு எந்த தருணத்திலும் ஏமாற்றம் அடைந்திருக்கமாட்டார்கள். அணியின் தலைவராக துடுப்பாட்ட வீரராக என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள் முடியவில்லை. மற்ற வீரர்களுக்கும் அவ்வாறுதான் இருக்கும்.

இந்த தொடர் முழுவதும் இரண்டு மோசமான இரண்டு மணி நேர ஆட்டம் தொடரை இழக்கச் செய்துள்ளது. நாங்கள் நன்றாக விளையாடும்போது அபாரமாக திகழ்கிறோம். ஆனால் நன்றாக விளையாடியபோதும் மிகவும் மோசமாக இருந்துள்ளோம். நாம் சீராக விளையாட வேண்டும் என்றார். அவுஸ்திரேலியா கடந்த 16 டெஸ்ட்களில் 6 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.

இதில் இந்தியாவிடமும் தென்னாபிரிக்காவிடமும் இங்கிலாந்திடமும் தொடரை இழந்துள்ளது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தை இழந்து தென் ஆபிரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது.

அபாயமான மயக்க மருந்தே ஜாக்ஸனின் மரணத்துக்குக் காரணம் : மருத்துவ தடயவியல் நிபுணர்

lakshmanan.jpgபொப் இசை மேதை மைக்கல் ஜாக்ஸன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜாக்ஸன் மரணம் ஒரு கொலை வழக்காக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் மாற்றவுள்ளனர்.

ஜாக்ஸன் உடலில் நடத்தப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்ஸன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசியாகக் கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் அவரது உயிரைக் குடித்ததாகச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்படக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன், ஹூஸ்டன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றம் தேடுதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கல் ஜாக்ஸனின் மரணத்திற்கு அதிகளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஜாக்ஸனின் மரணம் கொலை எனப் பதிவாகி வழக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.டாக்டர் கான்ராட் முர்ரேயும் கைது செய்யப்படவுள்ளார்.

ஜாக்ஸன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழராவார். கடந்த 1992ஆம் ஆண்டு அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 26ஆம் திகதி மைக்கல் ஜாக்ஸன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன். 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பரில் சீனா செல்வார்

000-obama.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பர் மாதத்தில் சீனா செல்லவுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் தெரிவித்தார். ஏப்ரல் மாத அழைப்பை ஏற்று பராக் ஒபாமா சீனா செல்வார். சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாடு முடிவடைந்ததும் சீனா செல்வார். இவரின் இந்த விஜயத்தால் அமெரிக்க- சீன உறவுகள் இந்த ஆண்டுக்குள் உறுதியடையும் எனவும் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் சொன்னார்.

பராக் ஒபாமாவை சீனா வருமாறு ஜனாதிபதி ஜுஹிண்டாவோ அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பராக் ஒபாமா ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த விஜயம் ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதியின் முதல் விஜயமாக இது அமையவுள்ளது. பெரும்பாலும் நவம்பர் 14-15ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி சீனா செல்வாரென நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவும் அமெரிக்காவும் பாரிய வியாபாரக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்றன. வர்த்தகம், வியாபாரம் காலநிலை மாற்றம் எரிவாயு பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி இரு தலைவர்களும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர்.

தாய்வானுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியதால் ஆத்திரமடைந்த சீனா 2008ம் ஆண்டு 6.5 பில்லியன் பெறுமதியான ஆயுதப் பரிமாற்றங்களை அமெரிக்காவுக்கு வழங்காமல் நிறுத்திக் கொண்டது இது தவிர சீனாவின் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கப்பல் ஊடுருவியதால் இரு நாடுகளிடையேயும் முறுகல் ஏற்பட்டது. இந்நிலைமைகளைச் சீர்செய்வது பற்றி முக்கிய பேச்சுக்களிலும் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் ஈடுபடுவர். தாய்வான் எப்போதும் சீனாவின் இறைமைக்குக் கீழ் உள்ள ஒரு பகுதி என்பதை பராக் ஒபாமாவுக்கு இச்சந்திப்பின் போது வலியுறுத்தவும் சீன ஜனாதிபதி தயாராகவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு : காலச்சுவடு

Wanni_War_Bombed_Safe-Zoneஉண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.

வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.

முதலில் இந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுதான் இலங்கை நிலவரம். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உருவாக்கிய அச்சப் பிராந்தியமும் அபாய வெளிகளும் இன்னும் முற்றாக நீங்கவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசால் தொடரப்படும் நெருக்குவாரங்களும் ஜனநாயக மறுப்பும் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால்களும் அகலவில்லை. எனவே வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.

இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.

2

2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.

புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.

ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.

படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்’, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

இக்காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் சனங்களின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்ததாக யாரும் சொல்ல முடியாது. ஆனால் படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.

இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.

இதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை உயர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.

குறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. முன்னர் நடந்த படை நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மருத்துவமனைகள் வெவ்வேறு இடங்களில் மட்டுப்பட்ட அளவில் இயங்கினாலும் அவற்றால் முழு அளவிலான சேவைகளை வழங்க முடியவில்லை. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் அங்கிருந்த மருத்துவர்கள் – இப்போது சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் டொக்ரர் சத்தியமூர்த்தி, டொக்ரர் வரதராஜன், டொக்ரர் சண்முகராஜா உட்படப் பல மருத்துவர்கள் – பெரும் சேவையாற்றினர். மனித குலம் தன் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கான பெரும் சேவையை இவர்கள் செய்தனர். ஆனால் இவர்களுடைய அரசியல் பார்வை குறித்த விமர்சனங்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துத்தடை அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் மத்தியிலும் தாக்குதல்களில் காயப்படும் மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மிகவும் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் இந்த மருத்துவர்களும் பணியாளர்களும் தொண்டாற்றினார்கள். அதேவேளை புலிகள் இந்த மருத்துவமனைகளைத் தமது நிழல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். மருந்துப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.

உடையார்கட்டுப் பகுதியில் படைத்தரப்பு நடத்திய தாக்குதல்கள் மிகக் கொடியவை. சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்து அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. இது மிகக் கேவலமானது. மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரான செயல் இது. எந்த வகையான நியாயப்படுத்தல்களையும் செய்ய முடியாத நடவடிக்கை இது.

மிகச் செறிவாக அடர்ந்திருந்த சனங்களை இலக்கு வைத்து ஆட்லறி மற்றும் எரிகணைத் தாக்குதல்கள் – றொக்கற் தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியது. இதன்போது ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அதிகாரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் வன்னியிலிருந்தனர். இந்தத் தாக்குதல்களை அடுத்து இவர்கள் வன்னியை விட்டு வெளியேறினர். அந்தளவுக்கு அவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை என்றானது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.

தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். சனங்கள் தொடர்ந்து தம்மிடம் வருவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் படைத்தரப்பு மேலும் மேலும் சனங்களின் மீதே தனது இலக்கை நிர்ணயித்தது. இது மிகக் கேவலமானதும் கொடூரமானதும் மன்னிக்க முடியாததுமான நடவடிக்கை. ஆனால், இதை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாகப் படையினர் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சனங்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டதாகவும் படைத்தரப்பும் அரசும் பிரச்சாரம் செய்தன. இதில் இன்னும் கொடுமையானது பாடசாலைகளிலும் தற்காலிகமாக அவசர நிலையில் இயங்கிய மருத்துவமனைகள் மீதும் படையினர் நடத்திய தாக்குதல்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களையும் காப்பாற்றுவதற்கு முடியாது என்ற நிலை பயங்கரமாகியது. புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் படுகொலைத் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள். ஆனால், இந்த நிலை குறித்து வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் வெளியே செல்ல முடியாதவாறு இரண்டு தரப்புகளும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் பார்த்துக்கொண்டன.

இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.

ஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவுகளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் – மக்கள் பிரதிநிதிகளைக்கூட – சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.

கிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை- போர் முறையை மாற்றி- அமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.

சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தையும் விமர்சனத்தையுமே அவை தீவிரப்படுத்தின. அத்துடன் மாற்றுச் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சித்தன. எந்தவிதமான அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டுத் தனது அதிகாரத்தின் மூலம் தான் விரும்பிய மாதிரி பிரபாகரன் நடந்துகொண்டார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே ஒரு கட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்துத் திகைப்படைந்து விட்டனர். அவர்கள் அளித்துவந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர்களையே சிறைபிடித்தனர் புலிகள். எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எல்லோரும் சிக்கியிருந்தோம். ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ நாவல் நினைவுக்கு வந்தால் அதையும்விடப் பலமடங்கு இறுக்கமான நிலைமையும் அதிகார வெறியும் வன்னியில் நிலவியது என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.

ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.

வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.

ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.

முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.

புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள – அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் – ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர். வன்னியில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உணர்வு நிலை என்ன? அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? போராளிகளின் மனநிலை என்ன? படைத்தரப்பு எப்படி நகர்கிறது? கள யதார்த்தம் என்ன? இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.

இதைப் போன்றே சிறிலங்கா அரசு தரப்பிலும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அமைச்சர் ரோஹித பேகல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா பிரதமர் ரமணசிறீ விக்கிரம நாயக்க உட்படச் சகலரும் முழுப் பொய்களையே சொல்லி வந்தனர். அதிலும் இந்தக் கொடூர யுத்தத்தை -போர் விதிமுறைகளை முற்றிலும் மீறிய கொடிய தாக்குதல்களை – இவர்கள் மனிதாபிமான நடவடிக்கை என்று அழைத்தனர். யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”. இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.

ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார். கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.

இதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.

மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்!

சனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள்.

இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.

கட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள். ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.

ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.

காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் தமது தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து தூர இடங்களில் இருக்கும்போது ஏற்படும் சொந்த நிலத்தின் மீதான தாகம். அடுத்தது தாம் பாதுகாப்பாக இருக்கும்போது தமது உறவினர்கள் போரால் வதைபடுவதும் கொல்லப்படுவதும். மூன்றாவது காரணம், சிறிலங்கா அரசு மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும். இந்தக் காரணங்கள் அவர்களை விசுவாசமாகப் போராடத் தூண்டின. ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் – துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.

எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை – இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் மகிந்த அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.

சர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ – புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. என்றபோதும் அவர்களின் உற்பத்திகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் இறுதிவரை தாக்குதலை நடத்தும் திறனை இதன் மூலம் பிரபாகரன் தக்கவைத்திருந்தார்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்பு-இராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.

இப்பகுதிகளில் இருந்து சனங்கள் புலிகளின் தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்றனர். கடலில் பயணம் செய்தோரை நோக்கிக் கடற்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், தாக்குதல்களுக்கு இலக்கான படகுகளைத் தவிர ஏனையவை தப்பிச் சென்றுவிட்டன. இரவிரவாகப் படகுகள் புல்மோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றன.

மாத்தளன் பிரதேசம் படைக்கட்டுப்பாட்டுக்கு வந்தபோது அங்கே இயங்கிவந்த கப்பல்துறையை வன்னியில் இருந்த ஒரே அரசாங்க அதிகாரியான பார்த்தீபன் முள்ளிவாய்க்காலுக்கு மாற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். புலிகளும் அதை விரும்பினர்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது.

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களை அவர் முழு நம்பிக்கையோடு நம்பியிருந்தார். அவர்களின் அந்தப் போராட்ட இயந்திரத்தை அவர் முழு வேகத்தோடு இயக்கினார். இதற்கு நல்ல ஆதாரம் புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள். வன்னியிலிருந்து லண்டனில் இருந்து இயங்கும் மிஙிசி வானொலிக்குத் தகவல்களைத் தொலைபேசி மூலமாக வழங்கிய புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் (இவர் தமிழ்ச் செல்வனின் மனைவியினுடைய உடன் பிறந்த சகோதரர்) விடுத்த கோரிக்கையும் தெரிவித்த கருத்துகளும் இதற்கு ஆதாரம். இவரே வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை இணைந்து நடத்தினார்.

இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.

பிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மருந்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.

மிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.

இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது. மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத அரசாங்கம் போரை ஈவிரக்கமில்லாமல் நடத்தியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள், கண்டனங்களையெல்லாம் சிறிலங்கா அரசாங்கம் தூக்கித்தூர வீசிவிட்டது. ஏற்கனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளும் இவ்வாறு தூக்கியெறியப்பட்டிருந்தன. வெற்றியை முழுதாகப் பறிக்கும் வெறியில் சரத்பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சேவும் இருந்தனர்.

அரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.

பெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு – சவக்களை என்று சொல்வார்களே – இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

இப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா? கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி? படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.

மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.

பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.

