உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழில் பிரதமர் ஹரிணியின் சூறாவளிப் பயணம் !

யாழில் பிரதமர் ஹரிணியின் சூறாவளிப் பயணம் !

மே ஆறாம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், வடக்கிற்கு படையெடுக்கும் என்பிபியின் முக்கிய அமைச்சர்கள் என யாழ்ப்பாணம் களைகட்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு என்பிபி கொடுத்த வாக்குகளான காணி விடுவிப்பு, பாதை திறப்பு, அபிவிருத்தி என படிப்படியாக பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ நிறைவேற்றி வருகின்றது.

அந்த வகையில் ஏப்பிரல் 11 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தாசுவாமி கோயிலுக்கு வருகை தந்த இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவொரு பிரதமர் வடக்கில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டமை முதல் தடவை எனக் கூறப்படுகிறது. அப்போது கருத்து தெரிவித்த ஹரிணி வடக்கினதும் தெற்கினதும் காலாச்சாரம் மற்றும் ஆன்மீக அமைப்புகளை சமமாக பாதுகாக்கும் பொறுப்பை தாம் மறக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

எப்படியாயினும் கடந்த அரசாங்கங்களில் இந்து மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சுக்கள் பெயரளவிற்குத்தானும் இருந்துள்ளன. ஆனால் என்பிபி அரசாங்கத்தில் பௌத்த விவகார அமைச்சு மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுவதையும் பிரதமர் ஹரிணி கருத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

“வளமான மற்றும் ஒன்றுபட்ட நாட்டில் மதம் மற்றும் கலாச்சார சுதந்திரத்தை உறுதி செய்வதும், பன்முகத் தன்மை கொண்ட எமது நாட்டில் இவ்வாறான ஆன்மீக இடங்களில் எவ்வித அடக்குமுறையும் இன்றி பாதுகாப்பதும் நமது கடமை“ என ஹரிணி மாவிட்டபுரத்தில் குறிப்பிட்டார். பிரதமரின் வருகையால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் யாழ் வந்த பிரதமர் நீர்வேலி மற்றும் காரைநகர் என இரு இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பங்கேற்றிருந்தார். மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பேச்சை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்ததிலும் குழறுபடிகள் காணப்பட்டன. மொழி பெயர்ப்பாளர் ஒரு சில விடயங்களைத் தவிர பிரமரின் உரையைத் தவறாக மொழி பெயர்த்திருந்தார். இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பரிகசிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் உள்ளூராட்ச்சித் தேர்தல்ப் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் யாழ் வருகின்றார் என என்பிபி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாதம் 19 ஆம் திகதியில் ஜனாதிபதியும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழ் தலைவர்களிடம் சொன்ன கருத்து போட்டுடைத்தார் புளொட் கஜதீபன் !

பிரதமர் மோடி தமிழ் தலைவர்களிடம் சொன்ன கருத்து போட்டுடைத்தார் புளொட் கஜதீபன் !

தமிழ் தேசியத் தலைமைகள் தாங்கள் பிரதமர் மோடிக்கு சொன்ன கருத்துக்கள் வெளிவந்தது. ஆனால் பிரதமர் மோடி தமிழ் தலைமைகளிடம் என்ன சொன்னார் என்பதை அவர்கள் வெளியிடவே இல்லை. தற்போது புளொட் கஜதீபன் அதனைப் போட்டுடைத்துள்ளார். “இரா சம்பந்தன் இருந்த போது எல்லொரும் ஒன்றாக வந்து சந்தித்தீர்கள். தற்போது தனித் தனியாக வந்து சந்திக்கின்றீர்கள்” என இந்தியப் பிரதமர் மோடி தன்னைச் சந்தித்த தமிழ் தரப்பிடம் கருத்து வெளியிட்டதாக தெரியவருகின்றது. அண்மையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் பிரதிநிதி பா கஜதீபன் தாய் ரிவி என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெறுவது கடினம் எனத் தெரிவித்தார் அவர்.

