ஜெயபாலன் த

ஜெயபாலன் த

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இன்று அனுப்பப்படுகின்றன. – ஜெயபாலன் & புன்னியாமீன்

02.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரிநிலையங்களினுள்ளே இயங்கும் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கான மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் கல்வியதிகாரி திரு. த. மேகநாதன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

தேசம்நெற் ஆசிரியர் குழுவும், சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி கல்வி செயற்பாடுகளுக்கு உதவும் திட்டத்தின் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்தமை அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கு 1100 வீதம் மாதிரிவினாத்தாள்கள் 10உம், புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடு தொகுதி 01 நூலும் கடந்த வாரங்களில் வழங்கப்பட்டன. 

இந்த மாதிரிவினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பரீட்சையாக நடத்தப்படுகின்றன. இந்த அனுப்பப்படும் பொதிகளில் பின்வரும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டி புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 11 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 12 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 13 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 14 1100 பிரதிகள்
மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02 எனும் நூலின் 1100 பிரதிகள்

மேற்படி மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி., பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி., காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 16 மாதிரிவினாத்தாள்களையும் (விசேட மாதிரிவினாப்பத்திரம் இலக்கம் 01 – 16 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், தரம் 06, 07, 08, 09, 10, 11 மாணவர்களுக்காக வேண்டி வி.ச. சுப்பரமணியம், ஞானசுந்தரம், பா. கிருபாகரன் ஆகிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களின் ஒரு தொகுதியும் குவி அச்சக வெளியீடுகளின் ஒரு தொகுதி செயல் நூல்களும் இன்று அனுப்பப்பட்டுள்ளன.

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

Wanni_IDPs_Barbed_Wire_Fenceநரகலோகத்திற்கு செல்பவர்களுக்கு யமனின் ஆட்சியில் என்னென்ன கொடிய தண்டனைகள் வழங்கப்படும் என்ற கற்பனைக் கதைகள் பல பள்ளியில் படித்ததுண்டு. ஆனால் அந்தக் கதையிலும் கெட்டவர்களுக்குத்தான் அந்தத் தண்டனை என்றே கூறப்பட்டது. ஆனால் இவ்வாண்டு ஜனவரி முதல் முல்லைத்தீவு நரகலோகம் ஆக்கப்பட்டுவிட்டது. 250 000 வரையான அப்பாவித் தமிழ் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். கற்பனைக் கதையிலேயே நரகலோகத்தில் ஒரு யமனின் ஆட்சி தான் இருக்கும். ஆனால் வன்னி மக்களோ இரு யமன்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் நிலை:

முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இலங்கைப் படைகள் நெருங்க மோதல்கள் மேலும் தீவிரமடைந்து உள்ளது. 5 சதுர கி மீ பரப்பளவேயுள்ள இப்பிரதேசத்தில் 40 செல்சியஸ் வரை அனல் வீசும் வெப்பத்தில் தாகத்திற்கு தண்ணீரும் இன்றி பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழுகின்ற கொடுமை நினைத்துப் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.

அதற்குள் கர்பிணித் தாய்மார் குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். கைக் குழந்தைகள் பாலின்றித் தவிக்கின்றன. தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை குழந்தைகளுக்காவது ஏதாவது கொடுக்க முடியாதா, அவர்களது பசியாற்ற முடியாதா என்று அந்த அம்மாக்களும் அப்பாக்களும் தவிக்கின்ற தவிப்பு மரணத்தை விடக் கொடுமையானது. குடிப்பதற்கே தண்ணீரில்லாத போது குளிப்பது எப்படி? ஏப்ரல் 20 – 21ல் 100 000ற்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய போது அவர்களது அவலங்களை விபரிக்க வார்த்தைகள் இல்லையென சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வந்த மக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு அனுப்ப்படுகின்ற போது பஸ்வண்டிகளிலேயே உயிர் பிரிந்துள்ளனர்.

இப்போது இன்னும் மூன்று வாரங்கள் கடந்துவிட்டது. இன்னமும் புலிகளின் அரண்களாகப் பாவிக்கப்படும் அந்த மக்கள் தங்கள் உயிரைத் தாங்கி வருவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அந்த மக்கள் தவிட்டை தண்ணீரில் கரைத்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இலங்கை அரசு உலக உணவுத்திட்டம் மூலம் அனுப்புகின்ற உணவு அவர்களுடைய தேவைக்கு மிகமிகக் குறைவானது. அதனையும் புலிகள் மக்களுக்கு விற்பனை செய்கின்ற நிலைதான் அங்கு உள்ளது. அந்த உச்சவிலைக்கு தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அன்று வெளியேறியவர்கள் தம் இயலாமையை விபரித்து இருந்தனர்.

வன்னி முகாம்கள் பற்றிய வாக்கு மூலங்கள்:

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமை இவ்வாறு மரணப் போராட்டமாக இருந்தால், அங்கிருந்து தப்பி வருகின்ற மக்களுக்கு இலங்கை அரசு அடிப்படைத் தேவைகளைக் கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை. Hurricane Katrina -ஹரிக்கேன் கத்ரீனா அமெரிக்காவின் நியூஓர்லினைத் தாக்கிய போது அங்கு நிவாரணப் பணிகள் எதனையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிபிசி செய்தியாளர் மக் பிரைட், மூன்றாம் உலக நாடான இலங்கை சுனாமி நடந்த 48 மணி நேரத்தில் உதவிகள் மக்களைச் சென்றடைய ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படியான எதிர்பாராத சுனாமி அவலத்தின் போதே மக்களை உதவிகள் சென்றடைந்தன. ஆனால் இலங்கை அரசால் நன்கு திட்டமிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட மனித வெளியேற்றம் ஒன்று இடம்பெற்ற போது அரசு தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.

இது தொடர்பாக வன்னி முகாம்களுடன் தொடர்புடையவர்கள் தேசம்நெற்றுக்கு அளித்த வாக்குமூலங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. தகவல்களை வெளியிட்டவர்களது விபரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.

அரசு தயார் நிலையில் இருக்கத் தவறிவிட்டது. – வைத்தியர்:

”இந்த யுத்தத்தின் போது மக்கள் யாரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை என்பது அரசுக்கு நன்கு தெரியும். அப்படி என்றால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எல்லாம் எங்கு போனார்கள்? அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தான் இருந்திருப்பார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா? அவ்வளவு மக்களும் வெளியேறி வந்தால் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கவனிக்க வேண்டியது அரசினுடைய பொறுப்பு. என்ஜிஓக்களை முன்னரேயே அங்கு அனுமதித்து தயார்நிலையில் அல்லவா வைத்திருந்திருக்க வேண்டும்.

மக்கள் வெளியேறி வந்தபோது அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு என்பனவற்றுக்கு மணித்தியாலக் கணக்கில் தவிக்கவிடப்பட்டனர். உடனடி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கான போக்குவரத்துகள் ஒழுங்கற்று இருந்தது. பல மணிநேரம் மக்கள் பஸ் வண்டிகளிலேயே விடப்பட்டனர். சில சமயங்களில் அம்மக்கள் வாகனங்களிலேயே இரவைக் கழித்துள்ளனர்.

ஏற்கனவே வந்தவர்கள் ஓரளவு அங்கு பரவாயில்லாமல் உள்ளனர். ஆனால் புதிதாக முகாம்களில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உடல் பலவீனப்பட்டு இறந்துள்ளனர். இவர்களது உடல்கள் கொழுத்தும் வெய்யிலில் பல மணிநேரமும் சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே விடப்படுகின்றது. அதனால் உடல் பழுதடைந்து துர்நாற்றம், தொற்று கிருமிகள் என பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.

புலிகளும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். தங்களது பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடாமல் இன்று தமிழ் மக்களை பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். எல்லா இடங்களையும் கைவிட்ட அவர்கள் இந்த துண்டு நிலத்தில் என்னத்தை சாதிப்பதற்காக மக்களை இப்படிப் பலிகொடுக்கின்றனர். நாம் இவ்வளவு இழந்து இவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்து கண்டது தான் என்ன?”

மக்கள் விலங்குகளாக நடத்தப்படுகிறார்கள். – வங்கி அலுவலர்:

”நான் மக்களுடைய வங்கித் தேவைகளுக்காக இந்த முகாம்களில் பணியாற்றினேன். அங்கு மக்கள் படும் அவலங்கள் நெஞ்சைப் பிழிகின்றது. வெப்பநிலை காரணமாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் சில சமயம் பழுதடைந்த நிலையில் வந்தடைகின்றது. அதனை உண்டாவது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனையும் நெருக்குவாரப்பட்டு மிதிபட்டு வாங்க வேண்டி உள்ளது. சிலர் அதனை வாங்காமலேயே சென்று விடுகின்றனர். நான் சந்தித்த ஒருவர் இரு நாட்களாக தனக்கு உணவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

நான் சென்ற முகாம் மிகவும் பரந்த பிரதேசம் அதனைச் சுற்றிவர மூன்று மணிநேரம் எடுக்கும். காடுகள் அழிக்கப்பட்டு வெட்ட வெளியிலே கொளுத்தும் வெய்யிலைத் தடுக்க ஒரு ரென்ற் கூட அவர்களுக்கு இல்லை. கிழிந்து கந்தலான ஆடைகளுடன் தான் வந்துள்ளனர். ”

பாலியல் வல்லூறவுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளது. – உதவிகள் மேற்கொள்ளும் அரச அலுவலர்:

”நான் அடிக்கடி முகாம்களுக்கு சென்று வருவேன். ஒரளவு தொடர்புகளை ஏற்படுத்தி சில உதவிகளையும் வழங்கி வருகிறேன். முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. பெண்கள் மீதான கொடுமைகள் சில இடம்பெற்று உள்ளதை நான் அறிந்திருக்கிறேன்.