(நன்றி காலச்சுவடு)

ஸ்வைன்: இந்தியாவில் 76 பலி

10092009.jpgஇந்தியா வில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இன்று பெங்களூர், டெல்லியில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,900யை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 205 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

.உல்லாச பயணம் வேண்டாம்-அரசு அறிவுரை:

இந்த நிலையில், பள்ளிகளில் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கடும் அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை மூலம் சுகாதாரத்துறை அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள்:

– எந்த ஒரு மாணவருக்கோ, பணியாளருக்கோ, ஆசிரியருக்கோ பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர், படிப்பவர் யாராக இருந்தாலும் உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

– தும்மல், இருமல் இருந்தால் கைக்குட்டை அல்லது சிறிய துண்டு அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

– ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்.

– பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள வெளிநாடுகள் மற்றும் ஊர்களுக்கு செல்ல அவசியம் ஏற்பட்டால் ஒழிய மற்றபடி பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். உல்லாச பயணம், மாநாடுகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

– சரியான அறிவியல் பூர்வமான தகவல்களையும், செய்திகளையும் 044-24321569 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும் சுகாதாரத்துறை இணையதளத்திலும் தகவல் பெறலாம்.

– வீண் வதந்திகளை நம்பி பள்ளிகளில் பீதி ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்கள்  மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

– பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனைக்குப் பின் போதிய விடுமுறை வழங்கி வீடுகளில் இருக்கும்படி செய்ய வேண்டும். விடுதி மாணவர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்த்திட வேண்டும்.

– நோய் வராமல் தடுக்க தும்மல் மற்றும் இருமலின்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப்பகுதியை மூடிக்கொள்ள வேண்டும்.

– அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கர்பீ: ஸ்காட்லாந்து சட்டங்களுக்கு உட்பட்டே மெக்ராஹிக்கு விடுதலை வழங்கப்பட்டதாக கூறுகிறார் நீதியமைச்சர்

megrahifora.jpgலாக்கர் பியில் 1988 இல் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான லிபிய நபரை விடுதலை செய்வதற்கான தனது முடிவு ஸ்காட்டிஸ் சட்டங்கள் மற்றும் பெறுமானங்களின் அடிப்படியிலானது என்றும், இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு அதில் இடம் கிடையாது என்றும் ஸ்காட்டிஷ் நீதியமைச்சர் கென்னி மக் அஸ்கில் கூறியுள்ளார். அப்தல் பஸத் மெக்ராஹி என்னும் அந்த நபர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட வெற்றிவீரருக்கான வரவேற்பு ஆகியவை குறித்து சர்வதேச கண்டனம் எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அந்த வரவேற்பு பொருத்தமற்றது என்று கூறிய மக் அஸ்கில் அவர்கள், வரவேற்பு குறைந்த அளவிலேயே நடக்கும் என்று தமக்கு உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மனிதாபிமான அடிப்படையில் மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டார்.

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

Rahuman Janஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) வழங்கிய ஆரம்ப உரை.
._._._._._._._._.

நீண்ட காலத்தின் பின்பு ஒரு பகிரங்க அரங்கில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசம்நெற் இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்த போது நான் பலரது கருத்துக்களையும் கேட்கலாமே என்ற ஆர்வத்தில் சம்மதித்து விட்டேன். ஆனால் இங்கு வந்த பின்புதான் நான் உரையாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதில் சற்று சங்கடங்கள் இருந்தபோதிலும், எல்லா உரையாடல்களும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நான் சம்மதித்தேன். இப்போதும் கூட, நான் ஒரு உரையாடலை தொடக்கி வைப்பவன் என்ற வகையிலேயே பேச ஆரம்பிக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இது வழிகோலுமாயின் எனது முயற்சியில் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன்.

ஒரு இருண்ட காலத்தில் இருந்து இப்போதுதான் நாம் படிப்படியாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம். நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது புலிகள் அமைப்பின் தலைமை மட்டுமல்ல. தமிழ் தேசமும், அதன் அரசியலும் கூடத்தான் முறியடிக்கப்பட்டது. அங்கு அவமானப்படுத்தப்பட்டது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, முழுத் தமிழருக்கும் தான் சிங்கள பேரினவாதம் கோவணம் கட்டி அசிங்கப்படுத்தியது. தனியொரு அமைப்பிடமும், அதன் தலைமையாக அமைந்த தனியொரு மனிதனிடமும் விடப்பட்டிருந்த தமிழரது தேசியவிடுதலைப் போராட்டமானது, அதன் தலைமையை இழந்து தோற்று அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலைமையில் போராட்டத்தை தொடர்வது என்பது ஒரு புறமிருக்க, கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை பெற்றுக் கொள்வது கூட கேள்விக்குரிய ஒரு விடயமாகிவிட்டுப் போயுள்ளது. ஈழத்தமிழர் அரசியல்ரீதியாக அநாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். அரசியல் தலைமையானது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கையறு நிலையில் இருந்து மீண்டெழும் முகமாக, எஞ்சியுள்ள போராளிகளையும், ஏற்கனவே சிதறடிக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர்கள் (Activist) போன்றோரை ஒருங்கிணைத்து ஒழுங்கமைப்பது என்பது கூட பல சிக்கல்களை முறியடித்தே முன்னேறியாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து முடிந்துபோன கசப்பான அனுபவங்களும், அவை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ள வடுக்களும் ஒரு புறம் என்றால், இப்போது எம்மத்தியிலே உள்ள கருத்து வேறுபாடுகள் அதினைவிட பெரிய தடையாக வியாபித்து நிற்கிறது. இந்த தடைகளையும் விதமாக சில விவாதங்கள் ஆங்காங்கே, ஒழுங்கமைக்கப்படாத விதத்தில் என்றாலும் நடைபெறுவது உண்மையே என்றாலும், துரதிஸ்டவசமாக இவை வெறுமனே பொதுப்புத்தி (commonsense) மட்டத்திலேயே நடைபெற்று வருவது வேதனை தரும் விடயமாக இருக்கிறது.

பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டது (Enlighten) அல்ல. மாறாக, ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவது (Informed) ஆகும். ஆதிக்க சக்திகள் தமது அதிகாரப்படிநிலைகளை பேணிக் கொள்ளும் விதத்தில் பல கருத்துப் படிமங்களை கட்டமைத்து, அவற்றை தமது கைகளில் உள்ள வெகுஜன சாதனங்களின் துணை கொண்டு ஜனரஞ்சகப்படுத்தி வைத்துள்ளது. இந்த வகையான கருத்துப்படிமங்களே எமது பொதுப்புத்தியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. எனவே, பொதுப்புத்தி மட்டத்தில் நாம் எனது விவாதங்களை, உரையாடல்களை தொடரும் வரையில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆதிக்க உறவுகளையே மீளக்கட்டமைத்துக் கொண்டு இருக்கப்போகிறோம். இந்த இடர்பாட்டில் இருந்து விடுபடுவதானால் நாம் இந்த ஆதிக்க சிந்தாந்தகளில் மேலாதிக்கத்தை முறியடித்து, புரட்சிகர சித்தாந்த மேலாண்மையை நிறுவியாக வேண்டியுள்ளது. விடயங்களை நாம் கோட்பாட்டு, அரசியல் மட்டத்தில் அணுகும் போது மட்டுமே இப்படியான ஒரு நிலைமை சாத்தியப்படும்.