இந்நிலையில் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் தாங்கள் இன்னுமொரு தமிழ் தேசியக் கட்சியை ஆட்சி அமைப்பதற்கே உதவுவோம் எனத் தெரிவித்தார். அதாவது தேசிய மக்கள் சக்தியை ஆட்சியமைக்க விட மாட்டோம் எனச் சூளுரைத்தார். அதேசமயம் தமிழ் தலைமைகள் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் ராஜதந்திரத்தோடு ஒப்பிடும் போது பலவீனமாகி இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதையும் புளொட் கஜதீபன் தெரிவித்தார்.

இந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதே தங்களது பிரதான நோக்கம் என்பதையும் புளொட் கஜதீபன் அந்நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜேவிபி கட்சியின் கொள்கைகளை மீறி தமிழ் மக்களுக்காக நிற்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார் பா கஜதீபன். அதனால் தமிழ் தேசியக் கட்சிகள் வெற்றி பெறாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாகாண சபையை தமிழரசுக்கட்சி வெற்றி பெற்ற போது ஜனநாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் அங்கம் வகித்து இருந்தது. தாங்கள் மாகாண சபையைக் கைப்பற்றியது ஈபிடிபி அதனைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக எனத் தெரிவித்து இருந்தனர். அதனால் மாகாண சபையால் இவர்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்கவில்லை.

தற்போது உள்ளுராட்சி சபைகளிலும் தங்களுடைய நோக்கம் ஜேவிபி வருவதைத் தடுப்பதே எனத் தெரிவித்து வருகின்றனர். ஜேவிபி ஆட்சி ஆட்சி அமைக்க விடாமல் தடுத்துவிட்டு இந்தக் கட்டமைப்பில் அதிகாரம் இல்லை எங்களை சிங்கள பேரினவாதம் இயங்கவிடாமல் தடுக்கின்றது என்று சொல்வார்களோ என்ற அச்சம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.

வடக்கில் தொடரும் சட்டவிரோத மரக்கடத்தல்

வடக்கில் தொடரும் சட்டவிரோத மரக்கடத்தல்

வவுனியா- மன்னார் வீதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. சோதனைச் சாவடியில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனச் சாரதி உட்பட இருவர் விபத்திற்குள்ளான வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 5 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை அதிபர்கள் நியமனம் நேர்முகப் பரீட்சைகள் மூலமாகவே நியமிக்கப்படுவார்கள் பிரதமர் ஹருணி

 

பாடசாலை அதிபர்கள் நியமனம் நேர்முகப் பரீட்சைகள் மூலமாகவே நியமிக்கப்படுவார்கள் பிரதமர் ஹருணி

பாடசாலை அதிபர்கள் ஒரே நடைமுறையின் கீழ் நேர்முகப் பரீட்சைகள் ஊடாக மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் ஹருணி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் தேசியப் பாடசாலைகள் அனைத்திலும் நேர்முகப் பரீட்சைகளுடாக மட்டுமே அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர் பாடசாலைக்கு பாடசாலை விதிமுறைகள் மாறாது எனத் தெரிவித்தார். அதிபர்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்ட ஆறுதிருமுருகன் அதிபருக்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையில் அதிபராக்கப்பட்டார். அவருடைய காலத்தில் கல்லூரி வீழ்ச்சியடைந்தது. பெற்றோரின் கடுமையான எதிர்ப்பால் அவர் ஓய்வுபெற்றுக்கொண்டார். பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இருந்து தற்போது அதிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹருனியின் முடிவு இறுக்கமாக அமுல்படுத்தப்பட்டால் பாடசாலைகளைச் சுற்றி உருவாகும் பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

‘வடக்கு கிழக்கில் சீனா காலூன்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் !’ ரெலோ செல்வம் – ‘அப்படி என்றால் ஏன் மன்னாரில் அத்தானிக்கு குரல்கொடுக்கவில்லை’ ஈழநாடு

சீனாவின் அடி வருடிகள் இந்திய ஒப்பந்தங்களை குழப்ப நினைத்தால் அதனை எதிர்த்து நிற்போம். வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என ஜனநாயக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஏப்ரல் 9 புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கேள்வி எழுப்பிய யாழ் ஈழநாடு பத்திரிகை அப்படி என்றால் ஏன் மன்னாரில் அத்தானிக்கு ரெலோ செல்வம் அடைக்கலநாதன் குரல்கொடுக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்ரல் 10 இல் அவர்களுடைய ஆசிரியர் தலைப்பில் பா உ செலவத்தின் தேர்தல் தொகுதியான மன்னாரில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அனுமதியளிக்கப்பட்ட அத்தானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் கைவிடப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இது சுற்றாடலுக்கு ஆபத்தானது என்ற கொள்கையைக் கொண்டிருந்தது. அதனடிப்படையில் அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஈழநாடு தனது ஆசிரியர் தலைப்பில் ரெலோவையும் ஏனைய தமிழ் தலைமைகளையும் அதன் வங்குரோத்து அரசியல் நிலையையும் தோலுரித்துள்ளது.

