தேசம்நெற்றில் அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரையை: “ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?” சமூகவலைத்தளமான பேஸ்புக் முடக்கி உள்ளது. யூலை 30இல் இல் தேசம்நெற்றில் வெளியான கட்டுரை, அதனை எழுதிய கட்டுரையாளரால் அவருடைய முகநூல் தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் படத்தோடு வெளியான கட்டுரையை பேஸ்புக் முடக்கியுள்ளது. குறிப்பிட்ட கட்டுரையை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். https://www.thesamnet.co.uk//?p=87861
அமெரிக்க ஐஎம்எப் இன் மிலேச்சத்தனமான திறந்த பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்து இருந்த இக்கட்டுரை, காலிமுகத்திடல் போராட்டத்தை அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்டதுடன் பாகிஸ்தானில் இம்ரான் கானை ஆட்சித் தலைமையில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களை அங்கு ஆட்சியில் அமர்த்தி இருந்ததையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது. கோட்டாபாய ராஜபக்ச ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தப்பட்டதும், இலங்கையில் அமெரிக்க – ஐஎம்எப் நலன்களைப் பாதுகாக்கவே என்பதையும் அக்கட்டுரை தெளிவுபடுத்தி இருந்தது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் – முகநூல் கருத்தியல் சர்வதிகாரத்தை நிறுவுவதில் பெரும்பிரயத்தனம் செய்து வருகின்றது. இவ்வாறு கட்டுரைகள் ஆக்கங்கள் முடக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. பல ஆயிரக்கணக்கானோரின் லட்சக்கணக்கானோரின் முகநூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகள், தொடர்கொலைகள், மற்றும் குற்றச்செயல்களுக்காகவே குறிப்பாக அறியப்பட்ட படங்களை வைத்து பதிவுகளை நீக்கி வந்த முகநூல் தற்போது பதிவுகளின் உள்ளடக்கத்தையும் அதன் ஆழமான கருத்தியலையும் ஆராய்ந்து அதற்கேற்ப பதிவுகளை நீக்கி வருகின்றது. இதன் மூலம் கருத்தியல் சர்வதிகாரம் ஒன்றை நிறுவ முயல்கின்றது. இதில் தேசம்நெற் போன்ற சின்னஞ்சிறு இணையங்கள் மட்டுமல்ல முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் கூட மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழக்கின்றார். எந்த பேஸ்புக் அவரை ஜனாதிபதி ஆக்கியதோ அதே பேஸ்புக் இன்று அவரை ஓரம்கட்ட முயற்சிக்கின்றது.
உலகம் தட்டை என்றும் சூரியன் தான் பூமியைச் சுத்துகிறது என்று முகநூல் தீர்மானித்தால் அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கப்பட்டுவிடும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் அதீத உற்பத்தியும் ஆதிக்கமும் (mass production) எவ்வளவு ஆபத்தானதோ அதனைக்காட்டிலும் ஆபத்தானது சமூகவலைத்தளங்களின் பெரும் தொடர்பாடல் (mass communication). உலகத்துக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ தொழில்நுட்பம் வழமைபோல் உலகை தன்னுடைய சர்வதிகாரத்திற்குள் கொண்டுவந்து இதுவரை பொருளாதார அடிமைகளாக இருப்பவர்களை கருத்தியல் அடிமைகாகவும் என்றென்றைக்கும் கட்டுக்களை உடைக்க முடியாதவர்களாகவும் ஆக்குகின்றது.
யாரும் விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ராஜபக்சக்களுக்குரியது. இந்தப் பெருமையை எவரும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியாது. புலிகளின் தமிழ் தேசியம் சிங்கள தேசியமும் ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டேயிருக்கும். சிங்கள தேசியத்தின் தலைவராக ராஜபக்சாக்கள் இருப்பார்கள். அது வரலாறாகின்போன உண்மை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் போராட்டங்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இது உலக போராட்ட வரலாற்றிலேயே முக்கியமானது. அப்படி இருந்தும் இலங்கை இராணுவம் அரசியலில் தலையீடு செய்யவும் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றவும் இல்லை. இன்னமும் அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றது. ராஜபக்சாக்களைக் காப்பாற்றியது கூட இராணுவத் தலைமையே.
அரகலியாக்களின் போராட்டத்தை தடுக்க கோட்டபாயா ராஜபக்ச கட்டளை வழங்கி இருந்தால் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும். ஆட்சியை சிலவேளை தக்க வைத்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு இருக்கும் சிங்கள தேசியத்தின் மீதான பிடி தளர்ந்த்து இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தலைமைக்கு ஆபத்து வருகின்ற போது தங்கள் மக்களுக்கு எதிராகவே தங்கள் ஆயதங்களை திருப்பினர். மக்களையே மண்மூட்டையாகப் பாவித்தனர். ஆனால் கோட்டபாய ராஜபக்ச தான் தப்பி ஓடுகின்ற போது கூட அரகலியாக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. வலிந்து படைபலத்தினூடாக ஆட்சியைத் தக்க வைக்கவும் முயற்சிக்கவில்லை. மீண்டும் தேர்தல் மேடைக்கு வரும் நம்பிக்கையோடு தான் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
எண்பதுகளுக்கு பிற்பாடு இலங்கையில் அபிவிருத்திக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டது ராஜபக்சக்களின் காலத்திலேயே. வறுமை ஆறு வீதத்திற்கு குறைக்கப்பட்டு இருந்தது. கொழும்பு நகர்ப்புறம் அழகுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. நாடு பூராவும் குறிப்பாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று வடக்கில் மண் வீடுகள் கொட்டில்கள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
விலை வீக்கத்தை குறைக்க வரியைக் கூட்ட வேண்டும் என்பது பொருளியலாளர்களின் ஒரு எடுகோள். பிரித்தானியாவிலும் விலைவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் பிரித்தானிய ஆளும்கட்சியின் தலைமைப் பதவியை வெல்லப் போவவராகக் கருதப்படும் லிஸ் ரஸ்ட் வரியைக் குறைப்பேன் என்று உறுதியாக அறிவித்து பலத்த ஆதரவையும் பெற்றுள்ளார். ஆனால் பிரித்தானியாவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி இல்லை. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவும் வரியைக் குறைத்துக் கொண்டார். அவர் வரிக்குறைப்புச் செய்தது கோவிட்டுக்கு முன்னைய காலப்பகுதியில். வரியைக் குறைத்தால் நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிக்கும் என்பது அவருடைய கணக்கு. ஆனால் துரதிஸ்ட வசமாக வரிக்குறைப்பைத் தொடர்ந்து கோவிட் பரவியது. நாடு முடக்கப்பட்டது. முதலீடுகள் உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. வரிமூலம் திறைசேரிக்கு வரவேண்டிய வருமானம் ஸ்தம்பித்தது. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சென்றது.
கோவிட் பாரிய நோய்ப் பரம்பல் மிகத் தீவிரமாக பரவி வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. செல்வந்த நாடான அமெரிக்காவிலேயே இன்றைக்கும் நூற்றுக்கணக்காணவர்கள் மரணித்துக்கொண்டு தான் உள்ளனர். அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. அயல்நாடான இந்தியாவில் 5 மில்லியன் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஆனால் பொருளாதாரத்தை பற்றி எண்ணாமல் உயிர்களைக் காப்பாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் மிகக் கடுமையான முடக்கத்தை கொண்டு வந்தபடியால் இலங்கையில் கோவிட் தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைக்கப்பட்டது. அதற்காக நாடு பொருளாதார ரீதியாக பெரும் விலையைக் கொடுத்தது. நாட்டின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 13 வீதத்தை ஈட்டித் தரும் உல்லாசப் பயணத்துறை ஸ்தம்பித்தது.
அந்நியச் செலாவணி கையிருப்பு இன்மையால் அசேதனப் பசளை இறக்குமதியை திடிரென நிறுத்தியதால் சேதனப்பசளைக்கு மாறும்படி அரசு அறிவித்தது. கோட்டபாயாவின் இந்த முடிவு நீண்ட கால நோக்கில் மிகுந்த நன்மையை ஏற்படுத்துவதாக இருந்த போதும் உடனடியாக நாட்டின் உணவு உற்பத்தியில் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மற்றுமொரு துறையான பெரும்தோட்டத் துறையிலும் பாரிய வீழ்ச்சியைக் கொடுத்தது. அரசு சேதனப் பசளைப் பாவனையை நிரந்தரமான ஒரு மாற்றமாக அறிவிக்காமல் நெருக்கடியைத் திசை திருப்புவதற்கான ஒரு உபாயமாகவே பயன்படுத்தியது. அதனால் சிறந்த ஒரு கொள்கைத் திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளபடாமல் போனது.
