உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம் – மத்திய கிழக்குக்கு விரைவில் பயணமாகிறார் ஜனாதிபதி அனுர !

உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம் – மத்திய கிழக்குக்கு விரைவில் பயணமாகிறார் ஜனாதிபதி அனுர !

நாட்டுக்கு தேவையான எண்ணெய் விநியோகத்துக்கு திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் தேவைக்கு அதிகமானவை என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 மில்லியன் மெட்ரிக் தொன் மொத்த சேமிப்புத் திறன் கொண்ட 99 தொட்டிகளைக் கொண்ட திருகோணமலை வளாகம், 1960 களில் பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

திருகோணமலைக்கு இவ்வளவு எண்ணெய் தாங்கிகள் தேவையில்லை. பிராந்திய எண்ணெய் விநியோகத்திற்கு 24 எண்ணெய் தாங்கிகள் இருந்தால் போதுமானது. 24 ஐ எமது பெற்றோலிய கூட்டுத்தாபணத்திற்கு எடுத்துகொண்டு ஐ ஓ சி க்கு 10 எண்ணெய் தாங்கிகளை ஒதுக்கினோம். எமக்கு 61 எண்ணெய் தாங்கிகள் எஞ்சின. திருகோணமலையில் மேலதிகமாக உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை , இந்திய நிறுவனமும் பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனமும் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து எண்ணெய் தாங்கிகளில் சேமித்து வைத்து உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, ஜனாதிபதி விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளை இலங்கைக்கு கொண்டு வருவதில் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்.பி.பி அரசிலும் தொடரும் வனவள – தொல்லியல் திணக்களங்களின் அத்துமீறல்

என்.பி.பி அரசிலும் தொடரும் வனவள – தொல்லியல் திணக்களங்களின் அத்துமீறல்

வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்வதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி வாக்குறுதி வழங்கியதாக வன்னி பா.உ ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.உ ம.ஜெகதீஸ்வரன் கருத்து வெளியிட்ட போது, “யுத்தம் நிறைவடைந்த பின்னர் வனவள திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லையிடப்படும் நடவடிக்கையின் போது பொதுமக்களுடைய விவசாய காணிகள் உட்பட பல காணிகள் வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டது.

அவை வனவள திணைக்கத்தால் விடுவிக்கப்படாமையால் பொதுமக்கள் எதுவித அபிவிருத்தி நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாதுள்ளனர். திணைக்களங்களும் அபிவிருத்தி சார் திட்டங்களினை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எமக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாட்டின் அடிப்படையில் சுற்றாடல் அமைச்சர், வனவள பாதுகாப்பு ஆணையாளர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உடன் கலந்துரையாடப்பட்டது. அதன்போது இதற்கான காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் வனவளத்துறையினரின் அத்துமீறல்கள் தொடர்வது மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த அரசாங்கங்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.பி.பி அரசாங்கமும் இது தொடர்பில் இன்றுவரை அமைதிகாத்து வருகின்றமை ஏமாற்றமளிப்பதாக தமிழ் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கிழக்கில் திருகோணமலையின் வெருகல் பகுதியில் தொடரும் தொல்லியல் திணக்களத்தின் நில அபகரிப்பு தொடர்பிலும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

அனுர அலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உருவாக்கும் மாற்றுப் பாராளுமன்றம் – ரணில் புதிய திட்டம் ! 

அனுர அலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உருவாக்கும் மாற்றுப் பாராளுமன்றம் – ரணில் புதிய திட்டம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை(நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வி உருத்திர குமார் நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றத்தை உருவாக்கி பிரதமர் ஆனார். இங்கே நாட்டிற்குள் மாற்றுப் பாராளுமன்றம் அமைத்து ரணில் ஜனாதிபதியாக விரும்புகின்றார்.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆனால் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூத்த உறுப்பினர்களிடமிருந்து அரசாங்க அமைச்சகங்களின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சர்களைக் கொண்ட நிழல் அமைச்சரவை நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த அரச தலைவர்களுக்கு இலங்கையின் மாற்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட என்.பி.பி அனுர குமாரவின் அலையினால் மூத்த அரசியல் தலைவர்கள் உட்பட இருநூற்றுக்கும் அதிகமானோர் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். மேலும் கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற 160 வரையானோர் இந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறாமை உலக அரசியல் நிபுணர்களை வியப்படைய செய்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனநாயக தேர்தல் மூலம் நிராகரிக்கப்பட்ட அத்தனை அரசியல்தலைவர்களும் ஓர் மாற்றுப்பாராளுமன்றத்தை உருவாக்கவுள்ளனர் என்ற தகவல் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாத அளவுக்கு பதவி மோகம் அவர்களது கண்களை மறைத்துள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மர்ம சாவு !