 

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் நிவாரணம்

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் நிவாரணம்

வங்குரோத்தடைந்துள்ள இலங்கை நிலநடுக்கத்தால் பாரிய அழிவைச் சந்தித்துள்ள மியான்மார் நாட்டுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் இலங்கைக்கான மியன்மார் தூதுவரிடம் கையளித்தார். இலங்கை எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநயக்க மியான்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தமைக்கு மியன்மார் தூதுவர் நன்றி தெரிவித்தார். அத்துடன் நெருக்கடியான நேரத்தில் இலங்கை தன்னுடைய சுகாதார மற்றும் நிவாரண பணிக்குழுவை அனுப்பி வைத்தமைக்கும் தூதுவர் நன்றி தெரிவித்தார்.

“எமது மகன் வருவான் என காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கு அம்மாக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் “ அமைச்சர்கள்

“எமது மகன் வருவான் என காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கு அம்மாக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் “ அமைச்சர்கள்

 

பட்டலந்த படுகொலைக்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் இடம்பெற்ற அனைத்து படுகொலைகளுக்கும் நீதி பெற்றுக்கொடுப்போம் என்கின்றனர் என்பிபி அமைச்சர்கள்.
இலங்கை வரலாற்றில் பின் கதவால் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க விரைவில் பட்டலந்த படுகொலை விவகாரத்தில் தண்டனை பெறுவார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். அதேநேரம் நாட்டின் கரும்புள்ளியாக இருக்கும் கறுப்பு யூலைப் படுகொலைகள் தொடர்பிலும் நாடளாவிய ரீதியில் இருந்த வதை முகாம்கள் தொடர்பிலும் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்கிறார் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சம்பந்தமான பாராளுமன்ற முதல் நாள் அமர்வான நேற்றைய தினமே அமைச்சர் சபையில் இவ்வாறு தெரிவித்தார். அல்ஜசீரா நேர்காணலால் தான் பட்டலந்த விவகாரம் பேசுபொருளானது என்பதை மறுத்த அமைச்சர், எங்களிடம் அரசியல் முகாமைத்துவம் இருக்கிறது. இந்த நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து மீட்கவே எமது சகோதர மற்றும் சகோதரிகள் உயிர்த் தியாகம் செய்தனர். சாமானிய மக்களுக்கும் நீதி வழங்கும் நாடாக எமது நாட்டை மாற்றவே முயற்ச்சித்தோம். அதனாலேயே கடந்த 35 ஆண்டுகளில் நாம் சிறு ஆயுதங்களை கூட தூக்கவில்லை.

இருந்தபோதும் 1994 ஆண்டுக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்ட எமது 8 சகோதரர்களை கொலை செய்தனர். எனினும் நாம் ஒரு உண்டிவில்லையேனும் கையில் எடுக்கவில்லை. பயத்தால் நாம் ஆயுதம் எடுக்கவில்லை என கருத வேண்டாம். அது வெறும் கிட்டார் இல்லை. ஆயுதத்தின் பலம் எமக்கு தெரியும். அதனை கையில் எடுத்தால் பின்னர் கீழே வைக்க முடியாது.

தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களை கொண்டு வந்தேனும் பட்டலந்த பிரதான கொலையாளிகளான ரணில் விக்கிரமசிங்க போன்றோர் மீது விசாரணைகள் நடத்தப்படும். நீதிமன்றத்தினூடாக தண்டனை பெற்று கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் பட்டலந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி குழு ஒன்றை நியமிப்பார் எனவும் கூறினார்.