கோட்டபாயாவின் எரிபொருள் கொள்கையும் குறிப்பிடத்தக்கது. 2030இல் இலங்கையை 60 வீதம் இயற்கையூடாக பெறக்கூடிய காற்று, சூரிய ஒளி, மற்றும் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து டிசல் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியை குறைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. நாட்டின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிட்டு நடத்தக்கூடிய அரசியல் பலம் ராஜபக்சக்களிடம் மட்டுமே இன்றும் உள்ளது.
ஆடுகள் நனைகிறது என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது:
முற்றிலும் ஜனநாயக அரசியல் அணுகுமுறை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிறப்பிடமான பிரித்தானியாவிலேயே முழுமையான வெற்றியளிக்கவில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்சி ஆதரவாளர்களிடையே மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த ஜெரிமி கோபின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்த போதும் ஜனநாயகத்தின் பெயரில் அவர் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டார், அன்ரி செமற்றிசம் என்ற புனையப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடைய கட்சியின் உறுப்புரிமையே பறிக்க முயற்சிக்கப்பட்டது. அன்ரி செமற்றிசம் என்பது நாசிக்களினால் யுதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறுப்பது. ஆனால் பாலஸ்தீனியர்களின் இன்றைய நிலைக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேசினால் அதனை அன்ரி செமற்றிசம் ஆக்கி, ஜனநாயக விரோத மூலாம்பூசி, முதலாளித்துவ சக்திகள் முற்போக்கு சக்திகளை அரசியலில் இருந்தே ஓரம்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயல்களுக்கு முட்டையில் மயிர்பிடுங்கும் தீவிர இடதுசாரிகளும் ஆதரவளிப்பார்கள். இவர்கள் வலதுசாரிகளுடன் சேர்ந்த பிரிக்ஸிற்றையும் ஆதரித்தனர்.
அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் காவலனாகக் காட்டிக்கொண்டு கறுப்பினத்தவர்களை காலால் நெரித்தும் தெருநாய்களைப் போல் சுட்டும் கொல்கின்றனர். தன்னியக்க துப்பாக்கிகளை விளையாட்டுப் பொருட்களாக விற்கும் அமெரிக்காவில் குழந்தைகள் பாடசாலைகளிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அதற்கு அமெரிக்க ஜனநாயகம் இடமளிக்கின்றது. பெண்கள் கருக்கலைப்பு செய்வதை அமெரிக்க ஜனநாயகம் தடுக்கின்றது. அவர்களைக் கொலைகாரர் என்று முத்திரை குத்துகிறது. இந்த ஜனநாயகத்தை ஈராக்கிற்கு, லிபியாவுக்கு, சிரியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று சொல்லி அந்நாடுகளைச் சீரழித்தனர். தற்போது அமெரிக்க ஜனநாயக ஏற்றுமதி இலங்கையில் மையம் கொண்டுள்ளது.
அமெரிக்க சார்பு ஊடகங்களின் வர்ணிப்பின் படி: இலங்கை மக்களுக்கு ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் ஜனநாயகம் இல்லையாம். அதனால் ஊழலாம். பொருளாதார நெருக்கடியாம். இலங்கை பொருளாதார நெருக்கடி அமெரிக்க சார்பு ஊடகங்களை கண்கலங்க வைத்தது. மக்கள் வறுமைக்குள் வாடுவதாக, மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுவதாக இந்த ஊடகங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது. இடதுசாரி லிபரல்களையும் நீச்சல்குளத்தோடு வாழும் மனித உரிமைச் சட்டத்தரணிகளையும் கொண்டு வந்து ஐஎம்எப் இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்று புலம்புகின்றனர். ஆடுகள் நனைகின்றதாம் என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது. இது தான் சர்வதேசத்தில் இலங்கையின் நிலை.
கோட்டபாய ராஜபக்சவை ஏன் மேற்குலகு வெறுத்தது? கோட்டபாய ராஜபக்ச தமிழர்களை இனப்படுகொலை செய்ததால் மேற்குலகம் அவரை வெறுப்பதாக எண்ணினால் அது மிகப்பெரும் முட்டாள்தனம். இலங்கையின் வடக்கில் 2009இல் இனப்படுகொலை இடம்பெற்றதாக எந்த சர்வதேச மனிதஉரிமை அமைப்பும் குற்றம்சாட்டவில்லை. யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மையை பச்சையாகச் சொன்னதற்காக புலித் தமிழ் தேசியம் சுமந்திரனை துரோகியாக்கியது. மேற்குலகிற்கு ஒன்றும் தமிழரில் காதல் கிடையாது. மனித உரிமைகள் பற்றியும் அவர்களுக்கு அக்கறை கிடையாது. உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை அமெரிக்காவும் நேட்டோவும் உலகம் முழுக்க மேற்கொண்டு வருகின்றனர். தங்களுடைய மோசமான மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தியதற்காக யூலியன் அசான்ஜ்சை தூக்கில் தொங்கவிட அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் எல்லாக் குளறுபடிகளையும் மேற்கொள்கின்றனர்.
அமெரிக்க – ஐஎம்எப் க்குப் பணியாமல் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவைக் கொண்டாடுவதால் கோத்தபய ராஜபக்சவை விரட்டியடிக்கும் திட்டத்தில் இவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விடயத்தில் காலிமுகத்திடல் அரகலியாக்கள் உதவியோடு மேற்குலகம் உச்சகட்ட வெற்றியைப் பெற்றது. அரகலியாக்கள் முன்வைத்த ‘கோட்ட கோ கம – கோட்டா கோ ஹோம்’ அவர்களே எதிர்பார்க்காத வெற்றியை அவர்களுக்கு அளித்தது. அமெரிக்க – ஐஎம்எப் சார்பு போராட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்த மேற்கத்திய மோகசக்திகள், படித்து முன்னேறிய ‘கபே லாற்றே – cafe latte’ குடிக்கும் லிபரல்கள், இடதுசாரிகள், ஜேவிபிக்கள் மற்றும் எதுவுமே புரியாமல் கும்பலில் கோவிந்தா போட்டவர்கள் எல்லோரும் பங்கெடுத்தனர்.
இவர்களின் தீவிர போராட்டத்தால் பெற்றோலுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட்டு குறைந்தபட்ச ரயில் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டது. மேலும் மானியங்களைக் குறைக்கவும் பொதுத்துறைகளுக்கான செலவீனங்களைக் குறைத்து வட்டியைக் கட்டுவதற்கு ஐஎம்எப் அரசை வற்புறுத்தி வருகின்றது. இதுநாள் வரை இலங்கை மக்கள் அனுபவித்து வந்த இலவசக் கல்வி, இலவச மருத்துவம், ஓரளவு தரமான வாழ்க்கை முறையை படிப்படியாகக் குறைக்கும் அல்லது இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. கோத்தபாய ராஜபக்ச இவற்றுக்கு உடன்பட மறுத்து, இறக்குமதிகளை முற்றாக நிறுத்தி, சீனா – ரஷ்யா ஊடாக இப்பிரச்சினையில் இருந்து மீள முடிவு செய்ததால் அமெரிக்க – ஐஎம்எப் நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட மறுத்ததால் இலங்கையில் ஒரு ஆட்சி-ஆள் மாற்றத்தை அமெரிக்க – ஐஎம்எப் முடுக்கிவிட்டிருந்தது. அதன் விளைவாக கோட்டபாய ராஜபக்ச விரட்டி அடிக்கப்பட்டார்.
ராஜபக்சாக்களின் மீள் எழுச்சி தவிர்க்க முடியாதது:
இன்றைய பொருளாதார நெருக்கடி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் அமெரிக்க – ஐஎம்எப் ஆல் நிர்ப்பந்திக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் விளைவு. மேலும் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கையை அடுத்து 1980க்களின் முற்பகுதி முதல் இப்பொருளாதார நெருக்கடி முளைவிட ஆரம்பித்துவிட்டது. நாட்டின் மூலப்பொருட்களையும் அந்நாட்டு தொழிலாளர்களுடைய உழைப்பையும் அடிமட்ட விலைக்கு வாங்கி தங்களுடைய நிறுவனங்கள் மூலம் முடிவுப்பொருட்களாக்கி அதனை உச்ச விலைக்கு அந்நாடுகளுக்கே விற்று உச்ச லாபம் ஈட்டும் அமெரிக்க ஐஎம்எப் கொள்கை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதிலிருந்து பிரிந்த மொட்டுக் கட்சி – ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜன பெரமுன என்பன புரட்சிகர சமவுடமை பொருளாதாரக் கொள்கையை உடைய கட்சிகள் அல்ல. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைப் போல் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க திறந்த பொருளாதாரக் கொள்கையின் காப்பாளர்களில் ஒருவர். அதனால் ரணில் மீது மேற்குலகுக்கு ஒரு காதல் எப்போதுமே இருந்து வந்தது. ரையும் கோட்சூட்டும் போடும் ரணிலுக்கும் ‘கபே லற்றே’ குடிக்கும் லிபிரல்களுக்கும் ஒருவித காதல் கிளர்ச்சி இருக்கும். இவர்களுக்கு வேட்டி சறம் கட்டித் திரியும் சிவப்புத் துண்டை போட்டுத்திரியும் ராஜபக்சக்களை கண்டால் பட்டிக்காட்டான் கிராமத்தான் என்கிற மனப்பதிவொன்று இருக்கும். இதுகூட காலிமுகத்திடலில் காணக்கூடியதாக இருந்திருக்கும். அங்கு வேட்டி சறத்தோடு யாரையும் கண்டிருக்க முடியாது.
இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்சக்களின் தலையில் கட்டி, அதற்கு சீனாவுடந்தை என்று திரித்து ராஜபக்சாக்களை ஓரம்கட்டுவதன் மூலம் இலங்கையை மேற்குலகுக்கு, அமெரிக்க ஐஎம்எப் ற்கு சாதகமாக வைத்திருப்பதே நடந்து முடிந்த காலிமுகத்திடல் போராட்ட நாடகத்தின் சாரம்சம். இதே மாதிரியான மைத்திரி – ரணில் மூலமாக நிறைவேற்றப்பட்ட நாடகமே தேசிய நல்லாட்சி அரசு. அதனை அரங்கேற்றும் வேளை முன்னாள் பிரித்தானிய பிரதமரும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையுமான ரொனிபிளேயர் இலங்கையில் இரு வாரங்கள் சத்தமில்லாமல் தங்கி இருந்தார். அப்போது தான் இரவு ராஜபக்சவோடு அப்பம் சாப்பிட்ட மைத்திரி காலையில் ராஜபக்சக்களுக்கு ஆப்பு வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
ஆனாலும் சில ஆண்டுகளிலேயே ராஜபக்சக்கள் சூழியோடி மீண்டும் மிகப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றினர். கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ரோவை போட்டுத்தள்ள அமெரிக்க உளவுநிறுவனமான சிஐஏ 600 தடவை முயற்சித்தும் தோல்வி கண்டது. அதே போல் எமது உள்ளுரில் கஸரோவை போல் தொப்பி அணிந்த டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய புலிகள் 13 தடவைகள் முயற்சித்து தோல்வி கண்டனர்.
அதனால் ராஜபக்சாக்களுக்கும் – அமெரிக்க ஐஎம்எப் க்கும் நடக்கும் ரொம் அன் செரி விளையாட்டு சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. இப்போதைய விளையாட்டில் ரணில் பலிக்கடாவாகி விட்டார். இவரைக் காட்டிலும் ராஜபக்சாக்கள் மேல் என்ற உணர்வு ரணில் பதவியேற்ற 48 மணி நேரத்தில் சஜித் பிரேமதசவால் தெரிவிக்கப்பட்டது. இந்த மனநிலை ஏற்கனவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. ராஜபக்சாக்கள் மீண்டும் இலங்கை கிராமங்களில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலர்களாக எழுந்து வருவது தவிர்க்க முடியாதது.
ராஜபக்சாக்களை கையாளக்கூடிய சிந்தனைத் திறனும் அரசியல் திறனும் லிபரல்களிடமும் மாணவர்களிடமும் இடதுசாரிகளிடமும் இல்லை. இவர்களிடம் அதற்கான அர்ப்பணிப்பும் கிடையாது. இதனால் இவர்கள் உயர்ந்த கொள்கைத்திட்டங்களைக் கையில் எடுக்காமல் ‘கோட்டா கோ கம, ரணில் கோ கம, ஒக்கம கோ கம’ என்ற புலம்பல் கோசங்களை வைத்து குட்டையைக் கிளப்பி நாட்டை சீரழிப்பதை மட்டுமே செய்வார்கள். இதுவே அரப் ஸ்பிரிங்கில் நடந்தது. அது ஆரம்பித்த துனிஸியாவில் நேற்று யூலை 27 பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி அதிகாரங்களை குவித்துக்கொண்டார்.
பொருளாதார நெருக்கடியின் சர்வதேச பரிமாணம்:
இன்றைய பொருளாதார நெருக்கடி ஒன்றும் இலங்கைக்கேயானதல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலகிலேயே மோசமானதும் அல்ல. செல்வந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சியடையாத நாடுகள் என்று உலகம் முழுவதுமே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இலங்கையில் மட்டும் தான் பொருளாதார நெருக்கடியை ஆட்சித் தலைவர் மீது போட்டுக்கட்டி ஆட்சியை மாற்றினால் பெற்றோல் வரும் எரிவாயு வரும் என்றும் நம்பினர். ஆட்சித் தலைவரை வீட்டுக்கு அனுப்பினால் தங்கள் பெற்றோல் ராங்குகள் நிரம்பும் என்று நம்பினர். ஐரோப்பாவில் உள்ள துருக்கியின் விலைவீக்கம் 80 வீதம். அபிரிக்க நாடான கமரூனில் விலைவீக்கம் 250 வீதமாக அதிகரித்து. அங்கு மக்கள் போராடுவதற்கு பதிலாக மாற்று பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றனர்.
ஆறு மாதம் காலிமுகத்திடலில் கிடந்ததற்குப் பதிலாக வீடுகளில் தோட்டத்தில் நான்கு கன்றுகளை வைத்திருந்தால் காய்கறியாவது கிடைத்திருக்கும். நாடு சுமுகமாக உள்ளபடியால் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருக்கும். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளுர் உற்பத்தியை பெருக்கவும், சூரிய ஒளியைப் பயன்படுத்தி தற்போதுள்ள மின்சாரப் பிரச்சினையை கையாள்வது பற்றி சிந்தித்து இருக்கலாம். துவிச்சக்கர வண்டிகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முயற்சித்திருக்கலாம். இது எதுவுமே செய்யாமல் இலவசக் கல்வியும் தந்து அது முடிய ராஜபக்சக்கள் அவர்களுக்கு வேலையும் எடுத்துக் கொடுக்க வேண்டும். பிறகு இந்த வேலைக்குப் போய் வேலை செய்யாமல் பொழுது போக்கிவிட்டு வர சம்பளமும் வழங்க வேண்டும். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?
ராஜபக்சாக்களின் சொத்துக் குவிப்பு புலம்பல்கள்:
ராஜபக்சாக்களோ மற்றும் அரசியல் வாதிகளோ ஒன்றும் காமராஜர் போல் தன்மூத்திரம் அருந்தி ஒரு சதத்தைக் கூட களவாடாதவர்கள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மறைவுக்குப் பின் அரசியலுக்கு வந்த, யுத்தத்தில் சீரழிந்த கிளிநொச்சி மண்ணில் இருந்து பாராளுமன்றம் வந்த சாதாரண பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனால் ஒரு பத்து ஆண்டு காலத்தில் கணிசமான சொத்துக்களை சேர்க்க முடியுமானால், பரம்பரை அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த, குடும்பமே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்சாக்கள் சொத்து வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?
பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சரும் தற்போது ஆளும் கொன்சவேடிவ் கட்சித் தலைமைக்கு போட்டியிடுபவருமான ரிஷி சுனாக் பிரித்தானியாவிலேயே மிகச் செல்வந்தரான அரசியல் வாதி. அவரும் ஒன்றும் புனிதரல்ல. அதே போல ராஜபக்சாக்கள் ஆட்சிக் வருவதற்கு முன்னரே 2005இல் 400 கோடி ரூபாய்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு கொடுத்துத் தான் ஆட்சியைக் கைப்பற்றினர். வே பிரபாகரனிடம் 400 கோடி கொடுத்திருந்தால் அவர்கள் எத்தினை கோடிகளுக்கு அதிபதியாக இருந்திருக்க வேண்டும்? மேலும் பணம் பணத்தை உருவாக்கும். புலம்பெயர் தேசங்களில் ஒரு சதம் இல்லாமல் வந்த புலிகளுக்கு பணம் சேர்த்த பலர் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஆகவே ராஜபக்சக்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ஆனால் ஆட்சிக்கு வந்து தான் கொள்ளையடித்தார்கள், அவர்கள் கொள்ளையடித்து தான் நாடு வங்குரோத்தில் போனது என்பதெல்லாம் உப்புச்சப்பற்ற வாதம். ஊதிப்பெருப்பிக்கப்பட்ட விடயங்கள். பிரபல இணைய ரக்ஸி நிறுவனமான ஊபர் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை இயற்றுவதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மக்ரோனுக்கு வழங்கியது 600,000 டொலர்கள் (21 கோடி இலங்கை ரூபாய்).
