வெளிநாட்டுச் செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1390589162152087560/photo/2
பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை செயலகம் சென்ற அவர், பின்னர் தலைமை செயலகம் சென்ற அவர், கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்குவது, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளுதல் உள்பட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கானா ஃபாஸ்கோவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கானா ஃபாஸ்கோ 1960ம் ஆண்டு பிரான்சின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது. புர்கானா ஃபாஸ்கோவைச் சுற்றி மாலி, நைஜர், பெனின், டோகோ, கானா, கோட்டிவார் ஆகிய நாடுகள் உள்ளன. 1980-கள் வரை அரசின் சீரற்ற நிலையில், பல கட்சிகள் இந்நாட்டை ஆண்டன. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கானா மற்றும் கோட்டிவார் போன்ற அயல்நாடுகளுக்கு பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
புர்கானா ஃபாஸ்கோவில் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவதுண்டு. இந்நிலையில், நேற்று காயாவில் 30 பேரை, தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். நைஜர் எல்லை அருகே கொமான்ஜாரி மாகாண கிராமம் ஒன்றில், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 100 பேர், வீடு வீடாகச் சென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த பயங்கரவாதிகள் அல்கய்தா மற்றும் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
உலகிலேயே கொரோனா தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக இந்தியாவில் ஒரேநாளில் 4 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 3 ஆயிரத்து 980 பேர் கொரோனாவுக்கு பலியாகிவுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 980 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 168-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 35 லட்சத்து 66 ஆயிரத்து 398 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 18 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் மேலும் 3 விமானங்களை அந்நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. பிரான்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த 3 விமானங்களும் இன்று மாலைக்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவினுடைய ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், Long March 5B என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
21 டொன் எடையிலான இந்த ரொக்கெட், வரும் ஒன்பதாம் திகதி பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2 தினங்களாக சற்று குறைந்திருந்த கொரோனா தொற்று, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னர் 4 லட்சத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை, நேற்று முன்தினம் 3 லட்சத்து 68 ஆயிரமாகவும், நேற்று 3 லட்சத்து 57 ஆயிரமாகவும் குறைந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 780 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 34 லட்சத்து 87ஆயிரத்து 229 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஓக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு நிகரானது.” என இந்தியாவின் அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், ஓக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. ஓக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாகக் கூறி, உத்தரபிரதேச அரசுக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புக்கு ஓக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்றால் அது குற்றச்செயலாகவே கருதப்படும் என்றும், இனப்படுகொலைக்கு சற்றும் குறையாதது என்றும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் ஓக்ஸிஜன் சிலிண்டர் பதுக்கல் காரணமாக, ஏழை எளிய மக்கள், தங்களது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு, ஓக்ஸிஜன் கிடைக்க வேண்டி பிச்சை எடுக்கும் அவலத்தைக் காண்பது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே பாகுபாடு காட்டாமல், ஓக்ஸிஜன் விநியோகத்தை முறையாக கையாண்டு, உயிரிழப்புகளை தடுக்க உத்தரபிரதேச அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
லண்டனின் கென்ட் மாகாணத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஏழுபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லண்டனில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய ஐவரும் வில்லியம் ஹார்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வீட்டில் இருந்த பலர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு எவரும் செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 213 தொகுதிகளை கைப்பற்றியது.
இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சியில் தொடர்ந்து 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். எனினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியை விட ஆயிரத்து 956 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது 77 தொகுதிகளை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் வெற்றி குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றி விட்டதாக கூறினார். இதனிடையே, மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், மேற்கு வங்க மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக நாளை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.