இலங்கையில் காலத்திற்கு காலம் நடந்த அனைத்து இனக் கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் மற்றும் வதை முகாம்களுக்கும் பொறுப்பாகவிருந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சியாளர்கள் என நேரடியாக அமைச்சர் சந்திரசேகரும் பிமல் ரத்தநாயக்கவும் குற்றம் சாட்டினர். அந்தவகையில் ரணில் விக்கிரமசிங்க தான் பட்டலந்த கொலையின் பிரதான சூத்திரதாரி என நேரடியாக குற்றம் சாட்டினர். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நேற்றைய பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்க கம்பி எண்ணப் போவது உறுதியாகியுள்ளது.

 

தமிழ் தேசியக் கட்சிகள் கேட்டுக்கொண்டதை மோடி, கண்டுகொள்ளவில்லை ! தமிழ் கட்சிகள் அரசியலில் பூஜ்ஜியம் !

தமிழ் தேசியக் கட்சிகள் கேட்டுக்கொண்டதை மோடி, கண்டுகொள்ளவில்லை ! தமிழ் கட்சிகள் அரசியலில் பூஜ்ஜியம் !

இந்தியப் பிரதமர் மோடியின் நான்காவது இலங்கை விஜயம் இலங்கைத் தமிழ் அரசியலின் அடித்தளத்தை ஆட்டம்காண வைத்துள்ளது. ஜேவிபி யும் இந்தியாவும் கீரியும் பாம்புமாக இருந்த நிலையிலிருந்து தற்போது மிக நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த இலங்கைத் தமிழர்களதும் இந்தியாவினதும் உறவில் இடைவெளி நீண்டுகொண்டே செல்கின்றது. அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்த நண்பர்களும் இல்லை என்பதற்கு இலங்கை – இந்திய – தமிழர் உறவு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒரு கடமைக்காக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியினர் தங்கள் நிலைப்பாடுகளை இந்தியப் பிரதமருக்கு விளக்கினர்.

ஆனால் இந்தியப் பிரதமர் மோடி, தமிழர்கள் விடயத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்பார்ப்பைப் பற்றி எவ்வித கவனமும் கொள்ளவில்லை. தமிழ் தேசியக் கட்சிகளுக்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அதனால் இந்தியப் பிரதமர் மோடி என்ன சொன்னார் என்பது பற்றி தமிழ் கட்சிகள் ஊடகச் சந்திப்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடியும் எதுவும் தெரிவிக்கவில்லை.

இலங்கை – இந்தியா – தமிழர்கள் உறவின் அடிப்படையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் சவுச் ஏசியா அபயர்ஸ் என்ற இணையத் தளத்தில் மூத்த ஊடகவியலாளல் வீரகத்தி தனபாலசிங்கம் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில்; இந்தியாவும் – இலங்கையும் மிக இறுக்கமான உறவை வளர்த்தெடுக்க முனைவதைச் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் அந்த உறவை பாதிக்கின்ற, இலங்கை ஜனாதிபதி அனுரவை சிக்கலாக்குகின்ற வகையில் தமிழர் பிரச்சினையை கையாள்வதில்லை என்ற முடிவிலும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இந்தியா இலங்கையுடன் ஒரு முரண்பாட்டுக்குச் செல்வதில்லை என்ற கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதை ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வளவுதூரம் உணர்ந்துள்ளது என்பது கேள்விக்குறியே. தமிழ் அரசியல் தலைமைகள் தற்போதைய பூகோள அரசியல் விடயங்களை விளங்கிக் கொள்கின்ற அளவுக்கு அரசியல் அறிவற்றவர்களாக இருப்பதாக அமைப்பின் செயலாளரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை உறவு பற்றி குறிப்பிட்ட மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் ஜேவிவி தன்னுடைய இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்து எவ்வாறு பிரமாணம் பெற்று ஒரு அரசியல் ஸ்தீரணமான அமைப்பை உருவாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் தமிழ் தேசியக் கட்சிகள் அவ்வாறான ஒரு அரசியல் தற்குறிகளாகத் தொடர்ந்தும் செயற்படுவதை அவர் தேசம்நெற்றிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

இதே கருத்தை முன்னாள் ராஜதந்திரி ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கமும் தேசம்நெற்றிக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார். தற்போதுள்ள தலைவர்களில் இந்தியாவைக் கையாளக்கூடிய திறமை எம் ஏ சுமந்திரனுக்கே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?

பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?

அண்மையில் கருணா அம்மான் விசாரிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கைது இடம்பெற்றுள்ளது. கருணா – பிள்ளையான் – வியாழேந்திரன் இணைந்த கிழக்கு முன்னணி உதயம்பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் கருணா இலங்கையில் இருக்கவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் பிள்ளையானையே குறிவைத்து பிரச்சாரம் செய்வதாக பிள்ளையானின் நெருங்கிய நண்பரொருவர் தேசம்நெற்குத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் தனக்கு மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் அவர், கைது செய்யப்பட்ட காலகட்டம் தங்களுடைய அரசியல் செயல்பாட்டை முடக்கவே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிள்ளையானின் அரசியல் அஸ்தமனமாகின்றது என்ற கணிப்புகள் பரவலாகத் எதிர்வு கூறப்படுகின்றது. இக்கைதுக்கு சில மாதங்களுக்கு முன் இவற்றையெல்லாம் மீறி வருவேன் என்று பிள்ளையான் தேசம்நெற்க்குத் தெரிவித்திருந்த போதும் பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

 

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரன் கடத்தப்படுவதற்கு முன் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கிழக்கைச் சேர்ந்த பால சுகுமாரன் கடத்தப்பட்டு இருந்தார். தற்போது லண்டனில் உள்ள பால சுகுமாரனுடன் இது தொடர்பில் உரையாடுவதற்குத் தொடர்பு கொண்ட போதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தக் கடத்தல் நாடகங்களுக்குப் பின்னால் பிரதேசவாதம் தலைதூக்கியிருந்த காலகட்டம் அது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் 2004 யூலை இறுதிப் பகுதியில் வெளியேறியாதிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகமும் வடக்கு – கிழக்கு பிரதேசவாதச் சிக்கலுக்கு உள்ளாகியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கருணாவுக்கு ஆதரவாக சில பேராசிரியர்கள் திரும்பினர். ஆனால் வடக்கைச் சேர்ந்தவர்கள் அணிசேரா நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்களுடைய குடும்பங்கள் வடக்கில் இருந்தது.

2004 இல் கருணா அம்மானுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை மேற்கொண்ட கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி தம்பையா திருச்செல்வம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2004 மார்ச் 24ஆம் திகதி மட்/கல்லடியிலுள்ள அவரது வீட்டில் இருந்தபோது சுமார் மலை 8.30 மணியளவில் ஆயுதமேந்திய இரு இளைஞர்களால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

2004ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பெருமதிப்புக்குரியவர். மார்ச் மாதம் 30ஆம் திகதி அதிகாலை 07.40 மணிக்கு அவர் தன்னுடைய பூசையறையில் முருகன் படத்தில் முன்னால் நின்று தீபம் ஏற்றி சாம்பிராணி கொளுத்தி வழிபாடு செய்து கொண்டிருக்கையில் புலிகளால் சாராமரியாகச் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில்தான் 2004, 63 வயதான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரான மார்ச் 27ல் மட்/ பிள்ளையாரடியில் வைத்து கைத்துப்பாக்கி ஏந்திய புலிகளால் சுடப்பட்டார். எனினும் அதிஷ்ட வசமாக அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த வடக்கு – கிழக்கு பிளவின் போட்டியில் நடந்த மற்றுமொரு முக்கிய படுகொலை தமிழரசுக் கட்சியின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை. 2005 கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பில் பிள்ளையான் குற்றம்சாட்டப்பட்டு கொலைக் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாத நிலையில் பிள்ளையான் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து 2006இல் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையானை கைது செய்து தண்டிப்போம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேயே அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 08 மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது பிள்ளையான் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏட்டிக்குப் போட்டியான கொலைக் கலாச்சாரம் புலிகள் உட்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களிடம் மலிந்து காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வளர்ந்த சகோதரப் படுகொலைக் கலாச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் வெளியேறியதும் கிழக்கிலும் பரவியது. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர்களே ஏட்டிக்கு போட்டியாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் படுமொசமான கொலைக் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.