ராஜபக்சாக்கள் சில மமதையான முட்டாள் தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தாலும் இலங்கையில் உள்ள அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில் கல்வியில் தேர்ந்தவர்கள், திறமைசாலிகளும் கூட. அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்களால் வேரோடு சாய்க்க முடிந்தது. அவர்களுடைய இத்திறமைகளை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகளும் ராஜபக்சக்களால் பாதிக்கப்பட்டவர்களும் இன்று முகநூல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக விக்கிரமாதித்தன் கதைபோல் ராஜபக்சக்கள் பற்றி கதையளக்கின்றனர். கதையளந்து சுய இன்பமடைகின்றனர். அதே போல் புலித் தேசியத்தில் ஊறிப்போன தமிழர்களுக்கும் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் முதிர்ச்சி இன்னமும் இல்லை. இதேநிலை தான் முஸ்லீம்களுக்கும். ஏதாவது வகையில் ராஜபக்சக்களை தாழ்த்தி நையாண்டி செய்து சிற்றின்பம் அடைகின்றனர்.
அப்போது 1980க்களின் இறுதியில் பிலிப்பைன்ஸில் மக்களைக் கொளையடித்து சூறையாடிய பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் தன் பெற்றோர் செய்த சாதனைகளைச் சொல்லி தற்போது அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியேறி உள்ளார். ஆனால் ராஜபக்சக்கள் பேர்டினனட் மார்க்கோஸ் தம்பதிகளளவுக்கு கீழ் நிலையை அடையவில்லை. இன்றும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் இன்னமும் அவர்கள் நிலைகொண்டுள்ளனர். அதனால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற கனகாலம் பொறுத்திருக்க வேண்டியதில்லை.
இலங்கையில் ஊடகங்களும் ஆய்வாளர்களும் எவ்வித கேள்வியும் இன்றி ஆய்வும் இன்றி தங்களுக்கு சுய கிளர்ச்சியூட்டம் விடயங்களை எழுதுகின்றனரே அல்லாமல் தகவல்களைச் சரி பார்ப்பதில்லை. அதனால் அடிப்படைப் புரிதல் இன்றி வெறும் உணர்ச்சிக் கிளர்ச்சி அரசியலே இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபடும் லிபரல்கள், இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மோகத்திலேயே இன்னமும் உள்ளனர். அவர்களிடமும் இலங்கையின் அந்நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றிய கரிசனை இல்லை. இந்தப் பினனணியில் போராட்டங்கள் பலனளிப்பதற்கான வாய்ப்பு மிக மிக அரிதாகவே உள்ளது. அதனால் ராஜபக்சாக்களின் எதிர்காலத்திற்கு அவ்வளவு பெரிய ஆபத்து ஒன்றும் உள்ளுரில் இல்லை. ஆனால் அமெரிக்க கூட்டுகள் ராஜபக்சாக்களுக்கு எப்படியும் ஒரு பாடம் படிப்பிக்க கங்கணம் கட்டிவிட்டனர். இந்த நெருக்கடி ராஜபக்சாக்களுக்கு இருக்கும். கோட்டபாயாவின் உள்ளாடையை வைற் ஹவுசில் காட்சிக்கு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு அமெரிக்க – ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) ஆல் சிபாரிசு செய்யப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியது. அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தங்கள் காரியம் நடந்து முடிந்ததும் அரகலியாக்களை அடித்து விரட்டினர். கோட்டபாய ராஜபக்ச மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் அரகலியாக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரகலியாக்களின் போராட்டத்தினால் நட்டைவிடே ஓடி பதுங்கி இருக்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் ராஜபக்சக்களின் வசமே இன்னமும் உள்ளது. ராஜபக்சக்கள் யாரைக் காட்டினார்களோ அவர் – ரணில் ராஜபக்ச ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.
அரகலியாக்களும் அமெரிக்க – ஐஎம்எப் கூடலும் ஊடலும்:
இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் ஐஎம்எப் – சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் காலிமுகத்திடல் அரகலியாக்கள் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தவும் அரகலியாக்கள் கோரவில்லை. அப்படிக் கோரி இருந்தால் நாடு எதிர்காலத்தில் சுயசார்பாக வந்துவிடும். ஐஎம்எப் – உலகவங்கிக்கு அடிமையாக இராது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் முழுமையான ஆதரவு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டு இராது. இந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகள் கண்டுகொண்டிராது. போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களுக்கு 45 மில்லியன் டொலர் வழங்கப்பட்டும் இராது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோக்கோ கோலா குடிபானம் முதல் இலவச உணவுகள் வழங்கப்பட்டிராது.
ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்னதெல்லாம் போராட்டகாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. காற்று வாங்க வந்த போராட்டகாரர்களுக்கு முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்டது போல முதற்தரமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. காலிமுகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கம – கோட்டா கோ ஹோம்’ போராட்டம் தான் உலகில் நடைபெற்ற ஒரே செழிப்பான போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்துதான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக் கட்டத்தில் தான் கும்பலில் கோவிந்தா என்று பெரும் தொகையானோர் ஈர்க்கப்பட்டனர். இதனை ஜேவிபி இன் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.
பிரித்தானியாவில் இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி ஐஎம்எப் இன் நிபந்தனைகளை நிராகரிக்கவும் கடன்களை மீளச்செலுத்த வேண்டாம் என்பது உட்பட பல முற்போக்கான கோரிக்கைகளை வைத்தது. ஆனாலும் இக்கோரிக்கைகள் பெரும்பாலும் தட்டிக்கழிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்ட போதும் கூட தமிழ் சொலிடாரிட்டி அரகலியாக்களுடைய அமெரிக்க ஐஎம்எப் சார்புநிலைக்கு ஆதரவளித்தனர். இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால் தாங்கள் துரோகிகள் ஆகிவிடுவோம் என்பதால் மேற்கத்திய ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்ட லிபரல்களும் இடதுசாரிகளும் கூட தங்கள் தங்கள் நாடுகளில் ஆதரவுப் போராட்டங்களை கொப்பிகற் முறையில் அல்லது குழவாத உளவியல் மற்றும் டொமினோ தாக்கம் போல் மேற்கொண்டனர்.
அமெரிக்க – ஐஎம்எப் நலன்களுக்காகப் போராடிய இந்த அரகலியாக்களை அமெரிக்க – ஐஎம்எப் ஆதரவு பெற்ற ரணில் பதவியேற்ற 24 மணிநேரங்களிற்குள்ளாக இரவோடு இரவாக விரட்டி அடித்தார். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை விரட்டி அடித்து, ரணில் தன்னுடைய வீட்டை எரித்ததற்குப் பதிலடி வழங்கினார்.
மக்கள் செல்வாக்கற்ற காலிமுகத்திடல் அரகலியாக்கள்:
பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததும் அவருடைய கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அடுத்த தேர்தலலில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு பதிலாக இன்னொருவரை புதிதாக தெரிவு செய்வதன் மூலமே தாங்கள் மக்களிடம் செல்ல முடியும் என்று நம்பினர். அதனால் 24 மணி நேரத்திற்குள் வரலாறு காணாத அளவில் 49 அமைச்சர்கள், துணை அமைசர்கள் பதவி விலகினர்.
ஆனால் ஆறு மாதகாலம் நீடித்த போராட்டத்தின் போதும் அதன் பின் கோட்டபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னும் கூட அவருடைய அமைச்சரவையிலோ பாராளுமன்ற பெரும்பான்மையிலோ குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் கோட்டபாய ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜனப் பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம், அதற்கு ராஜபக்சக்களின் தலைமை தேவை என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு அதனை மிகத் தெளிவாக்கி உள்ளது.
போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜேவிபிக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இப்பதவியை ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன கட்சியினரே வழங்கி இருந்தனர். 134 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மறுமுனையில் ரணிலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் 82 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய சகா. இவ்விருவரில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் ராஜபக்சக்களின் அதரவுடனேயே ஆட்சியை மேற்கொள்கின்றார் என்பதே உண்மை. தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களுக்கு மிகவும் விசுவாசமானவர். இவர்கள் அமைக்கின்ற அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜபக்சாக்களின் அமைச்சரவை உறுப்பினர்களாகவே உள்ளனர். இலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் ஆதரவுத் தளத்தில் எவ்வித பாரிய பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
இழப்பதற்கு தம்முடைய வறுமையைத் தவிர எதுவுமற்ற மக்கள் அமெரிக்க நலன்களுக்கும் ஐஎம்எப்க்கும் மசிந்துவிட மாட்டார்கள். காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கும் இலங்கை வாழ் சாதாரண மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. கொழும்பில் நீர்த்தடாகத்தோடு வீடுவைத்திருக்கும் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணி, தான் நடுத்தரவர்க்கம் என்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் கதையளந்தால் மலையகத்தில் லயன்களில் இலங்கையின் அடிப்படைச் சம்பளத்திலும் குறைவாக சம்பளம் பெறும் குடும்பங்கள் என்ன கருதும்?