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மர்ம சாவு !

கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை சந்திரகுமார் சந்திரபாலன் எனும் 49 வயதுடைய குடும்பஸ்தர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. சந்திரபாலனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை காரணமாகவே அவர் விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவர் கைதாகும் போது மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைதான நபர் சனிக்கிழமை இரவே உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் முதலில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சந்தேக மரணமாகையால் உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுள்ளது. இறந்தவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதால், பொலிஸாரின் சித்திரவதையினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்களும் அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

இதேமாதிரி 2023 இல் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நாகராசா அலெக்ஸ் எ‌‌ன்ற இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். களுத்துறை – கட்டுகுருந்தவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒரு குடியிருப்பு அல்லது அவர்களின் சம்பளத்தில் 1/3 பங்கைப் பெற உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க உதவித்தொகையாகக் கட்டுப்படுத்த முடிவுசெய்துள்ளது. இது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு ரூ. 4.6 மில்லியன் ஆகும். இதில் நில மதிப்பு சேர்க்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது வீடுகளை காலி செய்யவோ அல்லது வாடகையை செலுத்தவோ தெரிவுகளை வழங்குவோம்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர் பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார்.

யாழ்ப்பாண மாணவர்களிடையே வேகமெடுக்கும் போதைப்பொருள் பாவனை – மௌனம் காக்கும் கற்ற சமூகம் !

யாழ்ப்பாண மாணவர்களிடையே வேகமெடுக்கும் போதைப்பொருள் பாவனை – மௌனம் காக்கும் கற்ற சமூகம் !

யாழ்ப்பாண நகர்ப்புற பாடசாலைகள் தொடங்கி பல பகுதிகளிலும் ஊசி உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் யாழ்ப்பாண உயர் மட்ட அதிகாரிகள் தொடங்கி சமூக செயற்பாட்டாளர்கள் வரை யாரும் கவனம் செலுத்த முனைவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.

வாட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் அத்தனை காத்திரமானதாக இல்லை என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

இதேவேளை ஊசிமூலம் போதைப்பொருளை கையில் நாளத்தினூடாக ஏற்றி பாவித்தன் மூலம் பாதிக்கப்பட்ட பருத்தித்துறையை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சமூகத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பில் தமிழ்தேசிய தலைவர்கள் சின்ன அழுத்தத்தை கூட வழங்குவதில்லை என அண்மையில் தேசம் திரை நேர்காணலில் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் குற்றஞ்சாட்டியிருந்தார். கண்முன்னே எதிர்கால தலைமுறையினர் போதைப்பொருள் பாவனையால் அழிந்து போவதை தடுக்க திராணியற்ற இந்த தலைவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரால் பெறப்போகும் நிலத்தில் வாழ யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள் எனவும் தமிழ்செல்வன் விசனம் வெளியிட்டிருந்தார்.

தைப்பூசத்திலிருந்து திக்கம் வடிசாலை இயங்கும் – அமைச்சர் சந்திரசேகரன் 

தைப்பூசத்திலிருந்து திக்கம் வடிசாலை இயங்கும் – அமைச்சர் சந்திரசேகரன்

யாழ்ப்பாணம்-வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன், மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரையாடலானது திக்கம் வடிசாலையில் பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணி தலைவர் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது அவர்கள் தெரிவித்துள்ளதாவது, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார்.

அந்த குத்தகை இரத்து செய்யப்படும். பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும். அங்கு இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75ஆவது வயதில் காலமானார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான வர்ணனைக்கு பெயர் பெற்ற இவர், “ராவய” பத்திரிகை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

விக்டர் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், கோட்பாட்டாளர், சமூக ஆர்வலர் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

1971 இளைஞர் கிளர்ச்சி தொடர்பான பிரதான நீதிமன்ற வழக்கில் அவர் 7ஆவது குற்றவாளியாக இருந்தார். சந்தேகத்துக்குரிய அனைத்து பிரதிவாதிகளிலும் மிகவும் வண்ணமயமான நபர் என்று நீதிபதிகள் குழு அவரை விவரித்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைவாசத்தினை தொடர்ந்து வன்முறைக் கோட்பாட்டை நிராகரித்த அவர், மகாத்மா காந்தி விளக்கிய அகிம்சை தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை தீவிரமாகப் பின்பற்றுபவராக மாறினார்

மன்னார் இரட்டைக் கொலை – யாழ் நகைக் கடைக் களவு – இராணுவ சிப்பாய்கள் கைது !