குறிப்பாக செட்டிகுளம் முகாம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றில் பொழுதுசாய குளிக்கச் சென்ற சில பெண்களின் (1 – 9) உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் குளிப்பதற்கு மறைவிடம் இல்லாததால் பொழுதுசாய இருட்டில் குளிப்பதற்குச் சென்று உள்ளனர். அவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடந்தது என்று தெரியவில்லை ஆனால் பத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு இவ்வாறு நடந்திருக்கலாம்.

இதனைச் சென்று முறையிடுவதற்கோ விசாரிப்பதற்கோ மக்கள் பயப்படுகின்றனர். இச்சம்பவங்கள் பரவலாக நடக்கின்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இச்சம்பவத்தையடுத்து அம்முகாம்களின் கட்டுப்பாடு இராணுவத்திடம் இருந்து பொலிசாரிற்கும், STF ற்கும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பொழுதுசாய்ந்த பின் ஆற்றுப் பக்கம் செல்ல வேண்டாம் என அவர்களுக்கச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நூற்றுக் கணக்காணவர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டாலும் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது இன்னமும் தெரியவரவில்லை. புலிகளைக் களையெடுக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் முகாம்களில் உள்ளவர்களும் அது பற்றிய சில தகவல்களை வழங்கியும் வருகின்றனர்.”

சுதந்திரமாக செயற்பட முடிவதில்லை. – மற்றுமொரு வைத்தியர்;

”நான் பணியாற்றும் முகாமிலும் பல்வேறு குறைபாடுகளுடன் மக்கள் வருகின்றனர். அவர்கள் அங்குள் சிங்கள மருத்தவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் மொழிப் பிரச்சினை காரணமாக முழுமையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் என்னிடம் வந்து முறையிடும் போது பல பிரச்சினைகளையும் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாமல் உள்ளது. எந்நேரமும் இராணுவ வீரர் ஒருவர் அருகில் இருப்பார். நோயாளியுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி எல்லாம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் அருகில் நிற்கும் போது அவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது. அது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இயலுமானவரை முகாமிற்கு சென்று கடமையைச் செய்துவிட்டு வருவதையே செய்கிறேன். இவ்வாறு தகவல்களைப் பரிமாறுவது ஆபத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் யுவதிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சில மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஆராய முடியாது.”

பொம்பிளைப் பிள்ளைகளின் நிலைதான் மிகவும் மோசம் – உதவிகள் வழங்கிவரும் வயதான தாயார்:

”நான் இந்த யுத்தத்தில் ஆரம்பத்திலேயே வந்துவிட்டதால் முகாமில் இல்லை. ஆனால் வவுனியா வைத்தியசாலைக்கு தினமும் சென்று வருகிறேன். அங்கு தான் மிகவும் காயப்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டவர்களைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பஸ்நிறைய நோயாளிகள் கொண்டு வந்து இறக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார். அவர்கள் குளித்து பல் விளக்கி பல நாட்களாக இருக்கும். கிழிந்த அழுக்கான உடைகளுடன் வருவார்கள். அவர்களுக்கான சோப், பற்பசை, ஆடைகளை கொண்டு சென்று கொடுத்து வருகிறேன்.

பொம்பிளைப் பிள்ளைகளுடைய நிலைதான் மிகவும் கஸ்ரமானது. அவர்களுடைய இயற்கை உபாதைகள் ஒருபுறம். வன்னியில் புலிகள் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால் சின்னஞ் சிறுசுகளுக்கெல்லாம் கலியாணம் செய்து வைத்திடுவினம். பதினைந்து பதினாறு வயசிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு கைக் குழந்தையும் வந்திடும். முந்தி கலியாணம் கட்டின பெடியளை பிடிக்காயினம். இப்ப என்னென்றால் கடைசி நேரத்தில கலியாணம் கட்டினவையையும் பிடித்துக் கொண்டு போய் அதுகளும் செத்துப் போக இந்தப் பிள்ளையள் கைக்குழந்தையோட முகாம்களில தவிக்குதுகள். (முகாம்களில் 350 பெண்கள் அடுத்த மாதம் குழந்தைப் பேற்றிக்கு தயாராக இருக்கிறார்கள் என அரசாங்க அதிபரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.)

புலிகளோடு தொடர்புடையவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள். சிலர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தாய் தகப்பன் இருந்தால் அவர்களிடம் கூறிவிட்டே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் விசேட முகாம்களில் வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

முதலில் வந்து தங்க வைக்கப்பட்டவர்களின் நிலைகள் பரவாயில்லை. அவர்களுக்கு அடிப்படையான விடயங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20லும் அதற்குப் பிறகும் வந்தவர்களுடைய வசதிகள் சரியான மோசமாக உள்ளது.”

இந்த நேரடிச் சாட்சியங்கள் வன்னி முகாம்களின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. விலங்குகளைக் கூட இவ்வளவு மோசமான சூழலில் வைத்திருக்க முடியாத நிலையில் வன்னி மக்களை அரசு இவ்வாறு வைத்திருப்பது வன்மையான கண்டணத்திற்கு உரியது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் கீழ்மைப்படுத்தும் வகையிலேயே அரசு நடந்து கொள்கிறது.

ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்படவில்லை. இந்நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்காண மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பான முன் ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம் அதற்கான பரவலான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும் கீழுள்ள விடயங்களை மேற்கொள்வதற்கான அழுத்தக் குழுவொன்று குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்டு அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனை ஒரு பொது வேலைத்திட்டமாக பரவலாக முன்னெடுப்பது மிக அவசியம்.

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதலாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. : ஜெயபாலன் & புன்னியாமீன்

01.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரி நிலையங்களினுள்ளே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 01ஆம் திகதி புள்ளிவிபரப்படி மேற்படி நலன்புரி நிலையங்களில் 13 பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி சில கல்வி செயற்பாட்டு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

செட்டிக்குளம் ம.வித்தியாலயத்தில் இயங்கும் விசேட கல்வி அலுவலகத்தின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின் கீழ் நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் கல்வி பயிலும் 1057 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பின்வரும் மாதிரிவினாத்தாள்களும்,  வழிகாட்டிப் புத்தகங்களும் திரு. த. மேகநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Letter_01_Mehanathan_06May09

Letter_02_Mehanathan_06May09

மாதிரி வினாத்தாள் இலக்கம் 01 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 02 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 03 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 04 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 05 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 06 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 07 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 08 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 09 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 10 – 1100 பிரதிகள்

இவ்வினாத்தாள்கள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு பரீட்சையாக நடத்தப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்படுகின்றனர்.

மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 01 எனும் நூலின் 1100 பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி, பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி, காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி.

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 20 மாதிரி வினாத்தாள்களையும் (இலக்கம் 11 – 30 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன்,  தரம் 06,07,08,09,10,11 மாணவர்களுக்காக வேண்டி ஒரு தொகுதி செயல் நூல்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாத இறுதியில் வன்னி பிரதேசத்திலிருந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அதிகளவில் மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இந்தநிலையங்களில் தரம் 5 இல் பயிலும் மாணவர்கள் மாத்திரம் 1860 பேர் கடந்த இரண்டு வாரத்துக்குள் இடம் பெயர்ந்துள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைகளில் உதவுவது  குறித்தும்  சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் ஆலோசித்து வருகின்றது.

02.jpg 03.jpg 04.jpg

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Part_Of_the_Audienceமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Little Aid – லிற்றில் எய்ட்

மேலும் Little Aid – லிற்றில் எய்ட் என்ற உதவி அமைப்பு தேசம்நெற் நண்பர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. ஈழத்தமிழ் மக்களின் வரலாறு காணாத இந்த அவலத்தில் சிக்குண்ட மக்களுக்கு முடிந்த அளவிலான சிறிய உதவிகளைச் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு பிரித்தானியாவின் பொதுஸ்தாபன ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. இவ்வுதவி அமைப்பிற்கான வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவ்விபரங்கள் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

‘மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி’ என்ற தலைப்பிலான சந்திப்பு மே 2ல் லண்டன் புறநகர்ப் பகுதியான சறேயில் இடம்பெற்றது. தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் வன்னி மக்களை நோக்கி தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டிய பலரும் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பலரும் பல்வேறு கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் மக்களுக்கான அவசர உதவிகளைச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தனர். இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாத்து ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறி இருப்பதாகத் தெரிவித்த நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பைச் சரிவரச் செய்வதற்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கருத்தை சந்திப்பில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நேரடியான உதவிகளை முடிந்த அளவு செய்வதுடன் முக்கியமாக என்ஜிஓ க்களுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிர்வாகம் அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எவ்வாறான நிவாரணப் பணிகளும் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது என்பதும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வன்னி மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வெளியே வருகையில் இலங்கை அரசு அவர்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு கம்பி வேலிக்குள் அடைத்து வைப்பதாக ஆர் புதியவன், சந்திப்பினை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார். தங்கள் வளர்ப்பு விலங்குகளைக் கூட கம்பி வேலிக்குள் அடைக்காத மக்களை அரசு கம்பி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தாங்கள் பின்வாங்கிச் சென்ற இடங்களில் எல்லாம் மக்களை விட்டுவிட்டுச் செல்லாமல் ஆடு மாடுகள் போல் அவர்களையும் சாய்த்துக் கொண்டு சென்று இன்று தங்கள் தலைமையைப் பாதுகாக்க பணயம் வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆர் புதியவன் அவர்களுக்கு புதுமாத்தளன் தான் பூர்வீக மண் என்று கதையளப்பதாகத் தெரிவித்தார். அடங்கா மண் வணங்கா மண் என்று புலத்தில் சேர்த்தெல்லாம் எங்கே? என்று கேள்வி எழுப்பிய ஆர் புதியவன் அரசாங்கத்தின் நலன்புரி முகாம்களில் செல்விழமாட்டாது என்ற ஒரே உத்தரவாதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். கம்பி வேலிக்குள் மாளிகையைக் கட்டி குடியேற்றினாலுமே அது ஒடுக்குமுறையின் குறியீடே என்று தெரிவித்த ஆர் புதியவன் அரசாங்கத்தின் வன்னி நலன்புரி முகாம்கள் படுமோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவித்தார்.