இன்று எம்மிடையே நடைபெறும் விவாதங்களை சற்று உற்று நோக்கினால் நாம் பயங்கரவாதம் பிரிவினைவாதம் பெரும்பான்மை – சிறுபான்மை போன்ற பல சொற்பதங்களை சர்வசாதாரணமாக காண முடியும். சற்றே இவற்றை கட்டுடைக்கமுயன்றால் இவை ஒவ்வொன்றும் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாதம் என்பவற்றால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இனங்கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். பயங்கரவாதம் என்றால் என்ன?. இவர்கள் சொல்வது போல அரசியல் நோக்கங்களை வன்முறை மூலமாக அடைய முயல்வது பயங்கரவாதமா? அப்படியானால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி மாற்றத்தை வன்முறை மூலமாகத்தானே இவர்கள் செய்தார்கள். அல்லாவிட்டால் பொதுமக்களை இலக்காக கொள்வது பயங்கரவாதமா? ஈராக்கின் அதிர்ச்சி வைத்தியமும், இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் வெறும் பக்கவிளைவுகள் (collateral damage) என்று இவர்கள் உதாசீனப்படுத்தும் பொது மக்களது இழப்புகள் இவர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமாக ஆகாமற் போவது எப்படி சாத்தியமாகிறது? ஒரே விளக்கத்தைதான் நாம் எட்ட முடியும். அதாவது, இந்த ஆதிக்க சக்திகள் வன்முறையை பயன்படுத்துவதற்கான உரிமையை தமது ஏகபோகமாக வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். மக்களது போராட்ட முயற்சிகள் அத்தனையையும் களங்கப்படுத்த கட்டமைக்கப்பட்ட புனைவுதான் இந்த பயங்கரவாத பூச்சாண்டியாகும்.

அமெரிக்காவில், ஆயுதம் தாங்கிய வன்முறைகள் மூலமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் அநியாயமாக கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்: இந்த நிலையில், சமுதாயத்தில் கட்டற்ற விதத்தில் புளக்கத்தில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் நலன் விரும்பிகள் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும், ஆயுதம் ஏந்துவதற்கான தனிமனிதனது அரசியல் அமைப்பின் மூலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமை பற்றி கூச்சலிட்டு ஒரு வலதுசாரிக் கும்பல் குழப்பியடித்துக் கொணடிருக்கிறது. அதேவேளை இதே கும்பல் தேசங்கள் தம்மை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் தரிப்பதற்காக உள்ள உரிமையை பயங்கரவாதம் என்று பூச்சாண்டி காட்டுகிறது. இது மிகவும் அயோக்கியத்தனமானதாகும். இப்படியாக நாம் எம்மையும் அறியாமல் ஆதிக்க சக்திகளது ஆய்வுச் சட்டகத்துள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். இது நிறைவேறாத வரையில் நாம் எமது நோக்கத்தில் ஒரு அங்குலமேனும் முன்னேறுவது சாத்தியமில்லாமல் போய்விடும். “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற வாசகங்களை நாம் எண்பதின் ஆரம்பம் வரையில் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் இந்த வாசகம் மட்டுமல்ல, அது சுட்டி நிற்கும் கருத்துச் சுதந்திரம் என்பது கூட எமது சமூகத்தில் தொலைந்துதான் போனது. எண்பதுகளில் புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய ஒற்றைப் பரிமாண சிந்தனையுடன் தமிழரது அரசியலானது முடங்கிப் போனது. அதனால்தான் இப்போது நாம் 1976 ம் ஆண்டின் “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” தூசு தட்டி எடுத்து மீண்டும் ஒரு தடவை கருத்துக் கணிப்பு நடத்தியாக வேண்டியுள்ளது.

இந்த முப்பத்தி மூன்று ஆண்டுகால இழப்புகளையும் ஈடு செய்வது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. நாமெல்லோரும் வெளிப்படையாகவும், மனம் திறந்தும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதுவும் கோட்பாட்டு, அரசியல் தளத்தில் தீவிரமாக சிந்தித்து, விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. அப்படியாக செய்தால் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கு நிற்கிறோம் என்பது தெளிவாகும். இந்த நிலையில் மட்டும்தான் கருத்தொற்றுமை காண்பதும், அல்லது குறைந்தபட்சம் எமக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எப்பது பற்றியாவது எல்லைக் கோடுகளை நாம் கீறிக் கொள்வது சாத்தியப்படும். அப்படியாக செய்வதனால் மட்டுமே ஒருங்கிணைவதோ, அல்லது கூட்டு செயற்பாட்டிற்கான அடித்தளங்களை இடுவதோ சாத்தியப்படும். இதனால் நாம் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது, விவாதித்தாக வேண்டியுள்ளது.

மாற்று கருத்தை கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ள, ஆங்கிலத்தில் சொல்வார்களே Agree to Disagree என்று, அது போல. விட்டுக் கொடுக்க, தேவைப்படும் போது சமரசங்கள் செய்து கொள்ள நாம் புதிதாக கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அரசியல் என்பது விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்பவற்றின் மூலமாக கருத்தொற்றுமையை அடைய முயல்வது என்றும் வரையறை செய்யலாம் அல்லவா? ஆதலால் நாம் எல்லோரும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதிலும் அடுத்தவர் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. ஒத்த நலன்கள் கொண்ட நட்பு சக்திகள் தமக்குள் விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்வது, இணக்கம் காண்பது என்பவை ஒன்றும் மோசமான குற்றச் செயல்கள் அல்ல. இவைதாம் மனித நாகரீகத்தின் அச்சாணிகள் என்ற புரிதல் வந்தால் அதுவே அரை கிணறு தாண்டியது போலத்தான்.

