முல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின்போது பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள், 1250மோட்டார் குண்டுகள், அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடத்திய தேடுதலின்போது, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 5000, 60மி.மீற்றர் மோட்டார் குண்டு 40, 80மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுக்களையும் மீட்டெடுத்துள்ளனர். புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் 81மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 550, 60மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 468, 120மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 330, 12.7மி.மீற்றர் ரவைகள் 470, வெடிமருந்து 400கிறாம் மற்றும் ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்துள்ளார்