இதற்கு பிள்ளையான் என அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் விதிவிலக்கல்ல. இவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்பதோடு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பிள்ளையான் மீது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனாலும் பிள்ளையான் மீதுள்ள நீண்ட குற்றச்சாட்டுகளின் பட்டியலில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாங்கள் அரசியலுக்கு வந்த 2008க்குப் பின் தாங்கள் வன்முறையில் ஈடுபடவவில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். ஆனால் நடைமுறையில் 2008க்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் பல உள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசு தற்போது அடுத்தடுத்த முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர், பொலிஸ் தலைமைப் பொறுப்பாளர் என எவ்வித வேறுபாடுமின்றி சட்டத்தை மிகத் தீவிரமாக அமுல்படுத்த முயற்சிப்பதால் பிள்ளையான் இந்தக் கிடுக்குப் பிடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகின்றது.

இந்த வடக்கு – கிழக்கு முரண்பாட்டில் யாழ் மையவாதம் எப்போதும் ஏனையவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிடுகின்ற போக்கே இன்னமும் தொடர்கின்றது. தற்போது புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் உணர்வு பிள்ளையானையே மையம் கொண்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை நழுவவிட்ட ஒரே மாவட்டம் மட்டக்களப்பு. அந்த வகையில் பிள்ளையான் ஒரு இளகிய இரும்பு. தூக்கித் தூக்கி அடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் பிள்ளையான் கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கப்படுவதும் அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படுவதும் மிக அவசியம்.

பிள்ளையான் தற்போது கிடுக்குப் பிடியில் மாட்டியுள்ளதால் கருணா அம்மானின் தலைமைத்துவத்திற்கு கதவுகள் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளது. பிள்ளையானுக்கு விழுந்த வாக்குகளுக்குப் பின் யாழ் மையவாத எதிர்ப்பு பலமாக இருப்பதை தமிழ் தேசியவாதிகள் உணர்ந்து தமிழ் சமூகம் ஒரு பல்லின சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளையானின் மீது அனைத்து பழிகளையும் போட்டுவிட்டு நாங்கள் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக காட்டிக்கொள்ள முடியாது. கிழக்கை ஆதரித்தமைக்காக கிழக்கின் ஆளுமைகள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவையும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஜேவிபி ஒரு தென்பகுதி ஈரோஸ் ! தமிழர்கள் இந்தியாவுக்காக சீனாவை நிராகரிப்பது மடைத்தனம்

ஜேவிபி ஒரு தென்பகுதி ஈரோஸ் ! தமிழர்கள் இந்தியாவுக்காக சீனாவை நிராகரிப்பது மடைத்தனம்

ASATiC அமைப்பின் செயலாளர் ஈரோஸின் முன்னாள் உறுப்பினர் ரவி சுந்தரலிங்கம்

ஈஸ்டருக்கு முன் பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது ! பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படும் !

ஈஸ்டருக்கு முன் பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது ! பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படும் !

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவால் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தும் நிலையிலேயே இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். திட்டமிட்ட பாதாளக்குழுக்கள், போதைவஸ்து கடத்தல் மற்றும் குற்றங்கள், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு வேறு சட்டங்கள் நடைமுறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் உறுதியாக உள்ளோம் என்றும் அதற்கு அவகாசம் தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் ஏப்பிரல் 21 ஈஸ்டருக்கு முதல் வெளியாகும் என ஜனாதிபதி அநுர சமீபத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னணியில் கோத்தபாய மற்றும் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட பிள்ளையானின் கைது இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அநுர தலைமையிலான என்பிபி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் இரண்டு தடவை கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 

அதேநேரம் பிள்ளையான் போன்று விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட கருணா அம்மானும் முன்னாள் எம்பி சதாசிவம் வியாழேந்திரனும் பிள்ளையானுடன் இணைந்து ‘ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்றவொரு தேர்தல் கூட்டை உருவாக்கியிருந்தனர். இந்த அமைப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் ச. வியாழேந்திரன் கைதானார். இப்போது பிள்ளையான் கைதாகியுள்ளார். என்பிபி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தேர்தல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என பிள்ளையான் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர். இன்னொரு பக்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற பிள்ளையான் பலி ஆடாக்கப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.