Paul_Sathyanesanஆர் புதியவனைத் தொடர்ந்து நியூஹாம் துணைமேயர் போல் சத்தியநேசன் உரையாற்றும் போது ‘இந்த மக்களுடைய அவலம் இரு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்களுக்கு பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் வழங்க வேண்டிய அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது. இந்த மக்களை கௌரவமாகப் பராமரித்து அவர்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது அதனை இலங்கை அரசு தட்டிக்கழிக்க முடியாது’ என்று குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘மிகப்பெரிய அவலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு உணர்வு ரீதியான பொறுப்பும் கடமையும் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்ததை உடனடியாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களது உதவி ஒரு சிறிய அளவினதாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார். அதனால் ‘என்ஜிஓ க்களை அரச நிறுவனங்களைச் சந்தித்து அவர்களை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிய செயற்திட்டங்களை இயக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். சுனாமி காலகட்டத்தின் போதும் தேசம் சஞ்சிகை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

துணைமேயருடைய உரையை அடுத்து நிகழ்வில் கலங்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

அண்மையில் இலங்கை சென்று வன்னி முகாம்களைப் பார்வையிட்டுத் திரும்பிய எஸ் சூரியசேகரம் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் சென்று பார்வையிட்ட முகாம்கள் குறிப்பிடத்தக்க அளவு வசதிகளுடனேயே இருந்ததாகவும் ஆனால் அண்மையில் மேலும் ஒரு லட்சம் மக்கள் அதிகரித்து இருப்பதால் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார். அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மிகவும் அணுகக் கூடியவர் என்று தெரிவித்த சூரியசேகரம் நிவாரணப் பணிகள் அவர்களுக்கூடாக செய்யப்படுவது தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்தார். இதே கருத்தை வெளிப்படுத்திய இலங்கைக்கு விஜயம் செய்த குழுவிலும் இடம்பெற்றிருந்த ரி கொன்ஸ்ரன்ரைன் புலத்தில் உள்ளவர்கள் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்மக்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்த கொன்ஸ்ரன்ரைன் புலம்பெயர்ந்த சமூகம் அவர்களது வாழ்நிலையை மேம்படுத்த இயலுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

‘இலங்கை அரசாங்கம் ஒரு இனவாத அரசாங்கம். அது இனப்படுகொலை புரிகிறது. இங்குள்ள நீங்கள் அதனைச் சொல்லத் தயாராக இல்லை.’ என்று குற்றம்சாட்டிய சபா நாவலன் ‘அங்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இனவாத அரசு உங்களை அதற்கு அனுமதிக்காது. அப்படி எதாவது செய்வதாக இருந்தாலும் அதனை கைக்கூலிகளாக இருந்தே செய்ய முடியும்’ எனத் தெரிவித்தார். சபா நாவலன் தொடர்ந்தும் பேசுகையில், ‘ஏசியன் டெவலொப்மன்ற் பாங்க் போன்ற பல்வேறு என்ஜிஓ க்கள் மூட்டைமூட்டையாக பணத்தைக் கொண்டு அலைகிறார்கள். ஆனால் இனவாத அரசாங்கம் அவர்கள் யாரையும் அந்த முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ‘இனவாத அரசாங்கம் மக்களை அடைத்து வைக்கிறது. அவர்களுக்கு இப்ப புத்தகம் கொடுக்கிறம் என்றதெல்லாம் எப்படிப் போகும் எப்படிப் பயனளிக்கும்’ என்றும் சந்தேகம் எழுப்பினார்.

David_Jeyam‘இன்று ஏற்பட்டுள்ள நிலைமை அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் நாங்கள் இங்கு அரசியல் விவாதம் ஒன்றை நடத்த விரவில்லை. அவலத்திற்கு உள்ளான மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியே பேச வந்துள்ளோம்.’ என்று தனது கருத்தை வெளியிட்டார் டேவிட் ஜெயம். இவர் வன்னி நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கருத்தைப் பலரும் பிரதிபலித்தனர்.

அதே கருத்தை வெளியிட்ட எஸ் முருகையா முடிந்த அளவில் சிறிய அளவில் செய்யப்படும் உடனடி உதவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். தேசம்நெற் மேற்கொண்டுள்ள நூல் அன்பளிப்பு போன்றவை மிகுந்த பலனளிக்கும் என்று குறிப்பிட்ட முருகையா சூரியசேகரம் அவர்களிடம் முகாமில் இருந்த மாணவர்கள் புத்தகம் தரும்படி கேட்டதை அங்கு சுட்டிக்காட்டினார்.

‘போருக்கு உதவி புரிந்த புலத்து தமிழர்கள் வன்னி மக்கள் உதவியைக் கேட்கும் போது செய்யத் தயாரில்லாதவர்களாக உள்ளனர்’ எனக் குற்றம்சாட்டினார் ரி சோதிலிங்கம். ‘இன்று புலத்துதமிழர்கள் யுத்த முனையில் இருந்து உயிர்காக்க ஓடி வந்த மக்களை துரோகிகளாகப் பார்க்கின்றனர். இந்த மக்கள் பற்றிப் பேசுவது அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளாமல் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் பற்றிக் கதைப்பது அர்த்தமற்றது’ என்றும் குறிப்பிட்ட சோதிலிங்கம் ‘ஒரு செயற்குழு உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட வேண்டும்’ என்றும் கூறினார்.

இதே கருத்தை ஆதரித்த ஈசன் அரசாங்க அதிபருக்கு ஊடாகவோ எவ்வகையிலோ உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறூத்திய அவர் இலங்கை அரசாங்கம் முகாம்களை சர்வதேச தரத்தில் வைத்திருக்கவில்லை என்றும் முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாயும் குற்றம்சாட்டினார். உடனடி உதவிகள் உடனடியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

‘நீங்கள் உதவிகளைப் பெற்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறீரகள். ஆனால் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பொருட்கள் வணங்கா மண் கப்பலில் உள்ளது. நீங்கள் ஏன் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பினார் எஸ் ஆர் நிஸ்தார் மொகமட். ‘வணங்கா மண் ஏற்பாட்டாளர்களுடன் கதைத்து இலங்கை அரசாங்கத்துடனும் கதைத்து அந்தக் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறத்தைச் சார்ந்த மஹ்சூர் தனது கருத்தை வெளியிடுகையில் இஸ்லாமிக் போறம் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் ‘பல்வேறு பிரிவுகளாக அல்லாமல் இணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாகச் செயற்பட முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தவறான நோக்கங்களுக்காக இருந்தாலும் எல்ரிரிஈ இன்று ஒற்றுமைப்பட்டு அவர்களுடைய போராட்டத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது’ என்று குறிப்பிட்ட அவர் ‘ஒன்றிணைந்து செயற்பட நாமும் முன்வர வேண்டும்’ என வலியுறுத்தினார்.

‘வன்னி மக்களுடைய இந்த அவலத்திற்கு இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள்’ என்று தன் கருத்தை வெளியிட்ட த ஜெயபாலன் ‘இலங்கை அரசு இனவாத அரசு என்பதும் அது இவ்வாறுதான் நடந்த கொள்ளும் என்பதும் 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் கண்ட அனுபவம். அது பற்றி தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய அவல நிலைக்கு இரு தரப்பினருமே பொறுப்பு’ என்று ஜெயபாலன் குற்றம்சாட்டினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ஒரு பொட்டலத்திற்காக எத்தினை கைகள் போட்டி போடுகின்ற நிலையை நாம் உருவாக்கி விட்டுள்ளோம். அந்தக் கைகளில் ஒன்று எம் குழந்தைகளாக இருந்தால் நாம் தாங்குவோமா?’ என்று கேள்வி எழுப்பிய அவர் போராட்டம் தத்துவம் பற்றி நாம் இங்கிருந்து நாட்கணக்கில் கதையளக்கலாம் ஆனால் அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘நாம் நமது பிள்ளைகளுக்கு தனியார் கல்வி, கிரம்மர் ஸ்கூல் என்றெல்லாம் நேரமில்லாமல் ஓடித் திரிகிறோம். ஆனால் அந்த முகாமில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படைக் கல்விக்கு எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதற்காக தேசம்நெற்றும் சிந்தனை வட்டமும் இணைந்து புலமைப்பரிசில் நூல்களை முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது எமக்கு ஏற்பட்டுள்ள குற்ற உணர்வினைக் களையவும் ஒரு வடிகாலாகிறது எனத் தெரிவித்தார் ஜெயபாலன். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘அம்மக்களுடைய தேவைகள் மிக அதிகம் அதனை ஒரு தனி அமைப்பாகவோ ஒரு சிலராலோ செய்துவிட முடியாது. அதனால் இயலுமானவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை தாங்கள் அறிந்த வழிகளில் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக ஒரே கொடியின் கீழ் என்பதெல்லாம் யதார்த்தமற்றது’ என்றும் தெரிவித்தார். ‘முதலில் வன்னி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.’ என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்தார் ஜெயபாலன்.