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். இலங்கை மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவக் காப்புறுதி உடையவர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்தி கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களுடைய நாளாந்த தேவைக்கு பெற்றோல் வேண்டும். சமைக்க எரிவாயு வேண்டும். அவர்களுக்கு பெற்றோலுக்கு மானியங்கள் தேவையில்லை. கள்ளச்சந்தையில் பெற்றோலை லீற்றர் 3,000 ரூபாய்க்கும் வாங்கி ஓடக்கூடியவர்கள். ஆனால் இலங்கையின் கிராமப் புறங்களிலேயே வாழும் பெரும்பாலான மக்கள் எரிவாயுவை பயன்படுத்த தெரியாதவர்கள். அடுப்பூதி ஈர விறகை வைத்தே சமைப்பவர்கள். பல லட்சம் கொடுத்து காரையோ மோட்டார் சைக்கிளையோ வாங்க இயலாதவர்கள். சைக்கிள் இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தில் வாழ்பவர்கள்.
இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது வேலை செய்து சம்பாதிக்காதவர்கள். பெற்றோரை கஸ்டப்படுத்தி மோட்டார் சைக்கிளும் அவர்களிடமே ஓசியில் பெற்றோலும் அடித்து முறுக்கித் திரிபவர்கள். ஓசியிலேயே வாழும் இந்த ஜீவன்களுக்கு வாக்களித்து பழக்கம் இருக்கா என்பதே சந்தேகம். இவர்கள ஏன் போராடினார்கள்? என்னத்தை கோரினார்கள்?
‘கோட்டா கோ ஹோம் – பில் மை பெற்ரோல் ராங் (fill my petrol tank)’ போராட்டம் பூரண வெற்றி. இனிவரப்போகும் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. இதனால் தான் அரகலியாக்கள் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தக் கோரவும் இல்லை.
ராஜபக்சாக்கள் நிரந்தரமாக துரத்தப்பட்டுவிட்டார்கள் என்ற குதுகலத்தில் போராட்டக்காரர்கள் உள்ளனர். சர்வதேச மேற்கு ஊடகங்கள் கோத்தாபய ராஜபக்சவின் உள்ளாடையை கொண்டாடியது. ஆனால் எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா? என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. போரட்டக்காரர்களிடமும் பதில் இல்லை. அவர்கள் காலிமுகத்திடலில் காற்று வாங்கி இப்போது ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்த்து செல்பி எடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர். போராட்டக்காரர்கள் இலங்கையை அடுப்பிற்குள் இருந்து நெருப்பிற்குள் தள்ளியுள்ளனர். ஐஎம்எப் மற்றும் உலக வங்கிக்கு இலங்கையைப் பலிகொடுப்பதற்கு இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்தில் பெற்றோல், எரிவாயு, சேதனப் பசளைக்காக இலங்கையின் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வழங்கப்பட்டு வரும் மானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும். இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பொருளாதாரம் பற்றியும் அரசியல் பற்றியும் புரியாத இதே மக்களின் பிள்ளைகளுக்கு இதுவரை கிடைத்துவந்த அடிப்படை வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையைத் தொடர்ந்தும் பொருளாதார அடிமையாக்குவதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அதன் பின்னுள்ள உலக நாடுகளும் மிகக் கச்சிதமாக இயங்குகின்றன.
ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள்:
வினைத்திறனற்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சிகளை மேற்கொள்ள மக்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. ஆனால் இவ்வாறான போராட்டங்கள் புரட்சிகர கட்சிகளால் முன்னெடுக்கப்படாமல் தலைமை தாங்கப்படாமல் எழுந்தமானமாக நடத்தப்படுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. மாறாக பிரச்சினையை மேலும் மோசாமாக்குவதோடு, போராடியும் பயனில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். எதிர்காலம் முன்னிலும் மோசமானதாக அமையும்.
உலக அளவில் அண்மைக்காலங்களாக நடத்தப்பட்டுவரும் திடீர் ஆட்சிமாற்றங்கள் ஒன்றும் மக்களால் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு அரப் ஸ்பிரிங் ஆனாலும் காலிமுகத்திடலானாலும் விதிவிலக்கல்ல. மக்களை வைத்தே அந்த மக்களைச் சுரண்டும் கைங்கரியத்தை அமெரிக்க மற்றும் நாட்டுத் தலைமைகள் மிக உன்னதமாக மேற்கொண்டு வருகின்றன. காருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் பெற்றோல் கிடைக்காத அகரலியாக்களின் காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையை நிரந்தரமாக சீரழிப்பதற்கு மேற்குநாடுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுக்கும் பல்கைலக்கழகங்களில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு தங்கள் சகமாணவிகளையே ராக்கிங் என்ற பெயரில் கொடூர பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து விடுவிக்க முடியவில்லை. அல்லது விடுவிக்க விரும்பவில்லை. காலிமுகத்திடல் போராட்டம் உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட நீண்டகால சிந்தனையற்ற உயர்தர சமூகத்தின் போராட்டம். இது மோட்டார் சைக்கிள் காருக்கு பெற்றோலுக்காக கீழ்நிலை மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் அகற்றியுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைத் தீர்க்காமல் நாட்டை விற்கும் போராட்டம்:
நாட்டில் ஏற்பட்டு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை. அதன் அடிப்படை அம்சம் அந்நியச்செலாவணி கையிருப்பில் இல்லை. இந்த அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லாமால் போனதற்காண முக்கிய காரணம் நாட்டிற்கு அந்நியச் செலவணியைக் கொண்டுவரும் துறைகள் அண்மைய நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் 13 வீதத்தை கொண்டுவருவது. அது முற்றாக முடங்கியது. தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர் அனுப்புகின்ற பணம். உலகம் முழவதும் ஏற்பட்ட கோவிட் நெருக்கடியால் இவ்வருமானங்கள் முற்றிலும் முடங்கியது. அதேசமயம் முதலீடுகளை ஊக்குவிக் வரிக்குறைப்பைச் செய்ததன் மூலம் அதன் மூலம் ஈட்டக்கூடிய வருமானமும் முற்றிலும் முடங்கியது. தமிழர்களின் ஜஎஸ்பி பிளஸ் நிறுத்த போராட்டத்தின் மூலம் ஆடை ஏற்றுமதியில் கிடைத்த வரிச்சலுகை இலங்கைக்கு தற்போது இல்லை. இவையே பொருளாதார நெருக்கடியின் பின்னணி.
இதிலிருந்து மீள்வதற்கு முதல் செய்ய வேண்டியது நாட்டில் அமைதியை நிலவச் செய்து உல்லாசப் பயணிகளை செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அதனைச் செய்திருந்தாலேயே தற்போதிருந்த பெற்றோல் எரிவாயு நெருக்கடியை தீர்த்திருக்க முடியும். நாட்டில் ஏற்பட்டுள்ள விலை வீக்கத்தினால் இலங்கையின் நாணயப் பெறுமதி மிகக் குறைந்துள்ளது. இது வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதனை விடுத்து தொடர்ந்தும் நாட்டை முடக்கி பொருளாதாரத்தை சீரழிப்பது சர்வதேச நாணய நிதியத்திடமும் உலக வங்கியிடமும் இலங்கையை ஒப்படைக்கும் ஒரு திட்டமே.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியும் சர்வதேசப் பின்னணியும்:
அமெரிக்காவில் ஜனவரி ஆறில் டொனால்ட் ட்ரம் தன்னுடைய ஆதரவு மக்களை ஹப்பிடல் ஹில் மீது ஏவிவிட்டார். செனட்டர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேசைகளின் கீழ் பதுங்கினர். ஹபிடல் ஹில் அரகலியாக்கள் கட்டடத்திற்குள் நூழைந்து தங்கள் வெற்றியை ஆர்ப்பரித்து கொண்டாடினர். ஹபிடல் ஹில் அரகலியாக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர்வரை கொல்லப்பட்டனர். ஹபிடல் ஹில் அரகலியாக்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிர வலதுசாரிகள் என்றும் அமெரிக்க மற்றும் சார்புநாடுகளின் ஊடகங்கள் முத்திரை குத்தின. விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது. மாறாக கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை கைப்பபற்றிய காலிமுகத்திடல் அரகலியாக்களை சர்வதேச ஊடகங்கள் கொண்டாடியது மட்டுமல்ல ஜனாதிபதியின் உள்ளாடையையும் தூக்கி கொண்டாடினர். அத்தோடு சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் தான் இலங்கையை பொருளாதாரக் கஸ்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரும் காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கு ஆதரவானவர்களின் பேட்டிகளும் ஒலிபரப்பப்பட்டது.
சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தான் நாட்டை இந்நிலைக்கு இட்டுச்சென்றது என்ற பரப்புரையை இந்தியாவும் மேற்குநாட்டு ஊடகங்களும் தீவிரமாகப் பரப்பின. ஆனால் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் 10 வீதம் மட்டுமே. இந்த பத்துவீத கடன் கூட இலங்கையின் நீண்டகால கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள். அவை நீண்டகாலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பயன்படக்கூடியவை. இலங்கையில் சீனாவின் ஆளுமையை விரும்பாத இந்தியாவும் மேற்குநாடுகளும் இலங்கைக்கும் சீனாவுக்கும் எதிரான பரப்புரைகளில் மிகநீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றன. இதற்குச் சாதகமாக 2009 யுத்த முடிவை கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராகப் பயன்படுத்தி வந்தன. இந்த யுத்தத்திற்கு முற்று முழதான ஆதரவை அழித்துவந்த சர்வதேசமும் இந்தியாவும் தாங்கள் ஏதோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் போல் நடித்துவருகின்றனர்.
மேலும் அமெரிக்க சார்பான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ரஷ்ய விமானங்களைத் தடுத்து வைத்திருந்தார். அதன் பின் கோட்டபாய ராஜபக்ச தனது பிரதிநிதிகளை ரஷ்யாவுக்கு அனுப்பி பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி இருந்தார். அதன் முடிவுகள் வருவதற்கு முன்னரேயே அரகலியாக்கள் கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதிச் செயலகத்தைவிட்டும் நாட்டைவிட்டும் வெளியேற்றினர். பாகிஸ்தானில் சினாவுடன் நெருக்கமாக முற்பட்ட தன்னை அமெரிக்கா சதிமூலமாக வெளியேற்றியதாகவும் தற்போது நாட்டை கிரிமினல்களிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானுக்கு நடந்த அதே நிலை ராஜபக்சவுக்கும் நடந்தேறியுள்ளது. நாட்டுத்தலைவர்கள் எப்பேர்ப்பட்ட மோசமானவர்களாக, கொடூரமானவர்களாக, சர்வதிகாரிகளாக, மனித உரிமையை மீறுபவர்களாக இருந்தாலும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் அமெரிக்க மற்றும் சார்பு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் வரை. அவர்களுக்கு எதிரான ரஷ்யாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டுச் சேர்ந்தால் அல்லது திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைக்கு மாறாகச் சென்றால் அவர்கள் நையப்புடைக்கப்படுவார்கள். அவர்களுடைய உள்ளாடைகள் சர்வதேச ஊடகங்களில் வலம்வரும். சதாம் ஹ_சைன், கேர்ணல் கடாபி, முகாபே இவர்கள் எல்லோருமே அமெரிக்க – பிரித்தானிய கூட்டின் செல்லப்பிள்ளைகளாக இருந்து அமெரிக்காவிற்கு எதிரியானவர்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையீடு செய்த எந்தநாடும் உருப்படவில்லை. உருப்படவும் விடமாட்டார்கள். அந்த நீண்ட பட்டியலில் காலிமுகத்திடல் அரகலியாக்களின் உதவியோடு இலங்கையும் சேர்க்கப்பட்டு உள்ளது.
அரகலியாக்களின் கோரிக்கைகள் அல்ல விருப்பப்பட்டியல்:
பல்கலைக்கழக மாணவர்கள் கீழ்த்தரமான பகிடிவதைகளில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளாகும் தமது சக தோழர்களுக்கு சார்ப்பாக எப்போது போராடத் தொடங்கினார்களோ அதிலிருந்து அவர்களது போராட்டங்கள் மிகக் கீழ்த்தரமானவையாக்கப்பட்டுவிட்டன.
இந்த காலிமுகத்திடல் அரகலியாக்களால் முன்வைக்கப்பட்ட காலிமுகத்திடல் கோரிக்கை ஒன்றும் மோசமானதல்ல. ஆனால் அதில் உள்ளடக்கம் இல்லை. கபொத சாதாரணதர மாணவர்களிடம் எவ்வாறான அரசு உங்களுக்கு வேண்டும் என்று கேட்டால் அவர்கள் ஒரு விருப்பப்பட்டியலை எழுதித் தருவார்கள். அதற்கு ஒத்ததாகவே அரகலியாக்களின் கோரிக்கைகள் உள்ளது. அவர்களிடம் அரசு பொருளாதாரம் சார்ந்த அடிப்படை அறிவுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கொண்டுவந்த நல்லாட்சி விளையாட்டுத்தான் அது. மத்திய வங்கியை கொள்ளையடித்தது போல் செய்வதற்கான வழி.
நாட்டில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடத்தப்பட்டு அதில் அரகலியாக்களும் ராஜபக்சக்களும் போட்டியிட்டால் ராஜபக்சாக்கள் அரகலியாக்களைக் காட்டிலும் கூடுதல் வாக்கைப் பெறுவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஹபிடல் ஹில் அரகலியாக்கள் ட்ரம் தலைமையில் போட்டியிட்டால் பைடன் தோற்றுவிடுவார். இதுதான் நிலவரம். இந்த அரகலியாக்கள் இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் கார் வைத்திருப்பவர்களும் இலவசக் கல்வி முடிய வெளிநாடு செல்ல இருப்பவர்களும் தான். இவர்கள் ஒட்டுமொத்த இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.
உலகத் தலைவர்கள் பொறிஸ் ஜோன்சன், மோடி போல் ராஜபக்சாக்களும் ஊழல் பண்ணி உள்ளனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. குஜராத் படுகொலைகளுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமைக்காக, இந்தியப் பிரதமர் மோடி பிரதமராகுவம் வரை அவருக்கு அமெரிக்கா செல்லத் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சவுதி அரசர் பின் சலமனின் உத்தரவில் அவரை கடுமையாக விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளும் துண்டுதுண்டாக்கப்பட்டது. சவுதியை ‘பறையர் தேசம்’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி பைடன். இப்போது பைடனும் பின் சல்மனும் கூடிக் குலாவுகின்றனர். ‘கொஞ்சம் உன்டெண்ண பெற்றோல் விடுங்கோ’ என்று கேட்க பைடன் சவுதி சென்றுள்ளார். மறுபக்கம் யேமன் மக்களை சவுதி குண்டுபோட்டு அழித்துக்கொண்டுள்ளது.
‘உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யக்கூடாது’ என்று சொல்வார்கள். அதேபோல் முதலுதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிலையை மோசமடையச் செய்யக் கூடாது. உங்களால் ஒரு விடயத்தை ஆக்கபூர்வமாகச் செய்ய முடியாவிட்டால் அதனைச் செய்யாமல் இருப்பதே மேல். குட்டையைக் குழப்பி விடுவதில் பயனில்லை. காலிமுகத்திடல் போராட்டம் குறுகிய சிலரின் நலன்களுக்காக ஒரு பொழுது போக்காக ஆரம்பிக்ப்பட்டது. தமிழரசுக்கட்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இப்படித் தான் தூண்டிவிட்டது. மக்களது மெல்லிய உணர்வுகளை உணர்ச்சியூட்டி தூண்டிவிட்டு அழிவை ஏற்படுத்துவதே கடந்தகால போராட்டங்கள் தந்த படிப்பினை. காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் இன்னுமொரு உதாரணம்.
இன்று இரவு வரை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனை வெளியேறும்படி வற்புறுத்தி 43 அமைச்சர்கள், இளைய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தது நவீன பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். நேற்று மாலை ஆறு மணியளவில் சுகாதார அமைச்சுச் செயலாளர் சஜித் ஜாவட் ராஜிநாமாச் செய்து ஆரம்பித்து வைத்த இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனாக் ராஜிநாமாச் செய்தார். இன்று பிரித்தானியாவில் இயங்கும் அரசு இல்லாத நிலையேற்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் பிரதமர் ராஜிநாமாச் செய்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காமல் தடித்த தோலுடன் எவ்வித சுரணையும் இன்றி தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருக்கின்றார். பிரதமர் பொறிஸ்க்கு முன்னர் அப்பதவியில் இருந்த திரேசா மே, டேவிட் கெமரூன், மார்பிரட் தட்சர் கூட நெருக்கடிகள் ஏற்பட்ட போது கௌரவமாக தங்கள் பதவியை ராஜிநாமாச் செய்தனர். ஆனால் பிரதமர் பொறிஸ் பதவி விலகுவதற்கான எவ்வித சமிஞ்சையையும் வெளியிடவில்லை. மாறாக தன்னிடம் மக்களாணை இருக்கின்றது என்றும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பேன் என்றும் தெரிவித்து வருகின்றார்.
ஆனால் பிரித்தானிய பிரதமருக்கு மிகநெருக்கமானவரான உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இன்று பிரதமர் பொறிஸை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரதமர் பொறிஸ்க்கு நெருக்கமான நதீம் சகாவி, கிராம் சாப் போன்ற அமைச்சர்களும் அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கொன்சவேடிவ் அமைச்சரவைக் கப்பலில் இருந்து குதித்துத் தப்புவதிலேயே அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர்.