இப்போது நாம் தேசிய பிரச்சனையை அரசியல், கோட்பாட்டு தளத்தில் அணுகுவது பற்றிய பிரச்சனைக்கு வருவோம். நவீன சமுதாயத்தில் தேசத்திற்கு பொருத்தமான அரசியல் வடிவம் தேச – அரசு தான் என்பது அடிப்படையான அரசியல் உண்மையாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும் தனக்கென தனியான அரசை கொண்டிருக்கும் போதுதான் அது தனது முழுமையான உள்ளாற்றலையும் வெளிப்படுதுவதும், உயர்ந்தபட்ச சுபீட்சத்தை அடைவதும் சாத்தியப்படுககிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சிகளின் பிரிக்க முடியாத ஒரு கூறாக தேச– அரசை நிறுவுவது நடைபெற்றது ஒன்றும் தற்செயலானதல்ல. இதற்கு மாறாக பல்தேச அரசுகள் நிலவ முடியாது என்பதல்ல. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் தேசங்களுக்கிடையில் தப்பெண்ணங்களும் (Prejudice), சண்டைகளும் சச்சரவுகளும் நிகழ்வது வழக்கமாகிவிடும். இது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

அரசானது தனது சட்டங்களை முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைப்படி பெரும்பான்மை மூலமாக நிறைவேற்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு சமூகமும் தான் பிறர் எனக் கருதும் சமூகங்கள் தொடர்பாக பல தப்பெண்ணங்களை (Prejudice) கொண்டிருப்பது இயல்பானதாகும். இப்படிப்பட்ட சூழலில், தேசங்களது எண்ணிக்கையில் மோசமான அசமத்துவம் நிலவும் பட்சத்தில், எண்ணிக்கையில் பலம் கூடிய ஒரு தேசம் ஏனைய தேசங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் “ஜனநாயகபூர்வமாகவே” சட்டங்களை இயற்றுவதும், அவற்றை செயற்படுத்துவதும் சாத்தியமானதாகிறது. இங்கு நிகழ்வது முதலாளித்துவ ஜனநாயகம் அல்ல. மாறாக ‘பெருன்பான்மைவாதமாகும்’ (Majoritarianism). அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தை அதன் எழுத்துக்களின் அளவில் ஏற்றுக் கொண்டு, அதன் ஆத்மாவை சாகடிக்கும் செயலாகும். ஆனால் ஜனநாயகத்தில் இரண்டாம் தர பிரசைகள் என்ற கருத்தாக்கத்திற்கு இடமில்லையானால், இந்த முரண்நிலையை தவிர்ப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இங்குதான் பல்தேச அரசுகள் தமது ஏற்பாடுகளை கவனமாக மேற்கொண்டன. அதாவது, முதலாளித்துவ ஜனநாயகமும் இருக்க வேண்டும், ஆனால், அது வெறுமனே பெரும்பான்மைவாதமாக குறுக்கப்படவும் கூடாது. இதனை சாத்தியப்படுத்துவதாயின் நாம் முதலில் ஒவ்வொரு தேசத்திற்கும் குறிப்பான விடயங்களையும், பொதுவில் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதும் என்று விடயங்களை பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட தேசங்களுக்கு பிரத்தியேகமாய் அமைந்த விடயங்களை அந்தந்த தேசங்கள் மட்டுமே தீர்மானிப்பதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை பொதுவில் பெரும்பான்மை மூலமாக தீர்மானிப்பது என்றும் வரையறுத்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒவ்வொரு தேசத்தினதும் மொழி, கலாச்சாரம், பிரதேசம், பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி போன்றவற்றை தனித்தனியே அந்தந்த தேசங்களே தீர்மானித்துக் கொள்வதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை மாத்திரம் எல்லா தேசங்களும் சேர்ந்து மத்தியில் தீர்மானிப்பதாகவும் ஒரு ஏற்பாட்டை கற்பனை செய்து கொள்வோமேயானால், அதுவே கூட்டாட்சி (Confederation), சமஷ்டி (Federal system), மாநில சுயாட்சி (Regional Autonomy) என்று வெவ்வேறு பெயர்களுடன், வேறுபட்ட அளவிலான அதிகாரப் பகிர்வு மத்திய – மாநில அரசுகளுக்கிடையில் நிலவும் ஏற்பாடுகளாக இருப்பதை நாம் காண முடியும்.

இந்த வகையான ஏற்பாட்டின் மூலமாக ஒவ்வொரு தேசமும் தனது தனித்துவ தன்மைகளை பேணிக் கொள்வதுடன், பல்தேசிய அரசில் இடம் பெறுவது சாத்தியப்படுகிறது. இந்த ஏற்பாடுகள், அந்தந்த நாடுகளில் “பிரிவினைவாதத்தை” தோற்றுவித்து விடவில்லை. மாறாக, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டின் மூலமாக மட்டுமே அந்தந்த நாடுகளில் இருந்த தனியரசுக்கான கோரிக்கைகள் கூட தனிக்கப்பட்டன. ஆகவே பல்தேச அரசு என்பது வரலாற்றில் என்றுமே சாத்தியப்படாதது அல்ல. தற்போதும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு ஏற்பாடேயாகும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசம் தானாக முன்கையெடுப்பதன் மூலமாக, எண்ணிக்கையில் சிறியனவாக இருக்கும் தேசங்களது சந்தேகங்களை களைந்து, அவர்களது பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதன் மூலமாகவே இப்படிப்பட்ட பல்தேச அரசுகளை சாத்தியமானதாக ஆக்கின. இப்படிப்பட்ட ஒரு விரிவான சுயாட்சிக்கான ஏற்பாடுகள் இல்லாதவரையில் தேசங்களுக்கிடையில் சண்டைகளும், சச்சரவுகளும் தோன்றுவதும், அது ஒரு கட்டத்தில் யுத்தங்களாக வெடிப்பதும் தவிர்க்கப்பட முடியாததாகிறது. சோவியத் யூனியனது தகர்வை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற, இன்றும் தொடர்ந்து வரும் யுத்தங்களும் பேரழிவுகளும் இதற்கான சான்றுகளாக அமைகின்றன.

இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் சிங்கள தேசத்தின் தலைவர்கள் இலங்கையை ஒரு பல்தேச அரசாக கட்டமைக்கும் அரசியல் முதிர்ச்சியும், தாராள மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். பொன். அருணாச்சலம் கோரிய கொழும்பு மேற்கு தமிழருக்கென தனித் தொகுதி விடத்திலேயே அந்த நம்பிக்கையை பேணத்தவறிவிட்டார்கள். இந்த கோரிக்கை ஒன்றும் ஒரு தேசம் தனக்கென தனிச்சலுகை கோரும் நோக்குடையது அல்ல. எண்ணிக்கையில் குறைந்த அல்லது குடிசன பரம்பலில் அல்லது வேறொரு காரணத்தால் தமது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமற் போய்விடும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் பயப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் மூலமாகவே இந்த அச்ச உணர்வு களையப்பட்டுள்ளது. இன்று கூட இந்தியாவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று விசேட தொகுதிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. மலையக மக்களது வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமை பறிப்பும் இந்த அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கணிப்பிலிருந்து பிறந்தவையாகும். இதன் மூலமாக தேசிய மற்றும் வர்க்கரீதியில் அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் என்பதும் முதலில் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் (Altering Demographic Pattern) ஓர் நடவடிக்கைதான். ஆனால் இது ஒரு நாட்டின் பொருளாதார வளங்களை பகிரும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டது. அப்படி பகிர்வதாயினும் அதனை செய்வதற்கு சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அனுமதியை பெற்றாக வேண்டாமா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஒருக்கால் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பின்பு அது மூலவளங்களுக்கான போட்டியாக மாறி (Resourse War), அந்த பிரச்சனை இனக்கலவரத்தில் தமிழர்களை வெளியேற்றியதன் மூலமாக தீர்வு காணப்பட்டது. ஆயினும் முதலில் இதுவோர் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை என்பதும் பின்னர் ஒரு கட்டத்தில்தான் இது வளங்கள் பற்றிய போட்டியாக மாறியது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகிறது.

இப்படியாக அடுத்தடுத்து வந்த மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம், ஒற்றையாட்சி மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு முதலிடத்தை அரசியமைப்பின் மூலமாக வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் போன்ற அனைத்துமே இலங்கையின் பாராளுமன்றத்தில் “ஜனநாயக பூர்வமான” செயற்பாடுகளின் ஊடாகவே நிறைவேற்றப்பட்டனவாகும். அவ்வாறே, இந்த பிரச்சனைகள் தொடர்பாக சட்ட மற்றும் காவல் துறையின் பாதுகாவல் தேடுவதற்கு தமிழர் எடுத்த முயற்சிகளின் போதும் இந்த அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களே என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே அவை நடந்து கொண்டன. இந்தவிதமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் ஜனநாயகரீதியாகவும், அகிம்சை வழியிலும், வெகுஜனப் போராட்ட வடிவலுமே தமது ஆரம்ப எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவையெல்;ம் அரசினால் வன்முறை கொண்டு நசுக்கப்பட்ட நிலையிலேயே எதிர்ப்பியக்கங்களும் வன்முறை வடிவத்தைப் பெற்றன. இறுதியில் அது சென்று முடிந்த இடம் பற்றி பலரும் மிகவும் அதிருப்பியுறுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் தமிழ் மக்கள் அடாவடியாக வன்முறையை நாடினார்கள் என்ற கருத்து தவறானது என்பதை குறித்துக் கொள்வது அவசியமானதாகிறது.

முதலாளித்துவ புரட்சிக்கு முந்திய காலத்தில் மக்கள் படிப்பறிவு அற்றவர்களாகவும், தமது மொழி, கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுக்கல்வி, சர்வஜன வாக்கெடுப்பு நிகழும் சமூக அரசியல் சூழலில் இப்படிப்பட்ட அடக்குமுறைகள் அவர்களுக்கு சகிக்கவொண்ணா நிலைமைகளை இலகுவில் தோற்றுவித்து விடக்கூடியவை ஆகின்றன. மக்களது ஜனநாயகபூர்வமான எதிர்ப்பியக்கங்கள் வன்முறை கொண்டு நசுக்கப்படும் பொழுது அவை தன்னியல்பாகவே ஆயுதம் தாங்கிய வடிவை பெற்று விடுகின்றன. இதுதான் வரலாறு திரும்பத் திரும்ப படிப்பிக்கும் பாடமாகும். மக்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது போராட்டத்திற்கு அடிப்படையான ஒடுக்குமுறைகள் தொடரும் வகையில் அவர்கள் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டங்கள் திரும்பத் திரும்ப வெடிக்கவே செய்யும். இப்போது இன்னமும் தீவிரமாக, கடந்த கால படிப்பினைகளுடன் இன்னமும் எச்சரிக்கையுடன் இது நிகழவே செய்யும். ஆகவே பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் இந்தவிதமான போராட்டங்களை நசுக்குவது எப்படி என்று சிந்திப்பதிலும் பார்க்க, இந்த போராட்டத்திற்கு திரும்பவும் இட்டுச் செல்லக் கூடிய நிலைமைகளை தணிப்பது எப்படி என்றுதான் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.

இப்போது நாம் எம்முன்னுள்ள பிரச்சனைக்கு வருவோம். இன்று தமிழரது போராட்டம் புலிகளது தலைமையில் இவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் நாம் எப்படிப்பட்ட தீர்வுகளை நோக்கி நகரப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனையாகும். இன்றுள்ள நிலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் ( உத்தியோகப்பற்ற விதத்திலும் ஒருவித ஜனரஞ்சக பாணியிலும்) முன்வைக்கப்படும் தீர்வான தமிழரும், சிங்களவரும், முஸ்லிம்களும் தமக்குள் திருமண உறவுகளை மேற்கொள்வது, எல்லா மக்களும் நாட்டின் எந்த பிரதேசத்திலும் சுதந்திரமாக குடியிருப்பதற்கான உரிமைகளை உள்ளடக்கிய ‘ஒன்றுகலப்பது’ (Assimiliation) தொடக்கம், தனியான அரசை அமைப்பது வரையிலான பல தரப்பட்ட தீர்வுகளும் இங்கே சாத்தியமானவைதாம். கூட்டாட்சி, சமஷ்டி, மாநில சுயாட்சி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, தனித்தனியாக பிரிந்த சுயாட்சி அலகுகள், மாவட்ட சபைகள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் கிராம அளவிலான அதிகாரப் பகிர்வு ஆகியவை உள்ளடக்கிய பல தரப்பட்ட விதமான, பல தரப்பட்ட அளவிலான அதிகாரப்பகிர்வு மாதிரிகளையும் ஒருவர் இங்கு கருத்திற் கொள்ள முடியும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், தனியான ஒரு அரசை நிறுவது என்ற ஒரு முடிவைத்தவிர ஏனைய எல்லா தீர்வுகளுமே எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள, அரசதிகாரத்தை தனது கைகளில் வைத்துள்ள சிங்கள தேசத்தின் நல்லெண்ணம் மற்றும் முன் முயற்சியிலேயே தங்கியுள்ளன.

இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இலங்கைளில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுடன், சமஷ்டி என்ற சொல்லையே அசூசையாக நினைப்பவர்களுடன், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிந்த நிலையில் கூட அந்தந்த மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுப்பவர்களுடன் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொள்ளலாம் என்பதுதான். (இந்த இடத்தில் நாம் மேற்கு நாடுகளில் சாதாரண சிறிய நகரங்களுக்கே பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள் இருப்பதை ஒரு ஒப்பீட்டுக்காக குறித்துக் கொண்டு செல்வோம்) இங்கு பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு ஒடுக்கப்படும் தேசம் விரும்பினால் மட்டும் போதாது. ஒடுக்கும் தேசம் தன்னிடம் நியாயமற்ற முறையில் குவித்துக் கொண்டுள்ள அதிகாரங்களை கைவிடத்தயாராக இருக்க வேண்டும். ஒடுக்கும் தேசம் இப்படிப்பட்ட ஒரு முடிவை தானாக முன்வந்து எடுப்பதற்கான நிலைமைகள் தற்போது இலங்கையில் இல்லை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் விதத்தில் நாம் ஏதாவது செய்வது சாத்தியமா? அப்படியானால் அந்த பணியை எங்கிருந்து தொடங்கலாம் என்பதில்தான் எமக்குள் கருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு நாம் தீவிரமாக உழைத்தாக வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இந்த வேறுபாடுகளுடன் நாம் கூட்டு செயற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது மேற்கொண்டு கூட்டுத்தண்டனைக் குள்ளாக்கப்பட்டிருக்கும் (Collective punishment) வன்னி மக்களது இன்றைய அவலங்களை குறைக்க முடியுமா என்றாவது சிந்திக்காவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் தொட்டுச் செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இன்றை விவாதங்களில் பேசப்படும் ஒரு குறிப்பான விடயம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது அவசியம் என்று கருதுகிறேன். கடந்த காலத்தில் ஆயுத போராட்டம் நடத்தப்பட்ட விதம், அது கொண்டுவந்து விளைவுகள், இறுதியில் அது தோற்கடிக்கப்பட்ட விதம் என்பவற்றை பார்க்கும் பலரும் வன்முறை மற்றும் வன்முறையற்ற போராட்ட வடிவங்களை ஒன்றிற் கொன்று எதிரெதிரானவையாக வைத்துப் பார்க்கும், இவற்றுள் ஒன்றை முற்றாக நிராகரித்து மற்றொன்றை மாத்திரம் ஆதரிக்கும் போக்கு தென்படுகிறது. இது ஆரோக்கியமான ஒரு போக்கல்ல என்பதுதான் எனது கருத்தாகும். இதன் அர்த்தம் நான் கடந்த கால படிப்பினைகளை நிராகரிப்பதாகவோ அல்லது இன்றுள்ள மக்களதும், செயற்பாட்டாளர்களதும் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுப்பதாகவோ அர்த்தப்படுத்தப்படக் கூடாது. ஆனால் அவ்வப்போது போராட்டத்தில் ஏற்படும் வெற்றி – தோல்விக்கு ஏற்ப, போராட்டத்தின் வேகம் எழும் – தணியும் நிலைமைக் கேட்ப எமது கொள்கைரீதியான முடிவுகள் அமையக் கூடாது என்ற கருத்தையே நான் இங்கு வலியுறுத்த முனைகிறேன். ஒரு மக்கள் கூட்டம், தேசம் தனது உரிமைகளை வென்றெடுக்க தன்னிடமுள்ள அத்தனை சாதனங்களையும், வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உடையது என்பதை மறந்துவிடக் கூடாது. மால்கம் எக்ஸ் (Malcom X) கூறியது போல, தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை (If necessary by any means) ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது.

கடந்த காலத்தில் தவறு எங்கு நேர்ந்தது என்றால், போராட்டத்தில் வடிவங்களை அதிகாரப்படிநிலைப்படுத்தியதில்தான். நாம் ஆயுதப் போராட்டத்தையும் ஏனைய போராட்ட வடிவங்களையும் ஒன்றிற்கொண்று எதிரெதிரானவையாக பார்த்தோம். அவற்றுள் ஆயுத போராட்டமே உயர்ந்தது என்றும், இறுதியில் அதுவே ஒரே போராட்ட வடிவம் என்று ஆகிவிட்டது. இப்போது நாம் பெற்ற தோல்வியின் பின்பு அடுத்த கோடிக்கு செல்லும் போதும் அதேவிதமான இன்னொரு தவறைத்தான் மேற்கொள்கிறோம். என்னை பொறுத்தவரையில் போராட்ட வடிவங்கள் ஒவ்வொன்று அவற்றிற்கே உரிய பாத்திரத்தை கொண்டவையாகும்: ஒன்றிற் கொன்று துணையானவை: ஒன்றையொன்று நிரப்பிச் செல்பவை (Compoimentary). போராட்டத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போராட்ட வடிவங்கள் முதன்மை பெறும். வரலாற்று நிலைமைகளும், மக்களது எழுச்சியின் தன்மையும், ஏன் எதிரியின் நடவடிக்கைகளும் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கக் கூடியவையாகும். இவற்றுள் ஒன்றை விலையாகக் கொடுத்து மற்றொன்றை முன்னெடுக்க முனைவது மீண்டும் ஒரு தோல்விக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், இந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதங்களில் கவனத்தை குவிப்பதும் அவசியமானதாகிறது.

சரி இப்போது அரசியல் தீர்வு பற்றிய விடயத்திற்கு வருவோம். சிறீலங்கா அரசுகள் கடந்த பல தசாப்தங்களாக தாம் அரசியல்ரீதியான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முயன்று வருவதாக பாசாங்கு காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தீர்வுத் திட்டத்தை வரைவது என்ன ஒரு காரிய சாத்தியமற்ற ஒரு விடயமா என்று யோசித்துப் பார்ப்போம். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் தரப்பில் இதுவரையில் பலவிதமான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தமிழ் மக்கள் முன்

அவற்றை வைத்து அதனை அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்ய விடுவதில் கொள்கைரீதியாக எனக்கு பிரச்சனைகள் ஏதும் இருப்பதாத தோன்றவில்லை. இதற்கு முன் மாதிரிகள் இலங்கை அரசியலிலேயே ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்பில், கிழக்கு மாகணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருப்பதா இல்லையா என்பதை இரண்டு வருடகாலத்தில் கிழக்கு மாகாண மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்கலாம் என்று முன் மொழியப்பட்டு இருக்கிறது. இதே நியாயம் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையிலும் கூட சாத்தியமானதுதானே. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் எப்படிப்பட்ட அரசில் ஒழுங்கமைப்பிற்குள் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்: அல்லது முற்றாக தனியான அரசை அமைப்பதுதான் அவர்களது அரசியல் முடிவாக இன்னமும் இருக்கிறதா என்பதை கண்டறிவது ஒன்றும் காரியசாத்தியமற்ற விடயம் அல்லவே? இது சர்வதேச ரீதியில் கூட அங்கிகரிக்கப்பட்ட நடைமுறையே. கிழக்கு தீமோர் உட்பட அன்றாடம் பல தேசங்கள் இந்த விதமான தீர்வை நோக்கி சர்வதேச அனுசரனையுடன் முன்னேறி வருகின்றன.