Varathakumar_TICஇறுதியாகக் கருத்து வெளியிட்ட தமிழர் தகவல் நடுவத் தலைவர் வரதகுமார், ‘இன்று ஏற்பட்டுள்ள அவலநிலை அரசினாலேயே கையாள இயலாதநிலையில் உள்ளது. தற்போது பெரும்பாலான என்ஜிஓ க்கள் வவுனியா முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இன்றைய இவ்வாறான சந்திப்பு மிகவும் அவசியமானது என்றும் புலம்பெயர்ந்தவர்கள் உடனடி உதவிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். தேசம்நெற் ஊடகம் என்ற வகையில் இம்மக்கள் தொடர்பாக முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த வரதகுமார் ‘அங்குள்ள மனித உரிமை விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ‘அந்த மக்கள் கைவிடப்பட்ட மக்கள். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டக் கூடியவர்கள் புலம்பெயர்ந்த மக்களே’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் இறுதியில் அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான குழுவொன்றை அமைப்பது என்றும் அதற்கான சந்திப்பினை அடுத்த இரு வாரங்களிற்குள் தேசம்நெற் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

Wanni_Warமிகக் கொடிய மனித அவலத்தில் இருந்து மீண்டு தொடர்ந்தும் துயர்மிகு வாழ்வை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்றினை தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் ஏற்பாடு செய்துள்ளனர். இச்சந்திப்பில் முக்கிய அம்சமாக வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது. ஏற்கனவே ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் தனித்தனியாக முன்னெடுக்க முற்பட்ட உதவி நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் எவ்வாறு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் இணைந்து நடாத்தும் குறும்படக் காட்சிப்படுத்தலின் 5வது காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து இச்சந்திப்பு சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கலந்துரையாடலில் முக்கியமாக உடனடி மற்றும் நீண்டகால உதவி நடவடிக்கைகள், உதவ முன்வருபவர்களை நேரடியாக உதவித் திட்டங்களில் இணைப்பது, அனைத்து உதவி நடவடிக்கைகளிலும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பது இதன் மூலம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதால் காத்திரமான உதவித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

மே 2 குறும்படக் காட்சி நிகழ்வில் சந்திரியின் கதை மெமறிஸ் ஒப் பாஸ்ற் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜானகி விஸ்வநாதனின் சந்திரியின் கதை சாதிய ரீதியான சமூக ஒடுக்குமுறையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறும்படம். மெமறிஸ் ஒப் பாஸ்ற் தேம்ஸ்வலி பல்கழைக்கழக மாணவர்களின் தயாரிப்பு. இவற்றுடன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட துறூத வின்டோ – யன்னலினூடாக என்ற ஆர் புதியவனின் குறும்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சந்திப்பு விபரங்கள்:

6.30 pm on 2nd of May 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton

வன்னி மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் பொறுப்பை தேசம்நெற் – சிந்தனை வட்டம் ஏற்றுள்ளன: த ஜெயபாலன் & பி எம் புன்னியாமீன்

Class 05 Text Bookஉள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட மனித அவலம் வன்னி மக்களை நீண்ட துயர்மிகு வாழ்விற்குள் தள்ளியுள்ளது. இளம்தலைமுறை மாணவர் சமூகம் காணாமல் போய்விட்டது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களும் அங்கங்களை இழந்தவர்களுமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் கைகொடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது. இது உடனடியான நாளாந்த வாழவியல் தேவைகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் நீண்டகால நோக்கிலும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

Letter_from_T_Meganathan

இந்நிலையில் ஏப்ரல் 4ல் வன்னிப் பகுதி வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் 1057 மாணவர்கள் (மார்ச் இறுதிப்பகுதி புள்ளிவிபரம்) இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கபக்பட்ட 13 நலன்புரி முகாம்களில் இருப்பதாகவும் அவர்களுக்கான பாட நூல்களை வழங்கி உதவுமாறும் தேசம்நெற்றைக் கேட்டுக்கொண்டார்.

தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மாணவர்கள் மிகவும் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்கள். அதற்கு மத்தியிலும் அவர்கள் கல்வியை கைவிடாமல் தொடர்வது மிக மிக அவசியம். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி மட்டுமல்ல உண்மையானதும் கூட. ஒரு சமூகத்தின் அத்திவாரம் அந்த சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படும் கல்வி. அது பரீட்சையுடன் மட்டும் முடிந்துவிடாது.

புலம்பெயர்ந்து வாழும் உங்கள் உறவுகளாகிய நாம் அவர்கள் எதிர்கொள்ளும் மிகத்துயரமான வாழ்வை எண்ணி வேதனைப்படுகின்றோம். சிலசமயம் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறோம். அக்குற்ற உணர்வில் இருந்து எம்மை சற்று விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு ஆறுதலாக இருக்க நினைக்கின்றோம். அந்த வகையில் சிறுவர் சிறுமியராகிய அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு படிப்பதற்கு உதவும் வகையில் இப்பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கும் பொறுப்பை தேசம்நெற் ஆசிரியர் குழு ஏற்றுக்கொண்டு உள்ளது.

பரீட்சைக்காக மட்டுமல்ல மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள இப்புத்தகம் உதவியிருக்குமானால் அது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

 Letter_from_P_M_Puniyameen

இப்பாடநூல் பதிப்பினை சிந்தனை வட்டம் மேற்கொள்கிறது. இப்பாடநூலிற்காகும் செலவின் மூன்றில் ஒரு பகுதியான 200 000 ரூபாய்களைச் சிந்தனை வட்டம் பொறுப்பேற்பதாக அதன் அமைப்பாளார் புன்னியாமீன் தெரிவித்து உள்ளார். மிகுதியான 400 000 ரூபாயை தேசம்நெற் ஆசிரியர் குழுவினர் பொறுப்பேற்கின்றனர். ஆனால் தற்போது மாணவர் தொகை அதிகரித்து இருப்பதால் இத்தொகை அதிகரிக்க வேண்டி இருக்கும்.

மேலும் மாணவர்களின் கல்விக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வழங்கவும் சிந்தனை வட்டம் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை
இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர். அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 1057 மாணவர்கள் 13 இடைத்தங்கல் முகாம்களில் தரம் 05 பரீட்சையை எழுதுகின்றனர். இம்மாணவர்களுக்கு மேலதிக உசாத்துணை வழிகாட்டிகளான தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் இணைந்து புதிய பாடத்திட்டத்திற்கமைய (2009ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்திற்கமைய முதற் தடவையாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.) 30 மாதிரி வினாத்தாள்களையும் நான்கு வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கவுள்ளது.

மே 2ல் (எதிர்வரும் சனிக்கிழமை) மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு என்ற தலைப்பிலான கலந்தரையாடல் ஒன்றினை தேசம்நெற் ஈழவர் திரைக்கலை ஒன்றியத்துடன் இணைந்து மேற்கொண்டு உள்ளனர். எதிர்கால உதவி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்படுவதுடன் உதவி வழங்க முன்வரும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றியும் இச்சந்திப்பில் ஆராயப்பட உள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதனால் சிந்தனை வட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மடல்:

Letter_to_Sinthanai_Vaddam

.

Letter_to_Sinthanai_Vaddam

Project Beacon இறுதி 48 மணி நேரத்தில். துருக்கியின் பாடம் இலங்கைக்கும் புலிகளுக்கும் உதவுமா! : த ஜெயபாலன்

Pirabakaran 2007Abdullah_Ocalan‘தகவல் வெளிவந்தது. அது பேர்லின் கோபன்ஹேகன் ஸ்ரொக்ஹோம் லண்டனுக்கும் தெரியவந்தது. ஹேக்கில் இருந்து ஜெரூசலம் வரை பரிஸில் இருந்து சூரிச் வரை. மக்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு சரியான தருணம். மின் அஞ்சல் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது. கைத்தொலைபேசிகளினூடாகவும் தகவல்கள் விரைந்தது. சில மணி நேரங்களிலேயே அந்தக் கோபம் முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் உள்ள தூதுவராலயங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளானது. இதன் உச்ச கட்டமாக லண்டனில் உள்ள தூதரகத்திற்கு முன்னால் 15 வயதுச் சிறுமி தீக்குளிதால். அழகிய சிறுமி தீப்பிளம்பானால்.’ பெரும்பாலும் பிரித்தானியாவின் தேசியப் பத்திரிகைகள் அனைத்தினதும் முதற் பக்கத்தை பெற்றுக் கொண்டது அச்செய்தி.

இது இன்று நேற்று அல்லது கடந்த சில வாரங்களாக லண்டனிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் நடைபெறும் போராட்டங்கள் அல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1999 பெப்ரவரி 17யைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள்.  எதிரிகளால் பயங்கரவாதி என்றும் குழந்தைகளைக் கொல்பவர் என்றும் வர்ணிக்கப்படுபவர். ஆனால் அவரது விசுவாசிகள் சூரியன் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் போற்றும் பிகெகெ – குர்திஸ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதை அடுத்தே உலகம் முழுவதும் பரந்து வாழும் குர்திஸ் மக்கள் வீதிகளில் இறங்கினர். முதல் எதிரியும் ஓச்சுலானை கைது செய்த நாடுமான துருக்கியினதும் கைது செய்யப்பட்ட நாடான கென்யாவினதும் தூதரகங்கள் புலம்பெயர்ந்த குர்திஸ் மக்களின் முற்றுகைக்கு உள்ளானது.