மன்னார் இரட்டைக் கொலை – யாழ் நகைக் கடைக் களவு – இராணுவ சிப்பாய்கள் கைது !

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் யாழில் இடம் பெற்ற நகைக்கடைக் கொள்ளையிலும் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்னளர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை வழக்கு கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உட்பட்ட நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இடம்பெற்ற விசாரணையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக மன்னார் கொலைக்குப் பின்னனியிலுள்ளவர் வெளிநாட்டில் இருப்பதாக கொழும்பில் பொலிஸ் திணைக்களம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதியில் உள்ள நகைக் கடைக்குள் புகுந்து தம்மை புலனாய்வுப் பிரிவினர் என அடையாளப்படுத்திய குழுவொன்று 30 லட்சம் ரூபாவை அபகரித்து சென்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கடை உரிமையாளரிடம் இருப்பதாக கூறியே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கடை உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதலில் சிறை வைக்கப்பட்ட புலிகளை முடிந்து விட முயற்சிப்பது புனைவே அல்லாமல் புலனாய்வு அல்ல என்றும் இது தமிழ் மக்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் உள்ள உறவை முறிப்பதற்கான திட்டமிட்ட செயல் எனவும் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிடம் இருந்து வரும் கட்டளைகளுக்கே கட்டுப்பட்டுச் செயற்படுபவர்கள். அதனால் தான் தலைமைகள் அழிக்கப்பட்ட பின் மே 18க்குப் பின் ஒரு வெடிச்சத்தம் கூட அவர்கள் பக்கத்தில் இருந்து எழுப்பப்படவில்லை. இப்பொழுது அறுகம்பே தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் விடுதலைப் புலிக் கைதிகள் இருந்த சிறையில் இருந்தார் என்ற ஒரே காரணத்தை வைத்துக்குகொண்டு புனைவது புலனாய்வு அல்ல. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் இவ்வாறான செய்திகளை வெளியிடுவது சிங்கள மக்களைத் தூண்டிவிடவும் நாட்டின் சமாதானத்தை கேள்விக்கு உட்படுத்தவுமே.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அறுகம்பே பகுதியில் வந்திருந்த இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை குறி வைத்திருந்த தாக்குதல் திட்டச் சதியொன்று அம்பலமாகியிருந்தது. இதன் பின்னணியில் அமெரிக்க தூதரகம் பயண எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்த தாக்குதல் சதித்திட்டம் தொடர்பில் முற் கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததால், இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் கைதோடு இத்திட்டம் முறியடிக்கப்பட்டது.

அறுகம்பே தாக்குதல் திட்டத்தின் திருப்பு முனையாக முன்னாள் புலிகளை இவ்விடயத்தில் சிஐடியினர் இழுத்து விட்டுள்ளனர். அதன்படி பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை பயன்படுத்தியே அறுகம்பே தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக சிஐடியினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதற்காக அறுகம்பே பகுதியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆட்களை நியமித்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான பல வழக்குகளில் ஆஜரான பெயர் குறிப்பிட விரும்பாத வழக்கறிஞர் கூறும் போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வழமையானவை என்கிறார். இந்த விடயத்தில் உண்மையான தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் பாதுகாக்கப்படுகிறார்களோ எனவும் சந்தேகம் தெரிவித்தார்.

அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் இது வரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ ஏ. தொன் அமரசிறி ஆகியோர் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர சிஐடியினர் முதலாவது சந்தேகநபரிடமிருந்து பல ஆவணங்களில் கையொப்பம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து கடும்சித்திரவதை மூலம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்ட பலர் நீதிமன்றங்கள் மூலம் இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இத்தாக்குதல் திட்டத்தின் முதல் சந்தேக நபரான பிலால் அகமது 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவ பேருந்து குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் இருந்ததாகவும் கூறும் சிஐடியினர், ஏனவே சிறையிலிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உத்தேசித்திருந்தாக கூறுகின்றனர்.

2009 விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின் ஆங்காங்கே முன்னாள் புலி உறுப்பினர்களை அல்லது புலிகளுக்கு வேலை செய்தவர்களை இந்திய, இலங்கை மற்றும் பன்னாட்டு உளவு அமைப்புகள் தத்தம் நலன்களுக்கு பயன்படுத்தி வருகின்றமையும் மறுப்பதற்கில்லை. முன்னாள் புலி பல குழுக்களாக புலத்திலும் நாட்டிலும் பிரிந்து நின்று செயற்படுகிறார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார், துவாரகா வந்து விட்டா, தலைவர் இல்லை, தலைவரைப் பார்த்தேன் என பல குழப்பங்களும் கேலிக்கூத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.