கடந்தவாரம் கொன்சவேடிவ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 38 வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் இன்னுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் 38 பேர் கூட பிரதமர் பொறிஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வந்தபோது ‘கோட்டா கோ ஹோம்’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதேபோல் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் கேள்வி நேரம் முடிந்து செல்லும் போது ‘bye bye … பொறிஸ்’ என்று இனிமேல் பாராளுமன்றம் வரவேண்டாம் என்று வழியனுப்பி வைத்தனர்.
இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் ஏற்படவுள்ள பிரித்தானிய பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு பத்து வரையான கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அணி வகுத்துள்ளனர். முதலில் தன் அமைச்சுப் பதவியை ராஜநாமாச் செய்த சஜித் ஜாவட் உட்பட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் மற்றும் பலர் பொறிஸ்க்கு எதிரான அணியில் இருந்து போட்டியிட உள்ளனர். கல்வி அமைச்சராக இருந்து தற்போது கடந்த 24 மணிநேரம் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சகாவி மற்றும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் உட்பட இன்னும் சிலர் பொறிஸின் வெற்றிடத்தை நிரப்ப அவர் பக்கம் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகின்றது.
பிரித்தானியாவில் அடுத்த தேர்தல் 2024 இலேயே நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கட்சியின் அழுத்தம் மேலும் மேலும் இறுக்கமடைந்தால் பொறிஸ் ஜோன்சன் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றால் ‘போனால் மயிர். வந்தால் மலை’ என்பது தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கணிப்பாக இருக்கும். இன்று தூக்கத்தில் அவருடைய சிந்தனை “தோல்வியை ஏற்றுக்கொண்டு எதுவுமே இல்லாமல் வெளியேறுவதா? அல்லது அடுத்த தேர்தலை அறிவித்து மீண்டும் மக்களிடம் செல்வதா?” என்பதாகவே இருக்கும்.
இவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் அதில் பொறிஸ் ஜோன்சன் வெல்வார் என்பதும் கேள்விக்குறி. ஏனெனில் ஏற்கனவே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பற்றி கட்டப்பட்ட விம்பம் சுக்குநூறாகி விட்டது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதை – பிரிக்ஸிற்றை வைத்து தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சனால் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்நிலைமை இலங்கையின் அரசியலுடன் ஒப்புநொக்கக் கூடிய வகையில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை வென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவால் தற்போது அரசைக் கொண்டு நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒரு விடயத்தை சாதித்துவிட்டோம் என்பதற்காக அதுவே காலம் பூராவும் வாக்குகளைக் குவிக்கும் என எண்ணுவது மடமை. ஆப்பிரஹாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவை விதிக்கமைய ஒரு தேவை நிறைவேற்றப்பட்டால் மக்கள் அத்துடன் திருப்தியடைந்து அதே நிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களது தேவை படிநிலையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். புதிய தேவையை ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்யாது விட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆட்சித்தலைமை உள்ளாகும். பிரித்தானியாவிலும் இலங்கையிலும் நடப்பது அதுவே.
அதுமட்டுமல்லாமல் நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. அண்மைய வரலாறு காணாத விலைவீக்கம், அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கீழ்நிலையில் இருந்த வட்டிவீதம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. செல்வந்த நாடுகளின் கூட்டில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பிதத்துக்கு வந்துவிட்டது. அதனால் பிரித்தானியா பொருளாதார நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது.
உக்ரைன் யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூடுதல் கரிசனை காட்ட அல்லது யுத்தத்தைத் தூண்டிவிட அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மறைத்து மக்களைத் திசை திருப்பும் எண்ணமும் முக்கிய காரணம். பிரித்தானிய பிரதமரின் லொக்டவுன் குடி கும்மாளம், அடுக்கடுக்காக அவர் அவிழ்த்துவிட்ட பொய்கள், உள்ளடக்கம் இல்லாமல் மிகைப்படுத்திப் பேசுவது, இறுதியாக பாலியல் குற்றங்கள், துஸ்பிரயோகங்கள் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அவை பற்றித் தெரிந்திருந்தும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பதவி உயர்வுகள் வழங்கியது, பின் அவற்றை மறைக்க பொய்புரட்டுக்களை அவிழ்த்துவிட்டது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உள்நாட்டில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க உக்ரெய்னில் உக்கிரமான யுத்தத்தை நடத்தி வந்த போதிலும்; உள்நாட்டில் அவர்களுக்குள்ள நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தலைவர்களின் கயமைக்கு உக்ரெய்ன் மற்றும் பிரித்தானிய அமெரிக்க மக்கள் விலையைச் செலுத்துகின்றனர்.
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் கௌரவமாகப் பதவி விலகுவாரா? இல்லையேல் அவர் பலாத்காரமாக கட்சியினால் வெளியேற்றப்படுவாரா? இல்லையேல் அவர் பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்பது இன்றும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் தெரியவரும். பொருளாதாரம் அரசியல் கற்போருக்கு அதனை அவதானித்து வருவோருக்கு இதுவொரு உலக ஆய்வுகூடம்.
முன்னைய செய்தி : https://www.thesamnet.co.uk//?p=86949
சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.
“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.
பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.
இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.
ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.
ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.
முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.
ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.
தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.
2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.
20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.
மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.
ஒரு சமூகம் புலம்பெயர்ந்து செல்லும் போது அந்த சமூகத்தினுடைய கலாச்சார பாரம்பரியங்களையும் அது சுமந்தே செல்கின்றது. ஒருவருடைய அடையாளம் என்பது இந்த சமய, கலாச்சார விழுமியங்களும் இணைந்தது தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே தங்கள் அடையாளத்தை இழந்து அடையாளமற்ற மனிதர்களாக உலகில் உருவாகிவிடுவமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் சமய, கலாச்சார விழுமியங்களை இறுக்கிப் பிடித்தனர். இது தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வினால் உந்தப்பட்டதன் விளைவு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுக்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் தங்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிறுவ முயன்றனர்.
தாயகத்தில் வீடுகளில் சாமியறை என்றொன்னு இருக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் சாமிக்கு ஒரு அறையை ஒதுக்க பொருளாதாரம் இடம்கொடாது. சாமிக்கு ஒதுக்கும் அறையை வாடகைக்கு விட்டால் நாலு காசு வரும் என்ற நிலையே புலம்பெயர் தேசத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலும் படிகளுக்கு கீழே, அல்லது கொரிடோரில் ஒரு தட்டை அடித்து அதில் சாமியை வைத்துவிடுவார்கள். ஆரம்பநாட்களில் வானில் சாமிப்படத்தை கொண்டுவந்து வானை வடக்கு நோக்கி ரிவேர்ஸ் பண்ணிவிட்டு பூசைகள் நடத்திய கதைகளும் உண்டு. மோபைல் கோயில்கள். காலங்கள் உருண்டோட வருமானம் போதாததாலட கிறிஸ்தவ தேவாலங்கள் தமது கட்டிடங்களை விற்க ஆரம்பித்தன. தவறணைகளும் நட்டத்தில் ஓட ஆரம்பித்ததால் அவற்றை விற்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று முற்றிலும் முரண்பட்ட இந்த சமூக நிறுவனங்களுக்கு மக்கள் கூடுவதற்கான அனுமதி இருப்பதால் அவற்றை வாங்கி கோயில்களைக் கட்டுவது ஒரு ரென்ட்டாகி விட்டது. இவ்வாறு கோயில்கள் உருவாகி லண்டனில் தற்சமயம் நாற்பது கோயில்கள் வரை உள்ளன. அவற்றில் ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி கோயில் இரண்டும் மட்டும் இலங்கைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.
ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில் தவிர்ந்த ஏனைய தமிழ் கோயில்களில் சாமி வெளிவீதி சுற்றுவதற்கே இடமில்லை. திருவிழா காலங்களில் மட்டும் உள்ளுராட்சிமன்றில் அனுமதி பெற்று சாமி வீதிக்கு வரும். இவ்வாலயங்கள் அனைத்தும் திருவிழாக்களை எப்படியாவது செய்துவிடுவார்கள். இல்லையேல் ஆலயத்தினது வருமானமும் கௌரவமும் பாதிக்கப்படும். இந்த நாற்பது ஆலயங்களுமே பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமல் வாய்க்கின்ற இடத்தை எடுத்து கோயிலாக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாலயங்கள் குடிமனையான இடங்களிலேயே உள்ளன. அதலால் இவ்வாலங்களில் பெரும்தொகையானவர்கள் கூடுவதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மேலும் குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாலயங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். தங்கள் பகுதிகளில் கார் நிறுத்துவதில் நெருக்கடி, அதீத சனநடமாட்டம், சத்தம் என குற்றச்சாட்டுகள் எழும்.