இன்று லண்டன் உட்பட உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்படும் போராட்டங்களுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் பிகெகெ தலைவர் ஒச்சுலானை விடுவிக்கும்படி நடந்த போராட்டங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு வருமுன் காப்பு என்பதைத் தவிர வேறு பாரிய வேறுபாடுகள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போலல்லாது குர்திஸ் தொழிலாளர் கட்சி மார்க்ஸிச லெனினய கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். அதனால் அமெரிக்காவினதும் அதன் சார்பு அணியினதும் கழுகுப் பார்வையில் எப்போதும் இருந்த அமைப்பு. தமிழீழத்தைப் போன்று ஒரு நாட்டிற்குள் மட்டும் அவர்களது குர்திஸ்தான் தாயகம் அடங்கவில்லை. வடக்கு ஈராக், மேற்கு ஈரான், தென்கிழக்கு துருக்கி, சோவியத்தினதும் சிரியாவினதும் சிறு பகுதியை உள்ளடக்கியதே குர்திஸ் மக்களின் தாயகமான குர்திஸ்தான். எண்ணை வளம் மற்றும் புவியியல் அமைவு காரணமாக காலத்திற்குக் காலம் வேறு வேறு நாடுகளால் புற அரசியல் சக்திகளால் குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் சதிராடப்பட்டு வந்தது. (இக்கட்டுரையின் நோக்கம் இதைப்பற்றி ஆராய்வதல்ல. அது பற்றி தனியாக ஆராய்வதே பொருத்தமானது.)

பிகெகெ தலைவர் அப்துல்லா ஒச்சுலான் கென்யாவின் தலைநகர் நைரோபியில் வைத்துக் கைது செய்யப்பட்டதும் அதற்குப் பின் ஓச்சுலான் வழங்கிய வாக்குமூலங்களும் ஓச்சுலான் மீதிருந்த விம்பங்களைத் தவிடுபொடியாக்கியது. துருக்கிய சிறைகளில் இருக்கும் குர்திஸ் கைதிகள் சிறை ஆடைகளை அணிந்தாலோ அல்லது துருக்கிய தேசிய கீதத்தை பாடினாலோ அவர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்தியது ஓச்சுலானின் தலைமை. ஆனால் ஒச்சுலான் தன்மீதான வழக்கை துருக்கி அரசு மீதான வழக்காக மாற்றுவதை விடுத்து எதற்காக ஆயிரக் கணக்காண குர்திஸ் இளைஞர் யுவதிகள் போராடினார்களோ உயிரிழந்தார்களோ அதனைக் கைவிட்டார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டார். தனது தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டார். போராளிகளை ஆயுதங்களைக் கைவிடும்படி கோரினார். துருக்கிய படைகளிடம் சரணடையும் படியும் கோரினார். ஒச்சுலானின் கட்டளைப்படி ஒரு பகுதியினர் ஆயுதங்களை ஒப்படைத்தனர். சரணடைந்தனர். ஓச்சுலானுடைய பழக்கங்கள் பயங்கரமானது ஆனால் ஒச்சுலான் விடவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் குர்திஸ்தானுக்கான சோசலிஸக் கட்சியின் செயலாளர் கெமல் புர்கே ‘ஒரு தனிமனிதனின் வாழ்வுக்காக மக்களை தியாகம் செய்ய முடியாது’ என்று தனது கட்சியின் 25வது ஆண்டு நிகழ்வில் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் பெரும்பாலும் தங்களது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டனர். ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் தங்கள் இலட்சியத்திற்காக வேறு வடிவங்களில் போராடவில்லை. மாறாக அரசிடம் சரணாகதி அடைந்தனர். அன்று யாருக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அதே மக்களுக்கு எதிராக அரசுடன் இணைந்து தங்கள் ஆயுதங்களைத் திருப்பினர். இன்றும் மக்களுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதே காரணத்திற்காக வே பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றிக் கட்டப்பட்ட சூரியத்தேவன் போன்ற விம்பங்கள் இன்று ஈடாடிப் போயுள்ளது. ‘தலைவர்’ தலைமையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்படும் போராட்டம் ஒரு மணி நேரத்திற்குள் சைக்கிளில் சுற்றிவரக் கூடிய எல்லைக்குள் முடங்கி நிற்கின்றது. ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்கள்’ என்ற இராணுவத் தந்திரோபாயத்தை முழுவதுமாக நம்பியிருந்த புலம்பெயர்ந்த புலி உறவுகளுக்கு ஏப்ரல் 5ல் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வன்னியில் இருந்து வந்த கட்டளைகள் யதார்த்தத்தைப் புரிய வைத்தது. மறுநாள் ஏப்ரல் ஆறாம் திகதி அவசரமாகக் கூடி உடனடியாக உலகெங்கும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. (தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்)

ஓச்சுலான் அன்று கைது செய்யப்பட்ட சூழலும் புலிகளின் தலைமை இன்று சுற்றி வளைக்கப்பட்ட சூழலும் ஒன்றல்ல. (வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதயில் இருந்து ஏற்கனவே வெளியேறி விட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும் வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளாரா இல்லையா என்பது இன்றும் மில்லியன் டொலர் கேள்வியாகவே உள்ளது.) இன்னும் 50000 மக்கள் வரையும் பணயமாக வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரச இயந்திரம் புலிகளின் தலைமையை அழிப்பதற்கு அல்லது அதற்கான முயற்சிக்கு என்ன விலையையும் எத்தினை ஆயிரம் உயிர்களையும் பலிகொடுக்கத் தயார் நிலையிலேயே உள்ளது. இன்று புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ளவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை அரசுக்கு அவர்களைப் பலிகொடுப்பதிலும் எவ்வித உறுத்தலும் இருக்கவில்லை. இதுவரை 7000க்கும் அதிகமான பொது மக்கள் கடந்த மூன்று மாதங்களில் கொல்லப்பட்டு உள்ளதாக ஐ நா மதிப்பிட்டு உள்ளது. 14 ஆயிரம் பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

இலங்கை அரச கூறுவது போல் வே பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமை அப்பகுதியில் இருந்தால் அது அப்பகுதியில் பணயம் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மிக மிக மோசமான துரதிஸ்டமாக அமையலாம். வரலாறு காணாத மனித அவலம் ஒன்று அங்கு நிகழும் அச்சம் உள்ளது. புலிகளின் தலைமைக்கு நிகழும் ஆபத்தின் எதிரொலியாக யுத்தப் பகுதிக்கு வெளியே தயார் நிலையில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் எல்லைப் புற சிங்களக் கிராமங்களில் மோசமான படுகொலைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அது இனக்கலவரம் ஒன்றுக்கு இட்டுச்செல்லும் சூழலும் உள்ளது.

வன்னி மக்கள் தற்போது இரு கொலை இயந்திரங்களுக்கு இடையே மாட்டுப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவிக்கின்றனர். இரு புறம் இலங்கை இராணுவ இயந்திரம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் அறிந்த எதிரி. அந்த எதிரி இவ்வாறு நடந்து கொள்வான் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தனர். அதனால் அந்த எதிரியைக் கையாளவும் அவர்கள் தெரிந்திருந்தனர். கடந்த அறுபது வருடங்களாக் அதனைச் செய்தும் அதனிடம் இருந்து தப்பியும் வந்துள்ளனர். ஆனால் தங்போது தங்கள் சூரியபகவானாகவும் கடவுளின் அவதாரமாகவும் கண்டவர்கள் தங்களைப் பணயம் வைத்த போதும் அவர்களின் கொலை இயந்திரத்தை தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதும் அவர்களால் அதனைக் கையாள முடியவில்லை.

இந்நிலையை புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் வெளிப்படுத்தவில்லை. வன்னி மக்களின் நலன்களை அப்போராட்டங்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக அப்போராட்டங்கள் சில சமயம் வன்னி மக்களின் உணர்வுகளுக்கு மாறாகவே அமைந்துள்ளது. வன்னி மக்களின் அவலங்கள் மீது ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரச இயந்திரம் தன் இனவாத நடவடிக்கைகளைக் கூர்மைப்படுத்தி உள்ளது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட இனவாதத்தையுடைய அரச இயந்திரம் மனிதாபிமான நடவடிக்கைகளை வெறும் பிரச்சாரத்திற்காகவே மேற்கொள்கிறது. இலங்கை அரசு பயங்கரவாதிகளாக வர்ணிக்கும் புலிகள் சிங்கள மக்களைப் பணயமாக வைத்திருந்தால் இதே மனப்பாங்குடன் அவர்களை நடத்தியிருக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்திடமும் எழுவது தவிர்க்க முடியாதது.

அரசினுடைய செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களும் இந்த யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேறுபவர்கள் விடயத்தில் பாராமுகமாகவே உள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வந்ததை அவர்கள் துரோகத்தனமாகவே பார்க்கின்றனர். ஆனால் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதவர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த புலி ஆதரவு அமைப்புகள் ‘வன்னி மண் அவர்களின் பூர்வீக மண்’ என்ற பிரச்சாரத்தை மையப்படுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேறவிடாது தடுக்கும் புலிகளுக்கு கருத்தியல் அரணை உருவாக்கினர். அப்படி வெளியேறுபவர்கள் இராணுவத்தால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும், கருக்கலைப்புச் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். இவற்றையெல்லாம் ஒரு இனவாத அரச இயந்திரம் செய்யத் தயங்காது. ஆனாலும் சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை அரச இயந்திரம் சில முகத்தைக் காப்பாற்றும் விதிமுறைகளை பின்பற்ற முயல்வதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசின் எதிர் நடவடிக்கைகளில் மட்டும் தங்கி இருந்து அரசியல் செய்து றிம்மில் சைக்கிள் ஓடுவதாகத்தான் புலிகளின் பிரச்சாரங்கள் உள்ளது.