இங்கே தேவைப்படுவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பேயன்றி, சாத்தியப்பாடுகள் பற்றிய பிரச்சனை அல்ல. இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது என்று சாதிக்க முனைபவர்கள் மத்தியில் இதனை சமாதானபூர்வமாக தீர்வுகாண முடியுமா என்பது கேள்விக்குறியதே. இப்படியாக அரசியல் தீர்வை சிங்கள தேசத்துடன் இணக்க பூர்வமாக அடைவது சாத்தியப்படாதபோது நாம் எமது முயற்சிகளை சர்வதேச அளவிற்கு நகர்த்துவது தவிர்க்க முடியாததாகிறது. அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தை சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கோருவதும், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ், ஆயுதங்கள் களையப்பட்ட ஒரு அமைதியான சூழ்நிலையில் தனிநாடு அமைப்பது உட்பட விரிவான அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தேர்வுகளின் ஒரு பட்டியலில் இருந்து தமிழ் மக்கள் தாம் தமது பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாக அமையும் என உறுதியாக நம்பும் ஒரு முடிவை நோக்கி நகரவும், அந்த ஜனநாயகபூர்வமான தேர்வை சிறீலங்கா அரசு அங்கிகரித்தாக வேண்டும் என்ற நிலைமையை தோற்றுவிப்பதை நோக்கி நாம் முன்னேற முடியும்.

இப்போதும் கூட நாம் இலங்கையில் சிங்கள தேசத்துடன் ஒரு முறையாக அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசில் தீர்வை எட்டுவது கொள்கையளவில் சாத்தியமானதே. ஆனால் இது ஒற்றையாட்சி அமைப்பு என்பதன் கீழ் ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது. சிங்கக் கொடி உட்பட, சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் வழங்கும் அரசியலமைப்பு போன்ற அனைத்தையும் சிறீலங்கா அரசு ஒரு பல்தேச கூட்டாட்சி அமைப்பினை நோக்கி மாற்றிக் கொள்ள முன்வருவது இந்த அரசியல் தீர்வு எதற்கும் முன்னிபந்தனையாகிறது. அதற்கான அரசியல் மனத்திட்பம் (Political Will) சிங்கள தேசத்திடம் இருக்கிறதா என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும். சிங்கள தேசத்திடம் இப்படிப்பட்ட ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது, அது முடியாத போது தமிழர் தாமே சுயாதீனமான ஒரு அரசியல் ஒழுங்கமைப்பை நோக்கி முன்னேறுவது என்பதே இப்போது எம்முன்னுள்ள தேர்வுகளாகும். இதில் எந்தவிதமான ஒரு முடிவை நோக்கி நாம் முன்னேறுவதாக இருப்பினும் முதலில் தமிழர் தம்மை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது. இதுவே இப்போது எம்முன்னுள்ள உடனடிப்பணியாகிறது. அதனை தொடங்குவதற்கே நாம் ஒரு விரிவான கருத்துப் பரிமாற்றத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டியுள்ளது.

முரளிதரன் பந்தை எறிகிறார் – குற்றம் சுமத்துகிறார் மார்க் ரிச்சர்ட்சன்

murali.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பந்தை எறிவதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ரிச்சர்ட்சன் நியூசிலாந்து பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிகிறார். இதனால் தான் அவரது பந்து வீச்சை அடிக்கவும், எதிர்கொள்ளவும் திணற வேண்டி உள்ளது. ஏற்கனவே சில முறை சந்தேகம் எழுந்ததால் அவரது பந்து வீச்சு குறித்து மீண்டும், மீண்டும் சோதனை நடத்தப்பட்டதும், அதில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்து வீசி நிரூபித்து இருப்பதும் எனக்கு தெரியும்.

கிரிக்கெட்டில் இப்போது நிறைய தொழில் நுட்பம் வந்துள்ளது. அதன் உதவியுடன் அவரது பந்து வீச்சை பார்க்கும்போது எனது கருத்தை வலுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமையும். அவரது ஆக்ஷன் காட்சியை டி.வி. ரிப்ளேயில் நுணுக்கமாக பார்க்கும்போது, பந்து வீசுகையில் முழங்கையினை 15 டிகிரிக்கு மேல் வளைக்ககூடாது என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதியை மீறுவது தெரியும்.

திருத்தம் தேவை

பந்து வீச்சு பரிசோதனையின்போது அவரது உடல் முழுவதும் ஏதோ பல்புகள் பொருத்தப்பட்ட படத்தை பார்த்து இருக்கிறேன். பந்தை எறியவில்லை என்று அவர் பரிசோதனை கூடத்தில் நிரூபித்து உள்ளார். ஆனால் சோதனை கூடத்தில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. களத்தில் அவரது பந்து வீச்சு வேறு விதமாக இருக்கிறது.

ஐ. சி. சி. யின் மெத்தன போக்கால் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசுபவர்கள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க முடிகிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் விதிகளை ஐ. சி. சி. திருத்த வேண்டியது அவசியமாகும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆகிறது. எப்படி சுழல்கிறது என்பதை எல்லாம் பார்க்கிறோமோ தவிர, அதை வீசியவர் யார், எப்படி வீசுகிறார் என்பதை பார்ப்பதில்லை என்றார்.

அரை இறுதிக்கு செரினா தகுதி

serena-williams.jpgரோஜர்ஸ் கோப்பைக டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம் வெற்றிப் பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.

ரோஜர்ஸ் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக் குடியரசு நாட்டை சேர்ந்த லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.

இதில், 6 – 3, 6-  2 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை வென்று, செரினா அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷியா), எலீனா டெமன்டிவா (ரஷியா), அலிசா கிளைபனோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்