“ஓக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு நிகரானது.” என இந்தியாவின் அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், ஓக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. ஓக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாகக் கூறி, உத்தரபிரதேச அரசுக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புக்கு ஓக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்றால் அது குற்றச்செயலாகவே கருதப்படும் என்றும், இனப்படுகொலைக்கு சற்றும் குறையாதது என்றும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் ஓக்ஸிஜன் சிலிண்டர் பதுக்கல் காரணமாக, ஏழை எளிய மக்கள், தங்களது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு, ஓக்ஸிஜன் கிடைக்க வேண்டி பிச்சை எடுக்கும் அவலத்தைக் காண்பது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே பாகுபாடு காட்டாமல், ஓக்ஸிஜன் விநியோகத்தை முறையாக கையாண்டு, உயிரிழப்புகளை தடுக்க உத்தரபிரதேச அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.