இலங்கை அரசினுடைய முன்னெடுப்புகள் ஒன்றும் புலிகளுக்குக் குறைந்தது அல்ல. பிகெகெ தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும் இலங்கை அரசுக்கும் ஒரு பாடமாக அமையும். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சமூசத்தின் ஒரு தனிமனிதனையோ ஒரு அமைப்பையோ பணிய வைப்பதன் மூலம் அச்சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான உள்ளுணர்வைப் பணிய வைத்துவிட முடியாது. ஓச்சுலானாக இருக்கலாம் பிரபாகரனாக இருக்கலாம் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையின் பக்க விளைவுகளே அவர்கள். ஒச்சுலான் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளாகியும் இன்னமும் துருக்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இராணுவத் தாக்குதல்களும் நிகழ்கிறது. அதற்குக் காரணம் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரும் குர்திஸ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை துருக்கி முன்வைக்கவில்லை. குர்திஸ் மக்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஒச்சுலான் கைது செய்யப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒருவகை ஸ்தம்பிதம் ஏற்பட்டு இருந்தாலும் இப்போது மீளவும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் தலைதூக்குகின்றது. ஒச்சுலான் ‘ஆயுதங்களைக் கீழே போடுங்கள்! சரணடையுங்கள்!’ என்று சொன்னாலும் அதற்கு பணியாது பிகெகெயின் சில தலைவர்கள் ஆயுத நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அந்த முல்லைத்தீவுச் சிறுநிலப்பரப்பில் எதுவும் நடக்கலாம். அங்கிருந்து பெரும்பாலும் பிரபாகரன் தப்பி இருக்கலாம். சிலசமயம் இறுதி மூச்சுவரை போராடுவேன் என்று போராடலாம். அல்லது சரணடையலாம். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. எது எப்படியானாலும் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மிக மோசமான ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அரசு தனது ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனஒடுக்குமுறையைக் களைந்து தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கத் தவறினால் இந்த நச்சுச் சூழற்சி மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. பிரபாகரனும் புலிகளும் மட்டுமல்ல பிரச்சினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு தீர்வை முவைக்க முடியாத இலங்கை அரசும் அரச இயந்திரமும் முக்கியமான பிரச்சினை.

இனிமேல் ஏற்படப் போகும் மனித அவலங்களுக்காவது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் ஒப்படைத்து தங்கள் வரட்டுத்தனமான ஏகபிரதிநிதித்துவக் கோசத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்க வேண்டும். இலங்கை அரசும் அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க முடியும். இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்காண உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். அரசாக இருந்தாலும் புலிகளாக இருந்தாலும் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொண்டு இரு தரப்பும் வெற்றிகொண்டதான நிலையை உருவாக்கி தற்போதுள்ள இறுக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது மிகவும் கடினமாகி உள்ளது.

இலங்கை அரசு இந்தியா உட்பட இணைத்தலைமை நாடுகளுடன் உடன்பட்ட புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் இறுதி 72 மணித்தியாலங்ளை எதிர்நோக்கி உள்ளது. அதனை இலங்கை அரசு இன்னும் சில தினங்களில் இந்த முல்லை யுத்தம் முடிவுக்கு வரும் என்கிறது. பா சிதம்பரம் இன்னும் இரு தனங்களில் நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றார். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா நடேசன் ஏப்ரல் 28 இலங்கை அரசபடைகள் பல்முனைத் தாக்குதலை தொடங்கிவிட்டனர் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களை வீதிகளில் இறங்கிப் போராடும்படியும் அழைத்துள்ளார். இளையவர்களுக்கு விடுக்கப்பட்ட மாணவ அமைப்பு ஒன்றின் அறிக்கை இன்று ஏப்ரல் 29 திகதியை குறிப்பாகச் சுட்டிக்காட்டி உள்ளது.

2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்) பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் இன்னும் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வருகிறது. இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசு தனது இராணுவ நடவடிக்கைகளை முடித்துள்ளது. இந்த மூன்றாவது ஆண்டின் முடிவில் அதாவது ஏப்ரல் 30ல் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் மீட்க வேண்டும் என புரஜகற் பீக்கனில் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த 48 மணிநேரம் யுத்தப் பகுதியில் உள்ள மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகவும் அதே சமயம் மிகவும் ஆபத்தானதாகவும் அமைய உள்ளது.

மெல்ல வெளிவரும் நிஜங்கள் – வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் : த ஜெயபாலன்

Wanni_War_Bombed_Safe-Zone1.
யுத்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் வெளியே வர அங்கு என்ன நடந்தது என்ற உண்மையும் வெளிவரத் தொடங்கி உள்ளது. சர்வதேச ஊடகங்கள் அனைத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள முல்லைத் தீவு யுத்தமுனையின் மனித அவலத்தை விபரிக்க வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றனர் செய்தியாளர்கள். சில காட்சிகளைக் காட்டுவதைத் தவிர்க்க இயலாததால் அது பற்றிய எச்சரிக்கையை வழங்கியே அவற்றைக் காட்சிப்படுத்துகின்றனர். இந்தப் பெரும் அவலத்திற்குக் இவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டிட முடியாத அளவிற்கு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசும் எல்ரிரிஈ யும் அப்பகுதியில் வகைதொகையின்றி மனிதக் கொடுமைகளைப் புரிந்திருப்பதை வெளியேறி வருகின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் யுத்தப் பகுதியில் இருந்து வெளியெறி வரும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவோ அவர்களுடைய துயர் துடைப்பதாகவோ இல்லை. அவர்களின் பெயரில் ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதில் அம்மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டு உள்ளனர். வன்னி மண் பூர்வீக மண் அம்மக்கள் அங்கிருக்கவே விரும்புகின்றனர் என்று கூறி அம்மக்களை யுத்தப் பகுதிக்குள் வாழ நிர்ப்பந்தித்த புலத்து உறவுகள் இலங்கை இராணுவத்தினதும் புலிகளினதும் தாக்குதலுக்கு அம்மக்களை இலக்காக்கி உள்ளனர். (இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்)

இன்று ஆயிரம் ஆயிரமாக யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்தகொண்டிருக்கும் மக்களை நோக்கி புலத்து உறவுகள் தங்கள் உதவிக் கரங்களை நீட்ட எத்தனிக்கவில்லை. தென்பகுதியில் உள்ள மக்களே சமைத்த உணவுகளை வழங்குகின்றனர். வீட்டில் ஒரு ஆபத்து என்றால் பக்கத்து வீட்டில் உள்ளவன் தான் உதவி செய்வான். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தொப்புள்கொடி உறவால் ஆபத்திற்கு தண்ணீர் கூடக் கொடுக்க முடியாது. மேலும் காயப்பட்ட மக்களை காப்பாற்றுபவர்கள் அனைவரும் தமிழ் மருத்துபவர்களும் அல்ல. இது இந்த யுத்த்தில் மட்டும் நிகழவில்லை. சுனாமிக் காலகட்டத்திலும் இதுதான் நிகழ்ந்தது.

அரசையும் மக்களையும் பிரத்துப் பார்க்க முடியாத தமிழ் தலைமைகள் செய்த அரசியலும் அதனைத் தொடர்ந்து வந்த இராணுவ மயமாகிப் போன தமிழ் அரசியலும் தமிழ் மக்களை பல பத்து ஆண்டுகளுக்கு பின்கொண்டு சென்றுள்ளது என்பது வேதனையான உண்மை. இப்போராட்டத்தை புரட்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள இருந்த அத்தனை சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு அல்லது அதனிலும் பின்னே வந்து நிற்கின்றோம்.

யுஎன் செயலாளர் நாயகம் பான்கிமூன் ராயட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு “”I intend to immediately dispatch a U.N. humanitarian team to the no-fire zone. The purpose of this humanitarian team would be to first of all monitor the situation and support humanitarian assistance and try to do whatever we can to protect the civilian population who are caught in the fire zone. –  நான் உடனடியாக மனிதாபிமானக் குழு ஒன்றை தாக்குதல் தவிர்ப்புப் பகுதிக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன். அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுவதும் தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாகக்க எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் தான் அந்த மனிதாபிமானக் குழுவின் நோக்கம்” என்று தெரிவித்து இருக்கிறார். இலங்கை அரசாங்கம் இக்குழுவை கட்டாயமாகவும் அவசரமாகவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பான்கீ மூன் தெரிவித்து உள்ளார். http://www.alertnet.org/thenews/newsdesk/LN183462.htm

இதற்கு முன்னர் எல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு (ஏப்ரல் 22) இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்குப் பின்னர் இன்று ஐநா செயலாளர் நாயகமும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதே கருத்தை பிரித்தானியா – பிரெஞ் வெளியுறவுச் செயலர்கள் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையிலும் தெரிவித்து இருந்தனர். ஏற்கனவே பெப்ரவரி நடுப்பகுதியில் இணைத் தலைமை நாடுகள் மற்றும் இந்தியாவும் இக்கோரிக்கையை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. (”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்)

தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்பது பற்றி இந்திய உளவுத்துறையின் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்க பொறுப்பாக இருந்த ரோ சந்திரன் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் எண்பதுக்களின் நடுப்பகுதியில் உரையாடிய போது பிரபா அதனை மறுத்துவிட்டார். இக்கோரிக்கைகாக தன்னுடன் போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்து விட்டபின் நான் தமிழீழத்தை கைவிடமுடியாது என்று தெரிவித்து உள்ளார். இன்று கால்நூற்றாண்டுக்குப் பின் எத்தனையாயிரம் இழப்புகள். தமிழீழக் கோரிக்கை என்றைக்கோ அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. இன்றைக்கு பிரபாகரன் இந்த யுத்தப் பகுதியில் இருக்கின்றாரோ இல்லையோ அல்லது இலங்கையை விட்டுவெளியேறி இருந்தாலுமே அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்)

பிரபாவின் எதிர்காலம் மட்டுமல்ல அவர் வலிந்து தலைமை தாங்கிய தமிழ் மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. (தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்)

IDP_Camp_Injured_Man2.
ஏப்ரல் 20 முதல் சிகிச்சைக்கு வருபவர்கள் மூன்றில் நான்கு பங்கினர் நிலக்கண்ணி வெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் ஏனையவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வருவதாகவும் வவுனியா வைத்திய சாலையில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர் போல் மக்மாஸ்ரர் தெரிவிக்கிறார். அவர் மேலும் தெரிவிக்கையில் 450 படுக்கைகள் உள்ள வவுனியா வைத்தியசாலையில் 1700 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக கூறுகிறார். அங்குள்ள நிலைமைகள் பற்றிய அவருடைய குறிப்பு வன்னி மக்களின் நிலையை ஓரளவுக்க மனக் கண்முன் கொண்டு வருகிறது.