இப்பின்னணியில் லண்டன் திருக்கோயில்களின் ஒன்றியம் தனது 22வது வருடாந்த மாநாட்டை நடாத்த வழமை போல் யூன் 18, 19ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் வாதிகள், நடிகர்கள், பாடகர்கள், தேவாரம் திருவாசகம் பாடுபவர்கள், சொற்பொழிவாளர்கள் என்று ஒரு பல்சுவை மசாலா நிகழ்வாக அது இடம்பெறும். ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் லண்டன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கதாக எதையும் சாதித்து இருக்கின்றனவா என்றால் . இவ்வாலயங்கள் இருக்கின்றது என்பதனைக் உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்களும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நாடாத்துகின்றோம் என்று காட்டுவதற்கு அப்பால் இவ்வாலயங்கள் என்ன செய்கின்றன என்பது அவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.
தனித்தனி ஆலயங்களாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் என்பன தாயக உறவுகளுக்கு கணிசமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும்படி ஏனைய ஆலயங்கள் அவ்வாறான உதவிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொள்கின்றன. இவ்வுதவிகள் கூட தாயகத்தின் வாழ்நிலை முன்னேற்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.
வெறும் பேச்சுக்காக தமிழும் சைவமும் ஒன்றென்று முழங்கும் திருக்கோயில்கள் ஒன்றியம் தமிழுக்கோ சைவத்துக்கோ கடந்த கால்நூற்றாண்டில் என்ன செய்தார்கள் என்ற மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். ஒரு சுப்பர்மாக்கற் நடத்துவது போலவே லண்டனில் உள்ள இந்த ஆலயங்கள் செயற்படுகின்றன.
இவர்களுடைய வருடாந்த நிகழ்வு கூட ஒரு கலை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. புலம்பெயர் மண்ணில் தமிழையோ சைவத்தையோ எப்படி வழக்கப் போகின்றனர் என்ற எந்தத் திட்டமிடலும் சிந்தனையும் இல்லை. அதற்கான பார்வையும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
லண்டனில் உள்ள ஆலயங்கள் அவைகள் தனிநபர்களுடைய ஆலயங்களாக இருந்தாலென்ன பொது ஆலயங்களாக இருந்தாலென்ன அவற்றிடம் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ கோயிலை நடத்துகிறோம் திருவிழாச் செய்கின்றோம் என்பதோடு சரி. அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை எவ்வாறு கைமாற்றப் போகின்றோம் என்பது பற்றி அவர்களிடம் எவ்வித சிந்தனையும் இல்லை. இன்று வரையும் தமிழுக்கும் சைவத்துக்குமான ஒரு ஆவணக்காப்பகமோ ஆய்வு நிறுவனமோ கிடையாது.
ஆலயங்கள், புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழ் மற்றும் சைவம் பற்றிய எவ்வித விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இது விடயமாக நூலகவியலாளர் என் செல்வராஜா பலரையும் அணுகி இருந்தார். தனது கருத்துக்களையும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் ஒரு தனி மனிதனாக 20,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் நூல்களைத் தொகுத்து தனது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் அவற்றை வெளியிட்டுவிருகின்றார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகம் எப்போது தீக்கிரையானது என்பதே திரிபுபடுத்தப்பட்ட நிலையில் 1981 மே 31இல் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றை தனி மனிதனாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயமும் ஒரு நூலகத்தை வைத்திருக்காவிட்டாலும் இந்தத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஒரு ஆவணக்காப்பகத்தை உருவாக்கி தமிழினதும் சைவத்தினதும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு எமது வரலாற்றை கைமாற்றுவதற்கான காத்திரமான ஆய்வு செய்யப்பட்ட தரமான நூல்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித முயற்சிகளிலும் இத்திருக்கோயில்கள் ஒன்றியம் ஈடுபடவில்லை.
இப்பொழுது முதுமையை எட்டும் இந்தத் திருக்கோயில்களின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது அந்திம காலத்தை நெருங்குகின்றனர். இவர்களுக்குப் பின் இவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த காளாஞ்சிக் கெடுபிடிக்கு வரப்போவதில்லை. அடையாளம் இல்லாத சிலர் தங்களிடம் உள்ள டாம்பீகத்தை பறைசாற்ற கோயில்களுக்கு வருவார்களேயல்லாமல் அடுத்த தலைமுறையினரில் கோயில்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. ஏற்கனவே லண்டனுக்கு வெளியே உள்ள கோயில்கள் ஒன்றிரண்டு நாளாந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சியும் ஆலயங்களின் வருமானத்தையும் கணிசமான அளவு பாதிக்கும்.
இந்நிலையில் வெளியில் இருந்து பல்லாயிரங்களைக் கொட்டி ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வுகள் அது முடிந்த சில நிமிடங்களிலேயே அர்த்தமற்றதாகிவிடும். இந்நிகழ்வுகள் சைவத்தையும் தமிழையும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்யும் மாநாடுகளாகவும் அம்மாநாட்டின் அறிக்கைகள் ஆவணங்களாகவும் கொண்டுவரப்பட்டு இருந்தால் இம்மாநாடுகள் மிகக் கனதியானவையாக இருந்திருக்கும்.
இத்திருக்கோயில்கள் ஒன்றியத்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆலயங்களில் ஆளுமை செலுத்துபவர்களிடம் அதற்கான அறிவுநிலையோ சிந்தனையோ கிடையாது. தலைப்பாகையைக் கட்டி காளாஞ்சி வாங்குவதற்கு அப்பால் அவர்கள் இதுவரை சிந்திக்கவில்லை.
இவர்களது குறுகிய சிந்தனைகளை வைத்து தங்களை சைவப் பெரியார்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஆறுதிருமுருகன், கம்பவாருதி போன்றோர் வெளிநாடுகளுக்கும் வந்து வசூல் செய்துகொண்டு திரும்புகின்றனர். ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்கள் “யாழ் பல்கலைக்கழகம்: ஒரு பார்வை” என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனே அடுத்த மாவீரர் உரையில் அவர்களைப் புகழ வேண்டியதாகிவிட்டது. அப்படியிருக்கு “வாராதே வரவல்லாய்” என்று கம்பவாருதி ஜெயராஜ் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு “வம்பவாரிசு ஆருக்கு வைக்கிறார் ஆப்பு”, “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சு” என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகையில் 2004இல் கட்டுரைகள் வெளிவந்தன. இவர்கள் சமூக மேம்பாட்டிற்காக தாயகத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் எதனையும் வழங்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் ஜெயராஜ் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவுகள் மிகச் சிதைந்து இருப்பதாக கம்பவாருதி ஜெயராஜ் குறிப்பிடுகின்றார். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஜெயராஜ் வாழ்கின்ற தாயகத்தில் கல்வி மிகக்கீழ் நிலைக்குச் சென்றுள்ளது, இளவயதுத் திருமணங்கள் அதிகரித்து விட்டது, அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றது, திருமணமாகாமலேயே குழந்தைகள் தாய்மை அடைகின்றனர், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் அதிகரித்து வருகின்றது. அப்படிப்பட்ட மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உரைக்கு கம்பவாருதி ஜெயராஜ் குழவிற்கு ஒரு லட்சம் செலவாகும் என நிதி திரட்டப்பட்டது. இப்போது கிளிநொச்சியில் கலைக்கூடம் அமைக்கவும் நிதி திரட்டப்படுகின்றது. இதே போல் ஆறுதிருமுருகனும் அடிக்கடி அடிக்கல் நாட்டுகிறார் கட்டிடங்கள் கட்டுகின்றனர். ஆனால் அதனைப் பயன்படுத்த வேண்டிய இளைய தலைமுறை பற்றி இவர்களிடம் எவ்வித பார்வையும் இல்லை. அடிக்கல் நாட்டுவது, கட்டிடம் கட்டுவது, அதன் பின் அது தேடுவாரற்று கிடக்கும். இதுதான் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. புலத்தில் இருந்து வசூலிக்கப்படும், திரட்டப்படும் வழங்கப்படும் நிதி பெரும்பாலும் இதுவரை விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது. ஒரு வகையில் ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் போன்றவர்களை வளர்க்கவும் தாயகத்தில் சமூகச் சீரழிவிற்குமே புலம்பெயர் பணம் பெரும்பாலும் பயன்பட்டது.
பிரபல்யமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாரி இறைப்பதினால் சமூகத்திற்கு எந்தப்பலனும் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு பிரபலத்தை கொண்டு திரிந்து எமது சமூகப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவைகளையுணர்ந்து நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். தற்போது தங்கள் கடைசிக்காலத்திலாவது, தங்கள் பெயர் சொல்லும் வகையில் காலத்தால் அழியாமல் இருக்க தமிழுக்கும் சைவத்துக்கும் பிரித்தானியாவில் ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்க இத்திருக்கோயில்களின் ஒன்றியம் முன்வரவேண்டும்.
இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.
மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.