”நாங்கள் அங்கங்களை நீக்கும் சத்திர சிகிச்சைகளை நிறையச் செய்ய வேண்டி இருக்கிறது. பலருக்கு கீழ்கால் மற்றும் பாதங்களில் கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது. பலருக்கு அவை வெடித்துச் சிதறி உள்ளது. அதனால் நாங்கள் அவசரமாக அங்கங்களை நீக்கும் சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். பல நோயாளிகளின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. வயிற்றில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை, குடலில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை (உணவின்மையால்) நெஞ்சும் சுவாசப்பைகளும் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாள வேண்டி உள்ளது. தலைக்காயங்களையும் நாங்கள் கையாள்கின்றோம். தலையில் காயம்பட்டவர்கள் பலர் எங்களை வந்தடைவதில்லை. பஸ்களில் காயப்பட்டவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மக்கள் பஸ்களிலேயே இறக்கிறார்கள். சிலசமயம் பஸ்களில் இருந்து உயிரற்ற உடல்களே இறக்கப்படுகின்றது.”
போல் மக்மாஸ்ரர் – எல்லைகளற்ற மருத்தவர்கள் அமைப்பு

We are doing a lot of amputations. Many of the lower limbs are severely, severely injured and blown off. So we’re doing emergency amputations and a lot of these patients we’re doing abdominal expirations, or damage to internal organs and the bowel, we’re dealing with chest injuries, draining damaged chests and lungs, and we’re dealing with some head injuries as well, but the majority of the severe head injuries don’t make it to us. Buses that bring these people down, people are dying on those buses, and bodies are being taken off the buses sometimes as well.
Paul McMaster – Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF)

http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3551&cat=field-news&ref=home-center

Wanni_War_Boat_Refugees3.
ஏப்ரல் 20ல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான இளம்தாய் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய வாக்குமூலம்.

”என்ரை பெயர் வினோ. நாங்கள் மாத்தளன் ஹொஸ்பிட்டலுக்குப் பக்கத்தில் இருந்த நாங்கள். 20ம் திகதி இரவு ஒரு மணியில இருந்து ஒரே சண்டை நடந்தது. சரியான செல்லடி. நாங்கள் வாறத்துக்காகத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்த நாங்கள். அதுக்குள்ள பதுங்குகழிக்குள்ள இருந்த நாங்கள் நினைக்கவே இல்லை உயிரோட வருவம் என்று. விடிய ஆறு மணிபோல ஓடி வந்த நாங்கள் வரும் போதும் சரியான செல் அடி. காயப்பட்டுத்தான் வந்த நாங்கள். கனபேர் செத்திட்டாங்கள். நாங்கள் காயங்களோட ஓடி வந்தநாங்கள்.

எனக்கு காலிலையும் கையிலையும் காயம் எனது கணவனுக்கு நாலைந்து இடத்தில காயம். கால்லில கையில உடம்பில தலையில எல்லாம் காயம். இன்னும் செல் துண்டுகள் உடம்பில இருக்குது.

நாங்கள் இங்கால வாறத்துக்காகத்தான் ஒரு மாசமா முயற்சி செய்து கொண்டு இருந்தம். ரெண்டு மூன்று தரம் நாங்கள் வரும்போது சரியான தடையாப் போச்சு. எங்களைத் துரத்தினாங்கள். பிடிச்சுடுவாங்கள். சரியான கரைச்சல்பட்டுத்தான் ரோட்டுக் கரையா ஒரு பதுங்குழிக்குள் இருந்தனாங்கள். அன்றைக்கு சரியான செல் அடி ஆறு மணி வரைக்கும் பங்கருக்கு உள்ளேயே இருந்த நாங்கள். பக்கத்தில எல்லாம் செல் வீழுந்து வெடிச்சது. விடிய எழும்பிப் பார்க்கேக்க எல்லாச் சனமும் ஒடினாங்கள். செல்லும் ரவுண்ஸ்ம் வந்துகொண்டிருக்க நாங்களும் எழும்பி ஓடினம். ஆஸ்பத்திரிக்கு முன்னால ஓடி வந்தநாங்கள். தண்ணிக்குள்ள விழுந்தடிச்சு ஓடி வந்தநாங்கள். அப்பிடி வரேக்க தான் காயப்பட்ட நாங்கள். நிறையப் பேர் செத்தவை. நிறையப் பேர் காயப்பட்டவை.

தங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து அங்காள போக வேண்டாம் என்று சொல்லி விடுதலைப் புலிகள் தடுத்தாங்கள். அம்மா சகோதரங்கள் எல்லாம் அங்கால. ஒருதருமே இங்கால வரேல்ல. நானும் என்ர மனுசனும் பிள்ளையும் தான் வந்திருக்கிறம் அவையின்ர நிலமை என்ன என்று ஒன்றுமே தெரியாது.

நாளாந்தம் செல்லடி. நாளாந்தம் ஆட்கள் சாகிறான்கள். நாளாந்தம் ஆட்கள் காயப்படுறான்கள். யார் உயிரோட இருப்பினம் யார் சாவினம் என்று தெரியாது. இப்படியான நிலைமையில எந்த நேரமுமே பதங்குழிக்குள் தான்.

இங்க வரேக்க ரெண்டு மூன்று சோதணைச்சாவடி வைச்சு செக் பண்ணி அனுப்பினவை. ரெண்டு பாக் கொண்டுவந்தனாங்கள். சோதிச்சவை. கொண்டுவந்த நகை காசு எவ்வளவு என்று பதிஞ்சுதான் விட்டவை. மற்றும்படி பிரச்சினையில்லை. நேற்று (21 ஏப்ரல்) ஒழுங்கான சாப்பாடு இல்லை. இன்றைக்கு கொஞ்சச் சாப்பாடு தான் வந்தது. எங்களுக்கு கிடைக்கேல்லை. மதியச்சாப்பாடு பின்நேரம் தந்தவங்க. அதுவும் ஒரு ஆளுக்குக் காணக் கூடியது தான் வந்தது. சரியா கஸ்டப்படுறம். ரெண்டு மூன்றுநாள் குழிப்பிலை வந்து அப்படியே சேறு சகதிகளோடு இருக்கிறம். உடுப்புகளும் நனைந்து அப்படி அப்படியே இருக்கிறம். மருந்து கூட ஒருக்கட்டினபடி அப்படியே இருக்கு. நேற்றுப் பின்நேரம் (ஏப்ரல் 21) தான் புதுமாத்தளனில இருந்து வவுனியாவுக்கு கொண்டு வந்தவை.

மாத்தளனில இருந்து இராணுவத்தின்ர காம்புக்கு ஓடி வந்தநாங்கள.; அந்த இடம் சாலை என்று சொல்றவை. அங்க இருந்து இன்னொரு இடத்திற்குப் போய் அங்கயும் சாப்பாடில்லாமல காஞ்சு கிடந்து ஓமந்தைக்கு கொண்டு போனவையள். பிறகு வவுனியாவுக்கு கொண்டு வந்திரக்கினம்;.

அங்க இயக்கம் பண்ட அடிச்சிருக்கு. பண்டுக்கு இங்கால கணினமான அளவு தண்ணி. அதைத்தாண்டி இங்கால வர பெரிய கடல்துண்டு மாதிரி. அதுக்குள்ளயும் இடுப்பு அளவுக்குத் தண்ணி. அதுக்ள்ளயும் பிள்ளைகள் தாண்டு ஓடேலாம. சரியா கஸ்ரப்பட்டிட்டம். அந்த நிலைமையை என்ன என்று சொல்வதென்றே தெரியாது.”

இவருடைய வாக்குமூலம் இரு வேறுபட்ட இராணுவங்களுக்கு மத்தியில் சிக்குண்ட மக்களின் நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

David_Chater_Aljazeera_Journalist4.
யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருகின்ற மக்கள் பலரைச் சந்தித்த அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் டேவிட் சாட்டருடைய வாக்கு மூலமும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”பெருமளவிலான அகதிகளுடன் கதைத்ததில் அவர்கள் தமிழ் புலிகளின் தலைமை தங்களை நடத்தியது தொடர்பாக மிகவும் வெறுப்புடன் உள்ளனர். புலிகளின் தலைமை தொடர்பாக தமிழ் பொது மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைமை, தமிழ் மக்களுக்கான தாயகத்தை உருவாக்குவதற்காக போராடுபவர்கள், அவர்களை சுரண்டுகிறார்கள், அவர்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது சுடுகின்றார்கள், யுஎன் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் களவாடுகின்றனர்.”

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுத்தத் தவிர்ப்புப் பகுதியில் பொருட்களின் விலை உச்சமாக இருப்பதாக ஐபிசி வானொலிச் செய்திகள் தெரிவித்து இருந்தது. கடந்த பல மாதங்களாக ஐசிஆர்சி ஊடாக யுஎன் உலக உணவுத்திட்டம் அனுப்புகின்ற உதவிகளைத் தவிர எவ்வித விநியோகமும் இருக்கவில்லை. இந்த விலைக்கு விற்கப்பட்ட உணவுகள் என்பது உணவுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்ட்ட உணவுப் பொருட்களே. தற்போது வெளியேறும் மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்கும் விபரங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த தந்தையொருவர் அல்ஜசீரா தொலைக் காட்சியில் தாங்கள் அங்கு சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்ரப்பட்டதாகவும் யுஎன் அனுப்பிய உணவுகளை வாங்கவும் தங்களிடம் காசு இருக்கவில்லை என்றும் அவை உச்ச விலைக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இனவாத அரசு தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு இராணுவத் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடாத்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய புலிகள், அந்த இனவாத அரசு சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுப்பிய குறைந்தபட்ச உணவையும் மக்களிடம் சேரவிடாமல் தடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தங்களது பாதுகாப்பிற்காகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்குக் கூட அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உணவைக் கூட புலிகள் அம்மக்களுக்க வழங்கவில்லை. குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் பட்ட அவஸ்தையையை அத்தந்தை தொலைக்காட்சியில் விபரித்தார்.

IDP_Camp_Barbed_Wire 5.
கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன் டிசம்பர் 6ல் வவுனியாவிற்கு வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய தொலைபேசிப் பேட்டியில் குறிப்பிட்ட கருத்துக்களை இங்கு மீளப் பதிவு செய்கிறேன்.

சந்திரன் தனது மகளுடன் வவுனியாவுக்கு வந்திருந்தார். குடும்பமாக யாரும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிப்பதில்லை. அதனால் குடும்பத்தின் ஒரு உறுப்பினரே வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார். அதனால் இளம் குடும்பஸ்தரான சந்திரன் தனது மனைவியை பிணையாக விட்டு வவுனியாவுக்கு வந்துள்ளார். அவரது மகள் அவருக்கு பாதுகாப்புக்காக வந்திருக்கிறார். ‘அப்பாவை தனிய விட்டால் பிடிச்சுக் கொண்டு போவினம் என்று தான் அப்பாவோடு வந்தனான்’ என்று மழழை மாறாத குரலில் அச்சிறுமி கூறுகிறார். ‘அம்மாவுக்கு பாஸ் கொடுக்கினம் இல்லை’ என்றும் அச்சிறுமி கூறினார்.

சந்திரன் தினம் தினம் வேலை செய்து சம்பாதிப்பவர். அன்றாட வேலை கிடைத்தால் தான் அவரது வீட்டில் அடுப்பு எரியும். இருந்தும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது குடும்பம் தங்களாலான உதவிகளைச் செய்கிறார்கள். மாவீரர் தின நிகழ்வுகளுக்கும் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளோடு நின்று தோள் கொடுத்தவர்.

‘என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை’ என்கிறார். ‘வெற்றியோ தோல்வியோ இந்தச் சண்டை இத்தோடு முடிந்துவிட வேண்டும்’ என்று விரக்தியுடன் கூறிய அவர் ‘எப்படியாவது திரும்பியும் கிளிநொச்சிக்குச் சென்று தனது மனைiவியை அழைத்து வர வேண்டும்’ என்கிறார். ‘பண வசதி உள்ளவர்கள் வீட்டையும் வளவுகளையும் காசையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு குடும்பமாக வெளியேறுகிறார்கள். குறைந்தது 50, 60 இலட்சம் பெறுமதிக்கு அவர்களுக்கு கொடுத்தால் பாஸ் கிடைக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். ‘ஆனால் அன்றாடம் காட்சிகளான தங்களுக்கு கொடுக்க எதுவும் இல்லை. வருவதை கண்டு கொள்ளத்தான் முடியும்’ என்கிறார்.

‘வாராவாரம் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கணக்குப் பார்த்து நிவாரண உணவு வழங்கப்படுகிறது’ என்று கூறிய சந்திரன் ரிஆர்ஓ விடம் இருந்து தங்களுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தார். அவர்களுடைய உதவி குறிப்பிட்ட கொஞ்சப் பேருக்கே வழங்கப்படுகிறது’ என்று கூறினார். சந்திரன் மேலும் கூறுகையில் ‘குடில்கள் அமைக்க வழங்கப்பட்ட பொருட்களிலும் பெருமளவிலான பொருட்கள் கள்ளச் சந்தையிலேயே விற்கப்படுகிறது’ என்றார். ‘கஸ்டப்பட்டவர்களின் நிலைதான் மோசமாக உள்ளது’ என்றார். (தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்)

சந்திரனுடைய மனைவி இன்னமும் யுத்தப் பகுதியிலேயே உள்ளார். இரு வாரங்களுக்கு முன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அதன் பின் அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை.

இங்கு வணங்கா மண் என்றும் ரீஆர்ஓ என்றும் வெண்புறா என்றும் கண்ணீர் வெள்ளம் என்றும் இரத்த வெள்ளம் என்றும் சேர்த்த நிதியில் அந்த மக்களுக்கு எதுவும் சுவறவில்லை. கடைசியில் இனவாத அரசு தனது முகத்தைக் காப்பாற்ற அனுப்பியதையும் விலைக்கு வித்துள்ளார்கள். ஆனால் புலம்பெயர் தேசத்தில் உள்ள வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ரிஆர்ஓ அங்கு வெட்டிக் கிழப்பதாக கதைசொல்கின்றன.

Wanni_War_Welfare_Camp6.
தப்பி வந்த மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குவதற்கு அரசு தன்னைத் தயார்படுத்தி இருக்கவில்லை. உலகிலேயே மிகப்பெரும் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறும் இலங்கை அரசு அந்த மக்கள் எவ்வாறான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல. அனைத்து சர்வதேச உதவி அமைப்புகளையும் யுத்தப் பகுதிகளுக்குள் செல்லத் தடைவிதித்து தங்கால் அனைத்தும் முடியும் என்றவர்கள் அதற்கு ஏற்ப தங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இராணுவ முன்னேற்றத்தில் காட்டும் தீவிரத்தை மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசு காட்டவில்லை.

புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணிக்கும் அரசு அவர்களால் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி இருந்தது. பெருமளவிலான இழப்புக்கள் செல் தாக்குதல்களால் நிகழ்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் புலிகளை ஒழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே அரசு தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றுள்ளது. இந்த மக்களின் உயிரிழப்புகளிற்கும் ஏற்பட்ட அவலங்களிற்கும் இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள். இரு தரப்புமே மக்களுடைய நலன்களை கவனத்திற் கொள்ளவில்லை என்பதல்ல இருதரப்புமே மக்களை மண்முட்டைகளாகவே கருதி தங்கள் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு உள்ளனர். புலிகள் மக்களை மண்மூட்டைகளாக தங்களுக்கு அரணாகப் பயன்படுத்த இராணுவமோ மக்களும் மண்ணும் என்று தமிழ் மக்கள் மீது செல்களை வாரி இறைத்துள்ளது.

இந்த அவலங்களுக்கு அரசாங்கம் ‘பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கை’ என்று நியாயம் கற்பிப்பது அயோக்கியத்தனமானது. தனது அதிகாரத்தை நிலைநாட்ட மேற்குலகை வாயடைக்கச் செய்ய அவர்கள் பயன்படுத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் கையாண்டு உள்ளது. 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது பெரும்பாலும் ஜேவிபி க்கு அதரவான சிங்கள இளைஞர் யுவதிகளை நிர்வாணமாக்கி ராயர் போட்டு கொழுத்தியும் கொன்றொழித்த அரசு இன்று அதனிலும் இலகுவாக தமிழ் மக்களை எவ்வித பாரபட்சமும் இன்றி விமான மற்றும் செல் தாக்குதல்களை நடாத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து உள்ளது. அதனிலும் பல்லாயிரக் கணக்கானவர்களை காயப்படுத்தி உள்ளது.

இந்த அவலத்தில் புலிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என்று சொல்லிய வன்னி மக்களை தங்களுக்கு மண்மூட்டையாக்கி இலஙங்கை இராணுவத்தைக் கொண்டு அவர்களை அழித்ததில் புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பம்மாத்து கோரிக்கைகளையும் கோசங்களையும் வைத்து நீண்ட நாளைக்கு புலிகளால் அரசியல் நடத்த முடியாது.

புலிகள் பலவீனமாவது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் என்பதோ புலிகள் ஆயுதங்களைப் போடும்படி கேட்பது சரணடையக் கூறுவது தவறான முன்னுதாரணமாக முடியும் என்று கூறுவதும் இவை இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தும் என்பதும் யதார்த்தத்தில் வன்னி மக்களுக்கு எவ்வித நலனையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதில்லை.

வன்னி மக்கள் இரு இராணுவங்களுக்கு இடையே சிக்குண்டு தங்கள் உயிரை தினம் தினம் இழக்கின்றனர். இந்த அவர்களைப் பதம்பார்க்கும் இரு இராணுவமும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் வன்னி மக்கள் மிகவும் நிம்மதியாக தங்கள் வாழ்வை நகர்த்துவார்கள். குறைந்தபட்சம் தங்களை நோக்கி ஆயுதங்களை நீட்டும் இரு தரப்பில் ஒரு தரப்பாவது ஆயுதங்களைக் கீழே போடுமாக இருந்தால் அம்மக்கள் ஓரளவுக்காவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இன்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மக்கள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு மற்றைய ஒரு இராணுவத்தை எவ்விதம் கையாள வேண்டுமோ அதற்கேற்ப கையாளுவார்கள். அதனை அந்த மக்களிடமே விட்டுவிடலாம். (”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்)

தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய அவசரமான அவசியமான ஒரு நிலை முன் எப்போதையும் விட இப்போது அதிகரித்து உள்ளது. அதற்கு முன்னதாக இன்னமும் யுத்தப் பகுதிக்குள் உள்ள மக்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்கள் கௌரவமாக நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்களை நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் வருடக் கணக்கில் தடுத்த வைக்கும் திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கான போராட்டங்கள் தமிழ் மக்களால் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

UN_Logoஎல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.